Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Mark Chapters

Mark 6 Verses

1 அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தம் சொந்த ஊருக்கு வந்தார். அவர் சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர்.
2 ஓய்வுநாளன்று செபக்கூடத்தில் போதிக்கத் தொடங்கினார். கேட்டவர் பலர் மலைத்துப்போய், "இதெல்லாம் இவருக்கு எங்கிருந்து வந்தது? என்னே இவர் பெற்ற ஞானம்! என்னே இவர் கையால் ஆகும் புதுமைகள்!
3 இவர் தச்சன் அல்லரோ? மரியாளின் மகன் தானே! யாகப்பன், சூசை, யூதா, சீமோன் இவர்களுடைய சகோதரர்தானே! இவர் சகோதரிகளும் இங்கு நம்மோடு இல்லையா ?' என்று சொல்லி அவர்மட்டில் இடறல்பட்டனர்.
4 இயேசு அவர்களை நோக்கி, "சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினருக்கு மதிப்பு உண்டு" என்றார்.
5 அங்கே பிணியாளர் ஒருசிலர்மீது கைகளை வைத்துக் குணமாக்கியது தவிர வேறு ஒரு புதுமையும் செய்ய முடியவில்லை.
6 அவர்களுக்கு விசுவாசமில்லாததைக் கண்டு அவர் வியப்புற்றார். சுற்றிலுமுள்ள ஊர்களில் போதித்துக் கொண்டு வந்தார்.
7 பன்னிருவரையும் அழைத்து இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்கு அசுத்த அவிகளின்மேல் அதிகாரம் அளித்தார்.
8 மேலும் பயணத்துக்கு ஒரு கோல் தவிர, பையோ உணவோ, மடியில் காசோ கொண்டுபோக வேண்டாம் என்று கட்டளையிட்டார்.
9 ஆனால், மிதியடி போட்டுக்கொள்ளலாம். "உள்ளாடை இரண்டு அணிய வேண்டாம்" என்றார்.
10 பின்னும் அவர்களுக்குக் கூறியது: " நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டிற்குச் சென்றால் அவ்விடத்திலிருந்து போகும்வரை அங்கேயே தங்கியிருங்கள்.
11 எந்த ஊராவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுக்குச் செவி சாய்க்காமலும் இருந்தால், நீங்கள் அங்கிருந்து வெளியேறி அவர்களுக்கு எதிர்சாட்சியாக உங்கள் காலிலிருக்கும் தூசியைத் தட்டிவிடுங்கள்."
12 அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனந்திரும்ப வேண்டுமென்று அறிவித்தனர்.
13 பேய்கள் பல ஓட்டினர். பிணியாளர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினர்.
14 ஏரோது அரசன் அவரைப்பற்றிக் கேள்வியுற்றான். ஏனெனில், அவர் பெயர் எங்கும் விளங்கிற்று. மக்களும், "ஸ்நாபக அருளப்பர் இறந்தோரிடமிருந்து உயிர்த்திருக்கிறார். ஆதலால் புதுமை செய்யும் வல்லமை இவரிடம் செயலாற்றுகிறது". என்றனர்.
15 "இவர் எலியாஸ்" என்றனர் சிலர். "இறைவாக்கினர்களைப்போல் இருவரும் ஓர் இறைவாக்கினர்" என்றனர் வேறு சிலர்.
16 இதைக் கேட்ட ஏரோது, "இவர் அருளப்பர்தாம். அவர்தலையை நான் வெட்டினேன். ஆனால் அவர் உயிர்த்திருக்கிறார்" என்றான்.
17 இந்த ஏரோது தன் சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளின் பொருட்டு, ஆள்விட்டு, அருளப்பரைப் பிடித்துச் சிறையில் விலங்கிட்டிருந்தான். ஏனெனில், அவளைத் தன் மனைவியாக்கிருந்தான்.
18 அருளப்பரோ ஏரோதிடம், "உன் சகோதரன் மனைவியை நீ வைத்திருக்கலாகாது" என்று சொல்லி வந்தார்.
19 ஏரோதியாள் அவர்மேல் வர்மம் கொண்டு, அவரைக் கொல்ல விரும்பியும் முடியாமல் போயிற்று.
20 ஏனெனில், அருளப்பர் நீதிமானும் புனிதரும் என்றறிந்த ஏரோது அவருக்கு அஞ்சி, அவரைப் பாதுகாத்து வந்தான். அவர் சொல்லைக் கேட்கும்போது மிகக் கலக்கமுறுவான். ஆயினும் அவருக்கு மனமுவந்து செவிசாய்ப்பான்.
21 ஒருநாள் ஏரோதியாளுக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தது. ஏரோது, தன் பிறப்பு விழாவில் பெருங்குடி மக்களுக்கும் படைத்தலைவர்க்கும் கலிலேயாவின் பெரியோர்க்கும் விருந்து செய்தான்.
22 அந்த எரோதியாளின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் மகிழ்வித்தாள். அரசன் சிறுமியிடம், "உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்" என்றான்.
23 "நீ என்ன கேட்டாலும் அது என் அரசில் பாதியேயானாலும், உனக்குக் கொடுக்கிறேன்" என்று ஆணையுமிட்டான்.
24 அவள் வெளியே சென்று, "என்ன கேட்கலாம்?" என்று தன் தாயை வினவினாள். அவளோ, ஸ்நாபக அருளப்பரின் தலையைக் கேள்" என்றாள். உடனே அவள் அரசனிடம் விரைந்து வந்து,
25 "ஸ்நாபக அருளப்பரின் தலையை இப்போதே ஒரு தட்டில் எனக்குக் கொடுக்கவேண்டும்" என்று கேட்டாள்.
26 அரசன் மிக வருத்தமுற்றான். ஆனால், தன் ஆணையின் பொருட்டும் விருந்தினர் பொருட்டும் அவளுக்கு மறுத்துச் சொல்ல விரும்பவில்லை.
27 உடனே அரசன் ஒரு கொலைஞனை அனுப்பி அவருடைய தலையை ஒரு தட்டில் கொண்டுவரக் கட்டளையிட்டான்.
28 அவன் போய்ச் சிறையில் அவருடைய தலையை வெட்டினான். அதைத் தட்டில் கொண்டுவந்து சிறுமியிடம் கொடுக்க, அவளும் தன் தாயிடம் கொடுத்தாள்.
29 இதைக் கேள்விப்பட்டு அவருடைய சீடர்கள் வந்து அவருடலை எடுத்துச் சென்று கல்லறையில் வைத்தனர்.
30 அப்போஸ்தலர் இயேசுவிடம் வந்துகூடித் தாங்கள் செய்தது போதித்ததெல்லாம் அவருக்குத் தெரிவித்தனர்.
31 அவர் அவர்களைப் பார்த்து, "நீங்கள் தனிமையான இடத்துக்கு ஒதுக்கமாக வந்து சற்றே இளைப்பாறுங்கள்" என்றார். ஏனெனில், பலர் வருவதும் போவதுமாயிருந்தனர். உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.
32 அவர்கள் படகேறி, தனிமையான இடத்துக்கு ஒதுக்கமாகச் சென்றனர்.
33 அவர்கள் போவதை மக்கள் கண்டார்கள். இதைப் பலர் தெரிந்து கொண்டு எல்லா ஊர்களிலிருந்தும் கால்நடையாகக் கூட்டமாய் ஓடி அவர்களுக்குமுன் அங்குவந்து சேர்ந்தார்கள்.
34 இயேசு கரையில் இறங்கியபோது பெருங்கூட்டத்தைக் கண்டார். ஆயனில்லா ஆடுகள்போல் இருந்ததால் அவர்கள்மீது மனமிரங்கி நெடுநேரம் போதிக்கலானார்.
35 இதற்குள் நேரமாகிவிடவே, சீடர் அவரிடம் வந்து, "பாழ்வெளியாயிற்றே, ஏற்கனவே நேரமுமாகிவிட்டது.
36 சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது வாங்கிக் கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடும்" என்றனர்.
37 அதற்கு அவர், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என, "அவர்களுக்கு உணவு கொடுக்க, நாங்கள் இருநூறு வெள்ளிக் காசுக்கு அப்பம் வாங்கிவர வேண்டுமா?' என்றனர்.
38 அவர் அவர்களை நோக்கி, "உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்" என்று கூறினார். அவர்களும் பார்த்துவந்து, "ஐந்து அப்பங்கள் இருக்கின்றன. இரண்டு மீனும் உண்டு" என்றனர்.
39 எல்லாரையும் பசும்புல் தரையில் பந்திபந்தியாக அமர்த்தும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
40 மக்கள் நூறு நூறாகவும், ஐம்பது ஐம்பதாகவும் கும்பல் கும்பலாய் அமர்ந்தனர்.
41 ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, இறைபுகழ் கூறி, அப்பங்களைப் பிட்டு, சீடருக்கு அளித்துப் பரிமாறச் சொன்னார். இரண்டு மீனையும் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்.
42 அனைவரும் வயிறார உண்டனர்.
43 அப்பத்துண்டுகளையும் மீன்களில் மீதியானதையும் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள்.
44 அப்பம் உண்டவர்கள் ஐயாயிரம் ஆண்கள்.
45 தாம் மக்களை அனுப்பிக்கொண்டிருக்கையில், சீடர்கள் உடனே படகேறிக் கடலைக் கடந்து முன்னதாகப் பெத்சாயிதாவை நோக்கிப் போகும்படி இயேசு வற்புறுத்தினார்.
46 மக்களை அனுப்பிவிட்டு மலைக்குச் செபிக்கச் சென்றார்.
47 இரவாயிற்று, படகு நடுக்கடலில் இருந்தது. அவர் தனியே தரையில் இருந்தார்.
48 எதிர்காற்று அடித்தால் அவர்கள் தண்டுவலிக்க வருந்துவதைக் கண்டு, ஏறக்குறைய நான்காம் சாமத்தில் அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்துவந்து அவர்களைக் கடந்து செல்ல இருந்தார்.
49 அவர்களோ அவர் கடல் மீது நடப்பதைக் கண்டு பூதமென்று எண்ணி அலறினர்.
50 அனைவரும் அவரைக் கண்டு கலங்கினர். உடனே அவர் அவர்களிடம் பேசி, "தைரியமாயிருங்கள், நான் தான், அஞ்சாதீர்கள்" என்று சொன்னார்.
51 அவர்களை அணுகிப் படகில் ஏறினார். காற்று ஓய்ந்தது. அவர்கள் தங்களுக்குள் மிகமிகத் திகைத்துப்போயினர்.
52 ஏனெனில், அப்பங்களின் புதுமையைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவர்கள் உள்ளம் மழுங்கிப்போயிருந்தது.
53 அவர்கள் கடலைக் கடந்து கெனேசரேத்துக்கு வந்து கரைசேர்ந்தனர்.
54 அவர்கள் படகை விட்டு இறங்கியதும், மக்கள் அவரைத் தெரிந்துகொண்டு,
55 அந்நாடெங்கும் விரைந்துபோய், அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் நேயாளிகளைப் படுக்கைகளில் கொண்டுவரத் தொடங்கினர்.
56 அவர் ஊரோ நகரோ பட்டியோ, எங்குச் சென்றாலும், பொதுவிடங்களில் நோயாளிகளைக் கிடத்தி அவருடைய போர்வையின் விளிம்பையாகிலும் தொடவிடும்படி அவரை வேண்டுவர். அவரைத் தொட்ட அனைவரும் குணம் பெறுவர்.
×

Alert

×