1
|
சகோதரர்களே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன்; நீங்கள் அதை ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்திருக்கிறீர்கள். |
2
|
நான் உங்களுக்கு நற்செய்தியாக அறிவித்த வாக்கை நீங்கள் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருந்தால், அதனாலேயே மீட்படைவீர்கள்; இல்லையேல் நீங்கள் விசுவசித்தது வீண் என்று சொல்ல வேண்டியிருக்கும். |
3
|
ஏனெனில், நான் பெற்றுக்கொண்டதும், முதன்மையானதாக உங்களுக்குக் கையளித்ததும் எதுவெனில், மறைநூலில் உள்ளபடி, கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக இறந்தார். |
4
|
அடக்கம் செய்யப்பட்டு, மறைநூலில் உள்ளபடியே, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். |
5
|
கோபுவுக்கும் பின்னர் பன்னிருவர்க்கும் தோன்றினார். |
6
|
பின்பு ஒரே சமயத்தில் ஐந்நூற்றுக்கு மேற்பட்ட சகோதரர்களுக்குத் தோன்றினார் அவர்களுள் பலர் இன்னும் உயிரோடு இருக்கின்றனர்; ஒரு சிலர் இறந்து போயினர். |
7
|
பின்னர் யாகப்பருக்கும், அடுத்து அப்போஸ்தலர் அனைவருக்கும் தோன்றினார்., |
8
|
எல்லாருக்கும் கடைசியாக, காலாந்தப்பிய பிறவி போன்ற எனக்கும் தோன்றினார். |
9
|
நானோ அப்போஸ்தலர்களுள் மிகச் சிறியன்; கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்திய நான் அப்போஸ்தலன் என்னும் பெயர்பெறத் தகுதியற்றவன். |
10
|
ஆயினும் நான் இப்பொழுது இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால் தான்; அவர் எனக்குத் தந்த அருளோ வீணாய்ப் போகவில்லை; அவர்கள் அனைவரையும் விட நான் மிகுதியாகவே உழைத்தேன் -- ஆனால் உழைத்தவன் நானல்லேன், என்னோடு இருக்கும் இறையருள்தான் உழைத்தது -- |
11
|
நானோ அவர்களோ யார் போதித்தாலும் நாங்கள் அறிவிப்பது இதுவே; நீங்கள் விசுவசித்ததும் இதுவே. |
12
|
இனி, கிறிஸ்து இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார் என அறிவிக்கப்பட்டிருக்க, இறந்தோர் உயிர்ப்பதில்லை என உங்களுள் சிலர் சொல்வெதப்படி? |
13
|
இறந்தோர் உயிர்த்தெழுதல் இல்லையென்றால், கிறிஸ்துவும் உயிர்த்தெழவில்லை. |
14
|
கிறிஸ்து உயிர்த்தெழவில்லையென்றால், எங்கள் தூதுரை பொருளற்றதே, உங்கள் விசுவாசமும் பொருளற்றதே. |
15
|
நாங்களும் கடவுளின் சார்பில் பொய்ச்சாட்சி சொல்பவர் ஆவோம். ஏனெனில், இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்பது உண்மையானால், கடவுள் உயிர்த்தெழச் செய்யாத கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்தார் என்று நாங்கள் சொன்னபோது கடவுள் பெயரால் பொய்ச் சாட்சி சொன்னவர்கள் ஆனோம். |
16
|
ஏனெனில், இறந்தவர்கள் உயிர்த்தெழுவதில்லை யென்றால் கிறிஸ்துவும் உயிர்த்தெழவில்லை. |
17
|
கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றாலோ உங்கள் விசுவாசம் வீணானதே. நீங்கள் இன்னும் பாவ நிலையிலேயே இருக்கிறீர்கள். |
18
|
அப்படியானால், கிறிஸ்துவுக்குள் துஞ்சியவர்களும் அழிந்துவிட்டனர். |
19
|
இம்மை வாழ்வுக்காக மட்டும் நாம் கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்தவர்களாயிருந்தால், எல்லாரையும் விட நாம் இரங்குவதற்குரியவர் ஆவோம். |
20
|
ஆனால் உள்ளபடி,. இறந்தோரிடமிருந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்; துஞ்சினோரின் முதற் கனி அவரே. |
21
|
மனிதன் வழியாய்ச் சாவு உண்டானது போல, மனிதன் வழியாகவே இறந்தோர்க்கு உயிர்த்தெழுதலும் உண்டு. |
22
|
ஆதாமில் அனைவரும் இறந்ததுபோல கிறிஸ்துவில் எல்லாரும் உயிர்பெறுவர்., |
23
|
அதை ஒவ்வொருவனும் குறிப்பிட்ட வரிசையின்படி பெறுவான். முதற்கனியாகக் கிறிஸ்து உயிர்பெற்றார். அடுத்து, கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் அவருடைய வருகையின்போது உயிர்பெறுவார். |
24
|
அதன் பின்னர் முடிவு வரும்; அப்போது, தலைமை ஏற்போர், ஆட்சி புரிவோர், வலிமை மிக்கோர் அனைவரையும் அவர் தகர்த்துவிட்டுக் கடவுளும் தந்தையுமானவரிடம் அரசை ஒப்படைப்பார். |
25
|
பகைவர் அனைவரையும் அவரது கால்மணை ஆக்கும்வரை அவர் அரசாள வேண்டியிருக்கிறது. |
26
|
இறுதிப் பகைவனாகத் தகர்க்கப்படுவது சாவு. |
27
|
' அனைத்தையும் அவருக்கு அடிப்பணியச் செய்தார் ' என்றுள்ளதன்றோ? 'அனைத்தும் அடிபணிந்துள்ளன ' என்று சொல்லும்போது அனைத்தையும் அவருக்கு அடிபணியச் செய்த இறைவன் அடிபணியவில்லை என்பது சொல்லாமலே விளங்கும். |
28
|
அனைத்தும் அவருக்கு அடிபணிந்திருக்கும்போது, கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருக்கும்படி, மகனும் அனைத்தையும் தமக்குப் பணிச்செய்த இறைவனுக்குத் தாமே அடிபணிவார். |
29
|
மேலும் இறந்தவர்களுக்காகச் சிலர் ஞானஸ்நானம் பெறுகிறார்களே, உயிர்த்தெழுதல் இல்லையென்றால் ஏன் அப்படிச் செய்கிறார்கள்? இறந்தவர்கள் உயிர்த்தெழவே மாட்டார்கள் என்றால், அவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுவானேன்? |
30
|
நாங்கள் கூட எந்நேரமும் ஆபத்துகளுக்கு உள்ளாவதேன் ? |
31
|
ஆம் நாடோறும் நான் மரண வாயிலில் நிற்கிறேன். சகோதரர்களே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் உங்களைக் குறித்து நான் கொண்டிருக்கிற பெருமையின்மேல் ஆணையாக இதைச் சொல்லுகிறேன். |
32
|
எபேசு நகரில் கொடிய விலங்குகளோடு நான் போராடினேனே, அதை நான் மனித நோக்கத்திற்காகச் செய்திருந்தால், அதனால் எனக்கு என்ன பயன்? இறந்தோர் உயிர்த்தெழவே மாட்டார்கள் என்றால், ' உண்போம், குடிப்போம்; நாளைக்கு மடிவோம். ' |
33
|
ஏமாந்து போக வேண்டாம்; ' தீய நட்பு நல்லொழுக்கத்தைக் கெடுக்கும் ' |
34
|
மயக்கம் தெளிந்து, நீதியோடு ஒழுகி, பாவத்தை விட்டு விலகுங்கள். உங்களுள் சிலர் கடவுளை அறியாதவர் போல் இருக்கின்றனர்; உங்களுக்கு வெட்கம் உண்டாகவே இதைச் சொல்கிறேன். |
35
|
ஆயினும், ' இறந்தோர் எப்படி உயிர்த்தெழுவார்கள்? எத்தகைய உடலோடு வருவார்கள் ?' என்று ஒருவன் கேட்கலாம். |
36
|
அறிவிலியே, நீ விதைப்பது மடிந்தாலொழிய, புத்துயிர் பெறாது; |
37
|
முளைக்கபோகும் உருவத்தில் நீ அதை விதைக்கவில்லை; வெறும் கோதுமை மணியையோ மற்றெந்த விதையையோ நீ விதைக்கிறாய். |
38
|
கடவுளோ தமது விருப்பம்போல் அதற்கு உருவம் தருகிறார்; ஒவ்வொரு விதைக்கும் அதற்குரிய உருவத்தையே தருகிறார். |
39
|
எல்லா ஊனும் ஒரே ஊனன்று; மனிதரின் ஊன் வேறு, விலங்குகளின் ஊன் வேறு, மீன்களின் ஊன் வேறு |
40
|
விண்ணைச் சார்ந்த உடல்களும் உண்டு, மண்ணைச் சார்ந்த உடல்களும் உண்டு. விண்ணைச் சார்ந்தவற்றின் சுடர் வேறு, மண்ணைச் சார்ந்தவற்றின் சுடர் வேறு. |
41
|
கதிரோனின் சுடர் வேறு, நிலவின் சுடர் வேறு, விண்மீன்களின் சுடர் வேறு. சுடரில் விண்மீனுக்கு விண்மீன் வேறுபடுகிறது. |
42
|
இவ்வாறே, இறந்தோர் உயிர்த்தெழுதலும் இருக்கும். விதைக்கபடுவது அழிவுக்குரியது, உயிர்த்தெழுவதோ அழியாதது. |
43
|
விதைக்கப்படுவது இழிவானது, உயிர்த்தெழுவதோ மாட்சிமைக்குரியது. விதைக்கப்படுவது வலுவற்றது. உயிர்த்தெழுவதோ வலிமையுள்ளது,. |
44
|
விதைக்கப்டுவது மனித உயிர்கொண்ட உடல், உயிர்த்தெழுவது தேவ ஆவிக்குரிய உயிர்கொண்ட உடல். |
45
|
மனித உயிர் கொண்ட உடல் உள்ளதுபோல, தேவ ஆவிக்குரிய உயிர்கொண்ட உடலும் உள்ளது. மறைநூலில் உள்ளபடி முதல் மனிதனாகிய ஆதாம் மனித உயிருள்ளவன் ஆனான். |
46
|
கடைசி ஆதாமோ உயிர் தரும் ஆவியானார். முதலில் உண்டானது தேவ ஆவிக்குரிய உயிர்கொண்டதன்று, மனித உயிர்கொண்டது தான்; தேவ ஆவிக்குரியது பிந்தியதே. |
47
|
முதல் மனிதன் மண்ணிலிருந்து வந்தான். அவன் மண்ணைச் சார்ந்தவன். இரண்டாம் மனிதனோ விண்ணிலிருந்து வந்தார். |
48
|
மண்ணைச் சார்ந்த அவன் எப்படியோ, அப்படியே மண்ணைச் சார்ந்த யாவரும் உள்ளனர்; விண்ணைச் சார்ந்த இவர் எப்படியோ, அப்படியோ விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர். |
49
|
ஆகவே, மண்ணைச் சார்ந்தவனின் சாயலைத் தாங்கியிருந்தது போல, விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் தாங்கியிருப்போம். |
50
|
சகோதரர்களே, நான் சொல்வது இதுவே; ஊனும் இரத்தமும் கடவுளின் அரசை உரிமையாகப் பெற முடியாது; அழிவுள்ளது அழியாமையை உரிமையாகப் பெறாது. |
51
|
இதோ உங்களுக்கு மறைபொருளானது ஒன்று சொல்லப்போகிறேன்; நாம் அனைவருமே சாகமாட்டோம்; ஆனால் அனைவருமே வேற்றுரு பெறுவோம். |
52
|
ஒரு நொடியில், கண்ணிமைப் பொழுதில், கடைசி எக்காளம் முழங்க இது நடைபெறும். ஆம், எக்காளம் முழங்கும்; அப்பொழுது இறந்தோர் அழிவில்லாதவர்களாய் உயிர்த்தெழுவர்; நாமும் வேற்றுரு பெறுவோம். |
53
|
ஏனெனில், அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்துகொள்ள வேண்டும்; சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்துகொள்ள வேண்டும். |
54
|
அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையையும், சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையையும் அணிந்துகொள்ளும் பொழுது, எழுதியுள்ள இவ்வாக்கு நிறைவேறும்: |
55
|
' சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே?' |
56
|
பாவமே சாவின் கொடுக்கு; பாவத்திற்கு வலிமை தருவது சட்டம். |
57
|
ஆனால் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய் நமக்கு இந்த வெற்றிதரும் கடவுளுக்கு நன்றி. |
58
|
ஆகையால், என் அன்பார்ந்த சகோதரர்களே, உறுதியாய் இருங்கள், நிலை பெயராதீர்கள். உங்கள் உழைப்பு ஆண்டவருக்குள் வீணாவதில்லை என்பதை அறிந்து, ஆண்டவரின் வேலையைச் செய்வதில் சிறந்து விளங்குங்கள். |
1-Corinthians 15:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...