Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Matthew Chapters

Matthew 17 Verses

1 ஆறு நாட்களுக்குப்பின் இயேசு இராயப்பரையும் யாகப்பரையும், அவர் சகோதரர் அருளப்பரையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு ஒதுக்கமாய்க் கூட்டிக்கொண்டு போய், அவர்கள்முன் உருமாறினார்.
2 அவரது முகம் கதிரவனைப்போல் ஒளி வீசியது. அவர் ஆடைகள் ஒளியைப்போல வெண்மையாயின.
3 இதோ! மோயீசனும் எலியாசும் அவர்களுக்குத் தோன்றி அவரோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.
4 இராயப்பர் இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று! நீர் விரும்பினால் உமக்கு ஒன்றும், மோயீசனுக்கு ஒன்றும், எலியாசுக்கு ஒன்றுமாக இங்குக் கூடாரம் மூன்று அமைப்பேன்" என்று சொன்னார்.
5 அவர் பேசிக் கொண்டிருக்கையிலே, இதோ! ஒளிரும் மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. "இவரே என் அன்பார்ந்த மகன்! இவரிடம் நான் பூரிப்படைகிறேன்; இவருக்குச் செவி சாயுங்கள்" என்ற குரலொலி, இதோ! மேகத்திலிருந்து கேட்டது.
6 இதைக் கேட்ட சீடர் குப்புற விழுந்து பெரிதும் அஞ்சினர்.
7 இயேசு அணுகிவந்து அவர்களைத் தொட்டு, "எழுந்திருங்கள், அஞ்சவேண்டாம்" என்றார்.
8 அவர்கள் ஏறெடுத்துப் பார்த்தபோது இயேசுவையன்றி வேறு எவரையும் காணவில்லை.
9 அவர்கள் மலையினின்று இறங்கும்பொழுது "மனுமகன் இறந்தோரிடமிருந்து உயிர்க்கும்வரை இக்காட்சியை எவருக்கும் சொல்ல வேண்டாம்" என்று இயேசு அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
10 "முதலில் எலியாஸ் வர வேண்டும் என்று மறைநூல் அறிஞர் கூறுவதேன்?" எனச் சீடர் அவரைக் கேட்டனர்.
11 அதற்கு அவர், "எலியாஸ் வந்து எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தத்தான் போகிறார்.
12 நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: எலியாஸ் ஏற்கனவே வந்துவிட்டார். அவர்கள் அவரை அறிந்துகொள்ளாமல் தாம் விரும்பியதெல்லாம் அவருக்குச் செய்தார்கள். இவ்வாறே மனுமகனும் அவர்கள் கையால் பாடுபடப்போகிறார்" என்றார்.
13 அவர் சொன்னது ஸ்நாபக அருளப்பரைப்பற்றித்தான் என்பதை அப்போது சீடர் உணர்ந்தனர்.
14 அவர்கள் கூட்டத்திடம் வந்ததும், ஒருவன் அவரை அணுகி அவர்முன் முழந்தாளிட்டு,
15 "ஆண்டவரே, என் மகன்மேல் இரக்கம் வையும். ஏனெனில், அவன் வலிப்பினால் துன்பப்படுகிறான். அடிக்கடி நெருப்பிலும் நீரிலும் விழுகிறான்.
16 அவனை உம் சீடரிடம் கொண்டு வந்தேன். அவனைக் குணமாக்க அவர்களால் முடியவில்லை" என்றான்.
17 அதற்கு இயேசு, "விசுவாசம் இல்லாத சீர்கெட்ட தலைமுறையே, எதுவரை உங்களுடன் இருப்பேன்? எதுவரை உங்களைப் பொறுத்துக்கொண்டிருப்பேன்? அவனை என்னிடம் இங்குக்கொண்டு வாருங்கள்" என்றார்.
18 இயேசு அவனைக் கடிய, பேய் அவனை விட்டு நீங்கியது. அந்நேரமுதல் பையன் குணமாயிருந்தான்.
19 பின், சீடர் தனிமையாக இயேசுவை அணுகி, "அதை ஓட்ட ஏன் எங்களால் முடியவில்லை?" என்று வினவினர்.
20 அதற்கு இயேசு கூறியது: "உங்கள் விசுவாசக் குறைவினால்தான். உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்:
21 கடுகளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இம்மலையை நோக்கி, 'இவ்விடம் விட்டு அவ்விடம் செல்' என்றால் அது பெயர்ந்து செல்லும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது."
22 அவர்கள் கலிலேயாவில் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி, "மனுமகன் மனிதரிடம் கையளிக்கப்படப்போகிறார்.
23 அவர்கள் அவரைக் கொல்லுவார்கள். அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார்" என்று சொல்ல, அவர்கள் மிகவும் வருந்தினர்.
24 அவர்கள் கப்பர்நகூமுக்கு வந்தபோது வரிப்பணம் வாங்குவோர் இராயப்பரிடம் வந்து, "உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துவதில்லையா?" என்றனர்.
25 "ஆம் செலுத்துகிறார்" என்றார். வீட்டுக்குள் வந்து அவர் இதைச் சொல்லுவதற்கு முன்னமே, இயேசு, "சீமோன், இதைப்பற்றி உன் கருத்து என்ன? மண்ணக அரசர்கள், தீர்வையோ வரியோ யாரிடம் வாங்குகின்றனர்? நம் மக்களிடமா? அன்னியரிடமா?" என்று கேட்டார்.
26 "அன்னியரிடந்தான்" என்று அவர் சொல்ல, இயேசு, "இப்படியானால் மக்களுக்குக் கடமையில்லை அன்றோ?
27 ஆயினும் நாம் அவர்களுக்கு இடறலாகாதபடி நீ கடலுக்குச் சென்று, தூண்டில் போட்டு, முதலில் படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் 'ஸ்நாத்தேர்' என்னும் நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களுக்குச் செலுத்து" என்றார்.
×

Alert

×