Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Mark Chapters

Mark 8 Verses

1 அந்நாட்களில் மீண்டும் ஒரு பெருங்கூட்டம் கூடியிருந்தது. அவர்கள் உண்ண ஒன்றும் இல்லை. அப்போது, அவர் சீடரை அழைத்து,
2 "இக்கூட்டத்தின்மீது நான் மனமிரங்குகிறேன். ஏனெனில், இவர்கள் விடாமல் இம்மூன்று நாட்களாக என்னுடன் இருக்கிறார்கள். இவர்களுக்கு உணவு ஒன்றுமில்லையே!
3 இவர்களை வீட்டுக்குப் பட்டினியாக நான் அனுப்பினால் வழியில் சோர்ந்து விழுவர். இவர்களில் சிலர் தொலைவிலிருந்து வந்துள்ளனர்" என்றார்.
4 சீடர் அவருக்கு மறுமொழியாக, "இப்பாழ்வெளியில் இவர்களுக்கு வயிறார உணவளிப்பது எப்படி?" என்றனர்.
5 அதற்கு அவர், "உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?" என்று கேட்க, " ஏழு " என்றனர்.
6 தரையில் பந்தியமரக் கூட்டத்துக்குக் கட்டளையிட்டார். பின்பு ஏழு அப்பங்களையும் எடுத்து நன்றிகூறி, பிட்டு, சீடருக்கு அளித்துப் பரிமாறச் சொன்னார். அவர்கள் கூட்டத்துக்குப் பரிமாறினர்.
7 அவர்களிடம் சிறு மீன்கள் சிலவும் இருந்தன. அவற்றையும் அவர் எடுத்து இறைபுகழ் கூறி, பரிமாறச் சொன்னார்.
8 அவர்கள் வயிறார உண்டனர். மீதியான துண்டுகளை ஏழு கூடை நிறைய எடுத்தனர்.
9 உணவு அருந்தியவர் ஏறக்குறைய நாலாயிரம் பேர்.
10 பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டு, உடனே தம் சீடரோடு படகேறித் தல்மானூத்தாப் பக்கம் சென்றார்.
11 பரிசேயர் வந்து அவரோடு தர்க்கிக்கத் தொடங்கி, வானிலிருந்து அருங்குறி ஒன்றைக் காட்டும்படி கேட்டு அவரைச் சோதித்தனர்.
12 அவர் பெருமூச்சுவிட்டு, "இத்தலைமுறை அருங்குறி கேட்பானேன்? உறுதியாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: இத்தலைமுறைக்கு அருங்குறி எதுவும் அளிக்கப்படாது" என்றார்.
13 அவர்களை விட்டுவிட்டு மீண்டும் படகேறி அக்கரைக்குச் சென்றார்.
14 சீடர்கள் அப்பம் கொண்டுவர மறந்துவிட்டார்கள். படகில் ஒரே ஓர் அப்பந்தான் இருந்தது.
15 பரிசேயருடைய புளிப்பு மாவையும், ஏரோதுடைய புளிப்பு மாவையும் குறித்து விழிப்பாயிருங்கள், எச்சரிக்கை" என்று அவர் அறிவுரை கூறினார்.
16 நம்மிடம் அப்பம் இல்லையே" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
17 இதையறிந்த இயேசு அவர்களை நோக்கி, "உங்களிடம் அப்பம் இல்லை என்று பேசிக்கொள்வானேன்? இன்னுமா உணரவில்லை? இன்னுமா விளங்கவில்லை?
18 உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் காண்பதில்லையா? காதிருந்தும் கேட்பதில்லையா? உங்களுக்கு நினைவில்லையா?
19 ஐயாயிரம் பேருக்கு ஐந்து அப்பத்தை நான் பகிர்ந்தபோது, மீதித்துண்டுகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்?" என்று கேட்க, "பன்னிரண்டு" என்றனர்.
20 ஏழு அப்பத்தை நாலாயிரம் பேருக்கு நான் பகிர்ந்தபோது மீதித்துண்டுகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்?" என, "ஏழு" என்றனர்.
21 அவர் அவர்களை நோக்கி, "இன்னும் உங்களுக்கு விளங்கவில்லையா?" என்றார்.
22 அவர்கள் பெத்சாய்தாவுக்கு வந்தனர். குருடன் ஒருவனை மக்கள் அவரிடம் கொண்டு வந்து, அவனைத் தொடும்படி வேண்டினர்.
23 அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனை ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவன் விழிகளில் உமிழ்ந்து, கைகளை அவன்மேல் வைத்து, "ஏதாவது தெரிகிறதா?" என்று கேட்டார்.
24 அவன் பார்வை பெறத்தொடங்கி, "மக்களைப் பார்க்கிறேன், மரங்கள் போலிருக்கின்றனர்; ஆனால் நடக்கின்றனர்" என்றான்.
25 பின்பு அவர் தம் கைகளை அவன் கண்களில் மீண்டும் வைக்கவே, அவன் பார்வை பெற்றுக் குணமடைந்து, அனைத்தையும் தெளிவாகக் காணலானான்.
26 அவர் அவனை வீட்டிற்கனுப்பி, "ஊருக்குள் நுழையவும் வேண்டாம்" என்றார்.
27 இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுப் போனார். வழியில் தம் சீடரை நோக்கி, "மக்கள், என்னை யாரென்று சொல்லுகிறார்கள்?" எனக்கேட்டார்.
28 அதற்கு அவர்கள், "சிலர் ஸ்நாபக அருளப்பர் என்றும், சிலர் எலியாஸ் என்றும், சிலர் இறைவாக்கினர்களுள் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள்" என்றனர்.
29 பின் அவர், "நீங்களோ என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்?" என்று அவர்களைக் கேட்டார். இராயப்பர் மறுமொழியாக, "நீர் மெசியா" என்றார்.
30 தம்மைப்பற்றி யாருக்கும் சொல்லவேண்டாமென்று அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
31 மேலும் மனுமகன் பாடுகள் பல படவும் மூப்பராலும், தலைமைக்குருக்களாலும், மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டுக் கொலையுண்டு, மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டுமென அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.
32 இதெல்லாம் வெளிப்படையாகச் சொன்னார். இராயப்பர் அவரைத் தனியாக அழைத்து அவரைக் கடிந்துகொண்டார்.
33 அவர் தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து, "போ பின்னாலே, சாத்தானே, ஏனெனில், உன் கருத்துகள் கடவுளுடைய கருத்துகள் அல்ல, மனிதனுடைய கருத்துகளே" என்று இராயப்பரைக் கடிந்துகொண்டார்.
34 பின் தம் சீடரையும் கூட்டத்தையும் அழைத்து, "என்னைப் பின்செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.
35 ஏனெனில், தன் உயிரை காத்துக் கொள்ள விரும்பகிறவன் அதை இழந்துவிடுவான். என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தன் உயிரை இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான்.
36 ஒருவன் தன் ஆன்மாவிற்குக் கேடு விளைவித்து, உலகமெல்லாம் தனதாக்கிக்கொள்வதனால் அவனுக்கு வரும் பயனென்ன?
37 ஒருவன் தன் ஆன்மாவிற்கு ஈடாக எதைக் கொடுக்க முடியும் ?
38 விபசாரமும் பாவமும் உள்ள இத்தலைமுறையில் எண்னைப்பற்றியும், என் வார்த்தைகளைப்பற்றியும் வெட்கப்படுகிறவன் எவனோ, அவனைப்பற்றி மனுமகன் தம் தந்தையின் மாட்சிமையில் பரிசுத்த வானதூதரோடு வரும்போது வெட்கப்படுவார்" என்றார்.
×

Alert

×