1
|
பரிசேயர் ஒருவர் இருந்தார். அவர்பெயர் நிக்கொதேமு; அவர் யூதப்பெரியோர்களுள் ஒருவர். |
2
|
அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, "ராபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை அறிவோம். தன்னோடு கடவுள் இருந்தாலன்றி எவனும் நீர் செய்கிற அருங்குறிகளைச் செய்யமுடியாது" என்றார். |
3
|
இயேசு மறுமொழியாக, "எவனும் மேலிருந்து பிறந்தாலன்றி, கடவுளுடைய அரசைக் காணமுடியாது என்று உண்மையிலும் உண்மையாக உமக்குச் சொல்லுகிறேன்" என்றார். |
4
|
அதற்கு நிக்கொதேமு, "ஒருவன் வயதானபின் எப்படிப் பிறக்கமுடியும் ? மீண்டும் தாயின் வயிற்றில் நுழைந்து பிறக்கக்கூடுமோ ?" என, |
5
|
இயேசு கூறியதாவது: "உண்மையிலும் உண்மையாக உமக்குச் சொல்லுகிறேன்: ஒருவன் நீரினாலும் ஆவியினாலும் பிறந்தாலன்றி கடவுளுடைய அரசில் நுழையமுடியாது. |
6
|
ஊனுடலால் பிறப்பது ஊனுடலே. ஆவியால் பிறப்பதோ ஆவி. |
7
|
நீங்கள் மேலிருந்து பிறக்க வேண்டுமென்று நான் உமக்குக் கூறியதால் வியப்படையாதீர். |
8
|
காற்று தான் விரும்பிய பக்கம் வீசுகின்றது; அதன் ஓசை கேட்கிறது; ஆனால், எங்கிருந்து வருகின்றது என்பதோ, எங்குச் செல்கின்றது என்பதோ தெரிவதில்லை. ஆவியால் பிறக்கும் எவனும் அப்படியே." |
9
|
நிக்கொதேமு மறுமொழியாக, "இது எவ்வாறு நடைபெற முடியும் ?" என்று கேட்க, |
10
|
இயேசு கூறினார்: "நீர் இஸ்ராயேலில் பேர்பெற்ற போதகராயிருந்தும், இது உமக்குத் தெரியாதா! |
11
|
"உண்மையிலும் உண்மையாக உமக்குச் சொல்லுகிறேன்: எமக்குத் தெரிந்ததைப்பற்றியே பேசுகிறோம்; யாம் கண்டதைக்குறித்தே சாட்சி கூறுகிறோம்; எம் சாட்சியத்தையோ நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. |
12
|
மண்ணுலகைச் சார்ந்தவைபற்றி நான் உங்களுக்குச் சொல்லியே நீங்கள் விசுவசிப்பதில்லையென்றால், விண்ணுலகைச் சார்ந்தவைபற்றி உங்களுக்குக் கூறினால், எவ்வாறு நீங்கள் விசுவசிக்கப் போகிறீர்கள் ? |
13
|
வானகத்திலிருந்து இறங்கி வந்தவரேயன்றி வேறெவரும் வானகத்திற்கு ஏறிச்சென்றதில்லை. அப்படி வந்தவர் வானகத்திலிருக்கும் மனுமகனே. |
14
|
மனுமகனில் விசுவாசங்கொள்ளும் அனைவரும் முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு, |
15
|
மோயீசன் பாலைவனத்தில் பாம்பை உயர்த்தியதுபோல மனுமகனும் உயர்த்தப்படவேண்டும். |
16
|
தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். |
17
|
கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே. |
18
|
அவரில் விசுவாசங்கொள்பவன் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; விசுவாசங்கொள்ளாதவனோ ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டன். ஏனெனில், அவன் கடவுளின் ஒரேபேறான மகனின் பெயரில் விசுவாசங்கொள்ளவில்லை. |
19
|
அவர்கள் பெறும் தீர்ப்பு இதுவே: ஒளி உலகத்திற்கு வந்துள்ளது; மனிதர்களோ ஒளியைவிட இருளையே விரும்பினர்; ஏனெனில், அவர்களுடைய செயல்கள் தீயனவாயிருந்தன. |
20
|
பொல்லாது செய்பவன் எவனும் ஒளியை வெறுக்கிறான். தன் செயல்கள் தவறானவை என்று வெளியாகாதபடி அவன் ஒளியிடம் வருவதில்லை. |
21
|
உண்மைக்கேற்ப நடப்பவனோ, தன் செயல்கள் கடவுளோடு ஒன்றித்துச் செய்தவையாக வெளிப்படும்படி ஒளியிடம் வருகிறான்." |
22
|
இதற்குப்பின், இயேசுவும் அவருடைய சீடரும் யூதேயா நாட்டிற்கு வந்தனர். அங்கே அவர் அவர்களோடு தங்கி, ஞானஸ்நானம் கொடுத்துவந்தார். |
23
|
சாலீமுக்கு அருகிலுள்ள அயினோன் என்னுமிடத்தில் நிறைய தண்ணீர் இருந்ததால், அருளப்பரும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தார். மக்கள் வந்து ஞானஸ்நானம் பெற்றனர். |
24
|
அருளப்பர் இன்னும் சிறைப்படவில்லை. |
25
|
இதனால், அருளப்பரின் சீடர் சிலருக்கும் யூதன் ஒருவனுக்கும் துப்புரவுமுறைமைபற்றி வாக்குவாதம் உண்டாயிற்று. |
26
|
அவர்கள் அருளப்பரிடம் வந்து, "ராபி, உம்மோடு யோர்தானுக்கு அப்பால் ஒருவர் இருந்தாரே, அவரைக்குறித்து நீர் சாட்சியம் கூறினீரே; இதோ! அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார்; எல்லாரும் அவரிடம் போகின்றனர்" என்றார்கள். |
27
|
அதற்கு அருளப்பர் கூறியதாவது: "கடவுள் கொடுத்தாலொழிய யாரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. |
28
|
"நான் மெசியா அல்லேன்; அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சி. |
29
|
"மணமகளை உடையவன் மணமகனே; மணமகனின் சொல்லுக்காகக் காத்துநிற்கும் அவனுடைய நண்பன் மணமகனுடைய குரலைக் கேட்டுப் பெருமகிழ்வடைகின்றான். இதுவே என் மகிழ்ச்சி; இம்மகிழ்ச்சியும் நிறைவுற்றது. |
30
|
அவர் வளரவேண்டும், நானோ குறையவேண்டும். |
31
|
மேலிருந்து வருபவர் எல்லாருக்கும் மேலானவர். மண்ணிலிருந்து உண்டானவன் மண்ணுலகைச் சார்ந்தவன்; அவன் மண்ணுலகைச் சார்ந்தவனாகவே பேசுகிறான். விண்ணுலகிலிருந்து வருபவரோ எல்லாருக்கும் மேலானவர். |
32
|
தாம் கண்டதையும் கேட்டதையுங்குறித்தே அவர் சாட்சியம் பகர்கின்றார். ஆனால், அவருடைய சாட்சியத்தை எவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. |
33
|
அவருடைய சாட்சியத்தை ஏற்றுக்கொள்வதோ, கடவுள் உண்மையானவர் என்பதற்கு அத்தாட்சி தருவது போலாகும். |
34
|
ஏனெனில், கடவுள் அனுப்பியவர் கடவுளின் சொற்களைக் கூறுகிறார்; ஏனெனில், கடவுள் அவருக்கு ஆவியை அளவுபார்த்துக் கொடுப்பதில்லை. |
35
|
தந்தை மகன்பால் அன்புசெய்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். |
36
|
மகனில் விசுவாசங்கொள்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான்; மகனில் விசுவாசங்கொள்ளாதவனோ வாழ்வைக் காணமாட்டான்; கடவுளின் சினமே அவன்மேல் வந்து தங்கும்." |
John 3:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...