Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Genesis Chapters

Genesis 18 Verses

1 பின்பு கடவுள் மம்பிறே பள்ளத்தாக்கில் ஆபிரகாமுக்குத் தோன்றினார். அந்நேரம் வெப்பம் மிகுந்த உச்சிப் பகல் வேளையானதனால், அவர் கூடார வாயிலில் உட்கார்ந்திருந்தார்.
2 திடீரென்று அவர் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில், மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடனே அவர் கூடார வாயிலை விட்டு அவர்களுக்கு எதிர்கொண்டோடிக் குப்புற விழுந்து வணங்கி:
3 ஆண்டவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்ததாயின், அடியேனை விட்டுக் கடந்து போக வேண்டாம்.
4 இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வருகிறேன். உங்கள் கால்களைக் கழுவி இம் மரத்தடியில் இளைப்பாறுங்கள்.
5 அதற்குள் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன். நீங்கள் உள்ளத்தைச் சற்றே திடப்படுத்திக் கொண்டபின் அப்பால் செல்வீர்களாக. இதற்காகத்தானே அடியேனிடத்திற்கு எழுந்தருளி வந்தீர்கள் என்றார். அவர்கள்: நீ சொன்னபடியே ஆகட்டும் என்று சொன்னார்கள்.
6 அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாறாளை நோக்கி: நீ மிக விரைவில் மூன்று படி மாவைப் பிசைந்து, அடுப்புத் தணலில் அப்பங்களைச் சுடு என்றார்.
7 மாட்டு மந்தைக்குத் தாமே ஓடிச் சென்று, ஒரு நல்ல இளங்கன்றுக் குட்டியைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க இவன் அதனை விரைவில் சமைத்தான்.
8 பிறகு வெண்ணெயையும் பாலையும் சமைக்கப்பட்ட கன்றுக் குட்டியையும் கொண்டு வந்து அவர்களுக்கு முன் வைத்து, அவர்களுக்குப் பக்கமாய் மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்.
9 சாப்பிட்ட பின்னர் அவர்கள் அவரை நோக்கி: உன் மனைவி சாறாள் எங்கே என்று கேட்க, அவர்: அதோ, கூடாரத்தில் இருக்கிறாள் என்று பதில் கூறினார்.
10 மூவருள் ஒருவர் அவரை நோக்கி: நாம் திரும்பும்போது இதே காலத்தில் உன்னிடத்திற்கு வருவோம். அப்போது நீயும் உயிரோடிருப்பாய்; சாறாளுக்கும் ஒரு மகன் இருப்பான் என்றார். கூடார வாயிலின் பின் புறமாய் நின்று கொண்டிருந்த சாறாள் இதைக் கேட்டுச் சிரித்தாள்.
11 ஏனென்றால், அவர்கள் இருவரும் வயது சென்று முதிர்ந்தவராய் இருந்தனர். சாறாளுக்கு மாதவிடாய் நின்று போயிருந்தது.
12 ஆதலால், அவள் மறைவில் இருந்துகொண்டு புன் சிரிப்புடன்: நானும் கிழவி, என் கணவரும் முதிர்ந்த வயதினர். பின், நான் இன்பத்திற்கு இடம் கொடுப்பதா என்றாள்.
13 அப்போது ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, சாறாள், நான் கிழவியாய் இருக்கப் பிள்ளை பெறுவது மெய்யாய் இருக்குமொவென்று நகைத்தாளே,
14 கடவுள் செய்வதற்கு அரிதான காரியமும் உண்டோ? முன் சொன்னது போல், நாம் இதே காலத்தில் மறுபடியும் வருவோம். அப்போது நீயும் உயிரோடிருப்பாய்; சாறாளுக்கும் ஒரு மகன் இருப்பான் என்று சொன்னார்.
15 சாறாள் பயத்தினாலே கலங்கி: நான் சிரிக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு ஆண்டவர்: இல்லை, நீ சிரித்தாய் என்றார்.
16 அந்த மனிதர்கள் எழுந்து, அவ்விடம் விட்டுச் சொதோமை நோக்கிப் போனார்கள். ஆபிரகாமும் அவர்களோடு கூடப் போய், அவர்களை வழியனுப்பினார்.
17 அப்பொழுது ஆண்டவர்: நாம் செய்யப் போகிறதை ஆபிரகாமுக்கு மறைக்கக் கூடுமோ? இல்லை.
18 அவன் மிகவும் பெரிய, வலிமைமிக்க இனமாவான். மேலும், பூமியிலுள்ள எல்லா இனத்தாரும் அவனில் ஆசீர் பெறவிருக்கின்றனர்.
19 உண்மையிலே, ஆண்டவர் ஆபிரகாமுக்குத் திருவுளம் பற்றின எல்லாவற்றையும் ஆபிரகாமின் பொருட்டு நிறைவேற்றும்படி, அவன் தன் மக்களுக்கும் தனக்குப் பின்னால் வரும் தன் வீட்டாருக்கும் புத்திச் சொல்லி, நீங்கள் கடவுள் கட்டளையிட்ட நெறியில் ஒழுகி நியாயத்தையும் நீதியையும் கடைபிடிக்க வேண்டுமென்று கற்பிப்பான் என்று அறிவோம் (என்றார்).
20 ஆகையால் ஆண்டவர்: சொதோம் கொமோரா நகரங்களின் ஆரவாரம் மிஞ்சிப் போயிற்று. அவைகளின் பாவமும் அளவின்றிப் பெருகிப் போயிற்று.
21 ஆதலால், இதோ, நாம் இறங்கிப் போய், நம்மை எட்டிய அந்தக் கூக்குரலுக்கு ஏற்ப அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்ப்போம் என்றார்.
22 அப்பொழுது அவர்கள் அவ்விடம் விட்டுச் சொதோமை நோக்கிப் போனார்கள். ஆபிரகாமோ, ஆண்டவர் திருமுன் நின்றவராய், அண்மையில் வந்து:
23 நீர் தீயவர்களோடு கூட நீதிமானையும் அழிக்கவிருக்கிறீரோ?
24 நகருக்குள்ளே நீதிமான்கள் ஐம்பது பேர் இருந்தால், (பாவிகளோடு) கூட அவர்களும் அழிந்து போவார்களோ? அவ்விடத்திலே நீதிமான்கள் ஐம்பது பேர் இருப்பார்களாயின், அவர்கள் பொருட்டு அந்த இடத்தைக் காப்பாற்றமாட்டீரோ?
25 தீயவனோடு நீதிமானையும் அழிப்பதும், நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவதும் உமக்குத் தூரமாய் இருப்பதாக. அது உமக்கு உகந்ததன்று. மண்ணகம் முழுவதற்கும் நடுவராய் இருக்கிறீரே: இத்தகைய தீர்ப்பு நிச்சயம் செய்ய மாட்டீரே? (என்றார்).
26 ஆண்டவர் அவரை நோக்கி: நாம் சொதோம் நகருக்குள்ளே ஐம்பது நீதிமான்களைக் கண்டால் அவர்களின் பொருட்டு அந்நகர் முழுவதையும் காப்பாற்றுவோம் என்றார்.
27 ஆபிரகாம் மறுமொழியாக: புழுதிக்கும் சாம்பலுக்கும் சமமாய் இருக்கிற அடியேன் ஆண்டவரோடு பேசத் தொடங்கினபடியால், இன்னும் என் ஆண்டவரிடம் ஒன்று கேட்பேன்.
28 ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருந்தாலும் இருக்கலாம். நாற்பத்தைந்து பேரைப் பாராது நகர் முழுவதையும் அழிப்பீரோ என்று கேட்க, கடவுள்: நாம் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அதனை அழிப்பதில்லை என்றார்.
29 மீண்டும் அவரை நோக்கி: அவ்விடத்தில் நாற்பது பேர் மட்டும் இருந்தால் என்ன செய்வீர் என, ஆண்டவர்: நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிப்பதில்லை என்றார்.
30 அப்பொழுது ஆபிரகாம்: ஆண்டவரே, தயை புரியும். நான் பேசுவதினால் கோபிக்க வேண்டாம். முப்பது நீதிமான்கள் காணப்பட்டால் என்று கேட்க, அவர்: முப்பதுபேர் காணப்பட்டால் அதை அழியேன் என்று பதில் கூறினார்.
31 அவர்: நான் பேசத் தொடங்கிவிட்டேன்; எப்படியாவது என் ஆண்டவரிடம் இன்னும் ஒன்று கேட்கத் துணிவேன்: அவ்விடத்தில் இருபது நீதிமான்களே இருக்கக் கண்டால் என்ன என, அவர்: இருபது பேரானாலும் அதை நாம் அழிப்பதில்லை என்றார்.
32 அவர்: ஆண்டவரே, அருள் கூறும். அடியேன் இன்னும் ஒருமுறை மட்டும் கேட்கிறேன். ஆண்டவருக்கு கோபம் வேண்டாம். அவ்விடத்தில் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால் என, ஆண்டவர்: அந்தப் பத்துப் பேருக்காக அந்நகரை அழிக்க மாட்டோம் என்றார்.
33 ஆபிரகாமோடு பேசி முடிந்தபோது ஆண்டவர் போய்விட்டார். ஆபிரகாமும் தம் இல்லிடத்துக்குத் திரும்பிப் போனார்.
×

Alert

×