Bible Languages

Indian Language Bible Word Collections
Psalms 119:62

Psalms Chapters

Psalms 119 Verses

Books

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 119 Verses

1 மாசற்ற வழியில் நடப்போர் பேறு பெற்றோர்: ஆண்டவர் தம் திருச்சட்டப்படி நடப்போர் பேறு பெற்றோர்.
2 அவருடைய ஆணைகளைக் கடைப்பிடிப்போர் பேறு பெற்றோர்: முழு மனத்தோடு அவரைத் தேடுவோர் பேறு பெற்றோர்.
3 அக்கிரமம் செய்யாமல் அவர் காட்டிய நெறியில் நடப்போர் பேறு பெற்றோர்.
4 நீர் உம் கட்டளைகளைத் தந்தீர்: அவற்றை முற்றிலும் கடைப்பிடிக்க வேண்டுமென்றீர்.
5 உம்முடைய நியமங்களை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் நிலைத்திருந்தால் எவ்வளவோ நலம்!
6 உம் கற்பனைகளையெல்லாம் மனத்தில் கொண்டிருந்தால் நான் ஏமாற்றம் அடையேன்!
7 நேரிய உள்ளத்தோடு நான் உம்மைப் போற்றிப் புகழ்வேன்: உம் நீதி மிக்க விதிகளை நான் கற்றுக் கொண்டு போற்றிப் புகழ்வேன்.
8 உம் நியமங்களைக் கடைப்பிடிப்பேன்: என்னை எந்நாளும் கைவிடாதேயும்.
9 இளைஞன் தான் செல்லும் வழியில் புனிதனாய் எங்ஙனம் நடக்க இயலும்? உம் வார்த்தையைக் கடைப்பிடிப்பதால் தான்.
10 முழு மனத்தோடு நான் உம்மைத் தேடுகிறேன்: உம் கற்பனைகளை விட்டுத் தவறிச் செல்ல என்னை விடாதேயும்.
11 உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.
12 ஆண்டவரே, நீர் வாழ்த்துக்குரியவர்: எனக்கு உம் நியமங்களைக் கற்பித்தருளும்.
13 நீர் வருவாய் மலர்ந்து வெளிப்படுத்திய முறைமைகளையெல்லாம் என் நாவினால் எடுத்தியம்புகின்றேன்.
14 பெருஞ் செல்வத்தில் மகிழ்ச்சி கொள்வது போல், நான் உம் ஆணைகளைக் குறித்து மகிழ்ச்சி கொள்கிறேன்.
15 உம் கட்டளைகளைக் குறித்து நான் தியானிப்பேன்; நீர் காட்டிய நெறியை நான் மனத்தில் இருத்துவேன்.
16 உம் நியமங்களை நினைத்து இன்புறுவேன்: உம் வார்த்தைகளை நான் மறவேன்.
17 உம் வார்த்தைகளை நான் கடைப்பிடித்து வாழும் வண்ணம், உம் ஊழியன் எனக்கு அருள் கூரும்.
18 உமது திருச்சட்டத்தின் வியத்தகு செயல்களை நான் நன்குணரும் வண்ணம், என் கண்களைத் திறந்தருளும்.
19 இம்மையில் நான் வரிப்போக்கனாய் உள்ளேன்: உம் கற்பனைகளை என்னிடமிருந்து மறைத்து வைக்காதேயும்.
20 எந்நேரமும் உம் விதிகளின் மீது ஆசை வைத்திருப்பதால், என்ன உள்ளம் உருகிப் போகின்றது.
21 செருக்குற்றோரைக் கண்டித்தீர்: உம் கற்பனைகளைக் கைவிடுவோர் சபிக்கப்ட்டவரே.
22 நிந்தனைக்கும் புறக்கணிப்புக்கும் நான் ஆளாக விடாதேயும்: ஏனெனில் நீர் தந்த ஆணைகளை நான் கடைப்பிடிக்கிறேன்.
23 தலைவர்கள் எனக்கெதிராய் அமர்ந்து பேசினாலும் உம் ஊழியன் உம்முடைய நியமங்களைக் குறித்தே தியானிக்கின்றான்.
24 ஏனெனில், உம் ஆணைகள் எனக்கு இனிமையாயுள்ளன: உம் நியமங்களே எனக்கு ஆலோசனை தருபவை.
25 என் உள்ளம் ஊக்கம் தளர்ந்து சோர்வுற்றது: உம் வார்த்தையின்படி எனக்கு வாழ்வளித்தருளும்.
26 என் நெறி முறைகளை உமக்கு எடுத்துச் சொன்னேன்: நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்; உம் நியமங்களை எனக்குப் படிப்பித்தருளும்.
27 உம் கட்டளைகள் காட்டும் வழியில் என்னைச் செலுத்தும்: நான் உம் வியப்புக்குரிய செயல்களைத் தியானிப்பேன்.
28 துயர மிகுதியால் என் உள்ளம் கண்ணீர் உகுக்கின்றது: உமது வார்த்தையின்படி என்னை ஊக்குவியும்.
29 தவறான வழியில் என்னை நடக்க விடாதேயும்: உமது திருச்சட்டத்தை எனக்கு அருளும்.
30 உண்மையின் பாதையை நான் தேர்ந்து கொண்டேன்: உம் முறைமைகளை என் கண்முன் கொண்டேன்.
31 உம் ஆணைகளை நான் உறுதியாய்ப் பற்றிக் கொண்டேன்: ஆண்டவரே, நான் ஏமாற்றம் அடைய விடாதேயும்.
32 நீர் என் அறிவை விவரிக்கும் போது, உம் கற்பனைகள் காட்டும் வழியில் நான் செல்வேன்.
33 ஆண்டவரே, உம் நியமங்கள் குறிப்பிடும் வழியை எனக்குக் காட்டியருளும்: நான் அவற்றை அப்படியே கடைப்பிடிப்பேன்.
34 உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்குக் கற்பித்தருளும்: அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன்.
35 உம் கற்பனைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்: அதுவே என் இன்பம்.
36 உம் ஆணைகளின் பால் என் இதயம் திருப்பியருளும்: இம்மைப் பயனை நாட விடாதேயும்.
37 பயனற்றதின் மீது பார்வையைச் செலுத்தாதபடி என் கண்களைத் திருப்பி விடும்: நீர் காட்டும் வழியின் வாயிலாய் எனக்கு வாழ்வளித்தருளும்.
38 உம் ஊழியனுக்கு நீர் தந்த வாக்குறுதியை நிறைவேற்றும்: உமக்கு அஞ்சி நடப்போர்க்கன்றோ அவ்வாக்குறுதியை அளித்தீர்!
39 நான் அஞ்சும் நிந்தனையெதற்கும் என்னை ஆளாக்காதேயும்; ஏனெனில், உம் முறைமைகள் இனியவை .
40 உம் கட்டளைகளைப் பெரிதும் விரும்பினேன்: உமது நீதியின்படி எனக்கு வாழ்வளித்தருளும்.
41 ஆண்டவரே, உம் இரக்கப் பெருக்கத்தை என் மீது பொழிந்தருளும்: உமது வாக்குறுதியின்படி எனக்கு உதவியளித்தருளும்.
42 அப்போது நான் என்னைப் பழிப்போர்க்கு ஏற்ற பதில் கூறுவேன்; ஏனெனில், உம் வார்த்தையில் எனக்கு நம்பிக்கை உண்டு.
43 என் வாயினின்று உண்மையை எடுத்து விடாதேயும்: ஏனெனில், உம் முறைமைகளின் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.
44 உமது திருச்சட்டத்தை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்: என்றென்றும் முடிவின்றி அதைக் காப்பேன்.
45 அகன்றதொரு பாதையில் நான் நடப்பேன்: ஏனெனில், உம் கட்டளைகளைப் பற்றி நான் கருத்தாய் இருக்கின்றேன்.
46 உம் ஆணைகளைப் பற்றி நான் அரசர் முன்னிலையிலும் பேசுவேன்: வெட்கமுற மாட்டேன்.
47 உம் கற்பனைகளில் நான் இன்பம் கொள்வேன்: அவற்றை நேசிக்கிறேன்.
48 உம் கற்பனைகளை நோக்கி என் கைகளைக் கூப்புவேன்: உம் நியமங்களையே நான் தியானிப்பேன்.
49 உம் ஊழியனுக்கு நீர் தந்த வாக்கை நினைவு கூர்ந்தருளும்: அதனால் எனக்கு நம்பிக்கையளித்தீர்.
50 உம் வாக்கு எனக்கு வாழ்வளிக்கிறது: இந்நினைவே என் துன்பத்தில் எனக்கு ஆறுதல் தரும்.
51 செருக்குற்றோர் என்னை மிகவும் பழிக்கின்றனர்: ஆனால் உம் திருச்சட்டத்தினின்று நான் விலகுவதில்லை.
52 ஆண்டவரே, முற்காலத்தில் நீர் அளித்த தீர்ப்புகளை நான் நினைவுகூர்கிறேன்: அவை எனக்கு ஆறுதலாய் உள்ளன.
53 உம் திருச்சட்டத்தைக் கைவிடும் பாவிகளைப் பார்க்கும் போது, மிகவே சினம் கொள்கிறேன்.
54 நிலையற்ற நாடாகிய இவ்வுலகில் உம் நியமங்கள் எனக்குப் புகழ்ப் பாக்களாய் உள்ளன.
55 ஆண்டவரே, இரவிலும் நான் உமது பெயரை நினைவு கூர்கிறேன்: உமது திருச் சட்டத்தை அனுசரிப்பேன்.
56 நான் இங்ஙனம் வாழ்வது, உமது கட்டளைகளைக் கடைப்பிடிப்பதால் தான்.
57 ஆண்டவரே, உம் வார்த்தைகளை அனுசரிப்பதே, என் வாழ்க்கைப் பயன் எனக் கருதினேன்.
58 என் முழுமனத்தோடு உம் திருமுகத்தைப் பார்த்து வேண்டினேன்: உமது வாக்குறுதிக்கேற்ப என் மேல் இரக்கம் வையும்.
59 நான் நடக்கும் வழிகளை நன்கு கவனித்தேன்: உம் ஆணைகளின் பக்கமாய் அடி எடுத்து வைத்தேன்.
60 உம் கற்பனைகளைக் கடைபிடிக்கத் தயங்கவில்லை: தாமதம் செய்யவில்லை.
61 பாவிகளின் தளைகள் என்னை இறுக்கின: ஆனால் உம் திருச்சட்டத்தை நான் மறக்கவில்லை.
62 நீதி வாய்ந்த உம் முறைமைகளைக் குறித்து, நள்ளிரவில் உமது புகழ் பாட எழுகின்றேன்.
63 உமக்கு அஞ்சி நடப்போர் யாவருக்கும் நான் நண்பன்: உம் கட்டளைகளை அனுசரிப்போர்க்குத் தோழன்.
64 ஆண்டவரே, உமது அருளால் பூவுலகு நிறைந்துள்ளது: உம் நியமங்களை எனக்குக் கற்பியும்.
65 ஆண்டவரே, உமது வாக்குறுதிக்கேற்ப, உம் ஊழியனுக்கு நன்மையே புரிந்தீர்.
66 நீதியும் ஞானமும் எனக்குக் கற்பியும்: ஏனெனில், உம் கற்பனைகளின் மீது நம்பிக்கை வைக்கிறேன்.
67 துன்பம் என்னைத் தாக்கும் முன்பு நான் தவறிழைத்தேன்: ஆனல் இப்போது உமது வாக்கின்படி நடக்கிறேன்.
68 நல்லவர் நீர், நன்மையே செய்பவர்: எனக்கு உம் நியமங்களைக் கற்பியும்.
69 ஆணவம் பிடித்தவர்கள் எனக்கெதிராய்ச் சதித் திட்டங்கள் செய்கிறார்கள்: நானோ முழுமனத்துடன் உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறேன்:
70 அவர்கள் உள்ளம் கனமாகிவிட்டது: நானோ உம் திருச்சட்டத்தை நினைத்து இன்புறுகிறேன்.
71 எனக்குத் துன்பம் விளைந்தது நன்மையே: அதனால் உம் நியமங்களை நான் கற்றுக்கொள்ள முடிந்தது.
72 நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரம் பொன்னையும் வெள்ளியையும் விட மேலானது.
73 உம் கைகளே என்னைப் படைத்தன, என்னை உருவாக்கின: உம் கற்பனைகளை நான் கற்றுக் கொள்ள எனக்கு அறிவு புகட்டும்.
74 உமக்கு அஞ்சுவோர் என்னைக் கண்டு மகிழ்ச்சியுறுவர்: உமது வார்த்தையை நான் நம்பினதற்காக மகிழ்வர்.
75 ஆண்டவரே, உம் தீர்ப்புகள் நீதியானவை என அறிவேன்: நீர் என்னைத் துன்பத்துக் குள்ளாக்கியது நீதியே.
76 எனக்கு ஆறுதலளிக்க உமது இரக்கம் எனக்குக் கிடைக்கட்டும்: உம் ஊழியனுக்கு வாக்குறுதி தந்தீர் அன்றோ!
77 நான் வாழ்வு பெறும்படி உம் இரக்கப் பெருக்கம் எனக்கு உதவட்டும்: ஏனெனில், உமது திருச்சட்டத்தில் நான் இன்பம் காண்கிறேன்.
78 செருக்குற்றோர் வெட்கிப் போவார்களாக, அவர்கள் என்னைக் காரணமின்றித் துன்புறுத்துகின்றனர்: நானோ உம் கட்டளைகளைப் பற்றித் தியானம் செய்வேன்.
79 உமக்கு அஞ்சுவோர் என் சர்பாய்த் திரும்புவார்களாக: உம் ஆணைகளைப் பற்றிக் கவலையுறுவோர் என் பக்கம் இருப்பார்களாக.
80 உம் நியமங்களில் என் உள்ளம் முற்றிலும் ஊன்றியிருப்பதாக: நான் வெட்கமுறேன்.
81 உமது உதவி பெறும் ஆவலால் என் உள்ளம் ஏங்குகின்றது: உம் வார்த்தையை நான் நம்பியிருக்கிறேன்.
82 உம் வாக்கீன் மீது கொண்ட ஏக்கத்தால் என் கண்கள் பூத்துப் போயின: எப்போது எனக்கு ஆறுதல் தருவீர்?
83 புகையினிடையுள்ள தோற்பை போலானேன்: உம் நியமங்களை நான் மறக்கவில்லை.
84 உம் ஊழியனுக்கு இன்னும் உள்ள வாழ்நாள் எத்தனை? என்னைத் துன்புறுத்துவோருக்கு என்று தீர்ப்பளிப்பீர்?
85 உமது திருச்சட்டப்படி நடக்காமல், செருக்குற்றோர் எனக்குக் குழி வெட்டினர்.
86 நீர் தந்த கற்பனைகள் எல்லாம் உறுதியானவை; காரணமின்றி அவர்கள் என்னைத் துன்புறுத்துகின்றனர்: எனக்குத் துணை செய்யும்.
87 என் வாழ்வை இறுதி நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்கள் என்றே சொல்லலாம்: நானோ உம் கட்டளைகளைக் கைவிடவில்லை.
88 உமது இரக்கத்திற்கேற்ப என்னை உயிரோடு வைத்திரும்: உமது திருவாய் மலர்ந்த ஆணைகளை நான் கடைப்பிடிப்பேன்.
89 ஆண்டவரே, என்றென்றைக்கும் உள்ளது உமது வார்த்தை: வானத்தைப் போல் அது நிலையாயுள்ளது.
90 தலைமுறை தலைமுறையாய் உள்ளது உமது சொல்லுறுதி; நீர் உருவாக்கிய பூவுலகு நிலையாய் உள்ளது.
91 நீர் குறித்த விதிகளின்படி அவை எந்நாளும் நிலைத்துள்ளன. ஏனெனில், எல்லாம் உமக்கு ஊழியம் செய்கின்றன.
92 உமது திருச்சட்டம் எனக்கு இன்பம் தருவதாய் இல்லாதிருந்தால், என் துன்பத்தில் நான் மடிந்து போயிருப்பேன்.
93 உம் கட்டளைகளை நான் எந்நாளும் மறவேன்: ஏனெனில், அவற்றைக் கொண்டு எனக்கு நீர் வாழ்வளித்தீர்.
94 உமக்கே நான் சொந்தம்: என்னைக் காத்தருளும்; ஏனெனில் உம் கட்டளைகளையே நான் நாடினேன்.
95 பாவிகள் என்னைத் தொலைத்துவிடப் பார்க்கிறார்கள்: என் கவனமோ உம் ஆணைகளின் மீதே இருக்கிறது.
96 மேன்மையானதனைத்தின் முடிவையும் நான் பார்த்து விட்டேன்: அளவற்ற மேன்மை வாய்ந்தது உமது கற்பனை.
97 ஆண்டவரே, நான் உமது சட்டத்தை எவ்வளவோ நேசிக்கிறேன்: நாள் முழுவதும் அது என் தியானமாய் உள்ளது.
98 என் எதிரிகளை விட என்னை அறிவுள்ளவன் ஆக்கியது உமது கற்பனை: ஏனெனில், என்றென்றும் அது என்னோடு உள்ளது.
99 எனக்கு அறிவு புகட்டுவோர் அனைவரினும் நான் அறிவாளியாயிருக்கிறேன்: ஏனென்றால் உம் ஆணைகளையே நான் தியானிக்கிறேன்.
100 முதியோர்களை விட நான் அறிவு பெற்றேன்; ஏனெனில், உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறேன்.
101 தீய வழி எதிலும் அடி எடுத்து வைக்காதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்: உம் வார்த்தையின்படி நடப்பதே என் கவலை.
102 உம் விதிகளை விட்டுச் சிறிதேனும் தவறுவதில்லை: ஏனெனில் நீர் எனக்கு அறிவு புகட்டினீர்.
103 உம் வாக்குகள் சுவைக்கு எவ்வளவு இனிமையாயுள்ளன! என் வாய்க்குத் தேனினும் சுவை மிகுந்தவையே.
104 உம் கட்டளைகளால் நான் அறிவுள்ளவனாகின்றேன்: ஆகவே தான் தீமையான பாதை எதையும் நான் வெறுக்கிறேன்.
105 நான் நடக்கவேண்டிய பாதையைக் காட்டும் விளக்கு உம் வார்த்தை: செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே.
106 இதுவே என் சபதம்; இதுவே என் உறுதி: நீதியான உம் முறைமைகளை நான் கடைப்பிடிப்பேன்.
107 ஆண்டவரே மிக மிகத் துன்புறலானேன்: உம் வார்த்தையின்படி என்னை உயிரோடு வைத்தருளும்.
108 என் வாயினின்று எழும் இப்புகழ்ச்சிக் காணிக்கையை ஆண்டவரே, ஏற்றுக் கொள்ளும்: உம் முறைமைகளை எனக்குக் கற்பியும்.
109 என் உயிர் எப்போதும் இடர் மிக்கதாய் உள்ளது: ஆனால் உம் திருச்சட்டத்தை நான் மறவேன்.
110 பாவிகள் எனக்குக் கண்ணி வைத்தார்கள்: ஆனால் உம் கட்டளைகளினின்று நான் பிறழவில்லை.
111 உம் ஆணைகளே என்றென்றைக்கும் என் உரிமைச் சொத்து: ஆகவே அவை என் இதயத்துக்கு மகிழ்வளிக்கின்றன.
112 உம் நியமங்களை நிறைவேற்றுவதே என் உள்ளத்துக் கவலை: என்றும், சற்றும் குறைவின்றி நிறைவேற்றுவதே என் கருத்து.
113 நேர்மையற்ற மனத்தோரை நான் வெறுக்கிறேன்: உமது திருச்சட்டத்தின் மீது அன்பு வைக்கிறேன்.
114 நீரே என் பாதுகாப்பு, நீரே என் கேடயம்: உம் வார்த்தையின் மீது நம்பிக்கை வைக்கிறேன்.
115 தீய மனத்தோரே, என்னை விட்டு விலகுங்கள்: என் இறைவனின் கற்பனைகளை நான் அனுசரிப்பேன்.
116 உமது வாக்குறுதிக்கேற்ப எனக்கு ஆதரவாயிரும், நான் வாழ்வேன்: எனக்குள்ள நம்பிக்கையின் பொருட்டு நான் வாழ்வேன்: எனக்குள்ள நம்பிக்கையின் பொருட்டு நான் வெட்கமுற விடாதேயும்.
117 எனக்குத் துணைசெய்யும், மீட்புப் பெறுவேன்: எந்நாளும் உம் நியமங்களைக் கருத்தில் கொண்டிருப்பேன்.
118 உம் நியமங்களை விட்டு விலகுவோர் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர்: அவர்கள் சிந்தனை வஞ்சகமானது.
119 பூவுலகின் பாவிகள் அனைவரையும் நீர் வெறும் கழிவடையாகக் கருதுகிறீர்: ஆகவே நான் உம் நியமங்களை நேசிக்கிறேன்.
120 உம்மீது கொண்டுள்ள அச்சத்தால் என் உடலும் நடுங்குகின்றது: உம் விதிமுறைகளுக்கு நான் அஞ்சி நடுங்குகிறேன்.
121 நீதியும் நியாயமுமானதையே கடைப்பிடித்தேன்: என்னைத் துன்புறுத்துவோர் கையில் நான் விழ விடாதேயும்.
122 உம் ஊழியனாகிய எனக்கு உறுதுணையாய் இரும்: செருக்குற்றோர் என்னைத் துன்புறுத்த விடாதேயும்.
123 உமது உதவிக்காக ஏங்கி என் கண்கள் பூத்துப் போயின: நீதியுடன் நீர் வாக்களித்ததைப் பெற வேண்டுமென்று ஏங்குகிறேன்.
124 உம் நன்மைத்தனத்திற்கேற்ப உம் ஊழியனாகிய எனக்குத் தயவு காட்டும்: உம் நியமங்களை எனக்குக் கற்பியும்.
125 உம் ஊழியன் நான்; எனக்கு அறிவு புகட்டும்: அப்போது உம் ஆணைகளை அறிந்து கொள்வேன்.
126 ஆண்டவர் செயலாற்றும் நேரம் வந்து விட்டது: உம் சட்டம் புறக்கணிக்கப்பட்டு விட்டது.
127 ஆதலால் நான் உம் கற்பனைகளின் மீது அன்பு வைக்கிறேன்: பொன்னையும் மணியையும் விட நேசித்தேன்.
128 ஆகவே உம் கட்டளைகளெல்லாம் நீதியென ஏற்றுக் கொண்டேன்: பொய்யான வழி எதையும் வெறுக்கிறேன்.
129 உம் ஆணைகள் வியப்புக்குரியவை: ஆகவே என் ஆன்மா அவற்றைக் கடைப்பிடிக்கிறது.
130 உம் வார்த்தைகளுக்குத் தரும் விளக்கம் அறிவொளி தருகிறது: அது எளியோர்க்கு அறிவூட்டுகிறது.
131 வாய் திறக்கிறேன், பெருமூச்சு விடுகிறேன்: ஏனெனில், உம் கற்பனைகளை விரும்புகிறேன்.
132 என் மீது உமது பார்வையைத் திருப்பி இரக்கம் வையும்: உம் மீது அன்பு கொள்பவர்களுக்கு இரங்குவது போல என் மீது இரங்கும்.
133 உமது வாக்கின்படி என் நடத்தையை நெறிப்படுத்தும்: தீமையானது எதுவும் என்னை மேற்கொள்ளாது.
134 மனிதர்களால் வரும் நெருக்கடியினின்று என்னை விடுவியும்: உம் கட்டளைகளை நான் கடைப்பிடிப்பேன்.
135 உம் ஊழியன் எனக்கு இன்முகம் காட்டியருளும்: உம் நியமங்களை எனக்குக் கற்பித்தருளும்.
136 உமது திருச்சட்டத்தை மக்கள் கடைப்பிடிக்காததைக் கண்டு, என் கண்ணீர் ஆறாய்ப் பெருகியது.
137 ஆண்டவரே, நீர் நீதி உள்ளவர்: உமது தீர்ப்பு நேர்மையானது.
138 நீர் தந்த ஆணைகள் நீதியுடன் பொருந்தியவை: அவை முற்றிலும் நம்பத் தக்கவை.
139 உம் திருச்சட்டத்தின் மீது எனக்குள்ள ஆர்வம் என்னை விழுங்குகின்றது: ஏனெனில், உம் எதிரிகள் உம் வார்த்தைகளை மறந்து விடுகின்றனர்.
140 உம் வாக்குறுதி தளர்வுறாததென எண்பிக்கப்பட்டது: உம் ஊழியன் அதைப் பெரிதும் நேசிக்கிறான்.
141 சிறியவன் யான், எம்மதிப்புக்கும் உரியவனல்லேன்: ஆனால் உம் கட்டளைகளை நான் மறப்பதில்லை.
142 உமது நீதி என்றென்றைக்கும் நேர்மையானது: உமது திருச்சட்டம் உறுதியாயுள்ளது.
143 நெருக்கடியும் துன்பமும் என்னைச் சூழ்ந்து கொண்டன: உம் கற்பனைகள் என் இன்பமாய் உள்ளன.
144 உம் ஆணைகள் என்றென்றைக்கும் நேர்மையானவை: எனக்கு அறிவு புகட்டும்; நான் வாழ்வேன்.
145 முழு இதயத்துடன் உம்மை நோக்கிக் கூக்குரலிடுகிறேன்; ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்: உம் நியமங்களை நான் அனுசரிக்கிறேன்.
146 உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், எனக்கு மீட்பு அளித்தருளும்: உம் ஆணைகளை நான் கடைப்பிடிப்பேன்.
147 வைகறையில் உம்மிடம் வருகிறேன், நீர் உதவுமாறு மன்றாடுகிறேன்: உம் வார்த்தையில் நம்பிக்கை வைக்கிறேன்.
148 உம் வாக்குகளைத் தியானிப்பதற்காக, நான் இரவுச் சாம நேரங்களில் தூங்காமல் விழித்திருக்கிறேன்.
149 ஆண்டவரே, உமது இரக்கத்திற்கேற்ப என் மன்றாட்டைக் கேட்டருளும்: உமது தீர்ப்பின் படி எனக்கு வாழ்வளித்தருளும்.
150 என்னை அநியாயமாகத் துன்புறுத்துவோர் நெருங்கி வருகின்றனர்: அவர்களுக்கும் உமது திருச்சட்டத்திற்கும் வெகு தூரம்.
151 ஆண்டவரே, நீர் அண்மையில் இருக்கிறீர்: உம் கற்பனைகள் எல்லாம் உறுதியானவை.
152 அவற்றை நீர் என்றென்றைக்கும் ஏற்படுத்தினீர் என்று, நீர் தந்த ஆணைகளினின்று முன்பே அறிந்திருக்கிறேன்.
153 என் துன்ப நிலையைப் பார்த்து அதிலிருந்து என்னை விடுவித்தருளும்: ஏனெனில், உமது திருச்சட்டத்தை நான் மறக்கவில்லை.
154 என் வழக்கை விசாரித்து என்னைக் காத்தருளும்: உமது வாக்குக்கேற்றபடி எனக்கு வாழ்வளித்தருளும்.
155 பாவிகள் மீட்புக்கு வெகு தொலைவிலுள்ளனர்: ஏனெனில், அவர்கள் உம் நியமங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
156 ஆண்டவரே, உம் இரக்கம் மிகப் பெரிது: உம் முறைகளின்படி எனக்கு வாழ்வளித்தருளும்.
157 என்னைத் துன்புறுத்தித் தொல்லைப் படுத்துவோர் பலர்: ஆனால் உம் ஆணைகளை விட்டு நான் தவறுவதில்லை.
158 அக்கிரமம் செய்வோரைப் பார்த்தேன், பெரிதும் வருந்தினேன்: ஏனெனில், அவர்கள் உம் வாக்கைக் கடைப்பிடிப்பதில்லை.
159 ஆண்டவரே பாரும், நான் உம் கட்டளைகளை நேசிக்கிறேன்: உமது இரக்கத்திற்கேற்ப என்னை உயிரோடு காத்தருளும்.
160 உமது வார்த்தையின் உட்பொருள் உண்மையினின்று வழுவாதது: நீதி வாய்ந்த உம் தீர்ப்புகள் என்றும் நிலைத்திருப்பவை.
161 தலைவர்கள் என்னைக் காரணமின்றித் துன்புறுத்தினர்: என் இதயம் உம் வார்த்தைகள் மீது அச்சம் கொண்டுள்ளது.
162 திரண்ட பொருள் கிடைத்தவன் மகிழ்வது போல, உமது வாக்குறுதியை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
163 அக்கிரமத்தை வெறுத்து ஒதுக்குகிறேன்: உமது திருச்சட்டத்தை நேசிக்கிறேன்.
164 நீதியான தீர்ப்புகளைக் குறித்து ஒரு நாளைக்கு ஏழு முறை உமக்குப் புகழ் பாடுகிறேன்.
165 உமது சட்டத்தை நேசிப்பவர்களுக்கு மிகுதியான அமைதியுண்டு: அவர்களை விழத்தாட்டக் கூடிய தடைகள் இல்லை.
166 ஆண்டவரே, உமது உதவியை நம்பி வாழ்கிறேன்: உம் கற்பனைகளை அனுசரிக்கிறேன்.
167 உம் ஆணைகளை என் உள்ளம் கடைப்பிடிக்கிறது: அவற்றை மிகவும் நேசிக்கிறது.
168 உம் கட்டளைகளையும் கற்பனைகளையும் நான் அனுசரிக்கிறேன்: ஏனெனில், என் நடத்தை உமக்குத் தெரிந்திருக்கிறது.
169 ஆண்டவரே, என் கூக்குரல் உம்மிடம் வருவதாக: உமது வார்த்தைக் கேற்ப எனக்கு அறிவு புகட்டும்.
170 என் செபம் உம்மிடம் வருவதாக: உம் வாக்கின்படி எனக்கு விடுதலையளித்தருளும்.
171 உம் நியமங்களை எனக்கு நீர் கற்பிப்பதால், என் நா உமது புகழைப் பாடும்.
172 உம் வாக்கைக் குறித்து என் நாவு பாடுவதாக: ஏனெனில் உம் கற்பனைகள் எல்லாம் நீதியானவை.
173 உமது திருக்கரம் எனக்குத் துணைசெய்ய வருவதாக: ஏனெனில் உம் கட்டளைகளை நான் விரும்பினேன்.
174 ஆண்டவரே, உம்மிடமிருந்து வரும் மீட்பை நான் விரும்புகிறேன்: உமது திருசசட்டத்தில் நான் இன்பம் காண்கிறேன்.
175 வாழ்வு பெற்று நான் உம்மைப் புகழ்வேனாக: உம் விதி முறைமைகள் எனக்குத் துணைபுரிவனவாக.
176 வழி தவறிய ஆட்டைப் போல் நான் அலைந்து திரிகிறேன்; உம் ஊழியனைத் தேடியருளும்: ஏனெனில், உம் கற்பனைகளை நான் மறக்கவில்லை.
×

Alert

×