Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Zephaniah Chapters

Zephaniah 3 Verses

1 கலகஞ்செய்து தீட்டுப்பட்டவளும், கொடிய நகரமுமாகிய சீயோன் மகளுக்கு ஐயோ கேடு!
2 நாம் சொல்வதை அவள் கேட்பதுமில்லை, நமது திருத்தத்தை அவள் ஏற்பதுமில்லை; ஆண்டவர் மேல் அவள் நம்பிக்கை வைக்கிறதில்லை, தன் கடவுளை அண்டி வருகிறதுமில்லை.
3 அந்நகரில் இருக்கும் அதன் தலைவர்கள் கர்ச்சனை செய்யும் சிங்கங்களைப் போல்வர்; அதன் நீதிபதிகள், மாலை வேளையில் அலைந்து திரிந்து கிடைக்கும் இரையைக் காலை வரை வைக்காத ஓநாய்கள் போல்வர்.
4 அதன் தீர்க்கதரிசிகள் தற்பெருமை பேசுகிறவர்கள், பிரமாணிக்கமற்ற மனிதர்கள்; அதன் அர்ச்சகர்கள் புனிதமானதைப் பங்கப்படுத்துகின்றனர், திருச்சட்டத்தை மீறி நடக்கின்றார்கள்.
5 அதன் நடுவில் குடிகொண்டிருக்கும் ஆண்டவர் நேர்மையுள்ளவர், அவர் தீங்கு ஏதும் செய்கிறதில்லை; காலை தோறும் அவர் தம் நீதியை வெளிப்படுத்துகிறார், வைகறை தோறும் அது தவறாமல் வெளிப்படும்; ஆனால் நேர்மையற்றவனுக்கு வெட்கமே கிடையாது.
6 புறவினத்தாரை நாம் நாசம் செய்தோம், அவர்களுடைய காவல் கோட்டைகளைத் தகர்த்தோம்; அவர்களுடைய தெருக்களை வெறுமையாக்கினோம், அவற்றில் நடந்து செல்பவன் எவனுமில்லை; எவனும் இராதபடி, யாரும் வாழாதபடி அவர்களுடைய நகரங்கள் பாழ்வெளியாயின.
7 'இனிக் கண்டிப்பாய் நமக்கு நீ அஞ்சி நடப்பாய், நமது திருத்தத்தை ஏற்றுக்கொள்வாய்; நாம் அனுப்பிய தண்டனைகளையெல்லாம் நீ மறக்கமாட்டாய்' என்றெல்லாம் நாம் எண்ணியிருந்தோம்; அதற்கு மாறாக, அவர்கள் தங்கள் செயல்களைச் சீர்கேடாக்க இன்னும் மிகுதியாய் ஆவல் கொண்டனர்.
8 ஆதலால், நாம் குற்றம் சாட்டுவதற்கு எழுந்திடும் அந்த நாளுக்காகக் காத்திரு; ஏனெனில் என் தீர்மானம்: மக்களினங்களையும், அரசுகளையும் ஒன்று சேர்த்து நம் ஆத்திரத்தையும், நம் கோபத்தீயின் கொடுமை முழுவதையும் அவர்கள் மேல் கொட்டித் தீர்த்து விடல் ஆகும். ஏனெனில் நம் வைராக்கியமுள்ள கோபத்தீயினால் உலகெல்லாம் அழிந்து போகும்" என்கிறார் ஆண்டவர்.
9 ஆம், அக்காலத்தில் நாம் மக்களினங்களுக்குத் தூய்மையான உதடுகளை அருளுவோம்; அப்போது அவர்கள் அனைவரும் ஆண்டவரின் திருப்பெயரைத் தொழுது கொண்டு, தோளோடு தோள் கொடுத்துப் பணிபுரிவர்.
10 எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கும் அப்பாலிருந்து நம்முடைய அடியார்கள் காணிக்கையுடன் வருவார்கள்; நம் குடிகளுள் சிதறுண்டவர்களின் மக்கள் நமக்குக் காணிக்கைகள் கொண்டு வருவர்.
11 நமக்கு எதிராய் நீ எழுந்து செய்த செயல்களை முன்னிட்டு அந்நாளில் நீ அவமானம் அடையமாட்டாய்; ஏனெனில் அப்பொழுது உன் நடுவிலிருந்து இறுமாப்பாய்க் களிகூர்ந்திருப்பவர்களை அகற்றிடுவோம்; இனி ஒருபோதும் நம் பரிசுத்த மலையின் மீது பெருமை காட்டிக் கொள்ள மாட்டாய்.
12 ஏழ்மையும் எளிமையும் உள்ள மக்களை உன் நடுவில் நாம் விட்டு வைப்போம்; இஸ்ராயேலில் எஞ்சினோர் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வர்;
13 அவர்கள் தீமை செய்யமாட்டார்கள், பொய் சொல்லவே மாட்டார்கள்; வஞ்சக நாவென்பது அவர்கள் வாயில் இராது; அச்சுறுத்துவார் யாருமின்றி அவர்கள் மந்தை போல மேய்ந்து இளைப்பாறுவார்கள்."
14 சீயோன் மகளே, மகிழ்ச்சியால் ஆர்ப்பரி, இஸ்ராயேலே, ஆரவாரம் செய்; யெருசலேம் மகளே, உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி.
15 ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ராயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்; நீ இனித் தீமைக்கு அஞ்சமாட்டாய்.
16 அந்நாளில் யெருசலேமை நோக்கி, "சீயோனே, அஞ்ச வேண்டா; உன் கைகள் சோர்ந்து தளராதிருக்கட்டும்!
17 உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் மாவீரர், வெற்றி தருபவர்; உன் மட்டில் அவர் மகிழ்ச்சியால் அக்களிப்பார், தம் அன்பினால் உன்னைப் புதுப்பிப்பார்; திருவிழா நாளில் செய்வதுபோல், உன்னைக் குறித்து உரக்கப் பாடித் துள்ளுவார்" என்பார்கள்.
18 உன்னிடமிருந்து தீமையை அகற்றிவிட்டோம், அதற்காக நீ இனி நிந்தையுறமாட்டாய்.
19 இதோ, உன்னைக் கொடுமையாய் நடத்தியவர்களை அந்நாளில் நாம் தொலைத்திடுவோம்; நொண்டிகளைக் காப்போம், சிதறுண்டவர்களை ஒன்றுசேர்ப்போம்; அவமானத்தை அடைந்த அவர்கள் உலகெங்கும் பேரும் புகழும் பெறச் செய்வோம்.
20 அக்காலத்தில் உங்களைத் தாய்நாட்டுக்குக் கொண்டு வருவோம், அப்பொழுது உங்களை நாம் ஒன்று கூட்டுவோம்; ஆம், உங்கள் கண்முன்பாகவே உங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணரும் போது, உலகத்தின் மக்களினங்கள் நடுவிலெல்லாம் பேரும் புகழும் உங்களுக்குக் கிடைக்கச் செய்வோம்" என்கிறார் ஆண்டவர்.
×

Alert

×