Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Matthew Chapters

Matthew 28 Verses

1 ஓய்வுநாளுக்குப்பின், வாரத்தின் முதல்நாள் விடியற்காலையில் மதலேன் மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தனர்.
2 இதோ! பெரிய நிலநடுக்கம் உண்டாயிற்று. ஆண்டவரின் தூதர் வானினின்று இறங்கி வந்து, கல்லைப் புரட்டி, அதன்மேல் அமர்ந்தார்.
3 அவருடைய தோற்றம் மின்னல் போன்றும், உடை உறைபனிபோல வெண்மையாயும் இருந்தன.
4 காவலர் அவரைக் கண்டு அஞ்சி நடுங்கிச் செத்தவர்போல் ஆயினர்.
5 வானதூதர் பெண்களை நோக்கி, "அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையுண்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.
6 அவர் இங்கே இல்லை; தாம் கூறியபடியே உயிர்த்துவிட்டார். வாருங்கள், ஆண்டவரைக் கிடத்திய இடத்தைப் பாருங்கள்.
7 விரைந்து செல்லுங்கள். அவர் இறந்தோரிடமிருந்து உயிர்த்துவிட்டார் என்று அவர் சீடருக்குச் சொல்லுங்கள். இதோ! உங்களுக்குமுன் அவர் கலிலேயாவுக்குப் போகிறார். அங்கே அவரைக் காண்பீர்கள். இதோ! உங்களுக்குச் சொல்லிவிட்டேன்" என்று சொன்னார்.
8 அவர்களும் அச்சத்துடனும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் விரைவாகக் கல்லறையை விட்டு அகன்று, அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள்.
9 இதோ! இயேசு, அவர்களுக்கு எதிர்ப்பட்டு, "வாழ்க" என்றார். அவர்கள் அணுகி, அவர் பாதங்களைத் தழுவிக்கொண்டு அவரைப் பணிந்தனர்.
10 இயேசு அவர்களை நோக்கி, "அஞ்சாதீர்கள், நீங்கள் என் சகோதரரிடம் சென்று, கலிலேயாவுக்குப் போகச் சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்" என்று சொன்னார்.
11 அவர்கள் சென்றபின், இதோ! காவலருள் சிலர் நகருக்குள் வந்து நிகழ்ந்தவை அனைத்தையும் தலைமைக்குருக்களிடம் அறிவித்தனர்.
12 அவர்கள் மூப்பருடன் கூடி ஆலோசனை செய்து, படைவீரருக்கு நிரம்பப் பணம் கொடுத்து,
13 நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது இரவில் அவருடைய சீடர் வந்து அவரைத் திருடிச் சென்றனர்' என மக்களுக்குச் சொல்லுங்கள்.
14 ஆளுநரின் காதுக்கு இது எட்டுமாயின் அவரிடம் சொல்லி உங்களுக்கு ஒரு தொந்தரவும் வராதபடி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்றனர்.
15 அவர்களும் பணத்தை வாங்கிக்கொண்டு தங்களுக்குச் சொல்லிக்கொடுத்தபடி செய்தார்கள்; இந்நாள்வரை யூதரிடையே இக்கதை பரவியிருக்கிறது.
16 பதினொரு சீடரும் தங்களுக்கு இயேசு குறிப்பிட்டிருந்த கலிலேயாவின் மலைக்குச் சென்றனர்.
17 அவரைக் கண்டு பணிந்தனர். சிலரோ ஐயமுற்றனர்.
18 இயேசு அவர்களை அணுகிக் கூறியது: "விண்ணிலும் மண்ணிலும் எல்லா அதிகாரமும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
19 நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,
20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள். இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."
×

Alert

×