Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ezekiel Chapters

Ezekiel 1 Verses

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ezekiel Chapters

Ezekiel 1 Verses

1 முப்பதாம் ஆண்டின் நான்காம் மாதத்தில் ஐந்தாம் நாள் நான் கேபார் நதியருகில் சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும் போது, வானங்கள் திறக்க, கடவுள் அருளிய காட்சிகளைக் கண்டேன்.
2 யோவாக்கீம் அசரனுடைய சிறைவாசத்தின் ஐந்தாம் ஆண்டு அது; அந்த ஐந்தாம் நாளிலே,
3 கல்தேயர் நாட்டிலுள்ள கேபார் நதியருகில் இருந்த பூசி என்ற அர்ச்சகரின் மகனாகிய எசேக்கியேலின் மீது ஆண்டவரின் வார்த்தையும் கரமும் இறங்கிற்று.
4 நான் கண்ட காட்சியாவது: இதோ வடக்கிலிருந்து புயல் காற்றெழும்பிற்று; அப்போது பெரியதொரு மேகத்தையும், அதன் நடுவில் நெருப்பினுள்ளிருந்து துலங்கி மின்னிய ஒரு வகை வெண்கலத்தின் உருவத்தையும் கண்டேன்.
5 அதன் நடுவில் நான்கு மிருகங்களின் சாயல் காணப்பட்டது; அவற்றின் உருவமோ மனித சாயலாய் இருந்தன.
6 அவற்றுள் ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும் நான்கு இறக்கைகளும் இருந்தன.
7 அவற்றின் கால்கள் நேரானவை; உள்ளங்கால்கள் கன்றுக் குட்டியின் உள்ளங்கால்களைப் போல் இருந்தன; அவை துலக்கப்பட்ட வெண்கலம் போல மின்னின.
8 அவற்றின் நான்கு பக்கங்களிலும் இறக்கைகளின் கீழ் மனித கைகள் இருந்தன. மிருகங்களுள் ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும் நான்கு இறக்கைகளும் இருந்தன.
9 அவை ஒவ்வொன்றின் இறக்கைகளும் மற்றதன் இறக்கைகளோடு ஒட்டியிருந்தன. நடக்கும் போது திரும்பிப் பாராமல் ஒவ்வொன்றும் தன் தன் திசையில் நேர்முகமாகவே நடக்கும்.
10 அவை நான்கிற்கும் முன் பக்கத்தில் மனித முகமும், வலப்புறத்தில் சிங்க முகமும், இடப்புறத்தில் எருது முகமும், பின் பக்கத்தில் கழுகு முகமும் இருந்தன.
11 அவற்றின் முகங்கள் இவ்வாறிருக்க, இறக்கைகள் உயர்ந்து விரிந்திருந்தன. அவை ஒவ்வொன்றின் இறக்கைகள் நான்கில் இரண்டும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன, மற்ற இரண்டும் அவற்றின் உடலை மூடிக்கொண்டிருந்தன.
12 அவை ஒவ்வொன்றும் நேர்த்திசையிலேயே நடந்தன. எங்கே போகவேண்டுமென ஆவி அவற்றை ஏவுமோ, அங்கே அவை போகும்; போகும் போது அங்குமிங்கும் திரும்பிப் பார்க்கவே மாட்டா.
13 அம் மிருகங்கள் மத்தியில் பார்ப்பதற்கு நெருப்புப் பற்றி யெரியும் கரியைப் போலும், கொழுந்து விட்டெரியும் விளக்கைப் போலும் ஒன்று தோன்றியது; அவற்றின் நடுவில் அக்கினிச் சுவாலை ஒடித் திரிந்தது; அதிலிருந்து மின்னல் புறப்பட்டது.
14 ஆம் மிருகங்கள் மின்னல் வெட்டுவது போல முன்னும் பின்னும் போவதும் வருவதுமாய் இருந்தன.
15 நான் அம் மிருகங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அவை ஒவ்வொன்றின் அருகிலும் பூமியில் ஒரு சக்கரம் தென்பட்டது; அவற்றுக்கும் நன்னான்கு முகங்கள் இருந்தன.
16 சக்கரங்களின் உருவமும் அவற்றின் வேலைப்பாடும் கடல் நீரைப் போல நீல வண்ணமாய் இருந்தன; அவை நான்கும் ஒரே வடிவமுள்ளவையாய்க் காணப்பட்டன. சக்கரத்துக்குள் சக்கரம் இருப்பது போலத் தோன்றின. இவ்வாறு அவற்றின் அமைப்பும் வேலைப்பாடும் இருந்தன.
17 அவை ஒடுகையில் நான்கு பக்கங்களிலும் ஒடும்; ஒடும் போது அங்குமிங்கும் திரும்பிப் பார்க்கவே மாட்டா.
18 அந்தச் சக்கரங்கள் மிகுந்த பரப்பளவும், பார்வைக்கு அச்சந்தரும் தன்மையும், உயரமும் கொண்டிருந்தன; சக்கரங்கள் நான்கிலும், சுற்றிலும் கண்கள் நிறைந்திருந்தன.
19 மிருகங்கள் நடக்கும்போது, சக்கரங்களும் அவற்றின் அருகிலே ஒடும். மிருகங்கள் பூமியினின்று மேலே எழும்புகையில் சக்கரங்களும் மேலே எழும்பும்.
20 எங்கே போக வேண்டுமென ஆவி அவற்றை ஏவுமோ, அங்கே அவை போகும்; சக்கரங்களும் அவற்றைத் தொடர்ந்து போயின; ஏனெனில் மிருகங்களின் ஆவி சக்கரங்களில் இருந்தது.
21 மிருகங்கள் போகையில் சக்கரங்களும் போயின. அவை நிற்கையில் இவையும் நின்றன; அவை பூமியினின்று மேலே எழும்புகையில் சக்கரங்களும் அவற்றோடு மேலே எழுந்தன; ஏனெனில் மிருகங்களின் ஆவி சக்கரங்களில் இருந்தது.
22 மிருகங்களின் தலைமேல் மேக மண்டலம் போல் ஒன்று படர்ந்திருந்தது, அது பார்ப்பதற்குப் பயங்கரமாய்ச் சுடர் வீசி மின்னும் பளிங்கு போல் இருந்தது.
23 அம் மண்டலத்தின் கீழ் அவற்றின் இறக்கைகள் ஒன்றுக் கொன்று எதிராக நிமிர்ந்து நின்றன; மிருகம் ஒவ்வொன்றும் தன் இறக்கைகள் இரண்டினால் தன் உடலை மூடிக் கொண்டிருந்தது.
24 அவை நடக்கும்போது அவற்றின் இறக்கைகளால் ஏற்பட்ட ஒலியைக் கேட்டால், பெருக்கெடுத்து ஒடிவரும் தண்ணீரின் இரைச்சல் போலும், எல்லாம் வல்லவரின் குரலொலி போலும், திரண்டு செல்லும் சேனைகளின் ஆரவாரம் போலும் இருக்கும்; அவை நிற்கும் போது தங்கள் இறக்கைகளைத் தாழ்த்தி விடும்.
25 அவற்றின் தலை மீது படர்ந்து நின்ற மேக மண்டலத்தில் குரலொலி கேட்டது; மிருகங்கள் நிற்கும் போது இறக்கைகளைத் தளர விடும்.
26 அவற்றின் தலை மீதிருந்த மண்டலத்தின் மேல் மரகதத்தால் ஆன அரியணை போல் ஒன்று தென்பட்டது; அந்த அரியணையில் மனிதனைப் போன்ற உருவம் ஒன்று வீற்றிருந்தது.
27 அவர் உடலின் உள்ளும் புறமும் சுற்றிலும் தீயொளி போல மின்னிய ஒருவித வெண்கலத்தின் உருவத்தைக் கண்டேன்; இடுப்பிலிருந்து மேலும் கீழும் சுற்றிலும் நெருப்பு மயமாய் ஒளிரும் பிரகாசத்தைக் கண்டேன்.
28 அரியணையைச் சூழ்ந்திருந்த ஒளி மழைக்காலத்தில் மேகத்தில் தோன்றும் வானவில்லைப் போல் இருந்தது. ஆண்டவரது மாட்சியினுடைய சாயலின் காட்சி இவ்வாறு தோன்றிற்று; நான் அதைப் பார்த்த போது முகங்குப்புற விழுந்தேன்; அப்போது ஒருவரின் பேசுங்குரல் கேட்டேன்.
×

Alert

×