Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

1 Chronicles Chapters

1 Chronicles 13 Verses

1 தாவீது ஆயிரவர் தலைவரோடும் நூற்றுவர் தலைவரோடும், மற்ற தலைவர்கள் அனைவருடனும் கலந்தாலோசித்து,
2 கூடியிருந்த இஸ்ராயேல் மக்கள் அனைவரையும் நோக்கி, "நான் சொல்வது உங்களுக்குப் பிடித்திருந்தால், அது நம் ஆண்டவராகிய கடவுளிடமிருந்து வருகின்றதென்றால், இஸ்ராயேல் நாடெங்கும் வாழ்ந்து வரும் நம் ஏனைய சகோதரரிடமும், நகர்ப்புறங்களில் வாழ்ந்துவரும் குருக்கள் லேவியரிடமும் ஆள் அனுப்பி, அவர்கள் நம்மோடு வந்து சேரும்படி சொல்வோம்.
3 பின்னர், சவுலின் காலத்தில் நாம் தேடாது விட்டு விட்ட நம் கடவுளின் திருப்பேழையைத் திரும்பக் கொண்டு வருவோம்" என்றார்.
4 இது எல்லாருடைய மனத்திற்கும் பிடித்திருந்தது. எனவே கூடியிருந்தவர் எல்லாரும், "அப்படியே செய்யவேண்டும்" என்று பதிலுரைத்தனர்.
5 ஆகையால், தாவீது கடவுளின் திருப்பேழையைக் கரியாத்தியாரிமிலிருந்து கொண்டு வர எண்ணி, எகிப்தில் இருக்கும் சிகோர் முதல் ஏமாத் எல்லை வரை வாழ்ந்து வந்த இஸ்ராயேல் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டினார்.
6 பின்னர், கெருபீம்களின் மேல் வீற்றிருக்கும் ஆண்டவரான கடவுளின் திருப்பெயர் விளங்கும் அத் திருப்பேழையை, யூதாவிலுள்ள கரியாத்தியாரிம் என்ற குன்றிலிருந்து எடுத்துக் கொண்டு வரும்படி தாவீதும் இஸ்ராயேல் மனிதர் யாவரும் அவ்விடத்திற்கு ஏறிச் சென்றனர்.
7 அவர்கள் கடவுளின் திருப்பேழையை அபினதாப்பின் வீட்டிலிருந்து எடுத்துவந்து, ஒரு புதுத் தேரின் மேல் ஏற்றினார்கள். ஓசாவும் அவன் சகோதரனும் தேரை ஓட்டிவந்தனர்.
8 தாவீதும் இஸ்ராயேல் மக்கள் அனைவரும் தங்கள் ஆற்றலெல்லாம் சேர்ந்து கடவுளுக்கு முன்பாகச் சுரமண்டலங்களையும் யாழ்களையும் மத்தளங்களையும் வாசித்தனர்; கைத்தாளம் கொட்டி, எக்காளம் ஊதி ஆர்பரித்துப் பாடினர்.
9 அவர்கள் சீதோனின் களம் வந்தடைந்த போது மாடுகள் இடறவே திருப்பேழை சாய ஆரம்பித்தது. அதைத் தாங்கிப் பிடிக்கும்படி ஓசா உடனே தன் கையை நீட்டினான்.
10 நீட்டவே ஆண்டவர் ஓசாவின்மீது கோபமுற்று, அவன் திருப்பேழையைத் தொட்டதால் அவனைச் சாகடித்தார். அவன் அங்கேயே ஆண்டவர் திருமுன் இறந்து பட்டான்.
11 ஆண்டவர் ஓசாவை அழித்ததை முன்னிட்டுத் தாவீது மனவருத்தமுற்றார். அவ்விடத்திற்கு பேரேஸ்-ஊசா என்று பெயரிட்டார். அப்பெயர் இன்று வரை வழங்கி வருகிறது.
12 தாவீது, கடவுளுக்கு அஞ்சி, "கடவுளின் திருப்பேழையை எவ்வாறு நான் என் வீட்டிற்குக் கொண்டு போவது?" என்று சொன்னார்.
13 அதனால் அதைத் தமது வீட்டிற்கு, அதாவது தாவீதின் நகருக்குக் கொண்டுவராமல், கேத்தியனான ஒபேதெதோமின் வீட்டில் கொண்டு வந்து வைத்தார்.
14 (13b) கடவுளின் திருப்பேழை ஒபேதெதோமின் வீட்டில் மூன்று மாதம் இருந்தது. அம்மூன்று மாதமும் ஆண்டவர் அவனது வீட்டையும் அவன் உடைமைகள் யாவற்றையும் ஆசீர்வதித்தார்.
×

Alert

×