Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Acts Chapters

Acts 15 Verses

1 யூதேயாவிலிருந்து வந்த சிலர், "மோயீசனின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்து கொள்ளாவிட்டால் நீங்கள் மீட்படைய முடியாது" என்று சகோதரர்களுக்குப் போதிக்கத் தொடங்கினர்.
2 சின்னப்பரும் பர்னபாவும் அவர்களை எதிர்த்தெழவே, கடும் வாக்குவாதம் உண்டாயிற்று. ஆகையால் சின்னப்பரும் பர்னபாவும் வேறு சிலரும் இச்சிக்கலைத் தீர்க்க யெருசலேமிலுள்ள அப்போஸ்தலர், மூப்பர்களிடம் செல்லத் தீர்மானித்தனர்.
3 அதன்படி, சபையினரால் வழியனுப்பப்பட்டு, புறவினத்தார் மனந்திரும்பிய செய்தியை அறிவித்துக்கொண்டு, பெனிக்கியா, சமாரியா வழியாகப் பிரயாணம் செய்தனர். இச்செய்தி சகோதரர் எல்லாருக்கும் பெரிதும் மகிழ்ச்சியளித்தது.
4 அவர்கள் யெருசலேமுக்கு வந்து சேர்ந்தபோது சபையாரும் அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் அவர்களை வரவேற்றனர். அப்போது, கடவுள் தங்களுக்காகச் செய்த அரிய பெரிய செயல்களை எடுத்துரைத்தனர்.
5 ஆனால் விசுவாசிகளான பரிசேயக் கட்சியினர் சிலர் கிளம்பி, "புறவினத்தார் விருத்தசேதனம் பெறவேண்டும், மோயீசனுடைய சட்டத்தைப் பின்பற்ற அவர்களுக்குக் கட்டளையிடவும் வேண்டும்" என வாதாடினர்.
6 இதை ஆய்ந்து பார்க்க அப்போஸ்தலரும் மூப்பர்களும் கூடினர்.
7 நெடுநேரம் வாதாடிய பின் இராயப்பர் எழுந்து, "சகோதரரே, புறவினத்தார் என் வாய்மொழியால் நற்செய்தியைக் கேட்டு, விசுவாசம் கொள்ளும்படி கடவுள் தொடக்கத்திலிருந்தே உங்களிடையில் என்னைத் தேர்ந்துகொண்டார். இது உங்களுக்குத் தெரிந்ததே.
8 உள்ளங்களை அறியும் கடவுள் நமக்கு அளித்ததுபோல், அவர்களுக்கும் பரிசுத்த ஆவியை அளித்து, அவர்கள் சார்பில் சாட்சியம் தந்தார்.
9 விசுவாசத்தினால் அவர்களுடைய உள்ளங்களை அவர் தூய்மையாக்கியதில் நமக்கும் அவர்களுக்குமிடையே எந்த வேறுபாடும் காட்டவில்லை.
10 எனவே, நம் முன்னோரோ, நாமோ சுமக்க முடியாத நுகத்தை இச்சீடர்கள் தோளின் மேல் ஏன் சுமத்துகிறீர்கள்? இப்படி ஏன் கடவுளைச் சோதிக்கிறீர்கள்?
11 புறவினத்தாரும் சரி, நாமும் சரி, மீட்புப்பெறுவது ஆண்டவராகிய இயேசுவின் அருளால்தான். இதுவே நம் விசுவாசம்" என்றார்.
12 இதைக் கேட்டு அனைவரும் அமைதியாகி, பர்னபா, சின்னப்பர் இவர்கள் வழியாக, கடவுள் புறவினத்தாரிடையே செய்த அருங்குறிகள், அற்புதங்களையெல்லாம் அவர்களே எடுத்துரைக்கக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
13 அவர்கள் பேசி முடித்தபின் யாகப்பர் கூறியதாவது:
14 "சகோதரரே, நான் சொல்லுவதைக் கேளுங்கள். புறவினத்தாரிடையே தமக்கென மக்களைத் தேர்ந்து கொள்ளக் கடவுள் முதன் முறையாக அவர்களை நாடி வந்த செய்தியை அவர்களுக்குச் சிமெயோன் எடுத்துக்கூறினார்.
15 இதற்கொப்ப இறைவாக்கினர்கள் எழுதியுள்ளதாவது:
16 'அதன்பின் நான் திரும்பி வந்து விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை மறுபடியும் கட்டுவேன், அதில் பாழடைந்து போனதை மீண்டும் கட்டி எழுப்புவேன்.
17 அதைப் பார்த்து மற்ற மனிதர்களும், எனக்கு அர்ச்சிக்கப்பட்ட புறவினத்தார் எல்லாரும் ஆண்டவரைத் தேடுவர்,
18 என்று தொன்று தொட்டு இவற்றை வெளிப்படுத்தும் ஆண்டவர் கூறுகிறார்.
19 ஆதலால், கடவுள்பக்கம் மனந்திரும்புகிற புறவினத்தாருக்குத் தொல்லை கொடுத்தலாகாது.
20 என் முடிவு இதுவே. அவர்கள் சிலைகளால் தீட்டுப்பட்டதைத் தொடாமல் கெட்ட நடத்தையை விலக்கி, மூச்சடைத்துச் செத்ததின் இறைச்சி, மிருக இரத்தம் இவற்றை உண்ணாமல் இருக்குமாறு அவர்களுக்கு எழுதுங்கள்.
21 முன்னாள்தொட்டு மோயீசனின் சட்டத்தைப் போதிப்பவர்கள் எல்லா ஊர்களிலும் உள்ளனர். இச்சட்டம் ஓய்வு நாள் தோறும் செபக்கூடங்களில் வாசிக்கப்பட்டு வருகிறது.
22 அப்பொழுது, அவர்களுள் இருவரைத் தெரிந்தெடுத்து, சின்னப்பர், பர்னபா இவர்களோடு அந்தியோகியாவிற்கு அனுப்புவதென அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் திருச்சபையினர் அனைவரும் தீர்மானித்தனர். அவ்விருவர், சகோதரர்களுள் செல்வாக்குப் பெற்றிருந்த பர்சபா வென்னும் யூதாசும், சீலாவும் ஆவர்.
23 இவர்கள் வழியாகப் பின்வரும் கடிதம் எழுதி அனுப்பினர்: "அந்தியோகியா, சீரியா, சிலிசியா ஆகிய இடங்களில் உள்ள புறவினச் சகோதரர்களுக்கு-உங்கள் சகோதரர்களான அப்போஸ்தலரும் மூப்பரும் வாழ்த்துக்கூறி எழுதுவது:
24 எங்களுள் சிலர் அங்கு வந்து தங்கள் பேச்சினால் உங்களைக் கலக்கமுறச்செய்து மனத்தைக் குழப்பினர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எக்கட்டளையும் தந்ததில்லை.
25 ஆகையால் நம் ஆண்டவர், இயேசு கிறிஸ்துவின் பெயருக்காகத்
26 தங்கள் உயிரையே கையளித்துள்ள, எங்கள் அன்புக்குரிய சின்னப்பர், பர்னபா ஆகியவர்களோடு நாங்கள் தெரிந்தெடுத்தோரை உங்களிடம் தூதுவராக அனுப்ப ஒருமனத்தோடு தீர்மானித்தோம்.
27 எனவே, யூதாசையும் சீலாசையும் உங்களிடம் அனுப்புகிறோம். நாங்கள் எழுதியுள்ளதை இவர்கள் உங்களுக்கு வாய்மொழியாகச் சொல்லுவார்கள்.
28 பரிசுத்த ஆவியும் நாமும் கூறும் தீர்மானம் இதுவே: இன்றியமையாதவை தவிர, எச்சுமையும் உங்கள்மேல் சுமத்தப்படலாகாது.
29 சிலைகளுக்குப் படைத்தது, மிருக இரத்தம், மூச்சடைத்துச் செத்ததின் இறைச்சி இவற்றை உண்ணாமலிருப்பதோடு, கெட்ட நடத்தையிலிருந்து விலகி நில்லுங்கள். இவற்றைத் தவிர்த்தலே முறை. வணக்கம்."
30 விடை பெற்றபின் தூதுவர் அந்தியோகியாவுக்குச் சென்றனர். அங்குச் சபையரைக் கூட்டிக் கடிதத்தைக் கொடுத்தனர்.
31 அக்கடிதத்தை வாசித்தபின், அதனால் கிடைத்த ஊக்கத்தினால் மகிழ்ச்சி கொண்டனர்.
32 யூதாசும் சீலாவும் இறைவாக்கினர்களாதலின் அறிவுரை பல கூறி, சகோதரர்களைத் திடப்படுத்தினர்.
33 சில நாளுக்குப்பின்
34 சகோதரர்களிடம் சமாதான வாழ்த்துப் பெற்றுத் தங்களை அனுப்பியோரிடம் திரும்பினர்.
35 சின்னப்பரும் பர்னபாவும் அந்தியோகியாவில் தங்கி வேறு பலருடன் ஆண்டவரின் வார்த்தையை அறிவித்தும் போதித்தும் வந்தனர்.
36 சில நாளுக்குப்பின் சின்னப்பர் பர்னபாவிடம், "நாம் ஆண்டவரின் வார்த்தையை அறிவித்த நகரங்களுக்கெல்லாம் திரும்பச்சென்று, சகோதரர்களைச் சந்தித்து அவர்களுக்கு என்னவாயிற்று என்று பார்த்து வருவோம்" என்றார்.
37 மாற்கு என்ற அருளப்பரையும் தங்களோடு அழைத்துச் செல்ல வேண்டுமென்பது பர்னபாவின் விருப்பம்.
38 ஆனால் தங்களோடு பணிபுரிய வராமல் தங்களைப் பம்பிலியா நாட்டில் விட்டு விலகிய அவரை அழைத்துச் செல்ல சின்னப்பர் விரும்பவில்லை.
39 இதனால் ஒருவரை ஒருவர் விட்டுப்பிரியும் அளவுக்கு அவர்களிடையே கடுமையான விவாதம் உண்டாயிற்று. பர்னபா மாற்கை அழைத்துக் கொண்டு சைப்பிரசுக்குக் கப்பல் ஏறினார்.
40 சின்னப்பரோ சீலாவைத் தம்மோடு வரும்படி அழைத்துக்கொண்டார். சகோதரர்கள் அவரை ஆண்டவர் கையில் ஒப்படைத்து வழியனுப்பினர்.
41 அவர் சீரியா, சிலிசியா நாடெங்கும் சென்று ஆங்காங்குள்ள சபைகளை உறுதிப்படுத்தினார்.
×

Alert

×