Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 109 Verses

1 என் புகழ்ச்சிக்குரிய இறைவா, மௌனமாயிராதீர்.
2 தீயவரும் வஞ்சகரும் எனக்கெதிராய்த் தம் வாயைத் திறந்துள்ளனர்: எனக்கெதிராய் அவர்கள் பொய்களைப் பேசினர்.
3 பகை நிறைந்த சொற்களால் என்னை வாட்டினர்: காரணமெதுவுமின்றி என்னை வதைத்தனர்.
4 நான் காட்டிய அன்புக்குக் கைம்மாறாக என்மேல் குற்றம் சாட்டினர்: நானோ அவர்களுக்காக மன்றாடினேன்.
5 நன்மைக்குப் பதிலாக அவர்களெனக்குத் தீமையே செய்தனர்: அன்புக்குப் பதிலாக அவர்கள் பகைமையே காட்டினர்.
6 அவனுக்கெதிராகத் தீயவனைத் தூண்டிவிடும்: அவனை அவன் குற்றம் சாட்டுவானாக.
7 நியாயம் விசாரிக்கையில் அவன் தண்டனைக்குள்ளாகட்டும்: அவன் செய்யும் வேண்டுகோள் வீணாகட்டும்.
8 அவனுடைய வாழ்நாள் சொற்பமாகட்டும்: அவனுடைய சொத்தை இன்னொருவன் எடுத்துக் கொள்ளட்டும்.
9 அவனுடைய மக்கள் அனாதைகளாகட்டும்: அவன் மனைவி விதவையாகட்டும்.
10 அவனுடைய மக்கள் நிலையின்றி அலைந்து பிச்சை எடுக்கட்டும்: பாழான தங்கள் வீடுகளிலிருந்து அவர்கள் விரட்டப்படட்டும்.
11 கடன் கொடுத்தவன் அவன் சொத்தையெல்லாம் பறித்துக் கொள்ளட்டும்: அவன் உழைப்பின் பயனை அந்நியர்கள் பிடுங்கிக் கொள்ளட்டும்.
12 அவனுக்கு இரக்கங்காட்ட ஒருவனுமில்லாதிருக்கட்டும்; திக்கற்ற அவன் பிள்ளைகள் மேல் யாரும் இரங்காதிருக்கட்டும்.
13 அவன் சந்ததி அடியோடு தொலையட்டும்: இரண்டாம் தலைமுறைக்குள் அவனுடைய பெயர் இல்லாது போகட்டும்.
14 அவனுடைய முன்னோர்களின் பாவங்களை ஆண்டவர் நினைத்துக் கொள்ளட்டும்: அவனுடைய தாய் செய்த பாவம் நீங்காதிருக்கட்டும்.
15 அவைகள் என்றும் ஆண்டவர் திருமுன்னே இருக்கட்டும்: அவர்களுடைய நினைவை அடியோடு எடுத்து விடட்டும்.
16 ஏனெனில், அவனும் யாருக்கும் இரக்கம் காட்ட நினைக்கவில்லை; எளியவனையும் ஏழையையும் துன்புறுத்தினவன் அவன்: நெஞ்சம் நொறுங்குண்டவனைக் கொன்றொழிக்கத் தேடியவன்.
17 சபிப்பதையே அவன் விரும்பினான்; விரும்பிய அதுவே அவன் மீது விழட்டும்: ஆசி கூறுவதை அவன் விரும்பவில்லை; ஆகவே அது அவனை விட்டகலட்டும்.
18 சாபனையே அவன் தன் ஆடையாக அணியட்டும்: உடலில் தண்ணீர் ஊறுவது போல, எலும்பில் எண்ணெய் தோய்ந்திருப்பது போல சாபனை அவனுக்குள் இறங்கட்டும்.
19 அது அவனைப் போர்த்தும் ஆடைபோல் இருக்கட்டும்: நாள்தோறும் அவன் கட்டும் கச்சைப் போல் இருக்கட்டும்.
20 என்னைக் குற்றம் சாட்டுவோருக்கும், எனக்கு எதிராகத் தீமை பேசுவோருக்கும், ஆண்டவர் அளிக்கும் பிரதிபலனாய் இது இருப்பதாக.
21 ஆனால் ஆண்டவராகிய இறைவா, நீர் உமது பெயரின் பொருட்டு என்னை ஆதரியும்: ஏனெனில், கருணை மிக்கது உம் இரக்கம், என்னை மீட்டருளும்.
22 நானோ துயருற்றவன், ஏழ்மை மிக்கவன்: என் இதயம் என்னுள் புண்பட்டுள்ளது.
23 மறைந்து போகும் நிழலைப் போல் நான் மறைகின்றேன்: வெட்டுக்கிளியைப் போல நான் காற்றில் அடிபடுகின்றேன்.
24 நோன்பினால் என் முழங்கால்கள் தளர்வுறுகின்றன: என் ஊனுடல் பலமற்று நொந்து போகிறது.
25 நானோ அவர்களுடைய நிந்தனைக்குரியவன் ஆனேன்; என்னைப் பார்க்கிறவர்கள் தலையை அசைக்கிறார்கள்.
26 ஆண்டவரே, என் இறைவா, எனக்குதவியாக வாரும்: உமது இரக்த்திற்கேற்ப என்னை மீட்டுக்கொள்ளும்.
27 இது உம் கைவேலையென்று அவர்கள் அறியட்டும்: ஆண்டவரே, இது உம் செயலென்று அவர்களுக்குத் தெரியட்டும்.
28 அவர்கள் சபித்தாலும் நீர் ஆசீர்வதியும்: என்னை எதிர்த்து எழும்பினால் பின்னடைந்து போகட்டும்; உம் ஊழியனோ அகமகிழட்டும்.
29 என்னைக் குற்றம் சாட்டுவோரை மானக்கேடு ஆட்கொள்வதாக: வெட்கம் அவர்களைப் போர்வை போல் போர்த்துவதாக.
30 என் நாவினால் ஆண்டவரைப் போற்றிப் புகழ்வேன்: மக்கள் பலரிடையில் அவரைப் போற்றுவேன்.
31 ஏனெனில், ஏழையின் வலப்பக்கம் அவர் நிற்கிறார். குற்றம் சாட்டி அவனை ஒறுப்போரிடமிருந்து அவனைக் காக்க நிற்கிறார்.
×

Alert

×