Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Luke Chapters

Luke 24 Verses

1 வாரத்தின் முதல்நாள் விடியற்காலையில் பெண்கள் தாங்கள் ஆயத்தப்படுத்தியிருந்த வாசனைப்பொருள்களை எடுத்துக்கொண்டு கல்லறைக்கு சென்றனர்.
2 கல்லறைவாயிலில் இருந்த கல் புரட்டியிருக்கக் கண்டனர்.
3 உள்ளே நுழைந்தபோது, அவர்கள் ஆண்டவராகிய இயேசுவின் உடலைக் காணவில்லை.
4 ஆதலால் மனம் கலங்கினர். அப்பொழுது, இதோ! மின்னொளி வீசும் ஆடையணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர்.
5 பெண்களோ அச்சங்கொண்டு, முகம் கவிழ்ந்து நின்றனர். தூதர்கள் அவர்களைப் பார்த்து, "உயிருள்ளவரை இறந்தோரிடையே தேடுவானேன்?
6 அவர் இங்கே இல்லை; உயிர்த்துவிட்டார்.
7 மனுமகன் பாவிகளிடம் கையளிக்கப்பட்டுச் சிலுவையில் அறையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவேண்டுமென்று, அவர் கலிலேயாவில் இருக்கும்போதே உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள்" என்றனர்.
8 அவர்களும் அவர் சொன்னதை நினைவுகூர்ந்தனர்.
9 கல்லறையை விட்டுத் திரும்பிவந்த பெண்கள் பதினொருவருக்கும், மற்றெல்லாருக்கும் இதெல்லாம் அறிவித்தனர்.
10 அப்பெண்கள்: மதலேன்மரியாளும் அருளம்மாளும் இயாகப்பரின் தாய் மரியாளும் ஆவர். அவர்களோடு சேர்த்து மற்றப் பெண்களும் இதை அப்போஸ்தலர்களுக்குக் கூறினர்.
11 பெண்கள் கூறியது வெறும் பிதற்றலாகத் தோன்றியதால் அவர்கள் நம்பவில்லை.
12 இராயப்பரோ எழுந்து கல்லறைக்கு ஓடினார். குனிந்து பார்க்கையில் துணிகள் மட்டும் கிடக்கக் கண்டார். நிகழ்ந்ததைக் குறித்து வியந்து கொண்டே வீடு திரும்பினார்.
13 அன்றே இதோ! அவர்களுள் இருவர் யெருசலேமிலிருந்து ஏழு கல் தொலைவிலிருந்த எம்மாவுஸ் என்ற ஊருக்குப் போய்க் கொண்டிருந்தனர்.
14 நடந்ததெல்லாம் பற்றித் தங்களுக்குள் பேசிக்கொண்டே சென்றனர்.
15 இப்படிப் பேசி உசாவுகையில், இயேசுவே அவர்களோடு சேர்ந்துகொண்டு வழிநடக்கலானார்.
16 ஆனால், அவரைக் கண்டுகொள்ளாதபடி அவர்களின் பார்வை தடைபட்டிருந்தது.
17 எதைப்பற்றி நீங்கள் உரையாடிக்கொண்டு செல்லுகிறீர்கள்?" என்று அவர் அவர்களைக் கேட்டார். அவர்களோ வாடிய முகத்தோடு நின்றனர்.
18 அவர்களுள் ஒருவரான கிலேயோப்பா என்பவர் அவருக்கு மறுமொழியாக, "யெருசலேமில் உள்ளவர்களுள் நீர் ஒருவர்தாம் இந்நாட்களிலே நடந்ததை அறியாதவர் போலும்!" என்றார்.
19 அதற்கு அவர், "என்ன நடந்தது?" என்று கேட்டார். அவர்களோ, "நாசரேத்தூர் இயேசுவைப்பற்றிய செய்திதான். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராயிருந்தார்.
20 தலைமைக்குருக்களும் தலைவர்களும் அவரை மரணதண்டனைக்கு உள்ளாகும்படி கையளித்துச் சிலுவையில் அறைந்தார்கள்.
21 இஸ்ராயேலுக்கு விடுதலை அளிப்பவர் அவரே என நாங்கள் நம்பியிருந்தோம். அதுமட்டுமன்று. இதெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள் ஆகின்றது.
22 மேலும், எங்களைச் சார்ந்த பெண்கள் சிலர் எங்களைத் திகைக்கச்செய்தனர். அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்று,
23 அவரது உடலைக் காணாது திரும்பிவந்து, வானதூதர்களைக் காட்சியில் கண்டதாகவும், இயேசு உயிரோடு இருக்கிறார் என்று அவர்கள் கூறினதாகவும் சொல்லுகிறார்கள்.
24 எங்கள் தோழருள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னபடியே இருக்கக் கண்டனர். அவரையோ காணவில்லை" என்றனர்.
25 அவர் அவர்களை நோக்கி, "அறிவில்லாதவர்களே, இறைவாக்கினர்கள் கூறியதெல்லாம் விசுவசிப்பதற்கு மந்த புத்தியுள்ளவர்களே, '
26 மெசியா இப்பாடுகளைப் பட்டன்றோ மகிமையடையவேண்டும் ?" என்று சொல்லி, '
27 மோயீசன்முதல் இறைவாக்கினர்கள் அனைவரும் எழுதிவைத்த வாக்குகளிலிருந்து தொடங்கி தம்மைக்குறித்த மறைநூல் பகுதிகளுக்கெல்லாம் விளக்கம் தந்தார்.
28 அவர்கள் தாங்கள் போகும் ஊரை நெருங்கினர். அவர் இன்னும் வழி நடக்க வேண்டியவர்போலக் காட்டிக்கொண்டார்.
29 அவர்களோ, "எங்களோடே தங்கும். மாலை நேரமாகிறது, பொழுதும் சாய்கிறது" என்று சொல்லி, அவரைக் கட்டாயப்படுத்தினர். அவரும் அவர்களோடு தங்குவதற்குச் சென்றார்.
30 அங்கு அவர்களுடன் பந்தியமர்ந்திருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, இறைபுகழ் கூறி, பிட்டு, அவர்களோடு அளித்தார்.
31 அப்போது, அவர்கள் கண்கள் திறக்கப்பட, அவரைக் கண்டுகொண்டனர். அவரோ அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.
32 அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, " வழியில் அவர் நம்மோடு உரையாடி மறைநூலைத் தெளிவாக்குகையில், நம் உள்ளம் உருகவில்லையா! " என்றனர்.
33 அந்நேரமே, எழுந்து யெருசலேமுக்குத் திரும்பிச்சென்று, பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் கூடியிருக்கக் கண்டனர்.
34 கூடியிருந்தவர்கள், "உண்மையாகவே ஆண்டவர் உயிர்த்தார், சீமோனுக்குக் காட்சி அளித்தார்" எனப் பேசிக்கொண்டிருந்தனர்.
35 அவ்விரு சீடர் வழியில் நடந்ததையும், அப்பத்தைப் பிட்கையில் அவரைக் கண்டுகொண்டதையும் அவர்களுக்கு விவரித்தனர்.
36 இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு, அவர்கள் நடுவே தோன்றி, "உங்களுக்குச் சமாதானம்" என்றார்.
37 அவர்கள் திடுக்கிட்டு, அச்சம்கொண்டு, ஏதோ ஆவியைக் காண்பதாக எண்ணினர்.
38 அப்போது அவர் அவர்களை நோக்கி, "ஏன் இந்தக் கலக்கம்? உங்கள் உள்ளத்தில் இத்தகைய எண்ணங்கள் எழுவானேன்?
39 என் கைகளையும் கால்களையும் பாருங்கள். நானேதான்; தொட்டுப்பாருங்கள். நீங்கள் என்னிடம் காணும் எலும்பும் தசையும் ஆவிக்குக் கிடையாது" என்றார்.
40 இப்படிச் சொன்ன பின்பு தம் கைகளையும் கால்கைளையும் அவர்களுக்குக் காட்டினார்.
41 அவர்களோ மகிழ்ச்சி மிகுதியால் இன்னும் நம்பாமல் வியந்துகொண்டிருக்கும்பொழுது, "உண்பதற்கு இங்கு ஏதாவது உங்களிடம் உண்டா?" என்றார்.
42 பொரித்த மீன் துண்டொன்று அவருக்குக் கொடுத்தனர்.
43 அதை எடுத்து அவர்கள் முன் சாப்பிட்டார்.
44 அவர் அவர்களைப் பார்த்து, "மோயீசனின் சட்டத்திலும் இறைவாக்குளிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியுள்ளதெல்லாம் நிறைவேண்டும் என்று, நான் உங்களோடு இருந்தபோதே சொன்னேனே; இப்போது நடப்பது அதுதான்" என்றார்.
45 மறைநூல் அவர்களுக்கு விளங்கும்படி அவர்களுடைய மனக்கண்ணைத் திறந்தார்.
46 பின்னர், அவர்களை நோக்கி, "மறைநூலில் எழுதியுள்ளது இதுதான்: மெசியா பாடுபட்டு, இறந்தோரிடமிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார்;
47 பாவமன்னிப்படைய மனந்திரும்ப வேண்டுமென்று யெருசலேமில் தொடங்கி, புறவினத்தார் அனைவருக்கும் அவர்பெயரால் அறிவிக்கப்படும்.
48 இவற்றிற்கெல்லாம் நீங்கள் சாட்சி.
49 இதோ! என் தந்தை வாக்களித்ததை நான் உங்களுக்கு அனுப்பப்போகிறேன். உன்னைதத்திலிருந்து வரும் வல்லமையை நீங்கள் அணிந்துகொள்ளும்வரை நகரிலேயே தங்கி இருங்கள்" என்றார்.
50 பெத்தானியாவை நோக்கி அவர்களைக் கூட்டிச்சென்று, கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசிகூறினார்.
51 அப்படி ஆசி கூறுகையில் அவர்களை விட்டுப் பிரிந்து, வானகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பெற்றார்.
52 அவர்கள் தெண்டனிட்டு வணங்கிப் பொருமகிழ்ச்சியுடன் யெருசலேம் திரும்பினர்.
53 கோயிலில் கடவுளை இடைவிடாமல் போற்றிப் புகழ்ந்துகொண்டிருந்தனர்.
×

Alert

×