Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Matthew Chapters

Matthew 12 Verses

1 அக்காலத்தில் இயேசு ஓய்வுநாளில் விளைச்சல்வழியே சென்றார். அவருடைய சீடர்களுக்குப் பசியெடுக்க, அவர்கள் கதிர்களைக் கொய்து தின்னத்தொடங்கினர்.
2 இதைக் கண்ட பரிசேயர் அவரை நோக்கி, "இதோ! உம் சீடர் ஓய்வுநாளில் செய்யத் தகாததைச் செய்கிறார்களே" என்றனர்.
3 அவரோ அவர்களிடம், "தாவீதும் அவருடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபொழுது அவர் என்ன செய்தார் என்று நீங்கள் வாசித்ததில்லையோ ?
4 அவர் கடவுளின் ஆலயத்தில் நுழைந்து காணிக்கை அப்பங்களை உண்டார். அவரோடு இருந்தவர்களும் உண்டனர். அவற்றை அவரோ அவரோடு இருந்தவர்களோ உண்ணலாகாதன்றோ ? குருக்கள்மட்டுமே உண்ணலாம்.
5 ஓய்வுநாளில் குருக்கள் கோயிலில் ஓய்வை மீறினாலும் அது குற்றமாகாது என்று திருச்சட்டத்தில் நீங்கள் வாசித்ததில்லையோ ?
6 ஆனால் கோயிலைவிடப் பெரியது இங்கே இருக்கிறது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
7 'பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருப்பின், குற்றமற்றோரைக் கண்டனம் செய்திருக்கமாட்டீர்கள்.
8 ஏனெனில், மனுமகன் ஓய்வுநாளுக்கு ஆண்டவர்" என்றார்.
9 அவர் அங்கிருந்து புறப்பட்டு அவர்களின் செபக்கூடத்திற்கு வந்தார்.
10 அங்கே சூம்பின கையன் ஒருவன் இருந்தான். அவர்மேல் குற்றம் சாட்டும்படி, "ஓய்வுநாளில் குணமாக்குதல் முறையா?" என்று கேட்டனர்.
11 அதற்கு அவர், "தனக்கு இருக்கும் ஒரே ஓர் ஆடும் ஓய்வுநாளில் குழியில் விழுந்துவிட்டால் உங்களில் எவனாவது அதைத் தூக்கிவிடாமல் இருப்பானா ?
12 ஆட்டைக்காட்டிலும் மனிதன் எவ்வளவோ மேலானவன்! ஆதலால், ஓய்வுநாளில் நன்மை செய்வது முறையே" என்றார்.
13 பின் அவனை நோக்கி, "உன் கையை நீட்டு" என்றார். நீட்டினான். அது மற்றக்கைபோலக் குணம் ஆயிற்று.
14 பரிசேயரோ வெளியே போய், அவரை எப்படித் தொலைக்கலாம் என்று அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர்.
15 இதை அறிந்து, இயேசு அங்கிருந்து விலகினார். அவரைப் பலர் பின்தொடர அவர்கள் அனைவரையும் குணமாக்கினார்.
16 தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவர்களுக்குக் கண்டிப்பாகச் சொன்னார்.
17 இசையாஸ் இறைவாக்கினர் கூறியுள்ளது இவ்வாறு நிறைவேற வேண்டியிருந்தது:
18 'இதோ நான் தேர்ந்தெடுத்த ஊழியன், இவரே என் அன்பர். இவரிடம் என் ஆன்மா பூரிப்படைகிறது, இவர்மேல் எனது ஆவியைத் தங்கச்செய்வேன்; புறவினத்தாருக்கு இவர் அறத்தை அறிவிப்பார்.
19 சச்சரவு செய்யமாட்டார், கூக்குரலிடவும் மாட்டார்; இவர் குரல் தெருவிலே கேட்காது.
20 அறம் வெற்றிபெறச் செய்யும்வரை இவர் நெரிந்த நாணலை முறியார், புகையும் திரியை அணையார்.
21 புறவினத்தார் இவர் பெயரில் நம்பிக்கை வைப்பர். '
22 அப்பொழுது பேய்பிடித்த ஒருவனை அவரிடம் கொண்டுவந்தனர். அவன் குருடும் ஊமையுமாய் இருந்தான். அவர் அவனைக் குணப்படுத்தினார். அவன் பேச்சும் பார்வையும் பெற்றான்.
23 கூட்டமெல்லாம் திகைத்துப்போய், "தாவீதின் மகன் இவரோ?" என்று பேசிக்கொண்டது.
24 இதைக் கேட்ட பரிசேயரோ, "இவன் பேய் ஓட்டுவது, பேய்கள் தலைவனான பெயல்செபூலைக்கொண்டே" என்றனர்.
25 இயேசு அவர்கள் சிந்தனையை அறிந்து அவர்களை நோக்கிக் கூறியது: "தனக்கு எதிராகப் பிரியும் எந்த அரசும் பாழாய்ப்போம். தனக்கு எதிராகப் பிரியும் எந்த நகரும் வீடும் நிலைக்காது.
26 சாத்தான் சாத்தானையே ஓட்டினால் அவன் தனக்கு எதிராகத் தானே பிரிந்திருக்கிறான். பின் அவன் அரசு எப்படி நிலைக்கும் ?
27 நான் பேய்களை ஓட்டுவது பெயல்செபூலைக்கொண்டு என்றால், உங்கள் மக்கள் யாரைக்கொண்டு ஓட்டுகிறார்கள்? எனவே, அவர்களே உங்களுக்குத் தீர்ப்பிடுவார்கள்.
28 ஆனால் நான் பேய்களை ஓட்டுவது கடவுளின் ஆவியைக்கொண்டு என்றால், கடவுளின் அரசு உங்களிடம் வந்துள்ளது.
29 "ஒருவன் முதலில் வலியவனைக் கட்டினால் அன்றி, எப்படி அவ்வலியவன் வீட்டில் நுழைந்து அவன் பொருட்களைக் கொள்ளையிட முடியும்? கட்டின பின்புதான் அவனுடைய வீட்டைக் கொள்ளையிடுவான்.
30 "என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்.
31 எனவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் தேவதூஷணமும் மனிதருக்கு மன்னிக்கப்படும்.
32 ஆனால், ஆவியானவரைத் தூஷிப்பது மன்னிக்கப்பெறாது. மனுமகனுக்கு எதிராகப் பேசுகிறவன் எவனும் மன்னிப்புப்பெறுவான். ஆனால், பரிசுத்த ஆவிக்கு எதிராகப் பேசுகிறவன் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெறான்.
33 "மரமும் நல்லது, கனியும் நல்லது என்று சொல்லுங்கள்; அல்லது மரமும் தீயது, கனியும் தீயது என்று சொல்லுங்கள்.
34 விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவராயிருக்க எவ்வாறு நல்லவை பேசமுடியும்? ஏனெனில், உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்.
35 நல்லவன் நல்ல கருவூலத்தினின்று நல்லவற்றை எடுக்கிறான். தீயவனோ தீய கருவூலத்தினின்று தீயவற்றை எடுக்கிறான்.
36 மனிதர் பேசும் பயனற்ற சொல் ஒவ்வொன்றுக்கும் தீர்வை நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
37 ஏனெனில், உன் வார்த்தைகளைக்கொண்டே குற்றமற்றவன் எனப்படுவாய்; உன் வார்த்தைகளைக்கொண்டே குற்றவாளி எனப்படுவாய்."
38 அப்பொழுது மறைநூல் அறிஞர், பரிசேயருள் சிலர் அவருக்கு மறுமொழியாக: "போதகரே, நீர் அருங்குறி ஒன்று செய்வதைக் காண விரும்புகிறோம்" என்றனர்.
39 அதற்கு அவர் கூறியது: "கெட்டுப்போன விபசாரத் தலைமுறை அருங்குறி ஒன்று கேட்கிறது. யோனாஸ் இறைவாக்கினரின் அருங்குறியேயன்றி வேறு எந்த அருங்குறியும் அதற்கு அளிக்கப்படாது.
40 எவ்வாறு யோனாஸ் மூன்று பகலும் மூன்று இரவும் திமிங்கிலத்தின் வயிற்றில் இருந்தாரோ, அவ்வாறே மனுமகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.
41 தீர்வையின்போது நினிவே மக்கள் இத்தலைமுறைக்கு எதிராக எழுந்து இதனைக் கண்டனஞ்செய்வார்கள். ஏனெனில், அவர்கள் யோனாஸ் உரைத்த தூதைக் கேட்டு மனந்திரும்பினார்கள். யோனாசிலும் மேலானது இதோ! இங்குள்ளது.
42 தீர்வையின்போது தென்னாட்டு அரசி இத்தலைமுறைக்கு எதிராக எழுந்து இதனைக் கண்டனஞ்செய்வாள். ஏனெனில், சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க உலகின் எல்லையிலிருந்து வந்தாள். சாலொமோனிலும் மேலானது இதோ! இங்குள்ளது.
43 "அசுத்த ஆவி ஒருவனை விட்டு வெளியேறியபின் வறண்ட இடங்களில் சுற்றி அலைந்து இளைப்பாற இடம் தேடிக் கண்டடையாமல், ஃ
44 'நான் விட்டுவந்த என் வீட்டிற்கே திரும்புவேன்' என்று சொல்லுகிறது. திரும்பி வந்து அவ்வீடு வெறுமையாயும், கூட்டி அழகுபடுத்தியும் இருப்பதைக் காண்கிறது.
45 மீண்டும் சென்று தன்னிலும் பொல்லாத வேறு ஏழு பேய்களைத் தன்னோடு அழைத்து வர, அவை அதனுள் நுழைந்து குடியிருக்கின்றன. அம் மனிதனின் பின்னைய நிலை முன்னைய நிலையினும் மோசமாயிற்று. இப்பொல்லாத தலைமுறைக்கும் இவ்வாறே நிகழும்."
46 அவர் கூட்டத்தை நோக்கி இன்னும் பேசிக்கொண்டிருக்கும்போது, இதோ! அவருடைய தாயும் சகோதரரும் அவருடன் பேச வெளியே காத்துக்கொண்டிருந்தனர்.
47 ஒருவன் அவரை நோக்கி, "இதோ! உம் தாயும் சகோதரரும் உம்மோடு பேச வெளியே காத்துக்கொண்டிருக்கின்றனர்" என்றான்.
48 இதைத் தம்மிடம் கூறியவனுக்கு அவர் மறுமொழியாக: "யார் என் தாய்? யார் என் சகோதரர்?" என்று சொல்லி,
49 தம் சீடர்பக்கம் கையைக் காட்டி, "இதோ, என் தாயும் என் சகோதரரும்.
50 வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்" என்றார்.
×

Alert

×