Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Isaiah Chapters

Isaiah 2 Verses

1 யூதாவையும் யெருசலேமையும் குறித்து ஆமோஸ் என்பவரின் மகனான இசையாஸ் கண்ட காட்சி.
2 இறுதி நாட்களில்- ஆண்டவரின் கோயில் அமைந்துள்ள மலை மலைகளுக்கெல்லாம் உயர்ந்ததாய் நாட்டப்படும், குன்றுகளுக்கெல்லாம் மேலாக உயர்த்தப்படும், மக்களினங்கள் யாவும் அதை நோக்கி ஓடிவரும்;
3 பலநாட்டு மக்கள் கூடிவந்து, "வாருங்கள், ஆண்டவரின் மலைக்கு ஏறிச் செல்வோம், யாக்கோபின் கடவுளது கோயிலுக்குப் போவோம்; தம்முடைய வழிகளை அவர் நமக்குக் கற்பிப்பார், நாமும் அவர் நெறிகளில் நடப்போம்" என்பார்கள். ஏனெனில் சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளியாகும், யெருசலேமிலிருந்தே ஆண்டவர் வாக்கு புறப்படும்.
4 மக்களினங்களுக்கிடையில் அவரே தீர்ப்பிடுவார், பல்வேறு மக்களுக்கு நீதி வழங்குவார்; அவர்களோ தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள். நாட்டுக்கு எதிராய் நாடு வாள் எடுக்காது, அவர்களுக்கு இனிப் போர்ப் பயிற்சியும் அளிக்கப்படாது.
5 யாக்கோபின் வீட்டாரே, வாருங்கள்; ஆண்டவரின் ஒளியிலே நாம் நடப்போம்.
6 ஆம், யாக்கோபின் வீட்டாரான உம்முடைய மக்களை நீர் புறக்கணித்தீர்; ஏனெனில், அவர்கள் நடுவில் நிமித்தகம் பார்த்தல் பெருகியுள்ளது, பிலிஸ்தியரைப் போன்ற மந்திரவாதிகள் மலிந்துள்ளனர், அந்நியரோடு ஒப்பந்தம் செய்கிறார்கள்.
7 அவர்கள் நாடு பொன் வெள்ளியால் நிறைந்துள்ளது, அவர்களுடைய கருவூலத்திற்கு அளவு இல்லை;
8 அவர்களது நாட்டில் குதிரைப் படையும் மிகுதி, அவர்களின் தேர்ப் படைகள் எண்ணிறந்தவை. அவர்களின் நாட்டில் சிலைகள் மலிந்துள்ளன, தாங்களே செய்த கைவேலைகளை வணங்குகின்றனர்.
9 ஆகவே மனிதன் தாழ்த்தப்படுவான், மக்கள் சிறுமையுறுவார்கள், அவர்களுக்கு மன்னிப்புத் தராதீர்!
10 ஆண்டவருடைய அச்சம் தரும் திருமுன்னிருந்து விலகி, அவருடைய மாண்புறு மகிமையினின்று ஒதுங்கிக் கற்குகைகளில் நுழைந்து கொள்ளுங்கள், மண்ணில் பதுங்கி மறைந்து கொள்ளுங்கள்.
11 இறுமாப்பான மனித கண்கள் அவமானமடையும், மனிதர்களின் செருக்கு தாழ்த்தப்படும்; ஆண்டவர் ஒருவரே அந்நாளில் உயர்த்தப்படுவார்.
12 ஆம், அந்த நாள் சேனைகளின் ஆண்டவரது நாள்; பெருமையும் செருக்குமுடைய யாவற்றின் மேலும், உயர்த்தப்பட்டவை, உயர்ந்தவை அனைத்தின்மேலும்,
13 லீபானில் உயர்ந்தோங்கி வளர்ந்த எல்லாக் கேதுருகளின் மேலும், பாசானில் உள்ள எல்லாக் கருவாலி மரங்கள் மேலும்,
14 வானளாவிய மாமலைகள் யாவற்றின் மேலும், உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மேலும்,
15 தலை நிமிர்ந்தோங்கிய கோபுரங்கள் யாவற்றின் மேலும், வலுவுடைய எல்லா மதில்களின் மேலும்,
16 தர்ஸீசின் எல்லா மரக்கலங்கள் மேலும், கண்ணுக்கினிய வேலைப்பாடுகள் அனைத்தின் மேலும், அந்த நாள் வரும்.
17 மனிதனின் அகந்தையெல்லாம் அடங்கும், மனிதர்களின் இறுமாப்பு தாழ்த்தப்படும்; ஆண்டவர் ஒருவரே அந்நாளில் உயர்த்தப்படுவார்.
18 சிலைகள் தவிடுபொடியாக்கப்படும்;
19 ஆண்டவர் உலகைத் தண்டிக்க வரும் போது, அவருடைய அச்சந்தரும் திருமுன்னிருந்து விலகி, அவருடைய மாண்புறு மகிமையினின்று ஒதுங்கி, மனிதர்கள் கற்குகைகளில் நுழைந்து கொள்வார்கள், பூமியின் குழிகளில் புகுந்து கொள்வார்கள்.
20 அந் நாளில் மனிதர்கள் தாங்கள் வழிபடுவதற்காகத் தங்களுக்கெனச் செய்து வைத்திருந்த வெள்ளிச் சிலைகளையும், தங்கப் பதுமைகளையும் அகழெலிகளுக்கும் வெளவால்களுக்கும் எறிந்து விடுவார்கள்.
21 ஆண்டவர் உலகைத் தண்டிக்க வரும் போது, அவருடைய அச்சந்தரும் திருமுன்னிருந்து விலகி, அவருடைய மாண்புறு மகிமையினின்று ஒதுங்கி, மனிதர்கள் பாறைகளின் வெடிப்புகளில் பதுங்கிக் கொள்வார்கள்; குன்றுகளின் பிளவுகளில் புகுந்து கொள்வார்கள்.
22 மனிதனில் இனி மேல் நம்பிக்கை வைக்காதீர்கள்; அவன் உயிர் நிலையற்ற வெறும் மூச்சு தான்; மதிக்கப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்?
×

Alert

×