Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Matthew Chapters

Matthew 6 Verses

1 "மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள். இல்லையேல், வானகத்திலுள்ள உங்கள் தந்தையிடம் உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.
2 எனவே, நீ பிச்சையிடும்பொழுது, மக்கள் புகழ வேண்டுமென்று வெளிவேடக்காரர் செபக்கூடங்களிலும் தெருக்களிலும் செய்வதுபோல், உனக்குமுன் பறைசாற்றச் செய்யாதே. அவர்கள் தங்கள் கைம்மாறு பெற்றுவிட்டனர் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
3 நீ பிச்சையிடும்பொழுதோ, உன் வலக்கை செய்வதை இடக்கை அறியாதிருக்கட்டும். அப்பொழுது,
4 நீ இடும் பிச்சை மறைவாயிருக்கும்; மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்.
5 "நீங்கள் செபம் செய்யும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம்; ஏனெனில், மனிதர் பார்க்கும்படி, அவர்கள் செபக்கூடங்களிலும் தெருக்கோடிகளிலும் நின்று செபம் செய்ய விரும்புவர். அவர்கள் தங்கள் கைம்மாறு பெற்றுவிட்டனர் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
6 நீயோ செபம் செய்யும்பொழுது, உன் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டு, மறைவாயுள்ள உன் தந்தையை நோக்கிச் செபம் செய். மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்.
7 செபம் செய்யும்பொழுது, புறவினத்தாரைப்போல நீங்கள் பிதற்றவேண்டாம். அதிகம் பேசுவதால், தங்கள் செபம் கேட்கப்படும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
8 நீங்கள் அவர்களைப் போல் இருக்கவேண்டாம். நீங்கள் கேட்பதற்கு முன்னமே உங்களுக்குத் தேவையானது இன்னது என்று உங்கள் தந்தைக்குத் தெரியும்.
9 "ஆதலால், நீங்கள் இவ்வாறு செபியுங்கள்: வானகத்திலுள்ள எங்கள் தந்தாய், உமது பெயர் பரிசுத்தம் எனப் போற்றப்படுக,
10 உமது அரசு வருக, உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக.
11 எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
12 எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னித்துள்ளதுபோல, எங்கள் குற்றங்களை மன்னித்தருளும்.
13 எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
14 "மனிதருடைய குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களாகில், உங்கள் வானகத் தந்தை உங்களையும் மன்னிப்பார்.
15 மனிதரை நீங்கள் மன்னியாவிடில், உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்கமாட்டார்.
16 "நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப்போல முகவாட்டமாய் இருக்கவேண்டாம். அவர்கள் நோன்பு இருப்பதை மனிதர் பார்க்கும்பொருட்டுத் தங்கள் முகத்தை விகாரப்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் கைம்மாறு பெற்றுவிட்டனர் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
17 நீ நோன்பு இருக்கும்போது தலைக்கு எண்ணெய் தடவு; முகத்தைக் கழுவு.
18 அப்பொழுது நீ நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாமல், மறைவாயுள்ள உன் தந்தைக்குமட்டும் தெரியும். மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்.
19 "மண்ணுலகில் செல்வம் சேர்த்துவைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் கன்னமிட்டுத் திருடுவர்.
20 ஆனால் விண்ணுலகில் செல்வம் சேர்த்துவையுங்கள். அங்கே பூச்சியும் துருவும் அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.
21 உங்கள் செல்வம் எங்குள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
22 "உன் கண்தான் உன் உடலுக்கு விளக்கு; உன் கண் தெளிவாயிருந்தால் உன் உடல் முழுதும் ஒளியுள்ளதாய் இருக்கும்.
23 உன் கண் கெட்டிருந்தால் உன் உடல் முழுவதும் இருண்டிருக்கும். ஆகவே உன்னுள் இருக்கும் ஒளியே இருளாயிருந்தால், இருள் என்னவாயிருக்கும்!
24 "எவனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்யமுடியாது. ஏனெனில், ஒருவனை வெறுத்து மற்றவனுக்கு அன்பு செய்வான். அல்லது, ஒருவனைச் சார்ந்துகொண்டு மற்றவனைப் புறக்கணிப்பான். கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்யமுடியாது.
25 "ஆதலால் உங்களுக்குச் சொல்லுகிறேன்: உயிர்வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலை மூட எதை உடுப்பது என்றோ கவலைப்பட வேண்டாம். உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தவையல்லவா ?
26 வானத்துப் பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் வானகத் தந்தை அவற்றிற்கும் உணவளிக்கிறார். நீங்கள் அவற்றிலும் மிக மேலானவர்களன்றோ ?
27 கவலைப்படுவதனால் உங்களில் எவன் தன் வளர்த்திக்கு ஒரு முழம் கூட்டமுடியும் ?
28 உங்கள் உடையைப்பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள் ? வயல்வெளி மலர்கள் எப்படி வளர்கின்றன என்று கவனியுங்கள். அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.
29 ஆயினும் சாலொமோன்கூடத் தன் மாட்சியிலெல்லாம் இவற்றில் ஒன்றைப்போலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
30 குறைவான விசுவாசம் உள்ளவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் வயல்வெளிப் புல்லைக் கடவுள் இவ்வாறு உடுத்துவாரானால் உங்களுக்கு எவ்வளவுதான் செய்யமாட்டார்!
31 ஆதலால், எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம் என்று கவலைப்படவேண்டாம்.
32 ஏனெனில், புறவினத்தார்தாம் இவையெல்லாம் தேடுவர். உங்களுக்கு இவையனைத்தும் தேவை என உங்கள் வானகத் தந்தைக்குத் தெரியும்.
33 ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்; இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.
34 நாளைய தினத்தைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். நாளைய தினம் தன்னைப்பற்றிக் கவலைகொள்ளும். அன்றன்றைய தொல்லை அன்றன்றைக்குப் போதும்.
35 []
×

Alert

×