Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Exodus Chapters

Exodus 9 Verses

1 பின் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ பாரவோனிடம் போய் அவனுக்குச் செல்லுவாய்: எபிரேயருடைய கடவுளாகிய ஆண்டவர் சொல்லுவதாவது: நமக்குப் பலி செலுத்தும்படி நமது மக்களைப் போக விடு;
2 நீ: அவர்களைப் போக விடேன் என்று இன்னும் நிறுத்தி வைப்பாய் ஆயின்,
3 உன் வயல்களின் மேலும், உன் குதிரைகளின் மேலும், ஒட்டகங்களின் மேலும், ஆடுமாடுகளின் மேலும் மிகக் கொடியதொரு கொள்ளை நோய் உண்டாகும்.
4 அப்பொழுது ஆண்டவர் இஸ்ராயேலின் சொத்துக்களுக்கும் எகிப்தியரின் சொத்துக்களுக்கும் வேற்றுமை விளங்கும்படி ஓர் அதிசயத்தைச் செய்வார். இஸ்ராயேல் மக்களுக்கு உரியவற்றில் ஒன்றாகிலும் அழிந்து போகாது.
5 மேலும், ஆண்டவர் அதற்கென்று ஒரு நேரத்தைக் குறித்து வைத்திருக்கிறார். நாளையே அச்செயலைச் செய்து முடிப்பார் என்பாய் என்றார்.
6 ஆண்டவர் மறுநாள் அந்த வார்த்தையின்படி அவ்விதமே செய்து முடித்தார். அப்பொழுது எகிப்தியருக்குச் சொந்தமாயிருந்த மிருகங்கள் எல்லாம் மடிந்தன. இஸ்ராயேல் மக்களுக்கு உரியவற்றில் யாதொன்றும் சாகவில்லை.
7 பாரவோன் அதைப்பற்றி விசாரித்தான். இஸ்ராயேலுக்கு உரியவற்றில் ஒன்றேனும் சாகவில்லை. பாரவோனின் மனம் கடினமாகிவிட்டது. அவன் மக்களைப் போக விடவில்லை.
8 அப்பொழுது ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி: நீங்கள் அடுப்பிலிருந்து இரு கை நிறையச் சாம்பலை அள்ளிக் கொள்ளுங்கள். மோயீசன் அதைப் பாரவோன் முன்னிலையிலே வானத்தில் தூற்றக் கடவான்.
9 அது எகிப்து நாட்டின்மேல் எவ்விடத்தும் விழக் கடவது. அதனால் எகிப்து நாடெங்கும் மனிதர்களிடமும் மிருகங்களிடமும் புண்ணும் சீழ்க்கட்டிக் கொப்புளங்களும் உண்டாகும் என்றார்.
10 அப்படியே அவர்கள் அடுப்பிலிருந்து சாம்பலை எடுத்துக் கொண்டு போய்ப் பாரவோனுக்குமுன் நின்ற போது, மோயீசன் அதனை வானத்தில் தூற்றினார். தூற்றவே, மனிதர்களிடமும் மிருகங்களிடமும் புண்ணும் சீழ்க்கட்டிக் கொப்புளங்களும் உண்டாயின.
11 எகிப்து நாடெங்கும் காணப்பட்ட புண்கள் மந்திரவாதிகளிடத்துமே உண்டாயினமையால், அவர்கள் மோயீசன் முன் வந்து நிற்கக் கூடாமல் போயிற்று.
12 ஆயினும், ஆண்டவர் பாரவோனின் இதயத்தைக் கடினப்படுத்தினமையால், அவர் மோயீசனிடம் சொல்லியிருந்தபடியே, பாரவோன் அவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை.
13 மேலும், ஆண்டவர் மோயீசனை நோக்கி: நீ நாளைக் காலையில் எழுந்துசென்று பாரவோன்முன் நின்று கொண்டு: எபிரேயருடைய கடவுளாகிய ஆண்டவர் சொல்லுவது ஏதென்றால்: நம்முடைய மக்களை நமக்குப் பலி செலுத்தும்படி போகவிடு.
14 இல்லையேல், பூமி எங்கும் நமக்கு நிகரானவர் இல்லை என்பதை நீ அறியும் பொருட்டு, இம்முறை நாம் எல்லாவித வாதைகளையும் உன் இதயத்தின் மீதும் உன் ஊழியர் மேலும் உன் மக்கள் மேலும் வரச் செய்வோம்.
15 அதாவது, நீ பூமியில் இராமல் அழிந்து போகும்படி, நாம் கையை நீட்டிக் கொள்ளை நோயினால் அடித்து வதைப்போம்.
16 நமது வல்லமை உன்னிடம் விளங்கும் படியாகவும், நமது திருப்பெயர் எவ்விடங்களிலும் வெளிப்படும் படியாகவும் அல்லவோ நாம் உன்னை நிலைநிறுத்தி வைத்தோம்?
17 நீ நம்முடைய மக்களைப் போகவிடாமல் இன்னும் நிறுத்தி வைத்திருக்கிறாய் அன்றோ?
18 இதோ! எகிப்து தோன்றிய நாள் முதல் இன்று வரை ஒருக்காலும் அதில் பெய்திராத மிகவும் கொடிய கல் மழையை நாளை இந்நேரமே பெய்விப்போம்.
19 ஆகையால், நீ இந்நேரமே ஆளனுப்பி, உன் மிருகங்களையும் வெளியில் உனக்கிருக்கிற யாவற்றையும் சேர்த்துப் பாதுகாக்கும்படி சொல். ஏனென்றால், வீட்டிலே சேர்க்கப்படாமல் வெளியில் இருக்கும் மனிதர்களோடு மிருகம் முதலிய யாவும் கல்மழை பட்டால் செத்துப் போகும் என்று சொல் என்றார்.
20 பாரவோனின் ஊழியர்களிலே இறை வார்த்தைக்கு அஞ்சியிருந்தவன் தன் வேலைக்காரரையும் தன் கால்நடைகளையும் வீடுகளுக்கு ஓட்டிவரக் கட்டளையிட்டான்.
21 ஆனால், ஆண்டவருடைய வார்த்தையை மதியாதவன் தன் வேலைக்காரரையும் கால்நடைகளையும் வெளியிலே விட்டு வைத்திருந்தான்.
22 பிறகு ஆண்டவர் மோயீசனை நோக்கி: எகிப்து நாடெங்கும் மனிதர் மேலும் மிருகங்கள் மேலும் எகிப்திலுள்ள எல்லாப் பயிர்வகைகள் மேலும் ஆலங்கட்டி மழை பெய்யும்படி உன் கையை வானத்தை நோக்கி நீட்டு என்றார்.
23 மோயீசன் அவ்விதமே செய்ய, ஆண்டவர் நாட்டின் மீது இடிமுழக்கங்களையும், ஆலங்கட்டிகளையும், தரையின் மேல் இங்குமங்கும் ஓடி மின்னும் மின்னல்களையும் கட்டளையிட்டார். இவ்வாறு ஆண்டவர் எகிப்து நாட்டின் மேல் ஆலங்கட்டி பொழியச் செய்தார்.
24 நெருப்பும் ஆலங்கட்டியும் கலந்தே விழுந்தன. அவை எவ்வளவு பருமனுள்ளன என்றால், எகிப்தியர் தோன்றிய நாள் முதல் அது போன்ற கல்மழை ஒரு போதும் பெய்ததில்லை.
25 எகிப்து நாடெங்கும் பெய்த ஆலங்கட்டிகளாலே மனிதன் முதல் மிருகங்கள் ஈறாக வெளியிலே இருந்தவை யாவும் அழிக்கப்பட்டன. வயல் வெளிகளிலே வளர்ந்திருந்த எல்லா விதப் பயிர் வகைகளும் கல்மழையினாலே அழிந்ததுமன்றி, நாட்டிலுள்ள மரங்களும் முறிந்தன.
26 இஸ்ராயேல் மக்கள் இருந்த யேசேன் பகுதியிலே மட்டும் ஆலங்கட்டி மழை பெய்யவில்லை.
27 அப்போது பாரவோன் மோயீசனையும் ஆரோனையும் வரவழைத்து, அவர்களை நோக்கி: இம்முறையும் நான் பாவம் செய்தேன். ஆண்டவர் நீதியுள்ளவர். நானும் என் மக்களும் தீயவர்கள்.
28 நீங்கள் இனிமேல் இந்நாட்டில் இராவண்ணம் நான் உங்களைப் போக விடும்படி, இடி முழக்கங்களும் ஆலங்கட்டிகளும் ஒழிய வேண்டுமென்று ஆண்டவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.
29 அதற்கு மோயீசன்: பூமி ஆண்டவருடையது என்று நீர் அறியும்படி, நான் நகரை விட்டுப் புறப்பட்டவுடனே ஆண்டவரை நோக்கி என் கைகளை உயர்த்துவேன். அதனால் இடிமுழக்கங்களும் ஒழியும்; ஆலங்கட்டி மழையும் நின்று போகும்.
30 ஆனால், நீரும் உம் ஊழியர்களும் கடவுளாகிய ஆண்டவருக்கு இன்னும் அஞ்சுகிறதில்லேயென்று நான் அறிந்திருக்கிறேன் என்றார்.
31 ஆகையால், ஆளிவிதைப் பயிரும் வாற்கோதுமைப் பயிரும் அழிந்து போயின. ஏனென்றால், வாற்கோதுமை கதிர்வாங்கியிருந்தது; ஆளிவிதைப் பூண்டோ முதல் தளிர் விட்டிருந்தது.
32 ஆனால், கோதுமை முதலிய தானியங்களுக்கு அழிவு ஒன்றும் ஏற்படவில்லை. ஏனென்றால், அவை பின்பருவத்துப் பயிர்கள்.
33 மோயீசன் பாரவோனை விட்டு நகரிலிருந்து புறப்பட்டு ஆண்டவரை நோக்கிக் கைகளை உயர்த்தினார். அந்நேரமே இடிமுழக்கமும் ஆலங்கட்டியும் ஒழிந்தன; மழையும் நின்று போயிற்று.
34 மழையும் ஆலங்கட்டியும் இடிமுழக்கமும் ஒழிந்ததைக் கண்ட பாரவோன், முன்னிலும் அதிகப் பாவியானான்.
35 அவன் மனமும் அவன் ஊழியருடைய இதயமும் இறுகி அதிகக் கடினமாய்ப் போனதேயன்றி, ஆண்டவர் மோயீசனைக் கொண்டு திருவுளம் பற்றியிருந்தபடி அவன் இஸ்ராயேல் மக்களைப் போக விட்டானில்லை.
×

Alert

×