Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Revelation Chapters

Revelation 2 Verses

1 எபேசு சபையின் தூதருக்கு இதை எழுது! 'தமது வலக்கையில் ஏழு விண்மீன்களை ஏந்திக்கொண்டு, எழு பொன் குத்து விளக்குகளின் நடுவில் நடப்பவர் உரைப்பதாவது: உன் செயல்களை நான் அறிவேன்;
2 நீ எவ்வளவு உழைத்திருக்கிறாய், எவ்வளவு மனவுறுதி காட்டியிருக்கிறாய் என்பதை அறிவேன். தீயவர்களின் போக்கை நீ சகிக்கிறதில்லை என்பதும் எனக்குத் தெரியும், அப்போஸ்தலர்களாய் இல்லாதிருந்தும் சிலர் தங்களை அப்போஸ்தலர்கள் ஆக்கிக்கொண்டார்கள்.
3 அவர்களைப் பரிசோதித்து, அவர்கள் பொய்யர்கள் என்று கண்டறிந்தாய் மனவுறுதியோடும் நீ விளங்குகிறாய். என் பெயரின் பொருட்டு எவ்வளவோ தாங்கிக் கொண்டாய். ஆயினும் தளர்ச்சியுறவில்லை
4 ஆனால் உன்மேல் நான் சொல்லவேண்டிய குறையொன்று உண்டு: தொடக்கத்தில் உனக்கு இருந்த அன்பு இப்போதில்லை.
5 உயர்ந்த நிலையினின்று நீ தவறிவிட்டாய். இதை நினைத்து மனந்திரும்பி, தொடக்கத்தில் நீ செய்துவந்த செயல்களைச் செய்க. இல்லையேல் நான் உன்னிடம் வந்து உன் விளக்கை அது இருக்குமிடத்திலிருந்து அகற்றி விடுவேன்; நீ மனந்திரும்பாவிட்டால் அப்படிச் செய்வேன்.
6 இருப்பினும் உன் நடத்தையில் நல்லது ஒன்று உண்டு. நான் வெறுக்கிற நிக்கொலாயரின் செய்கைகளை நீயும் வெறுக்கிறாய்.
7 தேவ ஆவி சபைகளுக்குக் கூறுவதைச் செவியுள்ளவன் கேட்கட்டும்; கடவுளுடைய இன்ப வனத்தில் உள்ளதும் வாழ்வு தருவதுமான மரத்தின் கனியை உண்ணும் பேற்றை வெற்றி கொள்பவனுக்கு அருள்வேன்.
8 'சிமிர்னாவிலுள்ள சபையின் தூதருக்கு இதை எழுது: 'முதலும் இறுதியுமானவர், சாவுக்குட்பட்டும் உயிர் வாழ்கின்றவர் உரைப்பதாவது:
9 நீ படும் வேதனையும் உற்ற வறுமையும் நான் அறிவேன்- எனினும் நீ செல்வமிக்கவனே- தாங்கள் யூதர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் உங்களைப் பழித்துப் பேசுவதை எல்லாம் நான் அறிவேன். அவர்கள் யூதர்களே அல்லர்; சாத்தானின் கூட்டமே.
10 உனக்கு வரப்போகும் துன்பங்களுக்கு அஞ்ச வேண்டாம். இதோ, அலகை உங்களுள் சிலரைச் சிறையில் தள்ளிச் சோதனைக்கு உட்படுத்தப்போகிறது. பத்து நாள் வேதனையுறுவீர்கள். சாவதாயினும் விசுவாசத்தில் நிலைத்திரு. வாழ்வை உனக்கு நான் வெற்றிவாகையாய்ச் சூட்டுவேன்.
11 தேவ ஆவி சபைகளுக்குக் கூறுவதைச் செவியுள்ளவன் கேட்கட்டும். வெற்றி கொள்பவனை இரண்டாவது சாவு தீண்டாது.'
12 "பெர்கமுவிலுள்ள சபையின் தூதருக்கு இதை எழுது: 'இருபுறமும் கூர்மையான வாளை உடையவர் உரைப்பதாவது:
13 நீ குடியிருப்பது எத்தகைய இடம் என்று நான் அறிவேன்; சாத்தானின் அரியணை அங்கே தான் உள்ளது. என் பெயரை உறுதியுடன் பற்றிக்கொண்டுள்ளாய். சாத்தான் குடியிருக்கிற உங்கள் நகரத்திலே என் உண்மைச் சாட்சியான, அந்திப்பாஸ் கொலையுண்ட நாளில்கூட, நீ என்மேல் வைத்த விசுவாசத்தை மறுக்கவில்லை.
14 ஆனால் உம்மேல் நான் சொல்லவேண்டிய குறைகள் சில உள்ளன: பாலாமின் போக்குக்கேற்ற கொள்கையைப் பின்பற்றும் சிலர் உங்களிடையே உளர். இந்தப் பாலாம்தான் இஸ்ராயேல் மக்கள் பாவத்தின் விழும்படி செய்யப் பாலாக்குக்குச் சொல்லிக் கொடுத்தவன். ஆனால் அவர்கள் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்டார்கள்; விபசாரம் செய்தார்கள்.
15 இது போலத்தான் நிக்கொலாயரின் கொள்கைகளைப் பின்பற்றும் சிலர் உங்களிடையே உள்ளனர்.
16 ஆகவே மனத்திரும்பு. இல்லையேல் விரைவில் நான் உன்னிடம் வந்து, என் வாயினின்று வெளிப்படும் வாள்கொண்டு அவர்களுக்கெதிராகப் போர் தொடுப்பேன்.
17 தேவ ஆவி சபைகளுக்குக் கூறுவதைச் செவியுள்ளவன் கேட்கட்டும். வெற்றி கொள்பவனுக்கு மறைந்துள்ள மன்னாவை அருளுவேன். மேலும் அவனுக்கு வெள்ளைக் கல் ஒன்றையும் அளிப்பேன். அதில் ஒரு புதிய பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். பெறுபவனன்றி வேறு எவனும் அதை அறியான்.'
18 'தியத்தைராவிலுள்ள சபையின் தூதருக்கு இதை எழுது; 'எரிதழல்போலச் சுடர்விடும் கண்களும் வெண்கலம்போன்ற பாதங்களும் உடைய இறைமகன் உரைப்பதாவது:
19 உன் செயல்களை நான் அறிவேன். உன் அன்பு, விசுவாசம், பணி செய்யும் ஆர்வம், மனவுறுதி இவை எனக்குத் தெரியும். நீ இன்று செய்துவருவது முன்பு செய்ததைவிட மிகுந்தது என்றறிவேன்.
20 ஆனால் உன்மேல் நான் சொல்ல வேண்டிய குறையொன்று உண்டு: யேசபேல் போன்ற ஒருத்தியை நீ விட்டுவைத்திருக்கிறாய். இறைவாக்குரைப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அவள், என் ஊழியர்களை ஏமாற்றி அவர்கள் விபசாரம் செய்யவும், சிலைகளுக்குப் படைத்ததை உண்ணவும் போதித்து வருகிறாள்.
21 அவள் மனந்திரும்புவாள் என நெடு நாள் காத்திருந்தேன். ஆனால் அவள் தன் விபாசரத்தைவிட்டு மனந்திரும்ப மாட்டேன் என்கிறாள்.
22 இதோ, அவளை நான் படுகிடையாய்க் கிடத்திவிடுவேன். அவளோடு விபசாரம் செய்பவர்கள் அவளுடைய செயல்களைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் கொடிய வேதனைக் குள்ளாக்குவேன்.
23 அவளுடைய பிள்ளைகளையும் கொன்று தீர்ப்பேன். மனித உள்ளங்களையும் இதயங்களையும் ஊடுருவிக் காண்பவர் நான் என்பதை எல்லாச் சபைகளும் அப்போது அறிந்து கொள்ளும். உங்களுள் ஒவ்வொருவருக்கும் செயல்களுக்குத் தக்கபடி கூலி கொடுப்பேன்.
24 தியத்தைராவில் வாழும் ஏனையோரே, நீங்கள் இந்தக் கொள்கைகளை ஏற்கவில்லை; சாத்தானின் ஆழ்ந்த ஞானம் என்று பிறர் கூறுவதை நீங்கள் அறிய விரும்பவில்லை. ஆகையால் நான் உங்களுக்குச் சொல்வது: உங்கள் மீது வேறு எச்சுமையும் சுமத்த மாட்டேன்;
25 நான் வருமளவும் நீங்கள் பெற்றுக் கொண்ட போதனையில் நிலைத்திருங்கள்.
26 என் தந்தையிடமிருந்து நான் அதிகாரம் பெற்றிருப்பதுபோல, வெற்றிகொள்பவனுக்கும் நான் விரும்பிய வழியில் இறுதிவரை நிலைத்திருப்பவனுக்கும்' "புறவினத்தார் மீது அதிகாரம் அளிப்பேன்.
27 அவன் அவர்களை இருப்புக்கோல் கொண்டு நடத்துவான்; மட்பாண்டங்களைப் போல் நொறுக்கிவிடுவான்."
28 விடிவெள்ளியையும் அவனுக்கு அளிப்பேன்.
29 தேவ ஆவி சபைகளுக்குக் கூறுவதைச் செவியுள்ளவன் கேட்கட்டும்.'
×

Alert

×