Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Philippians Chapters

Philippians 2 Verses

1 எனவே, கிறிஸ்துவுக்குள் வாழும் வாழ்வு ஊக்கம் ஊட்டுவதெனில், அன்பினால் ஆறுதல் விளைவிப்பதெனில், ஆவியானவரோடு நட்புறவு தருவதெனில், பரிவும் இரக்கமும் உண்டாக்குவதெனில்.
2 நீங்கள் ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவுபெறச் செய்யுங்கள்; ஒரே அன்பும். ஒரே உள்ளமும், ஒரே மனமும் கொண்டிருங்கள்.
3 போட்டி மனப்பான்மைக்கும், வீண் பெருமைக்கும் இடம் தரவேண்டாம். மனத்தாழ்ச்சியோடு மற்றவரை உங்களினும் உயர்ந்தவராகக் கருதுங்கள்.
4 உங்களுள் ஒவ்வொருவரும் தன் நலத்தையே நாடாது, பிறர் நலத்தையும் நாட வேண்டும்.
5 கிறிஸ்து இயேசுவில் இருந்த மனநிலையே உங்களிலும் இருப்பதாக.
6 கடவுள் தன்மையில் விளங்கிய அவர் கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை விடாமல் பிடித்துக்கொண்டிருக்க வேண்டிய தொன்றாகக் கருதவில்லை.
7 ஆனால், தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் தன்மை பூண்டு மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,
8 தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்.
9 ஆதலால் தான் கடவுள் அவரை எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.
10 ஆகவே, இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிட,
11 'இயேசுகிறிஸ்து ஆண்டவர்' என்று தந்தையாகிய கடவுளுடைய மகிமைக்காக எல்லா நாவுமே அறிக்கையிடும்.
12 எனவே, என் அன்பிற்குரியவர்களே, எப்பொழுதும் கீழ்ப்படிதலோடு நடந்தது போல் இப்போதும் நடங்கள். நான் இப்போது உங்களோடு இல்லாவிடினும், உங்களோடு இருந்தபோது நீங்கள் காட்டிய பணிவை விடை மிகுந்த பணிவு காட்டி. அச்ச நடுக்கத்தோடு உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள்.
13 நீங்கள் எதையும் விரும்பவும் செயலாற்றவும் தம் திருவுளம் நிறைவேற, உங்களில் செயலாற்றுபவர் கடவுளே.
14 செய்வதெல்லாம் முணுமுணுக்காமல் வாதாடாமல் செய்யுங்கள்.
15 அப்பொழுதுதான் நெறிகெட்ட, சீரழிந்த தலைமுறையினரிடையே குற்றமின்றி மாசற்றவர்களாய்க் கடவுளின் குழந்தைகளெனத் திகழ்வீர்கள்; வாழ்வைப் பற்றிய வார்த்தைகளை வழங்க ஏந்தி நின்று, உலகில் சுடர்விடும் விண்மீன்கள் எனத் துலங்குவீர்கள்.
16 வீணாக நான் ஓடவில்லை, வெறுமனே நான் உழைக்கவில்லை என்பதற்கு நீங்கள் சான்றாய் நின்று, கிறிஸ்துவின் நாளில் நான் பெருமையடையச் செய்வீர்கள்.
17 உங்கள் விசுவாசமாகிய காணிக்கையை ஒப்புக்கொடுக்கும் திருப்பலியில் நான் என் இரத்தத்தையே சிந்தவேண்டியிருப்பினும் அது எனக்கு மகிழ்ச்சியே.
18 அம்மகிழ்ச்சியை நான் உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்ளுகிறேன். அதுபோலவே நீங்களும் அகமகிழுங்கள். உங்கள் மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
19 உங்களைப் பற்றிய செய்திகளை அறிந்து, நானும் உற்சாகமடையும்படி தீமோத்தேயுவை உங்களிடம் விரைவில் அனுப்பலாம் என்று நினைக்கிறேன். ஆண்டவர் இயேசு அருள் புரிக.
20 உங்கள் நலத்தில் மெய்யாகவே அக்கறை காட்டுவதற்கு அவரைப்போல் நன்மனமுள்ளவர் என்னோடு வேறு யாருமில்லை.
21 எல்லாரும் தம்மைச் சார்ந்தவற்றைக் தேடுகிறார்களே தவிர, கிறிஸ்து இயேசுவைச் சார்ந்தவற்றைத் தேடுவதில்லை.
22 தீமோத்தேயுவின் தகைமையோ உங்களுக்குத் தெரியும். தந்தையோடு மகன் உழைப்பதுபோல் என்னோடு அவர் நற்செய்திக்காக உழைத்திருக்கிறார்.
23 என் நிலைமை எப்படி இருக்கும் என்று அறிந்தவுடன் அவரை உங்களிடம் அனுப்ப நினைக்கிறேன்.
24 நானே விரைவில் உங்களிடம் வருவேன் என்ற நம்பிக்கையும் ஆண்டவரில் எனக்குண்டு.
25 என் தேவைகளில் எனக்குத் துணைசெய்யும்படி நீங்கள் எப்பாப்பிரொத்தீத்துவை அனுப்பி வைத்தீர்களே. அந்தச் சகோதரர் என் உழைப்பிலும் போராட்டத்திலும் தோழராக இருந்தார். இப்போது அவரை உங்களிடம் திருப்பி அனுப்ப வேண்டுமென்று நினைக்கிறேன்.
26 ஏனெனில், தாம் நோயுற்ற செய்தி உங்களுக்குத் தெரியவந்ததை அறிந்து மனங்கலங்கி உங்களெல்லோரையும் காண ஏக்கமாயிருந்தார். ஆம், அவர் நோயுற்றது உண்மையே.
27 இறக்கும் தருவாயில்கூட இருந்தார். ஆனால் கடவுள் அவர்மேல் இரக்கம் கொண்டார். அவர்மேல் மட்டுமன்று, துன்பத்துக்கு மேல் துன்பம் எனக்கு வராதபடி என் மேலம் இரக்கம் கொண்டார். அவரை விரைவில் அனுப்பிவிடுகிறேன்.
28 மீண்டும் அவரைப் பார்த்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள், நானும் கவலையின்றி இருப்பேன்.
29 எனவே முழு மகிழ்ச்சியோடு ஆண்டவர் பெயரால் அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். அத்தகையோருக்கு நீங்கள் மதிப்புக் கொடுக்க வேண்டும்.
30 இப்படி அவர் சாகும் நிலைக்கு வந்தது கிறிஸ்துவுக்காகச் செய்த வேலையினாலேயே. நீங்கள் எனக்குத் துணைபுரிய இயலாமற்போன குறையை நீக்க அவர் தம் உயிரையே இழக்கவும் துணியலானார்.
×

Alert

×