Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Romans Chapters

Romans 8 Verses

1 ஆகவே, கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிறவர்களுக்கு இனித் தண்டனைத் தீர்ப்பு என்பதில்லை.
2 ஏனெனில், கிறிஸ்து இயேசுவுக்குள் உயிர் தரும் ஆவியானவரின் சட்டம் என்னைப் பாவம், சாவு என்பவற்றின் சட்டத்தினின்றும் விடுதலை செய்துவிட்டது.
3 ஊனியல்பினால் வலுவற்றதாக்கப்பட்ட பழைய சட்டம் செய்ய முடியாத ஒன்றைக் கடவுள் செய்தார். எவ்வாறெனில், பாவப் பிடியிலுள்ள நம் இயல்பு போன்ற இயல்பில் தம் சொந்த மகனை அனுப்பி, அவரைப் பாவத்திற்குப் பரிகாரப் பலியாக்கி, அந்த இயல்பைக் கொண்டே பாவத்திற்குத் தண்டனைத் தீர்ப்புக் கொடுத்தார்:
4 ஊனியல்புக்கு ஏற்ப நடவாமல், ஆவியானவரின் ஏவுதலுக்கேற்ப நடக்கும் நம்மில் சட்டம் கட்டளையிட்டது நிறைவுறும்படி அவ்வாறு செய்தார்.
5 ஏனெனில், ஊனியல்பினரின் நாட்டமெல்லாம் அந்த இயல்புக்கு உரியவற்றின் மீதே இருக்கும்; ஆவியானவரால் தூண்டப்படுவோரின் நாட்டமோ, ஆவிக்கு உரியவற்றின் மீதே இருக்கும்.
6 ஊனியல்பின் நாட்டத்தால் விளைவது சாவே; ஆவியால் தூண்டப்படும் இயல்பின் நாட்டத்தால் வருவது வாழ்வும் அமைதியுமே.
7 ஏனெனில், ஊனியல்பின் நாட்டம் கடவுளுக்குப் பகையானது; அது கடவுளின் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டிருப்பதில்லை, இருக்கவும் முடியாது.
8 ஊனியல்பினர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது.
9 நீங்களோ ஊனியல்புக்கு உட்பட்டவர்கள் அல்ல; ஆவியானவரின் செயலுக்கு உட்பட்டவர்கள். ஆனால், கடவுளின் ஆவி உங்களுள் குடியிருத்தல் வேண்டும். கிறிஸ்துவின் ஆவியை ஒருவன் கொண்டிராவிடில், அவன் கிறிஸ்தவன் அல்லன்.
10 பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும் கிறிஸ்து உங்களுள் இருந்தால், இறைவனுக்கு ஏற்புடையவர்களாக்கப்பட்ட உங்களுக்கு ஆவியானவர் உள்ளுயிராய் இருப்பார்.
11 இறந்தோரிடமிருந்து இயேசுவை உயிர்ப்பித்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், இறந்தோரிடமிருந்து கிறிஸ்துவை உயிர்ப்பித்தவர் உங்களுள் குடிகொண்டுள்ள தமது ஆவியாலேயே சாவுக்குரிய உங்கள் உடல்களை உயிர்பெறச் செய்வார்.
12 இதனால் சகோதரர்களே! நாம் கடமைப்பட்டிருப்பது, ஊனியல்புக்கு அன்று; அதன் படி நாம் வாழ வேண்டுமென்பதில்லை.
13 ஏனெனில், நீங்கள் அந்த இயல்புக்கு ஏற்றபடி வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், ஆவியானவரின் செயலால், உடலின் செயல்களைச் சாகடித்தால், வாழ்வீர்கள்.
14 ஏனெனில் கடவுளின் ஆவியால் யார் இயக்கப்படுகிறார்களோ, அவர்களே கடவுளின் மக்கள்.
15 நீங்கள் பெற்றுக்கொண்டது, திரும்பவும் அச்சத்திற்குள்ளாக்கும் அடிமையுள்ளம் அன்று; பிள்ளைகளாக்கும் தேவ ஆவியையே பெற்றுக்கொண்டீர்கள். அந்த ஆவியினால் நாம், "அப்பா, தந்தாய்" எனக் கூப்பிடுகிறோம்.
16 நாம் இவ்வாறு கூப்பிடும்போது நம் உள்ளத்தோடு தேவ ஆவியானவரே நாம் கடவுளின் பிள்ளைகள் என்று சான்று பகர்கிறார்.
17 நாம் பிள்ளைகளாயின், உரிமையாளர்களுமாய் இருக்கிறோம். ஆம், கடவுளின் செல்வத்திற்கு உரிமையாளர்கள்; கிறிஸ்துவோடு உடன் உரிமையாளர்கள்; ஆனால், அவருடைய பாடுகளில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு மகிமையிலும் பங்குபெறுவோம்.
18 இம்மைக் காலத்தில் நாம் படும் துன்பங்கள் நம்மிடம் வெளிப்படப்போகிற மகிமையோடு ஒப்பிடவும் தகுதியற்றவை என எண்ணுகிறேன்.
19 இம்மகிமையுடன் கடவுளுடைய மக்கள் வெளிப்பட வேண்டுமென்று படைப் பனைத்துமே ஏக்கத்தோடு எதிர்நோக்கியிருக்கிறது.
20 ஏனெனில், படைப்பு முழுவதும் பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது; தானே விரும்பி அப்படி உட்படவில்லை; அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அப்படி உள்ளது. எனினும் அது நம்பிக்கையற்ற நிலையில் இல்லை.
21 படைப்பனைத்துமே அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுபட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய மகிமையும் விடுதலையும் பெற்றுக் கொள்ளும் நம்பிக்கை கொண்டுள்ளது.
22 இந்நாள்வரை படைப்புப் பொருள் அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம்.
23 படைப்பு மட்டுமன்று; முதற்கனியாகத் தேவ ஆவியைக் கொண்டுள்ள நாமும் இறை மக்களாக்கப் படும் நாளை எதிர்நோக்கி, அதாவது நம் உடல் விடுதலையாக்கப்படும் நாளை எதிர்நோக்கித் தவித்துக்கொண்டிருக்கிறோம். மீட்பு நமக்குக் கிடைத்தவிட்டது.
24 எனினும் மீட்பு இனி வரும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறோம். நேருக்கு நேராய்க் காண்பதை நம்புவது நம்பிக்கையன்று. கண்ணால் காண்கிறதை எவனாவது எதிர்நோக்குவானா?
25 நாம் காணாததை எதிர்நோக்கி நம்பிக்கைகொண்டிருந்தால், அப்படி எதிர்நோக்குவதில் நம் மனவுறுதியைக் காட்டுகிறோம்.
26 அவ்வாறே நம் வலுவற்ற நிலையில் நமக்கு ஆவியானவர் துணைநிற்கிறார்; ஏனெனில், செபிக்க வேண்டிய முறையில் செபிப்பதெப்படி என நாம் அறியோம்; ஆவியானவர் தாமே சொல்லொண்ணாப் பெருமூச்சுகளோடு பரிந்து பேசிச் செபிக்கிறார்.
27 உள்ளங்களை ஊடுருவிக் காண்கிற இறைவன் ஆவியானவரின் கருத்தை அறிவார்; ஆவியானவர் இறை மக்களுக்காகக் கடவுளுக்கேற்பப் பரிந்து பேசுகிறார் என்பதை இறைவன் அறிவார்.
28 கடவுளிடம் அன்புக்கூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு ஆவியானவர் அவர்கள் நன்மைக்காக அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும்.
29 ஏனெனில், கடவுள் யாரை முன்பே தேர்ந்துகொண்டாரோ, அவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்ற உருவைத் தாங்கும்படி முன் குறித்திருக்கிறார்; சகோதரர் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்கவேண்டுமென்றே இப்படிக் குறித்தார்.
30 யாரை முன் குறித்தாரோ அவர்களை அழைத்திருக்கிறார்; யாரை அழைத்தாரோ அவர்களைத் தமக்கு ஏற்புடையவர்களாக்கினார்; யாரைத் தமக்கு ஏற்புடையவர்களாக்கினாரோ, அவர்களுக்குத் தம் மாட்சிமையில் பங்கு தந்தார்.
31 இதற்குமேல் நாம் என்ன சொல்வது? கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நம்மை எதிர்த்து நிற்பவர் யார்?
32 தம் சொந்த மகனென்றும் பாராமல், நம் அனைவருக்காகவும் அவரைக் கையளித்த அவர், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ?
33 கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களுக்கு எதிராய் எவன் குற்றம் சாட்டக் கூடும்? அவர்கள் குற்றமற்றவர்கள் என்று கடவுளே சொல்லும் போது, தண்டனைத் தீர்ப்புக் கூறுபவர் யார்?
34 கிறிஸ்து இயேசு நமக்காக உயிர் நீத்தார், ஏன், உயிர்ப்பிக்கவும் பெற்றார். இந்தக் கிறிஸ்துவே கடவுளின் வலப்பக்கத்தில் இருந்து நமக்காகப் பரிந்து பேசுகிறார்.
35 கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிப்பவன் எவன்? வேதனையோ? நெருக்கடியோ? கலாபனையோ? பசியோ? ஆடையின்மையோ? இடர்களோ? வாளோ? எதுதான் நம்மைப் பிரிக்கமுடியும்?
36 ' உம்மை முன்னிட்டு நாள் முழுவதும் சாவுக்களாகிறோம்; கொல்லப்படக் காத்திருக்கும் ஆடுகளாய்க் கருதப்பட்டோம் ' என எழுதியுள்ளதன்றோ?
37 ஆனால் நம்மேல் அன்பு வைத்தவரின் செயலால் நாம் இவை அனைத்திலும் மாண்புமிக்க வெற்றி அடைகிறோம்.
38 ஏனெனில், சாவோ வாழ்வோ, வானதூதரோ தலைமை ஏற்பவரோ, நிகழ்வனவோ வருவனவோ, வலிமை மிக்கவரோ,
39 வானத்தில் உள்ளவையோ ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்புப் பொருளோ, நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவில் வெளிப்பட்ட இறை அன்பிலிருந்த நம்மைப் பிரிக்க முடியாது என்பது என் துணிபு.
×

Alert

×