Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Nehemiah Chapters

Nehemiah 9 Verses

1 அதே மாதம் இருபத்து நான்காம் நாளன்று கோணி ஆடை உடுத்தி, தங்கள் தலையின் மேல் புழுதியைத் தூவிக் கொண்டு, நோன்பு காக்குமாறு இஸ்ராயேல் மக்கள் அனைவரும் ஒன்று கூடி வந்தனர்.
2 இஸ்ராயேல் மக்கள் புறவினத்தாரோடு தாங்கள் கொண்டிருந்த உறவை முறித்தனர். எழுந்து நின்று தங்கள் பாவங்களையும் தங்கள் முன்னோர்களின் பாவங்களையும் அறிக்கையிட்டனர்.
3 அவர்கள் நாள்தோறும் பகலில் நான்கில் ஒரு பகுதியை எழுந்து நின்று தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் திருச்சட்ட நூலை வாசிப்பதிலே செலவிட்டனர். மற்றொரு கால் பகுதி நேரமளவும் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டுத் தங்கள் கடவுளான ஆண்டவரைப் பணிந்து தொழுதனர்.
4 மீண்டும் யோசுவா, பானி, கெத்மிகேல், சபானியா, பொன்னி, சரேபியாஸ், பானி, கானானீ ஆகியோர் லேவியர்களின் படிகளின் மேல் நின்று கொண்டு, தங்கள் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி அபயமிட்டனர்.
5 பின், லேவியர்களான யோசுவா, கெத்மிகேல், பொன்னி, கசப்னியா, சரேபியா, ஒதாயியா, சேப்னியா, பாத்தாகியா ஆகியோர் மக்களைப் பார்த்து, "எழுந்திருங்கள்; நம் கடவுளாகிய ஆண்டவரை என்றென்றும் துதியுங்கள். எங்கள் கடவுளான ஆண்டவரே, மாபெரும் உம் திருப்பெயர் மேன் மேலும் புகழப்படக்கடவது.
6 ஆண்டவரே, நீர் ஒருவரே விண்ணையும் வானாதி வானங்களையும், வானக அணிகளையும் படைத்தவர்! மண்ணையும் அதிலுள்ள எல்லாவற்றையும், கடல்களையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உண்டாக்கியவர்; அவற்றிற்கெல்லாம் உயிர் அளிப்பவர். வானக அணிகள் உம்மைப் பணிகின்றன.
7 கடவுளாகிய ஆண்டவரே, ஆபிராமைத் தேர்ந்தெடுத்து ஊர் என்னும் கல்தேய நகரினின்று அவரை வெளியே கொணர்ந்து, அவருக்கு ஆபிரகாம் என்ற பெயரை இட்டவர் நீரே!
8 அவருடைய விசுவாசத்தைக் கண்டு, கானானியர், ஏத்தையர், அம்மோறையர், பெரேசியர், எபுசேயர், கெர்சேசெயர் ஆகியோரின் நாட்டை அவருக்கும் அவர் வழித்தோன்றல்களுக்கும் கொடுப்பதாக அவரோடு உடன்படிக்கை செய்தவரும் நீரே! நீர் நீதியுள்ளவர்! எனவே, உமது உடன்படிக்கையை நிறைவேற்றினீர்.
9 எகிப்தில் எங்கள் முன்னோர்கள் அனுபவித்த துன்பத்தை நீர் கண்டீர். செங்கடலின் ஓரத்தில் அவர்கள் இட்ட பெரும் கூக்குரலைக் கேட்டருளினீர்.
10 பாரவோனிடமும், அவனுடைய எல்லா ஊழியர்களிடமும் அவனுடைய நாட்டின் எல்லா மக்களிடமும் உம் அருங்குறிகளை விளங்கச் செய்தீர்; ஏனெனில், இவர்கள் உம் மக்களைச் செருக்குடன் நடத்தினார்கள் என்று நீர் அறிந்திருந்தீர். அதனால், இன்று வரை உமது புகழ் அங்கு விளங்கச் செய்தீர்.
11 அவர்களுக்கு முன்பாகக் கடல் நீரை நீர் பிரித்ததனால், அவர்கள் கால் நனையாமல் கடல் நடுவே நடந்து போனார்கள். அவர்களைத் தொடர்ந்தவர்களையோ கல்லைப் போல் ஆழ்கடலிலே ஆழ்த்தினீர்.
12 நீர் பகலில் மேகத்தூணினாலும், இரவில் நெருப்புத் தூணினாலும் அவர்களை வழிநடத்தினீர்.
13 சீனாய் மலையில் நீர் எழுந்தருளி விண்ணிலிருந்து அவர்களோடு பேசி, நேர்மையான நீதி முறைகளையும் உண்மைச் சட்டத்தையும் சடங்கு முறைகளையும் உத்தம கட்டளைகளையும் அவர்களுக்குத் தந்தருளினீர்.
14 புனிதமான உமது ஓய்வு நாளைப் பற்றி அவர்களுக்குக் கற்பித்தீர். கட்டளைகளையும் சடங்கு முறைகளையும் திருச்சட்டத்தையும் உம் அடியான் மோயீசன் வழியாய் அவர்களுக்குக் கொடுத்தீர்.
15 அவர்கள் பசியாயிருக்கையில் விண்ணிலிருந்து அப்பத்தைத் தந்தீர். அவர்கள் தாகமாய் இருந்த போது பாறையினின்று நீர் சுரக்கச் செய்தீர். நீர் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்த நாட்டை அடைந்து. அதை அவர்கள் உடைமையாக்குமாறு பணித்தீர்.
16 ஆனால் அவர்களும் எங்கள் முன்னோரும் செருக்குடன் நடந்து, வணங்காக் கழுத்தினராய் உமது கட்டளைக்குச் செவிகொடுக்கவில்லை.
17 அவர்கள் உமக்குச் செவிகொடுக்கவுமில்லை; நீர் அவர்களுக்காகச் செய்திருந்த அருங்குறிகளை நினைத்துப்பார்க்கவுமில்லை. மாறாக, வணங்காக் கழுத்தினராய் அடிமைத்தன நாடான எகிப்திற்குத் திரும்பிச் செல்லவும் தயாராய் இருந்தனர். தயவு, சாந்தம் இரக்கம், நீடிய பொறுமை, பரிவிரக்கம் கொண்ட கடவுளான நீரோ அவர்களைத் தள்ளிவிடவில்லை.
18 அவர்கள் தங்களுக்கென்று வார்க்கப்பட்ட ஒரு கன்றுக்குட்டியைச் செய்து, 'உன்னை எகிப்திலிருந்து மீட்டு வந்த உன் கடவுளைப் பார்' என்று சொல்லி மிகப் பெரிய தேவதூஷணங்களைச் சொன்னார்கள்.
19 ஆயினும் நீர் அவர்கள்மேல் அளவற்ற இரக்கம் காட்டி அவர்களைப் பாலைவனத்தில் கைவிட்டதுமில்லை; அவர்களைப் பகலில் வழி நடத்தி வந்த மேகத் தூணும், அவர்கள் செல்ல வேண்டிய பாதையை இரவில் காட்டிவந்த நெருப்புத் தூணும் அவர்களை விட்டு நீங்கினதுமில்லை.
20 அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல்ல ஆவியைக் கொடுத்தீர். உமது மன்னாவை அவர்களுக்குக் கொடுக்க நீர் மறுக்கவில்லை. அவர்களது தாகத்துக்குத் தண்ணீரைக் கொடுத்தீர்.
21 நாற்பது ஆண்டுகளாய்ப் பாலைவனத்தில் அவர்களுக்கு உணவளித்து வந்தீர். அவர்களுக்கு ஒரு குறையும் இல்லாதபடி செய்தீர். அவர்கள் ஆடைகள் கிழிந்து போகவுமில்லை; அவர்கள் கால்கள் கொப்புளிக்கவுமில்லை.
22 நாடுகளையும் அரசுகளையும் அவர்கள் கையில் ஒப்படைத்தீர்; அவற்றை எல்லாம் அவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தீர். இவ்வாறு அவர்கள் செகோன் நாட்டையும், எசபோனின் அரசனது நாட்டையும், பாசானின் அரசன் ஓகின் அரசையும் உரிமையாக்கிக் கொண்டனர்.
23 விண்மீன்களைப் போல் அவர்ளுடைய மக்களைப் பெருகச் செய்தீர். அவர்கள் உட்புகுந்து உரிமையாக்கிக் கொள்வார்கள் என்று நீர் அவர்களுடைய முன்னோருக்குச் சொல்லியிருந்த நாட்டிற்கு அவர்களை அழைத்து வந்தீர்.
24 அவர்களுக்குப் பிறந்த மக்கள் சென்று அந்நாட்டைத் தங்கள் உடைமையாக்கிக் கொண்டனர். அவர்கள் முன்னிலையில் அந்நாட்டு மக்களான கானானியரைத் தாழ்த்தினீர்: இவர்களையும் இவர்களின் அரசர்களையும் நாட்டு மக்களையும் அவர்களது கையிலே ஒப்படைத்துத் தம் விருப்பப்படி அவர்களை நடத்த விட்டு விட்டீர்.
25 எனவே அவர்கள் அரண் சூழ்ந்த நகர்களையும் செழிப்பான நிலங்களையும் கைப்பற்றிக் கொண்டனர். எல்லா வித உடைமைகள் நிறைந்த வீடுகளையும் மற்றவர்கள் வெட்டின கேணிகளையும் திராட்சைத் தோட்டங்களையும் ஒலிவத் தோப்புகளையும் கனி தரும் அதிகமான மரங்களையும் சொந்தமாக்கிக் கொண்டனர்; உண்டு நிறைவுகொண்டனர். உமது மாட்சிமிகு தயையினால் நிறைந்த சுக செல்வங்களை அனுபவித்து வாழ்ந்தனர்.
26 ஆயினும் கீழ்ப்படியாத அவர்கள் உமக்கு எதிராய்க் கிளர்ச்சி செய்தார்கள். உமது திருச்சட்டத்தைப் புறக்கணித்தார்கள்; உம் பக்கம் மனம் திரும்பும்படி தங்களுக்கு அக்கறையோடு புத்திசொல்லி வந்த உம் இறைவாக்கினர்களைக் கொன்று போட்டார்கள். இவ்வாறு பெரிய தேவதூஷணமான தீச் செயல்களைச் செய்தார்கள்.
27 அப்பொழுது நீர் அவர்களுடைய எதிரிகளின் கையில் அவர்களை ஒப்படைத்தீர். எதிரிகள் அவர்களைத் துன்புறுத்தினர். அவர்கள் நெருக்கப்பட்ட காலத்தில் உம்மிடம் ஓலமிட்டபோதோ, நீர் விண்ணிலிருந்து அவர்களது குரலைக் கேட்டு, உமது அளவற்ற இரக்கத்தினால் அவர்களைத் தங்கள் எதிரிகளின் கையினின்று காக்க மீட்பர்களை அவர்களுக்கு அனுப்பினீர்.
28 தாங்கள் அமைதியுற்ற பின்னரோ உம் திருமுன் பாவம் செய்யத் தலைப்பட்டனர்; நீர்அவர்களுடைய எதிரிகளின் கைகளில் அவர்களை ஒப்படைத்தீர்; எதிரிகளும் அவர்களைத் தமக்குக் கீழ்ப்படுத்தினர். எனவே அவர்கள் மறுபடியும் உம்மிடம் வந்து கூக்குரலிட்டார்கள்; நீரோ விண்ணிலிருந்து அவர்களுடைய மன்றாட்டைக் கேட்டருளுனீர்; அவர்களுக்கு இரக்கம் காட்டிப் பலமுறையும் அவர்களுக்கு விடுதலை அளித்தீர்.
29 முன் போல உமது திருச்சட்டத்தை அனுசரிக்கும்படி அவர்களை எச்சரித்தீர். அவர்களோ செருக்குற்றவர்களாய் உமது கட்டளைக்குச் செவிகொடாமல், வாழ்வளிக்கக் கூடிய உம் திருச்சட்டங்களை மீறிப் பாவம் செய்தனர்; உம் கட்டளைகளுக்குப் படிய மறுத்தனர்; வணங்காக் கழுத்தினராய் உமக்கு அடிபணிவதை வெறுத்தனர்.
30 நீரோ பல்லாண்டுகள் அவர்கள் மட்டில் பொறுமையாய் இருந்தீர். இறைவாக்கினர் மூலம் உமது ஆவியால் அவர்களுக்கு அறிவுரை நல்கி வந்தீர். அவர்களோ அதற்கும் செவிமடுக்கவில்லை. ஆதலால் நீர்புறவினத்தார் கையிலே அவர்களை ஒப்படைத்தீர்.
31 ஆயினும் உமது பேரிரக்கத்தின் பொருட்டு நீர் அவர்களை அழித்து விடவுமில்லை; கைவிட்டு விடவுமில்லை. ஏனெனில் நீரோ இரக்கமும் தயையும் உள்ள கடவுள்!
32 ஆகையால் பெரியவரும் வல்லவரும் அஞ்சுதற்குரியவரும், என்றும் இரக்கம் காட்டி, உடன்படிக்கைக்குப் பிரமாணிக்கமாய் இருக்கிறவருமான எங்கள் கடவுளே, அசீரிய அரசர் காலம் தொட்டு இன்று வரை எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் மக்கள் தலைவர்களுக்கும் எம் குருக்களுக்கும் இறைவாக்கினர்க்கும் எம் முன்னோர்க்கும் உம் மக்கள் எல்லாருக்குமே நேரிட்டுள்ள துன்பங்கள் அனைத்தையும் அற்பமாய் எண்ணாதேயும்.
33 எமக்கு நேரிட்ட அனைத்திலுமே நீர் நீதியுடன் நடந்து கொண்டீர். ஏனெனில் நீர் பிரமாணிக்கமாய் இருந்தீர்; நாங்களோ கெட்டவர்களாய் நடந்தோம்.
34 எங்கள் அரசர்களும் தலைவர்களும் குருக்களும் முன்னோரும் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை; நீர் அவர்களுக்குக் கொடுத்திருந்த உம் கட்டளைகளையும் எச்சரிக்கைகளையும் அவர்கள் பொருட்படுத்த வில்லை.
35 அவர்கள் தங்கள் நாட்டையும், நீர் அவர்களுக்குக் காட்டியிருந்த பேரிரக்கத்தையும், நீர் அவர்களுக்கு அளித்திருந்த பரந்த செழிப்பான நாட்டையும் அவர்கள் அனுபவித்து வந்த போதிலும் அவர்கள் உமக்குப் பணிபுரியவுமில்லை; தங்கள் தீச்செயல்களை விட்டு விலகவுமில்லை.
36 ஆதலால் இன்று நாங்கள் அடிமைகளாய் இருக்கின்றோம். அதன் நற்கனிகளையும் நற்பலன்களையும் அனுபவிக்கும்படி நீர் எம் முன்னோர்க்குக் கொடுத்த இந்நாட்டிலேயே நாங்கள் அடிமைகளாகி விட்டோம்.
37 இதன் நல்ல விளைச்சலோ எங்கள் பாவங்களின் காரணமாக எங்களைக் கீழ்ப்படுத்தும்படி நீர் ஏற்படுத்தி உள்ள அரசர்களுக்கே பயன்படுகிறது. அவர்களோ தங்கள் விருப்பம் போல் எம் உடல்களையும் எம் கால்நடைகளையும் ஆட்டிப்படைக்கிறார்கள். அதனால் நாங்கள் பெருந் துன்பக் கடலிலில் அமிழ்ந்தி உழல்கின்றோம்" என்று மன்றாடினார்கள்.
38 இதன் பொருட்டே நாங்கள் நிலையான உடன்படிக்கை செய்து அதை எழுதி வைக்கிறோம். எங்கள் தலைவர்களும் லேவியர், குருக்களும் அதில் கையொப்பம் வைக்கிறார்கள்.
×

Alert

×