Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Matthew Chapters

Matthew 26 Verses

1 இயேசு இவ்வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தபின் தம் சீடரை நோக்கி,
2 "இரண்டு நாள் கழித்துப் பாஸ்கா விழா வரும் என்று உங்களுக்குத் தெரியும். அப்போது மனுமகன் சிலுவையில் அறையப்படக் கையளிக்கப்படுவார்" என்று சொன்னார்.
3 அப்பொழுது தலைமைக்குருக்களும், மக்களுள் மூப்பரும் கைப்பாஸ் என்னும் தலைமைக்குருவின் மாளிகையில் கூடினர்.
4 இயேசுவைச் சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலைசெய்ய ஆலோசனை செய்தனர்.
5 ஆனால், "மக்களிடையே கலகம் உண்டாகாதிருக்கத் திருவிழாவிலே வேண்டாம்" என்றனர்.
6 பெத்தானியாவில் தொழுநோய்ச் சீமோன் வீட்டில் இயேசு இருக்கையில்,
7 பெண் ஒருத்தி விலையுயர்ந்த பரிமளத்தைலம் உள்ள படிகச் சிமிழுடன் அவரை அணுகினாள். பந்தியிருக்கையில் அவர்தலையில் அதை ஊற்றினாள்.
8 இதைப் பார்த்த சீடர்கள் சினங்கொண்டு,
9 "இதை வீணாக்குவானேன் ? இதை நல்ல விலைக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே" என்றனர்.
10 இதையறிந்த இயேசு, "ஏன் இப்பெண்ணைத் தொந்தரை செய்கிறீர்கள் ? இவள் எனக்குச் செய்தது நேர்த்தியான செயல்தான்.
11 ஏனெனில், ஏழைகள் உங்களோடு என்றும் உள்ளனர்; நானோ உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை.
12 இவள் பரிமளத்தைலத்தை என் உடல்மீது ஊற்றுகையில் என் அடக்கத்தைக்குறித்தே செய்தாள்.
13 உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: உலக முழுவதிலும் எங்கெங்கு இந்நற்செய்தி அறிவிக்கப்படுமோ, அங்கெல்லாம் இவள் செய்ததும் இவள்நினைவாகக் கூறப்படும்" என்றார்.
14 அப்பொழுது பன்னிருவருள் ஒருவனான யூதாஸ் இஸ்காரியோத்து என்பவன் தலைமைக்குருக்களிடம் சென்று அவர்களிடம், "எனக்கு என்ன தருவீர்கள் ?
15 நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுப்பேன்" என்று கூறினான். அவர்களோ முப்பது வெள்ளிக்காசு அவனுக்குக் கொடுத்தனர்.
16 அதுமுதல் அவரைக் காட்டிக்கொடுக்க வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.
17 புளியாத அப்பத் திருவிழாவின் முதல்நாள் சீடர் இயேசுவை அணுகி, "நீர் பாஸ்கா உணவை உண்ண உமக்கு நாங்கள் எங்கே ஏற்பாடு செய்யவேண்டும் என்கிறீர் ?" எனக் கேட்டனர்.
18 இயேசு கூறியது: "நகரத்தில் இன்னாரிடம் போய், ' என் நேரம் அருகிலுள்ளது; என் சீடருடன் உன் வீட்டில் பாஸ்கா கொண்டாடுவேன் ' எனப் போதகர் கூறுகிறார் என்று சொல்லுங்கள்."
19 சீடரும் இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்து பாஸ்கா உணவுக்கு ஏற்பாடு செய்தனர்.
20 மாலையானதும், தம் பன்னிரு சீடருடன் பந்தி அமர்ந்தார்.
21 அவர்கள் உண்ணும்பொழுது, "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்" என்றார்.
22 அவர்கள் மிகவும் வருந்தி, "நானோ ஆண்டவரே ?" என்று ஒவ்வொருவரும் கேட்கத் தொடங்கினர்.
23 அதற்கு அவர், "என்னுடன் பாத்திரத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்.
24 மனுமகன் தம்மைப்பற்றி எழுதியிருக்கிறபடியே போகிறார். மனுமகனைக் காட்டிக்கொடுப்பவனுக்கோ ஐயோ கேடு! அவன் பிறவாது இருந்திருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்" என்றார்.
25 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், "நானோ, ராபி ?" என்று கேட்க, அவரும், "நீயே சொல்லிவிட்டாய்" என்றார்.
26 அவர்கள் உண்ணும்பொழுது, இயேசு அப்பத்தை எடுத்து இறைபுகழ் கூறி, பிட்டு, தம் சீடருக்கு அளித்து, "இதை வாங்கி உண்ணுங்கள், இஃது என் உடல்" என்றார்.
27 பின்னர், கிண்ணத்தை எடுத்து, நன்றிகூறி, அவர்களுக்கு அளித்து, "இதிலே அனைவரும் பருகுங்கள்.
28 ஏனெனில், உடன்படிக்கைக்கான என் இரத்தம் இது; பாவமன்னிப்புக்கென்று பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்.
29 உங்களுக்குச் சொல்லுகிறேன்: இதுமுதல் என் தந்தையின் அரசில் புதிய இரசம் உங்களோடு பருகும் நாள்வரை இந்தத் திராட்சைப்பழ இரசத்தைக் குடிக்கமாட்டேன்" என்றார்.
30 புகழ்ப்பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றனர்.
31 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி, "இன்றிரவே என்னைக்குறித்து நீங்கள் அனைவரும் இடறல்படுவீர்கள். ஏனெனில், ' மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறிப்போம் ' என எழுதியிருக்கிறது.
32 ஆனால், நான் உயிர்த்தபின் கலிலேயாவிற்கு உங்களுக்குமுன் போவேன்" என்று சொன்னார்.
33 அதற்கு இராயப்பர், "எல்லாரும் உம்மைக் குறித்து இடறல்பட்டாலும், நான் ஒருபோதும் இடறல்படேன்" என்றார்.
34 இயேசு அவரிடம், "உறுதியாக உனக்குச் சொல்லுகிறேன்: இன்றிரவே கோழி கூவுமுன் என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்றார்.
35 இராயப்பர், "உம்மோடு இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை மறுதலியேன்" என்றார். அப்படியே சீடர் அனைவரும் கூறினர்.
36 பின்னர், இயேசு அவர்களுடன் கெத்சேமனி என்னும் தோட்டத்திற்கு வந்தார். வந்து சீடர்களிடம், "நான் அங்கே சென்று செபிக்குமளவும் இங்கே இருங்கள்" என்று சொல்லி, ஃ
37 இராயப்பரையும் செபெதேயுவின் மக்கள் இருவரையும் தம்மோடு அழைத்துச்சென்றார். அப்போது வருத்தமும் மனக்கலக்கமும் அவரை ஆட்கொள்ளவே,
38 அவர் அவர்களை நோக்கி, "என் ஆன்மா சாவுக்கு ஏதுவான வருத்தமுற்றிருக்கிறது. இங்கே தங்கி என்னுடன் விழித்திருங்கள்" என்றார்.
39 சற்று அப்பால்போய், குப்புறவிழுந்து, "என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும். எனினும், என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்" என்று செபித்தார்.
40 தம் சீடரிடம் வந்து அவர்கள் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு இராயப்பரை நோக்கி, "என்ன, ஒரு மணி நேரம் என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா ?
41 சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து செபியுங்கள். ஆவி ஊக்கமுள்ளதுதான், ஊன் உடலோ வலுவற்றது" என்றார்.
42 இரண்டாம் முறையும் சென்று, "என் தந்தையே, நான் குடித்தாலொழிய இத்துன்பக் கலம் அகல முடியாதெனில் உமது விருப்பப்படியே ஆகட்டும்" என்று செபித்தார்.
43 மீண்டும் வந்து அவர்கள் தூங்குவதைக் கண்டார். ஏனெனில், அவர்கள் கண்கள் தூக்க மயக்கமுற்றிருந்தன.
44 அவர்களை விட்டு மீண்டும் சென்று மூன்றாம் முறையாக அவ்வார்த்தைகளையே சொல்லிச் செபித்தார்.
45 பின் தம் சீடரிடம் வந்து, "இன்னும் தூங்கி இளைப்பாறுகிறீர்களா ? இதோ! நேரம் நெருங்கிவிட்டது. மனுமகன் பாவிகளிடம் கையளிக்கப்படப் போகிறார்.
46 எழுந்திருங்கள், போவோம். இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கிவிட்டான்" என்றார்.
47 அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே இதோ! பன்னிருவருள் ஒருவனாகிய யூதாஸ் வந்தான். தலைமைக்குருக்களும் மக்களின் மூப்பரும் அனுப்பிய பெருங்கூட்டம் ஒன்று வாள்களோடும் தடிகளோடும் அவனுடன் வந்தது.
48 அவரைக் காட்டிக்கொடுக்கிறவன், "எவரை நான் முத்தமிடுவேனோ அவர்தாம்; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள்" என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.
49 உடனே இயேசுவை அணுகி, "ராபி, வாழ்க! " என்று அவரை முத்தமிட்டான்.
50 இயேசுவோ, "நண்பா! எதற்காக வந்தாய் ?" என்று அவனைக் கேட்டார். அப்பொழுது அவர்கள் நெருங்கி வந்து இயேசுவின்மேல் கைபோட்டுப் பிடித்தனர்.
51 இதோ! இயேசுவோடு இருந்தவருள் ஒருவன் கையை நீட்டி வாளை உருவித் தலைமைக்குருவின் ஊழியனைத் தாக்கி, அவன் காதைத் துண்டித்தான்.
52 இயேசுவோ அவனிடம், "உன் வாளை உறையில் போடு. ஏனெனில், வாள் எடுப்போர் எல்லாரும் வாளால் மடிவர்.
53 நான் என் தந்தையைக் கேட்டால் பன்னிரு படைகளுக்கு மிகுதியான தூதரை அவர் இப்பொழுது எனக்கு அளிக்கமாட்டார் என்று நினைக்கிறாயா ?
54 அப்படிச் செய்தால் இவ்வாறு நடைபெற வேண்டும் என்னும் மறைநூல் வாக்கு எவ்வாறு நினைவேறும் ?" என்றார்.
55 அவ்வேளையில் இயேசு, மக்கள்திரளை நோக்கி, "நீங்கள் கள்ளனைப் பிடிக்க வருவதுபோல வாளோடும் தடியோடும் என்னைப் பிடிக்க வந்தீர்களோ ? நாள்தோறும் கோவிலில் அமர்ந்து போதித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை" என்று சொன்னார்.
56 இறைவாக்கினர்கள் எழுதியது நிறைவேறும் பொருட்டே இவையனைத்தும் நடைபெற்றன. அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போயினர்.
57 இயேசுவைப் பிடித்தவர்களோ கைப்பாஸ் என்ற தலைமைக்குருவிடம் அவரைக் கூட்டிச் சென்றார்கள்.
58 இராயப்பரோ தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக்குருவின் வீட்டுமுற்றம்வரை வந்து, உள்ளே நுழைந்து முடிவைக் காணும்படி காவலருடன் உட்கார்ந்திருந்தார்.
59 தலைமைக்குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவைச் சாவுக்குக் கையளிக்கும்படி அவருக்கு எதிராகப் பொய்ச்சான்று தேடலாயினர்.
60 பல பொய்ச்சாட்சிகள் முன்வந்தும் அவர்களுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. இறுதியாக இரண்டு பொய்ச் சாட்சிகள் வந்து,
61 "இவன் ' கடவுளுடைய ஆலயத்தை இடித்து மூன்று நாட்களில் மீண்டும் கட்ட என்னால் முடியும் ' என்றான்" எனக் கூறினர்.
62 தலைமைக்குரு எழுந்து, "உனக்கு எதிராக இவர்கள் சாட்சி சொல்லுகின்றனரே. மறுமொழியாக ஒன்றும் சொல்வதற்கில்லையா ?" என்று கேட்டார்.
63 இயேசுவோ பேசாதிருந்தார். தலைமைக் குரு அவரை நோக்கி, உயிர் உள்ள கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னைக் கேட்கிறேன்: "நீ கடவுளின் மகனான மெசியாவோ ?" என்றார்.
64 இயேசு, "நீரே சொன்னீர். மேலும் மனுமகன் வல்லமையுள்ள இறைவனின் வலப்பக்கத்தில் அமர்ந்து, வான மேகங்கள்மீது வருவதை நீங்கள் இனிக் காண்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
65 அப்போது தலைமைக்குரு தம்முடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, "இவன் தேவ தூஷணம் சொன்னான். நமக்கு இன்னும் சாட்சிகள் எதற்கு ? இதோ! இப்பொழுது தேவ தூஷணம் கேட்டீர்களே.
66 உங்கள் கருத்து என்ன ?" என்று கேட்டார். அவர்களோ மறுமொழியாக, "இவன் சாவுக்குரியவன்" என்றார்கள்.
67 அப்பொழுது அவர்கள் அவருடைய முகத்தில் துப்பி அவரை அடித்தார்கள். சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து,
68 "மெசியாவே, உன்னை அறைந்தவன் யாரென்று எங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்" என்று கேட்டனர்.
69 இராயப்பர் வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். ஓர் ஊழியக்காரி அவரிடம் வந்து, "நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தாய்" என்றாள்.
70 அவரோ எல்லார் முன்னிலையிலும், "நீ சொல்வது எனக்குத் தெரியாது" என்று மறுத்தார்.
71 அவர் அங்கிருந்து வாயிலருகே வந்தபொழுது வேறோர் ஊழியக்காரி அவரைப் பார்த்துவிட்டு அங்கிருந்தவர்களிடம், "இவனும் நாசரேத்தூர் இயேசுவோடு இருந்தான்" என்று கூறினாள்.
72 அவர், "அந்த ஆளை எனக்குத் தெரியாது" என்று ஆணையிட்டு மீண்டும் மறுத்தார்.
73 சிறிது நேரத்திற்குப் பின்பு, அங்கிருந்தவர்கள் அணுகி, "உண்மையாகவே நீயும் அவர்களுள் ஒருவன்தான்; ஏனெனில், உன் பேச்சே உன்னைக் காட்டிவிடுகிறது" என்று இராயப்பரிடம் கூறினார்கள்.
74 அப்பொழுது அவர், "அந்த ஆளை எனக்குத் தெரியவே தெரியாது" என்று சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே கோழி கூவிற்று.
75 இராயப்பரோ, "கோழி கூவுமுன்னர் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று இயேசு சொன்னதை நினைவுகூர்ந்தார். வெளியே போய் மனம் வெதும்பி அழுதார்.
×

Alert

×