Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 107 Verses

1 ஆண்டவரைப் போற்றுங்கள், அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்.
2 ஆண்டவரால் மீட்படைந்தோர், எதிரியின் கையினின்று மீட்கப்பட்டோர், இங்ஙனம் சொல்வார்களாக.
3 கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும், பல நாடுகளினின்றும் ஒன்று சேர்க்கப்பட்டவர்களும் இப்படிச் சொல்வார்களாக.
4 பாலை வெளியில் மனிதர் வாழாத இடத்தில் அவர்கள் அலைந்து திரிந்தனர்: குடியிருக்க ஒரு நகருக்குச் செல்ல அவர்கள் வழி காணவில்லை.
5 பசிகொண்டனர், தாகமுற்றனர்: மனமுடைந்து களைத்துப் போயினர்.
6 தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார்.
7 நேரிய பாதையில் அவர்களை வழி நடத்தினார்: குடியிருக்கும் நகரத்தை அவர்கள் அடையச் செய்தார்.
8 ஆண்டவருடைய இரக்கத்தை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துவார்களாக: மனுமக்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துக் கொள்வார்களாக.
9 பசியுற்றவனுக்கு அவர் நிறைவளித்தார்: பட்டினி கிடந்தவனை நன்மையால் நிரப்பினார்.
10 இருட்டிடங்களில் சோர்வுற்றுக் கிடந்தனர்: விலங்கிடப்பட்டுத் துன்பத்தில் உழன்றனர்.
11 ஏனெனில், கடவுளுடைய வாக்குறுதியை ஏற்காமல் அவரை எதிர்த்தனர்: உன்னதரின் திட்டத்தை அவமதித்தனர்.
12 பல துன்பங்களால் அவர்கள் உள்ளத்தைச் சிறுமைப்படுத்தினார்: தள்ளாடிப் போயினர்; அவர்களுக்குக் கைகொடுக்க ஒருவருமில்லை.
13 தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் விடுவித்தார்.
14 இருட்டிடங்களில் சோர்வுற்றுக் கிடந்த அவர்களை வெளியேற்றினார்: அவர்கள் கட்டுண்டிருந்த விலங்குகளைத் தகர்தெறிந்தார்.
15 ஆண்டவருடைய இரக்கத்தை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துவார்களாக: மனுமக்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துக் கொள்வார்களாக.
16 ஏனெனில், வெண்கலக் கதவுகளை அவர் தகர்த்துவிட்டார்: இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்து விட்டார்.
17 தாங்கள் செய்த அக்கிரமத்தினால் அவர்கள் நோய்களுக்கு உள்ளாயினர்: அவர்களுடைய பாவங்களின் பொருட்டுத் துன்பங்களுக்கு உள்ளாயினர்.
18 எந்த உணவின் மீதும் அவர்கள் மனம் செல்லவில்லை: சாவின் வாயில்களை அவர்கள் நெருங்கினார்கள்.
19 தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார்.
20 தம் வார்த்தையை விடுத்து அவர்களைக் குணப்படுத்தினார்: அழிவினின்று அவர்களை விடுத்தார்.
21 ஆண்டவருடைய இரக்கத்தை நினைத்து அவருக்கு நன்றி சொல்வார்களாக: மனுமக்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துக் கொள்வார்களாக.
22 புகழ்ச்சிப் பலிகளை அவர்கள் செலுத்துவார்களாக: அக்களிப்போடு அவருடைய செயல்களைச் சாற்றுவார்களாக.
23 அவர்கள் கப்பலேறிக் கடலைக் கடந்து, வியாபாரம் செய்யப் போயிருந்தார்கள்.
24 இவர்களும் ஆண்டவருடைய செயல்களைக் கண்டனர்: கடலில் அவருடைய வியத்தகு செயல்களைப் பார்த்தனர்.
25 அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல்காற்று எழுந்தது: கடல் கொந்தளிக்க, அலைகள் கொதித்தெழுந்தன.
26 வானமட்டும் மேலே வீசப்பட்டனர், பாதாளமட்டும் கீழே எறியப்பட்டனர்: அவர்கள் உள்ளமோ துன்ப நிலையைக் கண்டுத் தளர்வுற்றது.
27 குடியரைப் போல் தள்ளாடினர், தடுமாறினர்: அவர்கள் திறமையெல்லாம் மறைந்து போயிற்று.
28 தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார்.
29 புயல்காற்றை அவர் இளந்தென்றலாக மாற்றிவிட்டார்: கடல் அலைகளும் ஓய்ந்து விட்டன.
30 அவ்வமைதியைக் கண்டு அவர்கள் மகிழ்ந்தனர்: அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றார்.
31 ஆண்டவருடைய இரக்கத்தை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துவார்களாக: மனுமக்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துக் கொள்வார்களாக.
32 மக்களுடைய சபையில் அவரைக் கொண்டாடுவார்களாக: முதியோருடைய கூட்டத்தில் அவரைப் போற்றுவார்களாக.
33 ஆறுகளை அவர் பாலை நிலமாக்கினார்: நீரோடைகளை அவர் வறண்ட தரையாக்கினார்.
34 செழிப்பான நிலத்தை உலர் நிலமாக்கினார்: அங்குக் குடியிருந்தவர்களின் அக்கிரமத்தின் பொருட்டு இப்படிச் செய்தார்.
35 பாலைநிலத்தையோ ஏரியாக மாற்றினார்: வறண்ட நிலத்தை நீரூற்றாக்கினார்.
36 பசியுற்றோரை அங்கே குடியேற்றினார்: அவர்கள் அங்கே குடியிருக்க நகரமொன்றை அமைத்தனர்.
37 அங்கே அவர்கள் உழுது விதைத்தனர்: திராட்சை பயிரிட்டனர்; விளைச்சலைப் பெற்றனர்.
38 அவர் ஆசி வழங்கினார், அவர்கள் பெருந்தொகையாய்ப் பலுகினர்: ஆடு மாடுகளையும் அவர்களுக்குக் கணக்கின்றித் தந்தார்.
39 பின்பு அவர்கள் தொகை குறைந்தது: இகழ்ச்சிக்காளாயினர், ஒடுக்கப்பட்டனர், துன்பங்களுக்குள்ளாயினர்.
40 தலைவர்கள் மேல் இகழ்ச்சி வரப்பண்ணி, அவர்களை மனிதர் நடமாட்டமில்லாத இடங்களில் அலையச் செய்பவர்,
41 எளியவனைத் துன்ப நிலையினின்று தூக்கி விட்டார்: அவர்கள் குடும்பங்களை மந்தை போல் பெருகச் செய்தார்.
42 நேர்மையுள்ளவர்கள் இதைப் பார்க்கின்றனர், பார்த்து மகிழ்கின்றனர்: தீயவர்களோ தங்கள் வாயை மூடிக்கொள்கின்றனர்.
43 ஞானமுள்ளவன் இவற்றையெல்லாம் சிந்திக்கட்டும்: ஆண்டவருடைய இரக்கத்தை ஆழ்ந்து சிந்திக்கட்டும்.
×

Alert

×