Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 18 Verses

1 என் ஆற்றலாய் உள்ளவரே, ஆண்டவரே, உமக்கு நான் அன்பு செய்கிறேன்.
2 ஆண்டவரே, நீரே என் கற்பாறை, என் அரண், என் மீட்பர்: என் இறைவனாக உள்ளவரே, நான் அடைக்கலம் புகுவதற்கு ஏற்ற கோட்டையாக உள்ளவரே, என் கேடயமும் எனக்கு மீட்பளிக்கும் வலிமையும் என் அடைக்கலமுமாக உள்ளவரே!
3 புகுழ்ச்சிக்குரிய ஆண்டவரை நான் கூவி அழைப்பேன்: என் எதிரிகளினின்று மீட்படைவேன்.
4 சாகடிக்கக் கூடிய பெருவெள்ளம் என்னைச் சூழ்ந்துகொண்டது: ஆபத்துக்குரிய வெள்ளம் என்னை அச்சத்தில் ஆழ்த்தியது.
5 கீழுலகின் தளைகள் என்னைப் பிணைத்துக் கொண்டன: சாவில் கண்ணிகளுள் நான் விழப்போனேன்.
6 துன்ப வேளையில் நான் ஆண்டவரை அழைத்தேன்; என் இறைவனை நோக்கி கூக்குரலிட்டேன்: தம் ஆலயத்தில் நின்று என் குரலை அவர் கேட்டருளினார்; என் கூக்குரல் அவர் செவியில் விழுந்தது.
7 அப்போது பூமி அசைந்தது, அதிர்ந்தது, மலைகளின் அடித்தளம் கிடுகிடுத்தது: ஏனெனில் அவர் கோபம் மூண்டெழுந்தது.
8 அவர் நாசியினின்று கோபப்புகை கிளம்பியது, எரித்து விடும் நெருப்பு அவர் வாயினின்று எழும்பியது: எரிதலும் அவரிடமிருந்து புறப்பட்டது.
9 வானங்களைத் தாழ்த்திக் கொண்டு அவர் இறங்கி வந்தார்: அவர் பாதங்களுக்கடியில் கார்முகில் கவிந்தது.
10 கெரூபிம்களின்மேல் ஏறிப் பறந்து வந்தார்: காற்றை இறக்கைகளாகக் கொண்டு விரைந்து வந்தார்.
11 இருளைத் தமக்குப் போர்வையாக அணிந்தார்: நீரைத் தாங்கிய இருண்ட மேகங்கள் அவருக்குக் கூடாரம் போலாயிற்று.
12 தம்முன் விளங்கிய ஒளிப்பிழம்பால் எரிதழல்கள் சுடரிட்டன: கல்மழையும் பொழிந்தது.
13 வானத்தினின்று ஆண்டவர் இடி முழங்கச் செய்தார்: உன்னதமானவர் தம் குரலைக் கேட்கச் செய்தார்.
14 அம்புகளை ஏவி அவர்களைச் சிதறடித்தார்: இடிமின்னல் பல விடுத்து அவர்களை கலங்கடித்தார்.
15 ஆண்டவர் விடுத்த கடுஞ்சொல்லால், அவருடைய கோபப் புயலின் வேகத்தால், கடலின் நீரோட்டங்கள் வெளிப்பட்டன: பூவுலகில் அடித்தளங்கள் வெளியாயின.
16 வானினின்று தம் கையை நீட்டி என்னைப் பிடித்துக்கொண்டார்: பெருவெள்ளத்தினின்று என்னைத் தூக்கிவிட்டார்.
17 வலிமைமிக்க என் எதிரினின்று என்னை விடுவித்தார்: என்னைவிட வலிமைமிக்க பகைவர்களிடமிருந்து என்னைக் காத்தார்.
18 என் துன்ப நாளில் அவர்கள் என்னைத் தாக்க வந்தனர்: ஆனால் ஆண்டவர் எனக்கு அடைக்கலமானார்.
19 நெருக்கடி இல்லாத இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்: என்மீது அன்பு கூர்ந்ததால் என்னைக் காத்தார்.
20 என்னுடைய நீதி நேர்மைக்கு ஏற்ப எனக்குப் பலனளித்தார்: என் செயல்கள் மாசற்றவையாயிருப்பதால் எனக்குக் கைம்மாறு செய்தார்.
21 ஏனெனில், நான் ஆண்டவர் காட்டிய வழியில் நடந்தேன்: பாவம் செய்து என் இறைவனை விட்டு அகலவில்லை.
22 அவருடைய கற்பனைகளையெல்லாம் என் கண்முன் கொண்டிருந்தேன்: அவருடைய கட்டளைகளின் வழியை விட்டு நான் அகலவில்லை.
23 அவர் முன்னிலையில் நான் குற்றமற்றவனாயிருந்தேன்: தவறு செய்யாமல் என்னைக் காத்துக்கொண்டேன்.
24 என்னுடைய நீதி நேர்மைக்கேற்ப எனக்குப் பலன் அளித்தார்: அவர் முன்பாக என் செயல்கள் மாசற்றவையாயிருப்பதால், எனக்குக் கைம்மாறு செய்தார்.
25 நேர்மையுள்ளவனிடம் நீர் நேர்மையுள்ளவராய் விளங்குகிறீர்: குற்றமற்றவனிடம் நீர் குற்றமற்றவராய் விளங்குகிறீர்.
26 தூய்மையுள்ளவனிடம் நீர் தூய்மையுள்ளவராய் விளங்குகிறீர்: கபடுள்ளவனிடம் நீர் விவேகமுள்ளவராய் நடந்துகொள்கிறீர்.
27 ஏனெனில், சிறுமையுற்ற மக்களுக்கு நீர் மீட்பளிக்கின்றீர்: தற்பெருமை கொண்டோரின் பார்வையை நீர் ஒடுக்குகின்றீர்.
28 ஆண்டவரே, நீர் என் விளக்கு சுடர்விட்டு எரியச் செய்கிறீர்: என் இறைவா, நீர் என் இருட்டை வெளிச்சமாக்குகின்றீர்.
29 உம் துணையால் நான் எதிரிகளின் படைகளைத் தாக்குவேன்: என் இறைவனின் துணையால் மதிலையும் தாண்டுவேன்.
30 கடவுள் காட்டும் வழி குற்றமற்றது, ஆண்டவருடைய வாக்குறுதி புடமிடப்பட்டது: அவரிடம் அடைக்கலம் புகுவோரனைவருக்கும் அவரே கேடயம்.
31 ஆண்டவரைத் தவிர வேறு தேவன் யார்? நம் இறைவனைத் தவிர வேறு அடைக்கலம் தரும் பாறை யார் ?
32 வலிமையைக் கச்சையாக எனக்கு அளித்தவர் அவரே: நான் செல்லும் வழியை இடையூறு அற்றதாக ஆக்கியவர் அவரே.
33 மான்களைப் போல என்னை விரைவாக ஓடச் செய்தவர் அவரே: உயர்ந்த இடத்தில் என்னை நிறுத்தியவர் அவரே.
34 என் கைகளைப் போருக்குப் பழக்கியவர் அவரே: வெண்கல வில்லை வளைப்பதற்கு என் புயத்துக்கு உறுதியளித்தவர் அவரே.
35 பாதுகாப்புத் தரும் உம் கேடத்தை நீர் எனக்கு அளித்தீர்: உமது வலக்கரம் என்னை ஆதரித்தது; நீர் என்னிடம் காட்டிய பரிவு நான் மாண்புறச் செய்தது.
36 நான் செல்லும் வழியை நீர் விசாலமாக்கினீர்: என் கால்களும் தளர்வுறவில்லை.
37 என் எதிரிகளை நான் பின்தொடர்ந்து பிடித்தேன்: அவர்களைத் தொலைக்கும்வரையில் நான் திரும்பிப் போகவில்லை.
38 அவர்களை நான் வதைத் தொழித்தேன், அவர்கள் எழுந்திருக்கவும் முடியவில்லை: என் காலடிகளில் அவர்கள் மிதிபடலாயினர்.
39 போரிடும் வல்லமையை எனக்குக் கச்சையாக அளித்தீர்: என்னை எதிர்த்தவர்களை எனக்கு அடிபணியச் செய்தீர்.
40 என் எதிரிகள் புறங்காட்டி ஓடச்செய்தீர்: என்னைப் பகைத்தவர்களைச் சிதறடித்தீர்.
41 அவர்கள் கூவியழைத்தனர்; ஆனால் அவர்களைக் காக்க ஒருவருமில்லை: ஆண்டவரை நோக்கி அவர்கள் கூவினர்; அவரே அதற்குச் செவிகொடுக்கவில்லை.
42 எனவே, காற்றில் பறக்கும் தூசிபோல அவர்களைத் தவிடுபொடியாக்கினேன்: தெருவில் கிடக்கும் புழுதி போல அவர்களை மிதித்து ஒடுக்கினேன்.
43 மக்களின் சச்சரவுகளினின்று என்னை விடுவித்தீர்: நாடுகளுக்கு என்னைத் தலைவனாய் ஆக்கினீர்.
44 நான் அறியாத மக்கள் எனக்கு ஊழியம் செய்தனர்: என்னைப்பற்றிக் கேட்டதும் அவர்கள் கீழ்ப்படிந்தனர்.
45 அந்நியர் வந்து எனக்கு இச்சகம் பேசினர். வேற்றினத்தார் வலிவிழந்தனர்: அச்சத்தோடு தங்கள் கோட்டைகளினின்று வெளியேறினர்.
46 ஆண்டவர் வாழ்க, என் கற்பாறையாகிய அவர் வாழ்த்தப்பெறுவாராக: என் மீட்பரான இறைவன் பெரிதும் புகழப்படுவாராக.
47 என் எதிரிகளை நான் பழிவாங்கச் செய்த இறைவன் அவரே: வேற்றினத்தாரை எனக்கு அடிமைப்படுத்தியவர் அவரே.
48 என் எதிரிகளினின்று நீரே என்னை விடுவித்தீர்: என்னைத் தாக்கியவர்கள் மீது என்னைத் தலைவனாக உயர்த்தினீர், கொடியவனிடமிருந்து என்னை விடுவித்தீர்.
49 ஆதலால் ஆண்டவரே, மக்களிடையே உம்மைப் புகழ்ந்தேத்துவேன்: உமது பெயருக்குப் புகழ்ச்சிப்பா இசைப்பேன்.
50 நீர் ஏற்படுத்திய அரசருக்குப் பெரிய வெற்றிகளை அளித்தவர் நீரே: உம்மால் அபிஷுகமான தாவீதுக்கும் அவர் தலைமுறைக்கும் என்றென்றும் இரக்கம் காட்டியவர் நீரே.
×

Alert

×