1
|
மறுமுறையும் ஜெப ஆலயத்திற்குள் இயேசு நுழைந்தார். அங்கே சூம்பின கையை உடைய ஒரு மனிதன் இருந்தான். |
2
|
இயேசு தவறாக ஏதேனும் செய்யும் பட்சத்தில் அவரைக் குற்றம் சாட்டலாம் என்று சில யூதர்கள் கவனித்துக் கொண்டிருந்தனர். ஓய்வு நாளில் அவனைக் குணமாக்கு வாரா என்று பார்க்கக் காத்திருந்தனர். |
3
|
இயேசு சூம்பிய கையை உடையவனிடம், எழுந்து இங்கே நில். அப்போதுதான் உன்னை எல்லாரும் பார்க்க முடியும் என்றார். |
4
|
பிறகு இயேசு மக்களிடம், ஓய்வு நாளில் எது செய்வது சரியாக இருக்கும்? நன்மை செய்வதா, தீமை செய்வதா? ஒரு உயிரைக் காப்பாற்றுவது சரியா? அழிப்பது சரியா? என்று கேட்டார். மக்கள் பதிலொன்றும் சொல்லவில்லை. |
5
|
இயேசு மக்களைப் பார்த்தார். அவருக்கோ கோபம் வந்தது. அவர்கள் கடின மனம் உடையவர்களாய் இருந்ததால் இயேசுவுக்கு வருத்தம் ஏற்பட்டது. இயேசு அந்த மனிதனிடம், உன் கையை நீட்டு என்றார். அவனும் இயேசுவிடம் தன் கையை நீட்டினான். அது குணமாகியது. |
6
|
பிறகு பரிசேயர்கள் அந்த இடத்தை விட்டுப் போய் ஏரோதியரோடு கூடக் கலந்து இயேசுவைக் கொல்வதற்குத் திட்டமிட்டனர். |
7
|
தனது சீஷர்களோடு இயேசு ஏரிப்பக்கம் சென்றார். கலிலேயா மக்களில் பலர் அவரைப் பின் தொடர்ந்தனர். |
8
|
பிறகு யூதேயாவில் இருந்தும், எருசலேமிலிருந்தும், இதுமேயாவில் இருந்தும், யோர்தானுக்கு அக்கரையில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்தனர். அத்துடன் தீரு, சீதோன் பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்தனர். அவர்கள் அனைவரும் இயேசு செய்த அற்புதங்களை அறிந்திருந்தனர். ஆகவேதான் அவர்கள் வந்தார்கள். |
9
|
இயேசு பலரையும் பார்த்தார். அவர் தன் சீஷர்களிடம் ஒரு சிறிய படகு கொண்டுவந்து அதனை அவருக்குத் தயார் செய்யும்படிக் கேட்டுக் கொண்டார். மக்கள் தம்மை நெருக்கித் தள்ளாதபடிக்கு அப்படகில் ஏறிக் கொண்டார். |
10
|
இயேசு ஏற்கெனவே பலரைக் குணமாக்கி இருந்தார். ஆகவே ஏராளமான நோயுற்ற மக்கள் நெருக்கிக்கொண்டு வந்து அவரைத் தொட முயன்றார்கள். |
11
|
சிலர் அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்டிருந்தனர். ஆவிகள் இயேசுவைக் கண்டதும் அவருக்கு முன் குனிந்து, நீர் தான் தேவனுடைய குமாரன் என்று உரக்கச் சத்தமிட்டன. |
12
|
ஆனால் இயேசு, தாம் யார் என்பதை மக்களுக்குக் கூறாதிருக்கும்படி அவற்றிற்கு உறுதியாகக் கட்டளையிட்டார். |
13
|
பிறகு, இயேசு குன்றின் மீது ஏறினார். அவர் சிலரை தன்னுடன் வருமாறு சொன்னார். இந்த மனிதரே அவருக்குத் தேவையானவர்களாய் இருந்தனர். அவர்கள் இயேசுவிடம் சென்றனர். |
14
|
அவர்களில் பன்னிரண்டு பேரை இயேசு தேர்ந்தெடுத்துக் கொண்டார். அவர்களை அப்போஸ்தலர் என்று அழைத்தார். அவர்கள் தன்னுடன் இருக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார். அவர்களைப் பல இடங்களுக்கு அனுப்பி பிரசங்கம் செய்யும்படி விரும்பினார். |
15
|
அத்துடன் பிசாசுகளை விரட்டுவதற்கான அதிகாரத்தை அவர்கள் பெற்றிருக்கவும் இயேசு விரும்பினார். |
16
|
அவர் தேர்ந்தெடுத்த பன்னிரண்டு பேரின் பெயர்களும் பின்வருமாறு: சீமோன், இயேசு இவனுக்கு பேதுரு என்று பெயரிட்டார். |
17
|
யாக்கோபு, யோவான் இவர்கள் செபெதேயுவின் மகன்கள். (இயேசு இவர்களுக்கு பொவனெர்கேஸ் என்று பெயர் வைத்தார். இதற்கு இடி முழக்கத்தின் மக்கள் என்று பொருள்) |
18
|
அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலோமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகனான யாக்கோபு, ததேயு, கானானியனான சீமோன், |
19
|
யூதா ஸ்காரியோத். இந்த யூதாஸ்தான் இயேசுவை அவரது பகைவர்களிடம் காட்டிக்கொடுத்தவன். |
20
|
பிறகு, இயேசு வீட்டிற்குச் சென்றார். ஆனால் மறுபடியும் அங்கு மக்கள் கூடினர். இயேசுவும் அவரது சீஷர்களும் உணவு உட்கொள்ள முடியாதபடி மக்கள் கூடினர். |
21
|
இயேசுவின் குடும்பத்தார் இவற்றைப்பற்றி எல்லாம் கேள்விப்பட்டனர். அவர் மதிமயங்கியுள்ளார் என்று மக்கள் சொன்னதால் அவரது குடும்பத்தார் அவரைப் பிடித்து வைத்துக் கொள்ள விரும்பினர். |
22
|
எருசலேமில் இருந்து வந்த வேதபாரகர், இயேசுவிடம் பெயல்செபூல் (பிசாசு) உள்ளது. பிசாசுகளின் தலைவனது அதிகாரத்தை அவர் பயன்படுத்தி பேய்களை விரட்டுகிறார் என்றனர். |
23
|
ஆகையால் இயேசு மக்களை அழைத்தார். அவர்களிடம் அவர் உவமைகள் மூலம் விளக்கிச் சொன்னார். சாத்தானை சாத்தான் துரத்துவது எப்படி? என்று கேட்டார். |
24
|
ஒரு இராஜ்யம் தனக்குத் தானே பகைத்துக் கொண்டால் அது எவ்வாறு தொடர்ந்திருக்க முடியும்? |
25
|
ஒரு குடும்பம் தனக்குத்தானே பகைத்துக் கொண்டால் அது எவ்வாறு அழியாமல் இருக்கும்? |
26
|
இது போல் சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டு இருந்தால் அவன் நிலைத்திருக்க முடியாது. அதுவே அவன் முடிவு. |
27
|
ஒருவன் பலவானுடைய வீட்டிற்குள் புகுந்து பொருட்களைத் திருட விரும்பினால் முதலில் அவன் அப்பலவானைக் கட்டிப்போட வேண்டும். பிறகு, அவனால் பலவானுடைய வீட்டிலிருந்து அவனது பொருட்களைத் திருடமுடியும். |
28
|
உண்மையாகவே நான் உங்களுக்குக் கூறுகிறேன், மக்களால் செய்யப்படுகிற அத்தனைப் பாவங்களும் மன்னிக்கப்படும். அத்துடன் மக்களால் தேவனுக்கு எதிராகச் சொல்லப்படும் பழிகளும் மன்னிக்கப்படும். |
29
|
ஆனால், பரிசுத்தாவியை எவனாவது பழித்து உரைப்பானேயானால் அவனுக்கு என்றென்றைக்கும் மன்னிப்பே இல்லை. அவன் குற்றவாளியாகி என்றென்றைக்கும் குற்ற உணர்வுடையவனாக இருப்பான் என்றார். |
30
|
வேதபாரகர் இயேசுவை அசுத்த ஆவி பிடித்தவர் என்று சொன்னதால், அவர் இவ்வாறு விளக்கமாகக் கூறினார். |
31
|
பிறகு இயேசுவின் தாயாரும், சகோதரர்களும் வந்தனர். அவர்கள் வெளியே நின்று கொண்டு ஓர் ஆளை அனுப்பி இயேசுவை அழைத்தனர். |
32
|
இயேசுவைச் சுற்றிப் பலர் அமர்ந்திருந்தனர். அப் போது அவன், உங்கள் தாயும் சகோதரர்களும் வெளியே உங்களுக்காகக் காத்திருக்கின்றனர் என்றான். |
33
|
இயேசு அவர்களிடம், யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்? என்று கேட்டார். |
34
|
பிறகு தன்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கி, இந்த மக்களே என் தாயாரும், சகோதரருமாய் இருக்கிறார்கள். |
35
|
தேவனின் விருப்பத்துக்கேற்ப நடந்து கொள்கிறவர்கள் எவர்களோ அவர்களே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள் என்று கூறினார். |
Mark 3:10 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...