Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Zechariah Chapters

Zechariah 8 Verses

1 சேனைகளின் ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: சீயோன்மீது நாம் அளவில்லா அன்பார்வம் கொண்டுள்ளோம், அவளைக் காப்பதற்காக அடங்காத ஆத்திரத்தோடு ஆர்வம் கொண்டுள்ளோம்.
3 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: சீயோனுக்கு நாம் திரும்பி வரப்போகிறோம், யெருசலேமின் நடுவில் குடிகொள்ளுவோம்; யெருசலேம் நகரம் பிரமாணிக்கமுள்ள நகரமென்றும், சேனைகளின் ஆண்டவருடைய மலை பரிசுத்த மலையென்றும் பெயர் பெற்று விளங்கும்.
4 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: யெருசலேமின் பொதுவிடங்களில் மறுபடியும் கிழவர்களும் கிழவிகளும் அமர்ந்திருப்பார்கள்; வயதில் முதிர்ந்தவர்களானதினால் ஒவ்வொருவரும் கையில் கோல் வைத்திருப்பர்.
5 நகரத்தின் தெருக்களில் சிறுவர்களும் சிறுமிகளும் நிறைந்து தெருக்களிலே விளையாடுவார்கள்.
6 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இம்மக்களுள் எஞ்சியிருப்போர்க்கு அந்நாட்களில் இதெல்லாம் பெரும் புதுமையாய்த் தோன்றுமாயின், நமக்கும் அது புதுமையாகத் தோன்றுமோ, என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
7 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் நம்முடைய மக்களை நாம் மீட்டு வருவோம்;
8 அவர்களைக் கூட்டி வருவோம், அவர்களும் யெருசலேமின் நடுவில் குடியிருப்பர்; அவர்கள் நம் மக்களாய் இருப்பார்கள், நாம் அவர்களுக்குக் கடவுளாயிருப்போம்; எங்களுக்கிடையில் பிரமாணிக்கமும் நீதியும் நிலவும்."
9 இன்னும் சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "திருக்கோயிலை மீண்டும் கட்டும்படி சேனைகளின் ஆண்டவருடைய இல்லத்திற்கு அடிப்படையிட்ட நாளிலிருந்து இறைவாக்கினர்களின் வாய்மொழிகளை இந்நாட்களில் கேட்டு வருகின்ற மக்களே, உங்கள் கைகள் வலிமை பெறட்டும்.
10 ஏனெனில் இந்நாள் வரையில் மனிதனுக்கோ மிருகத்துக்கோ கூலி கொடுக்கப்பட்டதில்லை; போவார் வருவாருக்குப் பகைவர் தந்த தொல்லையிலிருந்து பாதுகாப்பும் இல்லை; ஏனெனில் ஒருவனுக்கு எதிராக இன்னொருவன் எழும்படி விட்டுவிட்டோம்.
11 ஆனால் இப்பொழுது இம்மக்களுள் எஞ்சியிருப்பவர்களை முன்னாட்களில் நடத்தியது போல நாம் நடத்த மாட்டோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
12 ஏனெனில் சமாதானம் விதைக்கப்படும், திராட்சைக்கொடி தன் கனியைக் கொடுக்கும், நிலம் தன் பலனைத் தரும், வானம் பனியைப் பொழியும்; இவற்றையெல்லாம் இம்மக்களுள் எஞ்சியிருப்போர் உரிமையாக்கிக் கொள்ளும்படி செய்வோம்.
13 யூதா வீடே, இஸ்ராயேல் வீடே, புறவினத்தார் நடுவில் உங்கள் பெயர் சாபனைச் சொல்லாய் இருந்தது; ஆனால் நாம் உங்களை மீட்டபின் உங்கள் பெயர் ஆசிமொழியாய் இருக்கும்; ஆதலால் அஞ்சவேண்டா; உங்கள் கைகள் வலிமை பெறட்டும்."
14 ஏனெனில் சேனைகளின் ஆண்டவர் கூறும் வாக்கு இதுவே: "உங்கள் தந்தையர்கள் நமக்குச் சினமூட்டிய போது, நாம் இரக்கம் காட்டாமல் உங்களக்குக் தீங்கு செய்யத் தீர்மானித்தோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்;
15 அவ்வாறே மீண்டும் இந்நாட்களில் யெருசலேமுக்கும் யூதாவின் வீட்டுக்கும் நன்மை செய்யத் தீர்மானித்திருக்கிறோம்; ஆகையால் அஞ்சவேண்டா.
16 நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியவை இவையே: ஒருவரிடம் ஒருவர் உண்மையே பேசுங்கள்; உங்கள் ஊர்ச் சபையில் நீங்கள் தரும் தீர்ப்பு உண்மையானதும், சமாதானத்திற்கு வழி கோலுவதுமாய் இருக்கட்டும்;
17 ஒருவருக்கொருவர் தீங்கு செய்ய உங்கள் உள்ளத்தில் திட்டம் போடாதீர்கள், பொய்யாணை செய்ய விரும்பாதீர்கள்; ஏனெனில் இவற்றையெல்லாம் நாம் வெறுக்கிறோம், என்கிறார் ஆண்டவர்."
18 சேனைகளின் ஆண்டவருடைய வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:
19 சேனைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நான்காம் மாதத்தின் உண்ணா நோன்பும், ஐந்தாம் மாதத்தின் உண்ணா நோன்பும், ஏழாம் மாதத்தின் உண்ணா நோன்பும், பத்தாம் மாதத்தின் உண்ணா நோன்பும் யூதாவின் வீட்டாருக்கு மகிழ்ச்சியும் அக்களிப்பும் கொண்டாட்டங்களும் நிறைந்த காலங்களாய் மாறிவிடும்; ஆனால் உண்மையையும் சமாதானத்தையும் விரும்பிக் கடைப்பிடியுங்கள்.
20 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: மக்களினங்களும், பல நகரங்களின் மாந்தரும் இன்னும் வருவார்கள்;
21 ஒரு நகரத்தின் மக்கள் இன்னொரு நகரத்தாரிடம் போய், 'ஆண்டவருடைய அருளை மன்றாடவும், சேனைகளின் ஆண்டவரைத் தேடவும் உடனே புறப்பட்டுப்போவோம், வாருங்கள்; நாங்களும் வருகிறோம்' என்று சொல்லுவார்கள்.
22 பல்வேறு நாட்டினரும் வலிமை வாய்ந்த மக்களினங்களும் சேனைகளின் ஆண்டவரைத் தேடவும், ஆண்டவருடைய அருளை மன்றாடிக் கேட்கவும் யெருசலேமுக்கு வருவார்கள்.
23 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: அந்நாட்களில் ஒவ்வொரு மொழி பேசும் இனத்தாரிலிருந்து பத்துப் பேர் சேர்ந்து ஒரு யூதனுடைய மேலாடையைப் பிடித்துக் கொண்டு, நாங்களும் உன்னோடு வருகிறோம்; ஏனெனில் கடவுள் உங்களோடிருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்' என்பார்கள்."
×

Alert

×