Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Numbers Chapters

Numbers 3 Verses

1 ஆண்டவர் சீனாய் மலையில் மோயீசனுக்குத் திருவாக்கருளின் காலத்திலே, ஆரோன், மோயீசன் என்பவர்களுடைய வம்சவரலாறாவது:
2 ஆரோனுடைய புதல்வர்கள்: முதலில் பிறந்தவன் நாதாப், பின்பு அபியூ, எலேயசார், இத்தமார் என்பவர்கள்.
3 குருத்துவப் பணி செய்யும் பொருட்டு அபிசேகம் செய்யப்பட்டு கைகள் நிறைக்கப்பெற்று அர்ச்சிக்கப்பட்ட ஆரோனின் புதல்வராகிய குருக்களின் பெயர்கள் இவைகளே.
4 ஆனால், நாதாப் அபியூ என்பவர்கள் சீனாய்ப் பாலைவனத்திலே ஆண்டவர் திருமுன் அந்நிய நெருப்பைச் சமர்ப்பித்தமையால் மகப்பேறின்றி மாண்டனர். எலேயசாரும் இத்தமாரும் தங்கள் தந்தையாகிய ஆரோனின் முன்னிலையில் குருத்துவ ஊழியம் செய்து வந்தார்கள்.
5 ஆண்டவரோவென்றால் மோயீசனை நோக்கி:
6 நீ லேவியின் கோத்திரத்தாரை வரச்சொல்லி, அவர்கள் தலைமைக் குருவாகிய ஆரோனுக்குப் பணிவிடை செய்யும்படிக்கும், சாட்சியாகக் கூடாரத்தைக் காக்கும்படிக்கும், கடவுளின் உறைவிடத்துக்கு முன்பாகச் சபையார் செய்யும்.
7 சடங்குமுறை முதலியவற்றைக் கவனித்து வரும்படிக்கும்,
8 கூடாரத்தின் தட்டுமுட்டுக்களைக் காத்துக்கொண்டு ஆரோனுக்கு உதவியாயிருக்கும்படிக்கும் அவன் முன்னிலையில் நிறுத்தக்கடவாய்.
9 லேவி கோத்திரத்தாரை நன்கொடையாக, ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் கொடுப்பாய்.
10 இஸ்ராயேல் மக்கள் இவர்களுக்கு அவர்களைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், ஆரோனையும் அவன் புதல்வர்களையும் குருத்துவ அலுவலில் நியமனம் செய்வாய். யாரேனும் ஓர் அந்நியன் அந்த அலுவலைச் செய்யத் துணிவானாயின், அவன் கொலை செய்யப்படுவான் என்றார்.
11 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
12 இஸ்ராயேல் மக்களில் தாயின் வயிற்றைத் திறந்து பிறக்கிற தலைப்பேறான எல்லாப் பிள்ளைகளுக்கும் பதிலாய் நாம் லேவிய வம்சத்தாரை இஸ்ராயேல் மக்களிலிருந்து எடுத்துக் கொண்டோமாகையால், இந்த வம்சத்தார் நம்முடையவர்களாம்.
13 ஏனென்றால், முதற்பேறானவையெல்லாம் நம் முடையவை. நாம் எகிப்து நாட்டிலே முதற்பேறானவையெல்லாம் அழித்தது முதற் கொண்டு இஸ்ராயேலில் மனிதன் முதல் மிருகவுயிர் வரையிலும் தலைப்பேறானவையெல்லாம் நம்முடையவை. நாம் ஆண்டவர் என்றார்.
14 மறுபடியும் ஆண்டவர் சீனாய்ப் பாலைவனத்திலே மோயீசனை நோக்கி:
15 நீ லேவியின் புதல்வர்களை அவர்களுடைய முன்னோரின் வம்சங்களின்படியும், குடும்பத்தின்படியும் எண்ணக்கடவாய். ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்களை எல்லாம் எண்ணிப்பார் என்றார்.
16 ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி மோயீசன் அவர்களை எண்ணினார்.
17 லேவியின் புதல்வர்களாய்க் காணப்பட்டவர்களின் பெயர்கள் ஜேற்சோன், காத், மேறாரி.
18 ஜேற்சோனின் மக்கள்: லெப்னியும் சேமையும்.
19 காத்தின் மக்கள்: அம்ராம், ஜெஸார், எபிரோன், ஓசியேல் என்பவர்கள்.
20 மேறாரியின் மக்கள்: மொகோலியும் மூசியும் ஆவர்.
21 ஜேற்சோனினின்று லெப்னியாலும் சேமையாலும் இரண்டு வம்சங்கள் உண்டாயின.
22 இவைகளின் குடிக்கணக்காவது: ஒரு மாதம் முதற்கொண்டுள்ள ஆண்கள் ஏழாயிரத்து ஐந்நூறு பேர்.
23 இவர்கள் கூடாரத்திற்குப் பின் மேற்புறத்தில் பாளையம் இறங்குவார்கள்.
24 அவர்களுக்கு லேலின் புதல்வனாகிய எலியஸாபே தலைவன்.
25 அவர்கள் உடன்படிக்கைக் கூடாரத்தினுள்ளே காவல் காத்து, உறைவிடத்தையும்,
26 அதன் மூடியையும், உடன்படிக்கைக் கூடாரவாயிலின் முன்தொங்கும் திரையையும், மண்டபத்தின் சுற்றிலுமுள்ள திரைகளையும், கூடார மண்டபத்தின் நுழைவிடத்திலே தொங்கும் திரையையும், பலிபீடத்தைச் சார்ந்த வேலைகளுக்குரிய கயிறுகளையும், தட்டு முட்டுப் பொருட்களையும் கவனித்து வருவார்கள்.
27 காத்தினின்று அம்ராம், ஜெஸார், எப்ரோன், ஓசியேல் என்னும் பெயர்களைக் கொண்டே வம்சங்கள் உண்டாயின. இவைகளே தத்தம் பெயர்களின்படி எண்ணப்பட்ட காத்தின் வம்சங்கள்.
28 ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட ஆண்டுகளெல்லாம் எண்ணாயிரத்து அறுநூறு பேர் அவற்றில் காணப்பட்டனர்.
29 இவர்கள் புனித இடத்தைக் காவல் காத்துக்கொண்டு, தென்புறத்திலே பாளையம் இறங்குவார்கள்.
30 அவர்களுக்குள்ளே ஓசியேலின் மகனான எலிஸபானே தலைவன்.
31 அவர்கள் பெட்டகத்தையும் மேசையையும், கிளை விளக்கையும் பீடங்களோடு இறைபணிக்குரிய புனித இடத்துப் பாத்திரங்களையும், திரையையும், இவைபோன்ற தட்டு முட்டுக்கள் அனைத்தையும் காத்துக் கொள்வார்கள்.
32 லேவியருடைய தலைவர்களுக்குத் தலைவரும் தலைமைக் குருவாகிய ஆரோனின் புதல்வனுமாகிய எலேயஸாரோ புனித இடத்தைக் காவல் காப்பவர்களுக்குத் தலைவனாய் இருப்பான்.
33 மேறாரியினின்று மெகோலி, மூசி என்னும் பெயர்களைக் கொண்ட வம்சங்களும் தத்தம் பெயர்களின்படி எண்ணப்பட,
34 ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்கள் ஆறாயிரத்து இருநூறு பேர்.
35 இவர்களுக்கு அபிகயேலின் புதல்வனாகிய சுரியேல் தலைவன். இவர்கள் வடபுறத்தில் பாளையம் இறங்குவார்கள்.
36 கூடாரப் பலகைகளும். அவற்றின் தண்டுகளும், பாதங்கள் தூண்கள் இவைபோன்ற வழிபாட்டுப் பொருட்களும் அவர்களுடைய காவலிலே வைக்கப்பட்டன.
37 அவர்கள் மண்டபத்தைச் சுற்றிலுமுள்ள தூண்களையும், அவற்றின் பாதங்களையும், முளைகளையும் கயிறுகளையும் கவனித்து வருவார்கள்.
38 கீழ்ப்புறத்தில் - அதாவது உடன்படிக்கைக் கூடார முன்னிலையில் - மோயீசனும், ஆரோனும் இவர் புதல்வர்களும் பாளையம் இறங்குவார்கள். இவர்கள் இஸ்ராயேல் மக்கள் நடுவிலே புனித இடத்தைக் காத்து வருவார்கள். யாரேனும் ஓர் அந்நியன் நெருங்கி வந்தால், அவன் கொல்லப்படுவான்.
39 மோயீசனும், ஆரோனும் ஆண்டவருடைய கட்டளைப்படி லேவி வம்சத்தில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்களையெல்லாம் தங்கள் குடும்பங்களின்படி எண்ணினார்கள். அவர்கள் இருபத்தீராயிரம் பேர்.
40 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: இஸ்ராயேல் மக்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள தலைப்பேறான ஆண்களையெல்லாம் எண்ணித் தொகைப்படுத்துவாயாக.
41 இஸ்ராயேல் மக்களின் தலைப்பேறான எல்லாப் பிள்ளைகளுக்கும் பதிலாய் லேவிய வம்சத்தாரையும், இஸ்ராயேல் மக்களின் மந்தைகளிலுள்ள தலையீற்றான மிருகவுயிர்களுக்குப் பதிலாய் லேவியரின் மந்தைகளையும் நம் பெயராலே நீ பிரித்தெடுப்பாய்.
42 நாம் ஆண்டவர் என்றார். மோயீசன் ஆண்டவருடைய கட்டளைப்படி இஸ்ராயேலருடைய தலைப்பேறான புதல்வர்களை எண்ணிப் பார்க்கையில்,
43 ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்களையெல்லாம் பெயர் பெயராக எழுதினார். அவர்கள் இருபத்தீராயிரத்து இருநூற்று எழுபத்து மூன்று பேர்.
44 அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி:
45 இஸ்ராயேல் மக்களின் முதல் பேறான எல்லாப் புதல்வர்களுக்கும் பதிலாய் லேவியர்களையும், அவர்களுடைய மந்தையின் தலையீற்றுக்களுக்குப் பதிலாய் லேவியருடைய மந்தைகளையும் பிரித்தெடு. லேவியர் நம்முடையவர்கள். நாம் ஆண்டவர்.
46 அன்றியும், இஸ்ராயேல் மக்களின் முதல் பேறான புதல்வர்களில் லேவியரின் தொகைக்கு அதிகமாயிருந்து மீட்கப்பட வேண்டிய இருநூற்றெழுபத்து மூன்று பேர் இருக்கிறார்கள்.
47 அவர்களுக்கென்று புனித இடத்து அளவின்படி தலைக்கு ஐந்து சீக்கல்களை வாங்கிக் கொள்வாய். (ஒரு சீக்கலுக்கு இருபது ஒபோல்).
48 அதிகப்பட்டவர்களின் மீட்பு விலையாகிய அந்தப் பணத்தை நீ சேர்த்து, ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் கொடுப்பாய் என்றார்.
49 அவ்வாறு அதிகமாயிருந்து லேவியர்களால் மீட்கப்பட்டவர்களின் மீட்புப் பணத்தை மோயீசன் சேர்த்து,
50 அந்தத் தொகையால் இஸ்ராயேல் மக்களிரடயேயுள்ள முதல் பேறான பிள்ளைகளுக்காகப் புனித இடத்துச் சீக்கலால் ஆயிரத்து முந்நூற்றறுபத்தைந்து சீக்கல்களை எடுத்து,
51 ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டிருந்தபடி, அதை ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் கொடுத்தார்.
×

Alert

×