Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Matthew Chapters

Matthew 5 Verses

1 இயேசு திரளான கூட்டத்தைக் கண்டு, மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரை அணுகினர்.
2 அவர் திருவாய் மலர்ந்து போதிக்கலானார்:
3 "எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே.
4 துயருறுவோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்.
5 சாந்தமுள்ளோர் பேறுபெற்றோர், ஏனெனில், மண்ணுலகு அவர்களது உரிமையாகும்.
6 நீதியின்பால் பசிதாகமுள்ளோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் நிறைவு பெறுவர்.
7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்.
8 தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்.
9 சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்.
10 நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே.
11 என்பொருட்டுப் பிறர் உங்களை வசைகூறித் துன்புறுத்தி, உங்கள்மேல் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லும்போது, நீங்கள் பேறுபெற்றோர்.
12 அகமகிழ்ந்து களிகூருங்கள். ஏனெனில், வானகத்தில் உங்கள் கைம்மாறு மிகுதியாகும். உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் இவ்வாறே துன்புறுத்தினர்.
13 "உலகிற்கு உப்பு நீங்கள். உப்பு சாரமற்றுப்போனால் வேறு எதனால் சாரம் பெறும் ? இனி, வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடுமேயொழிய, ஒன்றுக்கும் உதவாது.
14 "உலகிற்கு ஒளி நீங்கள். மலைமேல் உள்ள ஊர் மறைவாயிருக்க முடியாது.
15 மேலும், விளக்கைக் கொளுத்தி மரக்காலின்கீழ் வைக்கமாட்டார்கள்; மாறாக, வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்பொருட்டு, விளக்குத் தண்டின்மீது வைப்பார்கள்.
16 அப்படியே, மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, வானகத்திலுள்ள உங்கள் தந்தையை மகிமைப்படுத்தும்படி, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்வதாக.
17 "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ அழிக்க வந்தேனென்று நினைக்க வேண்டாம். அழிப்பதற்கன்று, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
18 உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகுமுன் திருச்சட்டத்தின் ஒரு சிற்றெழுத்தோ புள்ளியோ ஒழிந்துபோகாது; எல்லாம் நிறைவேறும்.
19 ஆகையால்,இச்சின்னஞ் சிறு கட்டளைகளில் ஒன்றையேனும் மீறி, அப்படியே மனிதர்க்கும் போதிப்பவன், விண்ணரசில் மிகச் சிறியவன் எனப்படுவான். அவற்றைக் கடைப்பிடித்துப் போதிப்பவனோ, விண்ணரசில் பெரியவன் எனப்படுவான்.
20 உங்களுக்குச் சொல்லுகிறேன்: மறைநூல் அறிஞர், பரிசேயர் இவர்களின் ஒழுக்கத்தைவிட உங்கள் ஒழுக்கம் சிறந்திராவிட்டால், விண்ணரசு சேரமாட்டீர்கள்.
21 'கொலை செய்யாதே, கொலை செய்வோன் தீர்ப்புக்குள்ளாவான்' என்று முன்னோர்க்குச் சொல்லியுள்ளதைக் கேட்டிருக்கிறீர்கள்.
22 நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: தன் சகோதரனிடம் சினம் கொள்வோன் தீர்ப்புக்குள்ளாவான். தன் சகோதரனை 'முட்டாள்' என்பவன், தலைமைச் சங்கத் தீர்ப்புக்குள்ளாவான். அவனை 'மதிகெட்டவனே' என்பவனோ எரிநரகத்திற்குள்ளாவான்.
23 நீ பீடத்தின்மேல் காணிக்கை செலுத்த வரும்பொழுது, உன் சகோதரனுக்கு உன்மீது மனத்தாங்கல் இருப்பதாக அங்கே நினைவுற்றால்,
24 அங்கேயே, பீடத்தின்முன், உனது காணிக்கையை வைத்துவிட்டு, முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள். பின்னர் வந்து, உன் காணிக்கையைச் செலுத்து.
25 "நீ உன் எதிரியோடு போகும்போது, வழியிலேயே அவனுடன் விரைவாகச் சமரசம் செய்துகொள். இல்லையேல், உன் எதிரி உன்னை நீதிபதியிடம் கையளிக்க, நீதிபதி உன்னைக் காவலனிடம் கையளிக்கக்கூடும்; நீ சிறையில் அடைபட நேரிடும்.
26 உறுதியாகவே உனக்குச் சொல்லுகிறேன்: கடைசிக் காசை நீ கொடுத்துத் தீர்க்கும்வரை, அங்கிருந்து வெளியேறமட்டாய்.
27 " ' விபசாரம் செய்யாதே ' என்று முன்னோர்களுக்குச் சொல்லியுள்ளதைக் கேட்டிருக்கிறீர்கள்.
28 நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்குபவன் எவனும், ஏற்கெனவே தன்னுள்ளத்தில் அவளோடு விபசாரம் செய்தாயிற்று.
29 "உன் வலக்கண் உனக்கு இடறலாயிருந்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு. உன் உடல் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளுள் ஒன்று அழிந்துபோவது உனக்கு நலம்.
30 உன் வலக்கை உனக்கு இடறலாயிருந்தால், அதை வெட்டி எறிந்துவிடு. உன் உடல் முழுவதும் நரகத்துக்குச் செல்வதை விட, உன் உறுப்புகளுள் ஒன்று அழிந்துபோவது உனக்கு நலம்.
31 தன் மனைவியை விலக்கிவிடுகிறவன் எவனும் அவளுக்கு முறிவுச்சீட்டு கொடுக்கட்டும்' என்று கூறியுள்ளது. நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்:
32 கெட்ட நடத்தைக்காக அன்றி எவெனாருவன் தன் மனைவியை விலக்கிவிடுகிறானோ, அவன் அவளை விபசாரியாகும்படி செய்கிறான். விலக்கப்பட்டவளை மணப்பவனும் விபசாரம் செய்கிறான்.
33 "மேலும், 'பொய்யாணை இடாதே, ஆணையிட்டு நேர்ந்துகொண்டதை ஆண்டவருக்குச் செலுத்து' என்று முன்னோருக்குச் சொல்லியுள்ளதைக் கேட்டிருக்கிறீர்கள்.
34 நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில், அது கடவுளின் அரியணை.
35 மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில், அது கடவுளின் கால்மணை. யெருசலேமின் மேலும் வேண்டாம்; ஏனெனில், அது பேரரசரின் நகரம்.
36 உன் தலையின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில், உன் தலைமயிர் ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ, கறுப்பாக்கவோ உன்னால் இயலாது.
37 உங்கள் பேச்சு, 'ஆம் என்றால், ஆம்; இல்லை என்றால், இல்லை' என்று இருக்கட்டும். இதற்கு மிஞ்சினதெல்லாம் தீயவனிடமிருந்தே வருகிறது.
38 "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' என்று சொல்லியுள்ளதைக் கேட்டிருக்கிறீர்கள்.
39 நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: தீயோனை எதிர்க்கவேண்டாம். ஆனால் யாராவது உன் வலக்கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் காட்டு.
40 யாராவது வழக்காடி, உன் உள்ளாடையை எடுத்துக்கொள்ள விரும்பினால், அவனுக்கு உன் மேலாடையையும் கொடுத்துவிடு.
41 யாராவது உன்னை ஒரு கல் தொலைவு வரக் கட்டாயப்படுத்தினால், இரு கல் தொலைவு அவனோடு செல்.
42 கேட்கிறவனுக்குக் கொடு; உன்னிடம் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகம் கோணாதே.
43 அயலானுக்கு அன்பு; பகைவனுக்கு வெறுப்பு' என்று சொல்லியுள்ளதைக் கேட்டிருக்கிறீர்கள்.
44 நானோ உங்களுக்குச் சொல்லுகின்றேன்: உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்.
45 அப்பொழுது வானகத்திலுள்ள உங்கள் தந்தையின் மக்களாயிருப்பீர்கள். அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரோனை உதிக்கச் செய்கிறார். நீதியுள்ளோர் மேலும் நீதியற்றோர் மேலும் மழை பொழியச் செய்கிறார்.
46 உங்களுக்கு அன்பு செய்பவர்களுக்கே நீங்கள் அன்பு செய்தால், உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? ஆயக்காரரும் இவ்வாறே செய்வதில்லையா?
47 உங்கள் சகோதரருக்கு மட்டும் வணக்கம் செய்வீர்களாகில், நீங்கள் என்ன பெரிய காரியம் செய்கிறீர்கள்? புறவினத்தாரும் இவ்வாறே செய்வதில்லையா?
48 ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.
×

Alert

×