Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Matthew Chapters

Matthew 24 Verses

1 இயேசு கோயிலை விட்டுப் போய்க்கொண்டிருந்தார். அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து கோயில் கட்டடங்களை அவருக்குக் காட்டினார்கள்.
2 அவர் அவர்களுக்கு, "இவையெல்லாம் பார்க்கிறீர்களே, உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: இங்கே கல்லின்மேல் கல் இராதபடி எல்லாம் இடிபடும்" என்று மறுமொழி கூறினார்.
3 அவர் ஒலிவமலைமீது அமர்ந்தபின் அவருடைய சீடர் அவரை அணுகி, "இவை எப்பொழுது நிகழும் ? உமது வருகைக்கும் உலக முடிவுக்கும் அறிகுறி என்ன ? எங்களுக்குச் சொல்லும்" என்று தனியாகக் கேட்டனர்.
4 இயேசு அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: "உங்களை யாரும் ஏமாற்றாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
5 ஏனெனில், பலர் வந்து என் பெயரை வைத்துக்கொண்டு, ' நான்தான் மெசியா ' என்று சொல்லிப் பலரை ஏமாற்றுவர்.
6 போர் முழக்கங்களையும் போர்ப் பேச்சுகளையும் கேட்கப்போகிறீர்கள். எச்சரிக்கையாயிருங்கள்; கலங்கவேண்டாம். ஏனெனில், இவை எல்லாம் நிகழத்தான் வேண்டும்.
7 ஆனால், இன்னும் இது முடிவன்று. நாடு நாட்டையும், அரசு அரசையும் எதிர்த்து எழும். பற்பல இடங்களில் கொள்ளைநோய்களும் பஞ்சமும் நிலநடுக்கமும் உண்டாகும்.
8 இவை அனைத்தும் வேதனைகளின் தொடக்கமே.
9 அப்பொழுது உங்களை வேதனைக்குக் கையளிப்பார்கள்; கொலைசெய்வார்கள்; என் பெயருக்காக எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள்.
10 அப்பொழுது பலர் இடறல்படுவார்கள்; ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பார்கள்; ஒருவரையொருவர் வெறுப்பார்கள்.
11 போலித் தீர்க்கதரிசிகள் பலர் தோன்றிப் பலரை ஏமாற்றுவார்கள்.
12 அக்கிரமம் அதிகரிப்பதனால் பலரிடம் அன்பு தணிந்துபோகும்.
13 இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்.
14 இறையரசைப்பற்றிய இந்நற்செய்தி எல்லா இனங்களுக்கும் சான்றாக உலக முழுவதும் அறிவிக்கப்படும். பின்னர்தான் முடிவு வரும்.
15 "தானியேல் இறைவாக்கினர் குறிப்பிட்ட ' பாழாக்கும் அருவருப்பு ' பரிசுத்த இடத்தில் நிற்கக் காணும்பொழுது - இதைப் படிப்பவன் உணர்ந்துகொள்ளட்டும் -
16 அப்போது யூதேயாவில் இருப்பவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகட்டும்.
17 கூரைமேல் இருப்பவன் இறங்கி வீட்டில் எதையும் எடுக்காமலே ஓடட்டும்.
18 வயலில் இருப்பவன் தன் போர்வையை எடுக்கவும் திரும்பி வரவேண்டாம்.
19 அந்நாட்களில் கருப்பவதிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் ஐயோ பரிதாபம்!
20 நீங்கள் ஓடிப்போவது குளிர் காலத்திலாவது ஓய்வுநாளிலாவது நிகழாதபடி மன்றாடுங்கள்.
21 அப்பொழுது பெரிய வேதனை உண்டாகும். இத்தகைய வேதனை உலகத் தொடக்கமுதல் இதுவரை இருந்ததுமில்லை; இனி இருக்கப்போவதுமில்லை.
22 அந்நாட்கள் குறைக்கப்படாவிடில் எவ்வுயிரும் தப்பித்துக்கொள்ளாது. தேர்ந்துகொண்டவர்களின் பொருட்டு அந்நாட்கள் குறைக்கப்படும்.
23 அப்போது எவனாவது உங்களிடம், ' இதோ! மெசியா இங்கே இருக்கிறார் அல்லது அங்கே இருக்கிறார் ' என்று சொன்னால் நம்பாதீர்கள்.
24 போலி மெசியாக்களும் போலித் தீர்க்கதரிசிகளும் தோன்றி, கூடுமானால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களையும் ஏமாற்றக்கூடிய பெரும் அருங்குறிகளும் அற்புதங்களும் செய்துகாட்டுவார்கள்.
25 இதோ! உங்களுக்கு முன்னதாகவே கூறிவிட்டேன்.
26 "எனவே, யாராவது உங்களிடம் ' இதோ! அவர் பாலைவனத்தில் இருக்கிறார் ' என்று கூறினால், அங்கே சொல்லாதீர்கள். ' இதோ! உள்ளறையில் இருக்கிறார் ' என்றால், நம்பாதீர்கள்.
27 ஏனெனில், மின்னல் கிழக்கில் தோன்றி மேற்குவரை தெரிவதுபோலவே மனுமகன் வருகையும் இருக்கும்.
28 பிணம் எங்கேயோ அங்கேயே கழுகுகள் கூடும்.
29 "அந்நாட்களின் வேதனைக்குப் பின், உடனே, கதிரவன் இருண்டுவிடுவான்; நிலா தன் ஒளி கொடாது; விண்மீன்கள் வானத்தினின்று விழும்; வானத்தின் படைகள் அசைக்கப்படும்.
30 அப்போது வானத்தில் மனுமகனின் அறிகுறி தோன்றும்; மண்ணுலகின் குலத்தார் எல்லாரும் புலம்பி அழுவர். மனுமகன் மிகுந்த வல்லமையோடும் மாட்சிமையோடும் வானமேகங்களின்மீது வருவதைக் காண்பார்கள்.
31 எக்காளம் முழங்க அவர் தம் தூதரை அனுப்புவார். அவர்கள் உலகின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை நாற்றிசையிலுமிருந்து அவரால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைத் திரட்டுவார்கள்.
32 "அத்தி மரத்திலிருந்து இந்த உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் மென்மையாகித் தளிர்விடும்போது கோடைக்காலம் அண்மையில் உள்ளது என்று உங்களுக்குத் தெரியும்.
33 அவ்வாறே, நீங்களும் இவையெல்லாம் நடைபெறுவதைக் காணும்போது அவர் அண்மையில் இருக்கிறார், வாசலிலேயே இருக்கிறார் என்று அறிந்துகொள்ளுங்கள்.
34 இவையாவும் நடைபெறும்வரை இத்தலைமுறை ஒழியாது என்று உங்களுக்கு உறுதியாகச் சொல்லுகிறேன்.
35 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோம்; என் வார்த்தைகளோ ஒழியவே ஒழியா.
36 அந்நாளோ நாழிகையோ ஒருவனுக்கும் தெரியாது; தந்தைக்குத் தெரியுமேயன்றி, வானதூதருக்கும் மகனுக்குங்கூடத் தெரியாது.
37 "நோவாவின் காலத்தில் இருந்ததுபோல மனுமகன் வருகையும் இருக்கும்.
38 பெரும் வெள்ளத்திற்கு முந்தின காலத்தில் நோவா பெட்டகத்தில் நுழைந்த நாள்வரை அவர்கள் உண்டும் குடித்தும், பெண் கொண்டும் கொடுத்தும் வந்தனர்.
39 பெரும் வெள்ளம் வந்து அனைவரையும் வாரிச்செல்லும்வரை அவர்கள் ஒன்றையும் உணரவில்லை. அப்படியே மனுமகன் வருகையும் இருக்கும்.
40 அப்போது வயலில் இருவர் இருப்பர். ஒருவன் எடுக்கப்படுவான்; மற்றவன் விடப்படுவான்.
41 திரிகையில் இரு பெண்கள் மாவரைப்பர். ஒருத்தி எடுக்கப்படுவாள்; மற்றவள் விடப்படுவாள்.
42 "விழிப்பாயிருங்கள்; ஏனெனில், எப்போது உங்கள் ஆண்டவர் வருவார் என்று உங்களுக்குத் தெரியாது.
43 திருடன் இன்ன சாமத்தில் வருவான் என்று வீட்டுத்தலைவனுக்குத் தெரிந்தால் அவன் விழிப்பாயிருந்து வீட்டில் கன்னம்வைக்க விடமாட்டான் அன்றோ ?
44 இதை உணர்ந்து நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்.
45 "தக்க காலத்தில் தன் வீட்டாருக்கு உணவளிக்கும்படி தலைவன் ஏற்படுத்திய, நம்பிக்கையும் விவேகமும் உள்ள ஊழியன் யார் ?
46 எந்த ஊழியன் அவ்வாறு செய்துகொண்டிருப்பதைத் தலைவன் வந்து காண்பானோ, அவன் பேறுபெற்றவன்.
47 அவனைத் தன் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக ஏற்படுத்துவான் என உங்களுக்கு உறுதியாகச் சொல்லுகிறேன்.
48 ஆனால், அவ்வூழியன் தீயவனாய் இருந்து, ' என் தலைவர் காலம் தாழ்த்துகிறார் ' என்று தனக்குள் சொல்லிக்கொண்டு
49 உடன்ஊழியரை அடிக்கவும், குடிகாரருடன் கூடி உண்ணவும் குடிக்கவும் தொடங்கினால்,
50 அவ்வூழியன் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் தலைவன் வந்து,
51 அவனை நீக்கி, வெளி வேடக்காரர் கதிக்கு உள்ளாக்குவான். அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும்.
×

Alert

×