Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Psalms Chapters

Psalms 105 Verses

1 அல்லேலூயா! ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; அவர்தம் திருப்பெயரைச் சொல்லி வழிபடுங்கள்: எல்லா இனத்தாரும் அவருடைய செயல்களை அறியச் செய்யுங்கள்.
2 அவருக்கு இன்னிசை எழுப்புங்கள்; இசைக் கருவி மீட்டுங்கள்: அவர் செய்த வியத்தகு செயல்களையெல்லாம் பறைசாற்றுங்கள்.
3 அவரது திருப்பெயரை நினைத்துப் பெருமைப்படுங்கள்: ஆண்டவரைத் தேடுவோரின் உள்ளம் மகிழ்வதாக.
4 ஆண்டவரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்: அவரது திருமுகத்தை என்றும் தேடுங்கள்.
5 ஆண்டவருடைய ஊழியராகிய ஆபிரகாமின் வழித்தோன்றல்களே, அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவராகிய யாக்கோபின் மக்களே,
6 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்: அவருடைய புதுமைகளையும் அவர் உரைத்த நீதித் தீர்ப்புகளையும் நினைவு கூருங்கள்.
7 ஆண்டவரே நம் கடவுள்: அவர் ஆட்சி உலகெங்கும் பரவியுள்ளது.
8 நம் உடன்படிக்கையை அவர் என்றென்னும் நினைவுகூர்கின்றார்: ஆயிரமாயிரம் தலைமுறைக்கும் தாம் அளித்த வாக்குறுதியை அவர் நினைவு கூர்கின்றார்.
9 ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையை அவர் மறக்கவில்லை ஈசாக்குக்கு அவர் இட்ட ஆணையை அவர் மறக்கவில்லை.
10 'கானான் நாட்டை உங்களுக்கு உரிமையாக்குவேன்' என்று சொல்லி,
11 யாக்கோபுக்கு அவர் தந்த உறுதியான நியமத்தை, இஸ்ராயேலுடன் அவர் செய்த நித்திய உடன்படிக்கையை அவர் மறக்கவில்லை.
12 அவர்கள் எண்ணிக்கையில் சிலராயிருந்த போதும், அச்சிலர் அந்நியராக இருந்த போதும்.
13 பற்பல இனத்தாரிடையே அவர்கள் அலைந்த போதும், நாடு நாடாய் அவர்கள் சுற்றித் திரிந்த போதும்.
14 யாரும் அவர்களைத் துன்புறுத்த அவர் விடவில்லை: அவர்களின் பொருட்டு அரசர்களைத் தண்டித்தார்.
15 நான் அபிஷுகம் செய்தவர்களைத் தொடாதீர்கள்: என் வாக்குரைப்போருக்குத் தீங்கு இழைக்காதீர்கள்" என்றுரைத்தார்.
16 நாட்டில் பஞ்சத்தை வரவழைத்தார்: உணவுப் பொருட்களனைத்தையும் எடுத்து விட்டார்.
17 ஆனால் அதற்கு முன், அடிமையாக விற்கப்பட்ட சூசையை அனுப்பி வைத்தார்.
18 அவருடைய கால்களுக்கோ விலங்குகள் இடப்பட்டன: அவருடைய கழுத்துக்கு இருப்புத்தளை இடப்பட்டது.
19 நாளடைவில் அவர் சொன்னது நிறைவேறியது: ஆண்டவருடைய வார்த்தை உண்மையென எண்பிக்கப்பட்டது.
20 அரசன் ஆளனுப்பி அவரை விடுதலை செய்தான்: நாட்டின் மன்னன் அவருக்கு விடுதலையளித்தான்.
21 தன் இல்லத்திற்கு அவரைத் தலைவராக்கினான்: தன் உடைமை அனைத்தின் மீதும் அவருக்கு அதிகாரமளித்தான்.
22 இங்ஙனம் சூசை தன் விருப்பம் போல் அரச அலுவலருக்கு அறிவு புகட்டவும், முதியோருக்கு ஞானத்தைக் கற்பிக்கவும் அரசன் அவரை நியமித்தான்.
23 அதன்பின் இஸ்ராயேல் மக்கள் எகிப்தில் நுழைந்தனர்: காம் நாட்டில் யாக்கோபின் இனத்தார் குடியேறினர்.
24 தம் மக்கள் பெரிதும் பெருகச் செய்தார்: எதிரிகளை விட அவர்களை வல்லவர்களாக்கினார்.
25 தம் மக்கள் மீது வெறுப்புண்டாகும் அளவுக்கு எதிரிகளின் மனத்தை மாற்றினார்: தம் ஊழியரிடம் அவர்கள் வஞ்சகம் காட்டச் செய்தார்.
26 அதன் பின் தம் ஊழியன் மோயீசனை அனுப்பினார்: தாம் தேர்ந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார்.
27 அவர் சொன்ன செயல்களை அடையாளமாகச் செய்தனர்: காமின் நாட்டில் புதுமைகளைப் புரிந்தனர்.
28 அவர் இருளை அனுப்ப எங்கும் இருள் படர்ந்தது: ஆனால் எகிப்தியர் அவரது வார்த்தையை ஏற்கவில்லை.
29 நாட்டின் நீர் நிலைகளை இரத்தமாக மாற்றினார்: அவற்றிலிருந்த மீன்களைச் சாகடித்தார்.
30 நாடெங்கும் தவளைகள் நிரம்பச் செய்தார்: அரச மாளிகையின் உள்ளறைகளுக்கும் அவை போகச் செய்தார்.
31 அவர் ஒரு வார்த்தை சொல்ல, ஈக்கள் படையெடுத்தன: எங்கும் பூச்சிகள் வந்து நிரம்பின.
32 மழைக்குப் பதிலாகக் கல் மழை பெய்யச் செய்தார்: இடியும் மின்னலும் எங்கும் உண்டாயிற்று.
33 அவர்களுடைய திராட்சைத் தோட்டங்களையும் அத்திமரங்களையும் முறியச் செய்தார்: மரங்களெல்லாம் சாய்ந்து விழுந்தன.
34 மீளவும் ஒரு வார்த்தை சொன்னார்: வெட்டுக்கிளிகளும் பூச்சிகளும் கணக்கின்றி எழுந்தன.
35 அவை நாட்டிலுள்ள செடி கொடிகளையெல்லாம் அரித்து விட்டன: வயல்களில் விளைந்த விளைச்சல் யாவற்றையும் தின்று விட்டன.
36 நாட்டிலுள்ள முதற் போறான யாவரையும் வதைத்தார்: அவர்கள் ஈன்ற தலைப் பேறான மக்கள் யாவரையும் வதைத்தொழித்தார்.
37 வெள்ளியோடும் பொன்னோடும் அவர்கள் வெளியேறச் செய்தார். அவர்களின் கோத்திரங்களில் வலிமையற்றவர் எவருமில்லை.
38 அவர்கள் வெளியேறுகையில் எகிப்தியர்கள் அகமகிழ்ந்தனர்: ஏனெனில், அவர்கள் பொருட்டுப் பேரச்சம் அவர்களை ஆட்கொண்டிருந்தது.
39 அவர்களுக்கு நிழல் தர மேகத்தைப் பரப்பினார்: இரவில் ஒளி தர நெருப்பைத் தந்தார்.
40 அவர்கள் உணவு கோர, காடைகள் வரச் செய்தார்: வானினின்று வந்த உணவால் அவர்களுக்கு நிறைவளித்தார்.
41 அவர் பாறையைப் பிளக்கத் தண்ணீர் புறப்பட்டது: அது பாலைவெளியிலே ஆறு போல் ஓடியது.
42 ஏனெனில், தம்முடைய திருவாக்கை அவர் நினைவு கூர்ந்தார்: தம் ஊழியன் ஆபிரகாமுக்குச் சொன்னதை அவர் மறக்கவில்லை.
43 பெருமகிழ்ச்சியிடையே தம் மக்களை வெளியேற்றினார்: தாம் தேர்ந்தெடுத்தவர்களை அக்களிப்பிடையில் கூட்டிச் சென்றார்.
44 வேற்றினத்தார் நாடுகளை அவர்களுக்குக் கொடுத்தார். அந்நாட்டினரின் செல்வங்களை அவர்கள் கைப்பற்றச் செய்தார்.
45 அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும், அவரது சட்டத்தின்படி ஒழுகவுமே இப்படிச் செய்தார். அல்லேலூயா.
×

Alert

×