Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Matthew Chapters

Matthew 25 Verses

1 "அந்நாளில் விண்ணரசு, மணமகனை எதிர்கொள்ளச் சென்ற பத்துக் கன்னியருக்கு ஒப்பாயிருக்கும். அவர்கள் கையில் விளக்கு எடுத்துப் போனார்கள்.
2 அவர்களுள் ஐவர் அறிவிலிகள், ஐவர் விவேகிகள்.
3 அறிவிலிகள் ஐவரும் விளக்கு எடுத்துக்கொண்டார்கள்; ஆனால், எண்ணெய் எடுத்துக்கொள்ளவில்லை.
4 விவேகிகளோ விளக்குடன் ஏனத்தில் எண்ணெயும் எடுத்துக்கொண்டார்கள்.
5 மணமகன் வரக் காலம் தாழ்த்தவே, எல்லாரும் தூங்கிவிழுந்து, உறங்கிவிட்டார்கள்.
6 நள்ளிரவில், ' இதோ! மணவாளன் வருகிறார்; அவரை எதிர்கொள்ளச் செல்லுங்கள் ' என்ற கூக்குரல் கேட்டது.
7 அப்பொழுது அக்கன்னியர் எல்லாரும் எழுந்து தம் விளக்குகளைச் சரிப்படுத்தினார்கள்.
8 அறிவிலிகளோ, ' எங்கள் விளக்குகள் அணைந்துபோகின்றன, உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள் ' என்று விவேகிகளிடம் கேட்டார்கள்.
9 அதற்கு விவேகிகள், ' உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் பற்றாமல் போகலாம், ஆகவே கடைக்காரரிடம் சென்று நீங்களே வாங்கிக்கொள்ளுங்கள் ' என்றனர்.
10 அவர்கள் வாங்கச் செல்லும்போது மணமகன் வந்தார். தயாராயிருந்தோர் அவருடன் மணவீட்டில் நுழைந்தனர். கதவு அடைக்கப்பட்டது.
11 இறுதியாக மற்றக் கன்னியரும் வந்து, ' ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும் ' என்றனர்.
12 அவரோ மறுமொழியாக, ' உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: உங்களை அறியேன் ' என்றார்.
13 எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில், நாளும் நேரமும் உங்களுக்குத் தெரியாது.
14 "மேலும் பயணம் செல்ல இருந்த ஒருவன் தன் ஊழியரை அழைத்துத் தன்னுடைமையெல்லாம் அவர்களிடம் ஒப்படைத்தான் என்று வைத்துக்கொள்வோம்.
15 அவனவன் திறமைக்குத் தக்கவாறு ஒருவனுக்கு ஐந்து தாலந்தும், வேறொருவனுக்கு இரண்டும், இன்னொருவனுக்கு ஒன்றுமாகக் கொடுத்துப் பயணம்சென்றான்.
16 ஐந்து தாலந்து பெற்றவன் உடனே சென்று அவற்றைப் பயன்படுத்தி இன்னும் ஐந்து சம்பாதித்தான்.
17 அப்படியே, இரண்டு பெற்றவனும் மேலும் இரண்டு சம்பாதித்தான்.
18 ஒன்று பெற்றவனோ சென்று மண்ணைத் தோண்டித் தலைவனுடைய பணத்தைப் புதைத்து வைத்தான்.
19 நெடுங் காலத்திற்குப் பின்னர், அவ்வூழியரின் தலைவன் திரும்பிவந்து அவர்களிடம் கணக்குக்கேட்டான்.
20 ஐந்து தாலந்து பெற்றவன் அணுகி, மேலும் ஐந்து தாலந்து கொண்டுவந்து, 'ஐயா! நீர் என்னிடம் ஐந்து தாலந்து ஒப்படைத்தீர். இதோ! இன்னும் ஐந்து தாலந்து சம்பாதித்துள்ளேன்' என்றான்.
21 அதற்குத் தலைவன், ' நன்று, நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல ஊழியனே, சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவனாய் இருந்தாய்; ஆதலால் உன்னைப் பெரியவற்றுக்கு அதிகாரியாக்குவேன். உன் தலைவனது மகிழ்ச்சியில் சேர்ந்துகொள்' என்றான்.
22 இரண்டு தாலந்து பெற்றவனும் வந்து, ' ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ! மேலும் இரண்டு தாலந்து சம்பாதித்துள்ளேன்' என்றான்.
23 அதற்குத் தலைவன், ' நன்று, நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல ஊழியனே. சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவனாய் இருந்தாய்; ஆதலால் உன்னைப் பெரியவற்றுக்கு அதிகாரியாக்குவேன். உன் தலைவனது மகிழ்ச்சியில் சேர்ந்துகொள்' என்றான்.
24 ஒரு தாலந்து பெற்றவனோ வந்து, ' ஐயா, உம்மை எனக்குத் தெரியும். நீர் கடுமையானவர்; விதைக்காத இடத்தில் அறுப்பவர்; தூவாத இடத்தில் சேர்ப்பவர்.
25 ஆகவே, உமக்கு அஞ்சி, உம் தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ! உம்முடையது' என்று கொடுத்தான்.
26 அதற்குத் தலைவன், ' கெட்ட ஊழியனே, சோம்பேறியே, நான் விதைக்காத இடத்தில் அறுப்பவன், தூவாத இடத்தில் சேர்ப்பவன் என்று உனக்குத் தெரியுமே.
27 என் பணத்தை நீ வட்டிக்காரரிடம் கொடுத்திருக்கவேண்டும். நான் வந்து என்னுடையதை வட்டியோடு பெற்றிருப்பேன்.
28 எனவே, இவனிடமிருந்து தாலந்தைப் பிடுங்கி, பத்துத் தாலந்து உடையவனுக்குக் கொடுங்கள்.
29 ஏனெனில், உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், அவனும் நிறைவு பெறுவான். இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.
30 பயனற்ற ஊழியனை வெளி இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும்' என்றான்.
31 "வானதூதர் அனைவரும் புடைசூழ மனுமகன் தம் மாட்சிமையில் வரும்போது மாட்சி அரியணையில் வீற்றிருப்பார்.
32 அவர் முன்னிலையில் எல்லா இனத்தாரும் ஒன்று சேர்க்கப்படுவர். இடையன் செம்மறிகளையும் வெள்ளாடுகளையும் பிரிப்பதுபோல், அவர்களை வெவ்வேறாகப் பிரிப்பார்.
33 செம்மறிகளைத் தம் வலப்பக்கமும் வெள்ளாடுகளை இடப்பக்கமும் நிறுத்துவார்.
34 பின்னர், அரசர் தம் வலப்பக்கம் உள்ளோரை நோக்கி, 'வாருங்கள், என் தந்தையின் ஆசி பெற்றவர்களே, உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்துள்ள அரசு உங்களுக்கு உரிமையாகுக.
35 ஏனெனில், பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள். தாகமாய் இருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள். அன்னியனாய் இருந்தேன், என்னை வரவேற்றீர்கள்.
36 ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினீர்கள். நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள். சிறையில் இருந்தேன், என்னைக் காணவந்தீர்கள் ' என்பார்.
37 அப்போது நீதிமான்கள் அவரிடம், ' ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாய் இருக்கக் கண்டு உணவு கொடுத்தோம்? தாகமாயிருக்கக் கண்டு குடிக்கக் கொடுத்தோம்?
38 எப்பொழுது நீர் அன்னியனாய் இருக்கக் கண்டு வரவேற்றோம்? ஆடையின்றியிருக்கக் கண்டு உடுத்தினோம்?
39 எப்பொழுது நீர் நோயுற்றோ சிறையிலோ இருக்கக் கண்டு, உம்மைப் பார்க்க வந்தோம்?' என்பார்கள்.
40 அதற்கு அரசர் அவர்களிடம் கூறுவார்: 'உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்.'
41 பின்னர், இடப்பக்கம் உள்ளோரை நோக்கி, 'சபிக்கப்பட்டவர்களே, என்னை விட்டு அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடுசெய்துள்ள முடிவில்லா நெருப்புக்குள் செல்லுங்கள்.
42 ஏனெனில், நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உண்ணக் கொடுக்கவில்லை. தாகமாயிருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுக்கவில்லை.
43 அன்னியனாய் இருந்தேன், என்னை வரவேற்கவில்லை. ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தவில்லை. நோயுற்றும் சிறையிலும் இருந்தேன், என்னைப் பார்க்க வரவில்லை ' என்பார்.
44 அப்பொழுது அவர்களும் அவரிடம், 'ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ தாகமாகவோ அன்னியனாகவோ, ஆடையின்றியோ நோயுற்றோ சிறையிலோ இருப்பதைக் கண்டு உமக்குப் பணிவிடை செய்யாதிருந்தோம் ?' என்பர்.
45 அவர் மறுமொழியாக, ' உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: சின்னஞ் சிறியவர் இவர்களுள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்யாதபோதெல்லாம் எனக்கே செய்யவில்லை ' என்பார்.
46 எனவே, இவர்கள் முடிவில்லாத் தண்டனைக்கும், நீதிமான்கள் முடிவில்லா வாழ்வுக்கும் போவார்கள்."
×

Alert

×