Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Genesis Chapters

Genesis 12 Verses

1 ஆண்டவர் ஆபிராமை நோக்கி: நீ உன் நாட்டையும், உன் இனத்தையும், உன் தந்தையின் வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நாம் உனக்குக் காட்டவிருக்கிற நாட்டிற்குப் போகக்கடவாய்.
2 நாம் உன்னைப் பெருங்குடியாய்ப் பெருகச் செய்து, உன்னையும் ஆசீர்வதித்து, உன் பெயரையும் மேன்மைப் படுத்துவோம். நீ ஆசீர்வதிக்கப்பட்டவனாய் இருப்பாய்.
3 உன்னை ஆசீர்வதிப்பவர்களை நாம் ஆசீர்வதிப்போம். உன்னை சபிப்பவர்களை நாமும் சபிப்போம். மேலும், பூமியிலுள்ள இனமெல்லாம் உன் வழியாய் ஆசீர்வதிக்கப்படும் என்றருளினார்.
4 ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்டவாறு ஆபிராம் புறப்பட்டான். லோத்தும் அவனோடு சென்றான். ஆபிராம் ஆரானை விட்டுப் புறப்பட்ட போது அவனுக்கு வயது எழுபத்தைந்து.
5 அவன் தன் மனைவி சாறாயியையும், தன் சகோதரனின் மகன் லோத்தையும், தாங்கள் வைத்திருந்த பொருள் அனைத்தையும், ஆரானிலே பிறந்திருந்த உயிர்களையும் கூட்டிக் கொண்டு கானான் நாடு போய்ச் சேர்ந்தான்.
6 பின்னர் ஆபிராம் அந்த நாட்டில் சுற்றித் திரிந்து, சிக்கேம் என்னும் இடம் வரை - அதாவது, மகிமைப் பள்ளத்தாக்குவரை- வந்தான். அக்காலத்தில் கானானையர் அந்நாட்டில் இருந்தனர்.
7 பின் ஆண்டவர் ஆபிராமுக்குத் தோன்றி: இந்த நாட்டை உன் சந்ததிக்குத் தருவோம் என்று அவனுக்குத் திருவாக்கு அருளினார். அவனோ, தனக்குத் தோன்றின ஆண்டவருக்கு அவ்விடத்தில் ஒரு பீடத்தைக் கட்டினான்.
8 பின் அவன் அவ்விடத்திலிருந்து பெத்தெலுக்குக் கிழக்கேயிருக்கும் மலைக்குப் போய், பெத்தெல் தனக்கு மேற்காகவும், ஆயீ கிழக்காகவும் இருக்க, அங்கே கூடாரம் அடித்தான். அவ்விடத்திலும் ஆண்டவருக்கு ஒரு பீடத்தைக் கட்டி அவருடைய திருப் பெயரைத் தொழுதான்.
9 அதன் பின் ஆபிராம் மீண்டும் நடந்து தெந்கு நோக்கிச் சென்றான்.
10 ஆனால், அந்நாட்டில் பஞ்சம் ஏற்பட்டதனால் ஆபிராம் எகிப்து நாட்டை நாடி, அங்குக் குடியிருக்கப் போனான். உண்மையிலேயே அந் நாட்டில் பஞ்சம் மிகவும் கொடுமையாய் இருந்தது.
11 அவன் எகிப்திலே நுழையும் வேளையிலே தன் மனைவி சாறாயியை நோக்கி: நீ அழகி என்று அறிவேன்.
12 ஆதலால், எகிப்தியர் உன்னைக் கண்டவுடன், இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்று விட்டு உன்னை உயிரோடு வைப்பர்.
13 உன் பொருட்டு எனக்கு நன்மை உண்டாகும்படியும், உனக்காக என் உயிர் பிழைக்கும்படியும் தயவு செய்து நீ என் சகோதரி என்று சொல் என்றான்.
14 ஆபிராம் எகிப்து நாட்டினுள் வந்த போது அந்தப் பெண் பேரழகி என்று எகிப்தியர் கண்டனர்.
15 பிரபுக்களும் பாரவோனிடத்தில் இச் செய்தியை அறிவித்து அவளைப் புகழ்ந்து பேசியதனால், அந்தப் பெண் பாரவோனின் அரண்மனைக்குக் கட்டாயமாய்க் கொண்டு போகப் பட்டாள்.
16 ஆயினும், அவள் பொருட்டு (அந்நாட்டார்) ஆபிராமுக்குத் தயவு பாராட்டி வந்தனர். அவனுக்கு ஆடு மாடுகளையும், கோவேறு கழுதைகளையும், வேலைக்காரர் வேலைக்காரிகளையும், கோளிகைகளையும் ஒட்டகங்களையும் கொடுத்தனர்.
17 ஆண்டவரோ ஆபிராமின் மனைவி சாறாயியின் பொருட்டு பாரவோனையும் அவன் வீட்டாரையும் மிகவும் கொடிய துன்பங்களால் தண்டித்தார்.
18 ஆதலால் பாரவோன் ஆபிராமை வரவழைத்து அவனை நோக்கி: நீ ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவியென்று நீ எனக்குத் தெரிவிக்காமல் இருந்ததென்ன?
19 இவளை உன் சகோதரியென்று நீ ஏன் சொல்ல வேண்டும்? அவளை நான் என் மனைவியாக்கியிருக்கலாம். சரி போகட்டும். இதோ உன் மனைவி; நீ அவளை அழைத்துக் கொண்டு போ என்றான்.
20 பாரவோன் ஆபிராமைக் குறித்துத் தன் குடிகளுக்கும் கட்டளையிட்டான். அவர்களும் ஆபிராமையும், அவன் மனைவியையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
×

Alert

×