Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 78 Verses

1 என் மக்களே, என் போதனைக்குச் செவிசாயுங்கள்! நான் கூறும் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
2 உவமைகளால் நான் பேசுவேன். பழங்காலத்து மறைபொருள்களை எடுத்துரைப்பேன்.
3 நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை, எங்கள் முன்னோர்கள் எங்களுக்குச் சொன்னவை, இவற்றை உரைப்போம்.
4 அவர்களின் மக்களான உங்களிடமிருந்து அவற்றை மறைக்க மாட்டோம் வரும் தலைமுறைக்கு அவற்றை எடுத்துச் சொல்வோம். ஆண்டவருடைய மாண்பு மிக்க செயல்களையும், அவருடைய வல்லமையையும், அவர் செய்த அற்புதச் செயல்களையும் கூறுவோம்.
5 யாக்கோபின் இனத்தாருக்குக் கட்டளையொன்று ஏற்படுத்தினார்; இஸ்ராயேல் மக்களுக்குச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தார். நம் முன்னோர்களுக்குக் கட்டளையிட்டதை அவர்கள் மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென்பதே அவர் தந்த சட்டம்.
6 இனி வரும் தலைமுறையில் பிறக்கும் மக்கள் அதையறியவும், அவர்களும் தங்கள் மக்களுக்கு அவற்றை அறிவிக்கவும்.
7 கடவுள் மீது நம்பிக்கை வைக்கவும், அவருடைய செயல்களை மறவாதிருக்கவும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும்.
8 தங்கள் முன்னோர்களைப் போல் இவர்களும் எதிர்ப்பு மனமும் அடங்காத்தனமும் கொண்ட தலைமுறையாய் ஆகாதிருக்கவும், நேரிய மனமில்லாத மக்களாய்க் கடவுளுக்குப் பிரமாணிக்கமற்ற உள்ளத்தினராய் இல்லாதிருக்கவும் இப்படி ஒரு சட்டம் தந்தார்.
9 வில் வீரரான எப்பிராயிமின் மக்கள், போரில் புறங்காட்டி ஓடினர்.
10 கடவுளுடைய உடன்படிக்கையை அவர்கள் காக்கவில்லை. அவரது சட்டத்தின்படி நடக்க அவர்கள் விரும்பவில்லை.
11 அவருடைய செயல்களை அவர்கள் மறந்தனர். தங்கள் கண்முன் அவர் செய்த வியத்தகு செயல்களை அவர்கள் மறந்தனர்.
12 எகிப்து நாட்டில் அவர்கள் முன்னோர்கள் காணப் புதுமைகளை அவர் செய்தார், தானிஸ் சமவெளியில் அவற்றைச் செய்தார்.
13 கடலைப் பிளந்து அவர்களை வழிநடத்தினார். நீர் திரளை அணை போல் நிற்கச் செய்தார்.
14 பகலில் மேகத்தினால் வழிகாட்டினார். இரவு முழுவதும் நெருப்பின் ஒளியினால் வழி நடத்தினார்.
15 பாலைவெளியில் பாறைகளைப் பிளந்தார்; ஆறு போல் நீர் பெருக்கெடுக்கச் செய்தார். அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்.
16 பாறையினின்று நீரோடை வெளிப்படச் செய்தார். ஆறு போல் அதனைப் பாயச் செய்தார்.
17 அப்படி இருந்தும் அவர்கள் அவருக்கு எதிராய்ப் பாவமே செய்தனர். பாலைவெளியிலே உன்னதமானவரை எதிர்த்தனர்.
18 கடவுளை அவர்கள் பரிசோதிக்கத் துணிந்தனர். தங்கள் இச்சையின்படி உணவு கேட்டனர்.
19 கடவுளை எதிர்த்து, "பாலைவெளியில் கடவுள் நமக்குப் பந்தி படைக்க முடியுமோ?" என்றனர்.
20 இதோ! அவர் பாறையைத் தட்டினார்; தண்ணீர் புறப்பட்டது, வெள்ளம் போல் ஓடியது. இனித் தம் மக்களுக்கு உணவு கொடுக்க அவரால் முடியுமா? இறைச்சி தேடித்தர இயலுமா?" என்றனர்.
21 இதைக் கேட்ட போது ஆண்டவர் சினங்கொண்டெழுந்தார்; யாக்கோபின் இனத்தவருக்கு எதிராக அவரது சினம் நெருப்புப் போல் பற்றியது. இஸ்ராயேலுக்கு எதிராக அவர் சினம் மூண்டெழுந்தது.
22 ஏனெனில், அவர்கள் கடவுளை விசுவாசிக்கவில்லை. அவரது மீட்பின் ஆற்றலில் நம்பிக்கை வைக்கவில்லை.
23 ஆனால் அவரோ வானில் உலவும் மேகங்களுக்குக் கட்டளையிட்டார், வானங்களின் கதவுகளைத் திறந்து விட்டார்.
24 உண்பதற்கு மன்னாவை மழை போல் பொழிந்தார், வானத்து உணவை அவர்களுக்கு அளித்தார்.
25 விண்ணோரின் உணவை மனிதன் உண்ணலானான். வேண்டிய அளவுக்கு உணவை அனுப்பினார்.
26 வானினின்று கீழ்த்திசைக் காற்று எழும்பச் செய்தார். தம் வல்லமையால் தெற்கிலிருந்து காற்று வீசச் செய்தார்.
27 தூசி போல் ஏராளமாக இறைச்சியைப் பொழிந்தார். கடல் மணல் போல் எண்ணற்ற பறவைகளை வரவழைத்தார்.
28 அவை அவர்களுடைய பாளையத்தில் வந்து விழுந்தன. அவர்களுடைய கூடாரங்களைச் சுற்றிக் கிடந்தன.
29 நன்றாக உண்டனர், நிறைவு கொண்டனர். இப்படி அவர்கள் விருப்பத்தை அவர் நிறைவேற்றினார்.
30 ஆனால் அவர்கள் விருப்பம் முற்றிலும் நிறைவேறு முன்பே, அவர்கள் உண்டது வயிற்றில் இறங்கு முன்பே,
31 கடவுளின் சினம் அவர்களுக்கெதிராய் மூண்டெழுந்தது! அவர்களுள் வலிமை மிக்கவர்களை வதைத்தொழித்தார். இஸ்ராயேலின் இளைஞர்களை மடியச் செய்தார்.
32 எனினும், பாவம் செய்வதை அவர்கள் விடவில்லை. அவர் செய்த புதுமைகளையும் அவர்கள் நம்பவில்லை.
33 ஆகவே, அவர்கள் வாழ்நாள் மூச்சுப் போல் மறையச் செய்தார். அவர்கள் வயது திடீரென முடிவடையச் செய்தார்.
34 அவர்களைச் சாகடித்த போது அவரைத் தேடி ஓடினர். மனந்திரும்பி, கடவுளை நாடினர்.
35 கடவுளே தங்களுக்கு அடைக்கலப் பாறை என்பதை நினைவு கூர்ந்தனர். உன்னத கடவுளே தங்கள் மீட்பரென்பதை நினைவுக்குக் கொணர்ந்தனர்.
36 ஆனால் அவர்களின் வாய் பேசியது வஞ்சகம். அவர்களின் நா எடுத்துரைத்தது பொய்.
37 அவரிடம் அவர்கள் காட்டிய மனம் நேர்மையற்றது. அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
38 அவரோ இரக்கம் கொண்டவராய், அவர்கள் குற்றத்தை மன்னித்தார். அவர்களை அழித்து விடவில்லை. பலமுறை தம் கோபத்தை அடக்கிக் கொண்டார். தம் சினத்தையெல்லாம் அவர்கள்மேல் காட்டவில்லை.
39 அவர்கள் வெறும் மனிதரேயென்று அவர் நினைவு கூர்ந்தார். விரைவில் மறையும் மூச்சென நினைவில் கொண்டார்.
40 பாலைவெளியில் எத்தனையோ முறை அவர்கள் அவருக்குச் சினமூட்டினர். எத்தனையோ முறை அவருடைய மனத்தைப் புண்படுத்தினர்.
41 மீளவும் கடவுளைச் சோதித்தனர். இஸ்ராயேலின் பரிசுத்தருக்கு எரிச்சலூட்டினர்.
42 அவரது கை வன்மையை அவர்கள் மறந்து விட்டனர். எதிரியின் கையினின்று அவர்களை மீட்ட நாளை நினைத்தாரில்லை.
43 எகிப்தில் அவர் அருங்குறிகளைச் செய்த நாளை மறந்தனர். தானிஸ் சமவெளியில் அவர் புதுமைகளைச் செய்த நாளை நினைக்கவில்லை.
44 அந்நாளில் ஆறுகளை இரத்தமாக மாற்றினார். நீரில்லாதபடி ஓடைகளை இரத்த வெள்ளமாக்கினார்.
45 அவர்களை அரித்துத் தின்னும்படி பூச்சிகளை அனுப்பினார், அவர்களைத் துன்புறுத்த தவளைகளை ஏவினார்.
46 அவர்கள் விளைச்சலைக் கம்பளிப் பூச்சிகளுக்குக் கொடுத்தார். அவர்கள் உழைப்பின் பயனை வெட்டுக்கிளிகளுக்குக் கொடுத்தார்.
47 திராட்சைக் கொடிகளைக் கல் மழையால் அழித்தார். ஆலங்கட்டிகளால் அத்தி மரங்களை நாசமாக்கினார்.
48 அவர்களுடைய கால்நடைகளைக் கல் மழைக்கு இரையாக்கினார். அவர்களுடைய ஆடுமாடுகள் இடி மின்னலுக்கு இரையாயின.
49 தம் சினத்தின் கொடுமையை அவர்கள் மேல் காட்டினர்; கோபமும் கொடுமையும் துன்பமும் அவர்கள் மேல் விழச் செய்தார், துன்பம் விளைக்கும் தூதர்களைக் கூட்டமாய் அனுப்பினார்.
50 தம் கோப வெள்ளம் மடை திறந்து ஓடச் செய்தார். சாவினின்று அவர்களை அவர் காக்கவில்லை; கால் நடைகளைக் கொள்ளை நோய்க்குக் கையளித்தார்.
51 எகிப்தில் தலைபேறான ஒவ்வொன்றையும் வதைத்தார்: காம் இனத்தார் இல்லங்களில் தலைச்சன் பிள்ளைகளைச் சாகடித்தார்.
52 ஆடுகளைப் போல் தம் மக்களை நடத்திச் சென்றார்: ஆட்டு மந்தையைப் போல் பாலைவெளியில் அவர்களைக் கூட்டிச் சென்றார்.
53 பாதுகாப்புடன் அவர்களை அழைத்துச் சென்றார்: அவர்கள் அஞ்சவேயில்லை; அவர்களுடைய எதிரிகளைக் கடல் விழுங்கிற்று.
54 தம் புனித நாட்டுக்கு அவர்களை அழைத்துக் கொண்டு போனார்: தம் வலக்கரத்தால் சொந்தமாக்கிக் கொண்ட மலைகளுக்கு அழைத்துச் சென்றார்.
55 அவர்கள் போகுமிடத்தில் இருந்த வேற்றினத்தாரை விரட்டி விட்டார்; அந்நாடுகளை இஸ்ராயேலருக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்: அந்நாட்டுக் குடியிருப்புகளில் அவர்களை வாழச் செய்தார்.
56 எனினும், அவர்கள் உன்னத கடவுளைச் சோதித்தனர்; அவருக்கு எரிச்சலூட்டினர். அவருடைய கட்டளைகளைக் கடைபிடிக்கவில்லை.
57 தங்கள் முன்னோர்களைப் போல் அவர்களும் தவறு செய்தனர்; முறை தவறிப் போயினர்: கோணலான அம்பைப் போல குறி பிசகிப் போயினர்.
58 குன்றுகளில் பீடங்கள் கட்டி அவர்கள் சினமூட்டினர்: சிலைகளை வழிபட்டு அவருக்குக் கோபத்தை உண்டாக்கினர்.
59 கடவுள் இதையறிந்து சினந்தெழுந்தார்: இஸ்ராயேலை அறவே புறக்கணித்தார்.
60 சீலோவில் தமக்கிருந்த உறைவிடத்தை அவர் விட்டகன்றார்: மனிதரிடையே அவர் வாழ்ந்து வந்த கூடாரத்தை விட்டுப் போனார்.
61 தம் வலிமையை அடிமைத்தனத்துக்குக் கையளித்தார்: தம் மாட்சியை எதிரியின் கையில் விட்டு விட்டார்.
62 தம் மக்களை வாளுக்கு இரையாகச் செய்தார்; தம் உரிமைச் சொத்தானவர்கள் மீது சினந்தெழுந்தார்.
63 அவர்களுடைய இளைஞர்களை நெருப்பு எரித்து விட்டது: கன்னிப் பெண்களுக்கு திருமண மகிழ்ச்சி கிடைக்கவில்லை.
64 அவர்களுடைய குருக்கள் வாளால் வீழ்த்தப்பட்டனர்: அவர்களுடைய விதவைகளும் ஒப்பாரி வைக்கவில்லை.
65 ஆண்டவரோ தூக்கத்தினின்று எழுவது போல் விழித்தெழுந்தார்: மது மயக்கம் தெளிந்து எழும் வீரனைப் போல் குதித்தெழுந்தார்.
66 தம் எதிரிகள் புறங்காட்டி ஓடச்செய்தார்: என்றென்றும் நிந்தனைக்கு உரியவர்களாக ஆக்கினார்.
67 யோசேப்பின் குடும்பத்தை அவர் புறக்கணித்தார்: எப்பிராயிம் கோத்திரத்தை அவர் தேர்ந்தெடுக்கவில்லை.
68 யூதாவின் கோத்திரத்தையே அவர் தேர்ந்தெடுத்தார்: சீயோன் மலையையே அவர் நேசித்தார்.
69 வானமட்டும் உயரத் தம் திருத்தலத்தை நிறுவினார்: என்றென்றும் நிலைத்திருக்கும் பூமியைப் போல் அதை ஆக்கினார்.
70 தம் ஊழியன் தாவீதை அவர் தேர்ந்து கொண்டார்; ஆட்டுக் கிடைகளினின்று அவரைப் பிரித்தெடுத்தார்.
71 கறவல் ஆடுகளின் பின் திரிந்த அவரை அழைத்துக் கொண்டார்: தம் மக்களான யாக்கோபின் இனத்தாரை, தம் உரிமைச் சொத்தான இஸ்ராயேலை மேய்க்கச் செய்தார்.
72 அவரும் நேர்மையான உள்ளத்தோடு அவர்களை மேய்த்தார்: மிகுந்த கைத்திறனோடு அவர்களை வழி நடத்தினார்.
×

Alert

×