Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Daniel Chapters

Daniel 7 Verses

1 பபிலோனின் அரசனாகிய பல்தசாரின் முதலாண்டில் தானியேல் கனவு ஒன்று கண்டார்; அவர் படுக்கையில் இருக்கும் போது அவரது மனக்கண் முன் காட்சிகள் தோன்றின; பிறகு அவர் அந்தக் கனவை எழுதி வைத்து, அதனைச் சுருங்கச் சொன்னார்:
2 இரவில் நான் கண்ட காட்சி இதுவே: இதோ, வானத்தின் நாற்புறத்துக் காற்றுகளும் மாபெருங்கடலைக் கொந்தளிக்கச் செய்தன.
3 அப்போது வெவ்வேறு வடிவமுள்ள நான்கு பெரிய மிருகங்கள் கடலினின்று மேலெழும்பின.
4 அவற்றுள் முதல் மிருகம் கழுகின் இறக்கைகளையுடைய சிங்கத்தைப் போல் இருந்தது; நான் பார்த்துக் கொண்டிருக்கையில் அதன் இறக்கைகள் பிடுங்கப்பட்டன; அது தரையினின்று தூக்கப்பட்டது; மனிதனைப்போல் இரண்டு கால்களில் நின்றது; அதற்கு மனித இதயமும் கொடுக்கப்பட்டது.
5 அடுத்தாற்போல், இதோ முற்றிலும் வேறானதொரு மிருகத்தைக் கண்டேன். கரடியைப் போன்ற அந்த மிருகம் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து நின்று, பற்களிடையில் மூன்று விலாவெலும்புகளை வாயில் கவ்விக் கொண்டிருந்தது. 'எழுந்திரு, ஏராளமான இறைச்சியை விழுங்கு' என்று அதற்குச் சொல்லப்பட்டது.
6 இன்னும் நோக்கினேன்: இதோ, வேங்கை போலும் வேறொரு மிருகம் காணப்பட்டது; அதன் மேல் பறவையின் இறக்கைகளைப் போல நான்கு இருந்தன; அந்த மிருகத்திற்கு நான்கு தலைகள் இருந்தன; அதற்கு வல்லமை கொடுக்கப்பட்டது.
7 இவற்றுக்குப் பிறகு, இரவின் காட்சியில் இதோ நான்காம் மிருகம் அச்சத்திற்குரியதாயும் வியப்பூட்டத்தக்கதாயும் மிகுந்த வலிமையுள்ளதாயும் இருக்கக் கண்டேன்; அதற்குப் பெரிய இருப்புப் பற்கள் இருந்தன; அது தான் விழுங்கியது போக மீதியை நொறுக்கிக் கால்களால் மிதித்துப் போடும்; இதற்குமுன் காணப்பட்ட மிருகங்களிலிருந்து இது வேறாகக் காணப்பட்டது; இதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தன.
8 அந்தக்கொம்புகளை நான் கவனித்துப் பாத்துக் கொண்டிருக்கையில், இதோ அவற்றின் நடுவில் வேறொரு சிறிய கொம்பு எழும்பிற்று; அதற்கு இடமளிக்கும் வகையில், முன்பு அதற்கிருந்த கொம்புகள் மூன்று பிடுங்கப்பட்டன; இதோ, அந்தக் கொம்பில் மனித கண்களைப் போலக் கண்களும், பெருமையானவற்றைப் பேசும் வாயும் இருந்தன.
9 நான் பார்த்துக் கொண்டிருக்கையில், "அரியணைகள் அமைக்கப்பட்டன, நீண்ட ஆயுளுள்ளவர் ஆங்கமர்ந்தார்; அவருடைய ஆடை பனிபோல வெண்மையாயும், அவரது தலைமயிர் தூய பஞ்சு போலும் இருந்தன. அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும், அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன.
10 அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாறு புறப்பட்டது, புறப்பட்டு விரைவாய்ப் பாய்ந்தோடிற்று; ஆயிரமாயிரம் பேர் அவருக்குப் பணிபுரிந்தார்கள், கோடான கோடிப் பேர் அவர் முன் நின்றார்கள்; அறங்கூறவையும் நீதி வழங்க அமர்ந்தது, நூல்களும் திறந்து வைக்கப்பட்டன.
11 அந்தக் கொம்பு பேசின பெருமைமிக்க சொற்களை முன்னிட்டு நான் கவனித்துப் பார்த்தேன்; நான் பார்த்துக் கொண்டிருக்கையில் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதன் உடல் அழிந்து போயிற்று நெருப்பினால் எரிக்கப்படும்படி போடப்பட்டது.
12 மற்ற மிருகங்களின் வல்லமை பறிக்கப்பட்டது; அவற்றின் வாழ்நாட்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வரையறுக்கப்பட்டன.
13 இரவில் நான் கண்ட காட்சியாவது: இதோ, வானத்தின் மேகங்கள் மீது மனுமகனைப் போன்ற ஒருவர் வந்தார்; நீண்ட ஆயுளுள்ளவரின் அருகில் வந்தார், அவர்முன் கொண்டு வரப்பட்டார்.
14 ஆட்சியும் மகிமையும் அரசுரிமையும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா மக்களும் இனத்தாரும் மொழியினரும் அவருக்கு ஊழியம் செய்வர். அவருடைய ஆட்சி என்றென்றும் நீடிக்கும், அதற்கு என்றுமே முடிவிராது; அவருக்கு அளிக்கப்பட்ட அரசுரிமை என்றுமே அழிந்து போகாது.
15 "என் மனம் திகிலுற்றது; தானியேலாகிய நான் அஞ்சி நடுங்கினேன்; என் மணக்கண் முன் தோன்றிய காட்சிகள் என்னைக் கலக்கத்திற்குள்ளாக்கின.
16 அருகில் நின்றிருந்தவர்களுள் ஒருவரை அண்டிப்போய், இவற்றுக்கெல்லாம் பொருள் என்ன என்று கேட்டேன். அவர் அவற்றின் உட்பொருளையெல்லாம் எனக்கு விளக்கிக் கூறினார்:
17 'இந்த நான்கு மிருகங்களும் பூமியில் எழும்பப் போகும் நான்கு அரசர்களைக் குறிக்கின்றன.
18 ஆனால் உன்னத கடவுளின் பரிசுத்தர்கள் அரசுரிமை பெறுவார்கள்; அந்த அரசுரிமையை என்றென்றைக்கும், நீடூழி காலங்களுக்கும் கொண்டிருப்பார்கள்.'
19 அதன்பின்னர், மற்ற மிருகங்களினும் வேறானதாகக் காணப்பட்டதும், மிகுந்த அச்சத்திற்குரியதும், இருப்புப்பற்கள், நகங்கள் கொண்டதாய், தான் தின்று நொறுக்கியது போக மீதியைக் கால்களால் மிதித்துப் போட்டதுமான அந்த நான்காம் மிருகத்தைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பினேன்;
20 அதன் தலையில் இருந்த பத்துக் கொம்புகளைப் பற்றியும், மூன்று கொம்புகள் விழுந்து போக அவற்றினிடத்தில் எழும்பினதும், கண்களும், பெருமையானவற்றைப் பேசும் வாயும் கொண்டிருந்ததும், மற்றவர்களைக் காட்டிலும் பெரியதுமாயிருந்த அந்தக் கொம்பைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்பினேன்.
21 நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அதோ அந்தக் கொம்பு பரிசுத்தர்களுக்கு எதிராய்ப் போர் புரிந்து அவர்களை வென்றது;
22 நீண்ட ஆயுளுள்ளவர் வந்து, உன்னதருடைய பரிசுத்தர்களுக்குத் தீர்ப்புச் சொல்லும் வரை போர் நடந்தது; அதன் பின் காலம் வந்தது; அப்போது பரிசுத்தர்கள் அரசுரிமை பெற்றுக் கொண்டார்கள்.
23 அவர் இன்னும் தொடர்ந்து பேசினார்: 'அந்த நான்காம் மிருகம்: உலகில் தோன்றப்போகும் நான்காம் அரசைக் குறிக்கிறது; இது மற்றெல்லா அரசுகளையும் விட வேறுபட்டதாகும். உலக முழுவதையும் அது விழுங்கிவிடும், மிதித்து நொறுக்கிவிடும்; அந்தப் பத்துக் கொம்புகள்:
24 இந்த அரசினின்று பத்து மன்னர்கள் எழும்புவர்; அவர்களுக்குப்பிறகு மற்றொருவன் எழும்புவான்; முந்தினவர்களை விட இவன் வேறுபட்டவனாய் இருப்பான், அவர்களுள் மூவரைத் தனக்குக் கீழ்ப்படுத்துவான்.
25 அவன் உன்னதர்க்கு எதிரான சொற்களைப் பேசுவான், உன்னதரின் பரிசுத்தர்களைத் துன்புறுத்துவான், நாள் கிழமைகளையும் சட்டத்தையும் மாற்றப் பார்ப்பான், அவர்களோ ஒருகாலம், இருகாலம், அரைகாலம் அளவும் அவனுடைய கையில் விடப்படுவர்.
26 ஆனால் அறங்கூறவையம் நீதி வழங்க அமரும், அவனுடைய அரசுரிமை அவனிடமிருந்து பறிக்கப்படும்; முடிவு வரை ஒடுக்கப்பட்டு அழிந்து போகும்.
27 அரசும் அரசுரிமையும், வானத்தின்கீழ் எங்கணுமுள்ள அரசுகளின் மகிமை பெருமையும் உன்னதரின் பரிசுத்தர்களுடைய இனத்தார்க்குத்தரப்படும்; அவர்களுடைய அரசு என்றென்றும் நிலைக்கும் அரசு. அரசர்கள் அனைவரும் அவர்களுக்குப் பணிந்து கீழ்ப்படிவர்.'
28 இவ்வாறு அவர் விளக்கம் கூறி முடித்தார்; தானியேலாகிய நான் என் நினைவுகளின் காரணமாய் மிகவும் கலங்கினேன்; என் முகம் வேறுபட்டது; ஆயினும் இவற்றை என் மனத்திலேயே வைத்துக்கொண்டேன்."
×

Alert

×