Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Malachi Chapters

Malachi 3 Verses

1 இதோ, நமக்கு முன்பாக நம் தூதரை அனுப்புவோம்; அவர் நமக்குமுன் வழியை ஆயத்தம் செய்வார்; நீங்கள் தேடுகின்ற ஆண்டவர் தீடீரெனத் தம் கோயிலுக்கு வருவார்; நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
2 ஆனால் அவர் வரும் நாளைத் தாங்க வல்லவன் எவன்? அவர் தோன்றும்போது அவர் முன் நிற்கக்கூடியவன் யார்? ஏனெனில் அவர் புடமிடுகிறவனின் நெருப்புப்போலும், வண்ணாரின் காரம் போலும் இருப்பார்.
3 புடமிடுபவன் போலவும் வெள்ளியைச் சுத்தம் செய்பவன் போலவும் உட்காருவார்; லேவியின் மக்களைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப்போலப் புடம்போடுவார்; அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய முறையில் காணிக்கையும் செலுத்துவர்.
4 அதன்பிறகு யூதாவின் காணிக்கையும் யெருசலேமின் காணிக்கையும், பண்டை நாட்களில்- முற்காலத்தில்- இருந்தது போல் ஆண்டவருக்கு உகந்தவையாயிருக்கும்.
5 அப்போது, மந்திர வித்தைக்காரர், விபசாரிகள், பொய்யாணையிடுபவர்கள், கூலிக்காரர்க்குக் கூலி கொடுக்காத வம்பர்கள், கைம்பெண்களையும் திக்கற்றவர்களையும் கொடுமைப்படுத்துகிறவர்கள், அந்நியரை விருந்தோம்பாமல் புறக்கணிக்கிறவர்கள், நமக்கு அஞ்சி நடக்காதவர்கள் ஆகியவர்களுக்கு எதிராக நாமே சாட்சியாய் நின்று தீர்ப்பு வழங்க விரைந்து வருவோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
6 யாக்கோபின் மக்களே, ஆண்டவராகிய நாம் மாறாதவராய் இருப்பதால் தான், நீங்கள் இன்னும் அழியாமல் இருக்கிறீர்கள்.
7 உங்கள் தந்தையரின் நாள் முதலே நம் கற்பனைகளை விட்டகன்று போனீர்கள்; அவற்றைக் கடைப்பிடிக்கவுமில்லை. நம்மிடம் திரும்பி வாருங்கள், நாமும் உங்களிடம் திரும்பி வருவோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர். ஆனால், 'நாங்கள் எவ்வாறு திரும்பி வருவோம்?' என்கிறீர்கள்.
8 மனிதன் கடவுளைக் கொள்ளையடிக்க முடியுமா? ஆனால் நீங்கள் நம்மைக் கொள்ளையடிக்கிறீர்களே! 'எவ்வகையில் உம்மை நாங்கள் கொள்ளையடிக்கிறோம் 'என்று கேட்கிறீர்களா? நீங்கள் தரவேண்டிய பத்திலொரு பங்கிலும் காணிக்கைகளிலுந்தான்.
9 நீங்கள் அனைவரும் நம்மையே கொள்ளையடிப்பதால், நீங்கள் பெருஞ் சாபனைக்கு உள்ளானவர்கள்.
10 பத்திலொரு பங்கு முழுவதையும் கொண்டு வந்து களஞ்சியத்தில் கொட்டுங்கள்; அப்பொழுது நம் கோயிலில் உணவு இருக்கும்; அவ்வாறு செய்த பின், வானத்தின் பலகணிகளைத் திறந்து உங்கள் மீது பொங்கி வழியும்படி ஆசீரைப் பொழிகிறோமா இல்லையா என்று சோதித்துப் பாருங்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
11 அழிவு விளைவிப்பனவற்றை உங்களை முன்னிட்டு நாம் கண்டிப்போம்; அவை உங்கள் நிலத்தின் விளைவை அழிக்கமாட்டா; உங்கள் தோட்டத்தில் உள்ள திராட்சைக் கொடிகள் கனிகொடுக்கத் தவறமாட்டா, என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
12 அப்போது மக்களினங்கள் யாவும் உங்களைப் பேறுபெற்றவர்கள் என்பார்கள்; ஏனெனில் உங்கள் நாடு இனிமையின் இருப்பிடமாய் இருக்கும், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
13 நம்மைப் புண்படுத்தும் சொற்களையே சொல்லி வந்திருக்கிறீர்கள், என்கிறார் ஆண்டவர். ஆயினும், 'உமக்கு எதிராய் என்ன பேசினோம்?' என்று கேட்கிறீர்கள்.
14 கடவுளுக்கு ஊழியம் செய்வது வீண்; அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்தும், சேனைகளின் ஆண்டவர் முன்னிலையில் மன உருக்கத்தோடு நடந்தும் நமக்கு என்ன பயன்?
15 ஆணவங்கொண்டவர்களே பேறுபெற்றவர்கள் என்பது தான் இனி எங்கள் கருத்து; தீமை செய்கிறவர்கள் முன்னேறுவது மட்டுமல்ல; கடவுளை அவர்கள் சோதிக்கும் போது அவர்கள் தப்பித்துக் கொள்ளுகிறார்கள் 'என்றெல்லாம் நீங்கள் சொல்லவில்லையா?"
16 அப்போது, ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசினர்; ஆண்டவர் கவனித்துக் கேட்டார்; ஆண்டவருக்கு அஞ்சி நடந்து அவர் பெயரைச் சிந்திக்கிறவர்களைக் குறித்துவைக்கும் நினைவுநூல் ஒன்று அவர் முன்னிலையில் எழுதப்பட்டது.
17 நாம் செயலாற்றும் அந்த நாளில் அவர்கள் நம் உரிமைமக்களாய், தனிப்பெரும் சொத்தாய் இருப்பர், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்; தந்தை தமக்கு ஊழியம் செய்யும் மகனுக்கு இரக்கம் காட்டுவதுபோல நாம் அவர்களுக்கு இரக்கம் காட்டுவோம்.
18 அப்போது, மறுபடியும் நேர்மையானவனுக்கும் தீயவனுக்கும், கடவுளுக்கு ஊழியம் செய்கிறவனுக்கும், அவருக்கு ஊழியம் செய்யாதவனுக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டுணர்வீர்கள்.
×

Alert

×