Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Leviticus Chapters

Leviticus 16 Verses

1 சாதாரணத் தீக்கங்கை உபயோகித்த ஆரோனின் புதல்வர்கள் இறந்த பின் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2 உன் சகோதரனான ஆரோன் சாகாத படிக்குத் திருவிடத்திலே அதாவது: பெட்டகத்தை மூடுகின்ற இரக்கத்தின் அரியணைக்கு முன் இருக்கிற திரைக்கு உட்புறத்திலே எல்லா வேளையிலும் வர வேண்டாமென்று அவனுக்குச் சொல். (உண்மையிலே இரக்கத்தின் அரியணைக்கு மேல் ஒரு மேகத்தில் நாம் காணப்படுவோம். )
3 (அதனுள் நுழைவதற்கு முன்) அவன் செய்ய வேண்டியது ஏதென்றால்: பாவ நிவாரணப் பலியாக ஓர் இளங்காளையையும், தகனப்பலியாக ஓர் ஆட்டுக்கிடாயையும் செலுத்தக் கடவான்.
4 அவன் மெல்லிய சணல் நூற்சட்டையையும் அணிந்து இடையில் சணல் நூற் சல்லடத்தையும், சணல்நூல் இடைக் கச்சையையும், தலையிலே சணல் நூற் பாகையையும் அணிந்து கொள்ள வேண்டும். அவை பரிசுத்த ஆடைகளாகையால், குளித்தபின்னரே அவற்றையெல்லாம் அணிந்து கொள்வான்.
5 அப்போது இஸ்ராயேல் மக்களாகிய சபையாரிடத்திலே பாவப்பரிகாரத்திற்கு இரண்டு வெள்ளாட்டுக் கிடாய்களையும், தகனப்பலிக்கு ஓர் ஆட்டுக் கிடாயையும் வாங்கிக்கொண்டு,
6 காளையை ஒப்புக் கொடுத்துத் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் மன்றாடிய பின்
7 சாட்சியக் கூடாரவாயிலில் ஆண்டவர் திருமுன் அவ்விரண்டு வெள்ளாட்டுக் கிடாய்களை நிறுத்தி
8 அவ்விரு கிடாய்களைக் குறித்து, ஆண்டவருக்கென்று ஒரு சீட்டும்,
9 பரிகாரக்கிடாய்க்கென்று ஒரு சீட்டும் போட்டு ஆண்டவருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக் கிடாயைப் பாவ நிவாரணப் பலியாகச் செலுத்திய பின்,
10 பரிகாரக் கிடாய்க்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக் கிடாயை ஆண்டவர் முன்னிலையில் உயிரோடு நிறுத்தி, அதன் மேல் மன்றாட்டைப் பொழிந்து, அதைப் பாலைநிலத்திற்கு ஓட்டி விடுவான்.
11 இவற்றை வேண்டிய சிறப்போடும் முறைமைப்படியும் நிறைவேற்றிய பின், அவன் இளங்காளையை ஒப்புக்கொடுத்துத் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் வேண்டிக்கொண்டு அதைப் பலியிடுவான்.
12 அவன் பீடத்திலுள்ள தணல்களால் தூபக் கலசத்தை நிரப்பி எடுத்துக்கொண்டும், துபத்திற்காகத் தயாரிக்கப்பட்ட வாசனைப் பொருட்களைப் கையில் வாரிக் கொண்டும் திரைக்கு உட்புறத்திலுள்ள மூலத்தானத்திற்குள் சென்று,
13 தான் சாகாதபடிக்கு, நெருப்பின் மேல் வாசனைப் பொருட்களைப் போட்டு, அவற்றின் புகையும் மணமும் இரக்கத்தின் அரியணையை மூடும்படி செய்வானாக.
14 மேலும், அவன் இளங்காளையின் இரத்தத்தில் சிறிது எடுத்து, ஏழு முறை இரக்கத்தின் அரியணைமீது கீழ்த்திசை நோக்கித் தெளிப்பான்.
15 மேலும், மக்களின் பாவநிவாரணப் பலியாகிய வெள்ளாட்டுக் கிடாயைப் பலியிட்ட பின்பு, அதன் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாய்க் கொண்டு வந்து, இளங்காளையின் இரத்தத்தைக் குறித்துக் கட்டளையிட்டபடி, இரக்கத்தின் அரியணைப் பக்கமாய்த் தெளிக்கக் கடவான்.
16 இஸ்ராயேல் மக்களுடைய அசுத்தங்களினாலும், அவர்களுடைய மீறுதல் முதலிய எல்லாப் பாவங்களினாலும், பரிசுத்த இடத்திற்கு உண்டான அவமரியாதையாலும் பரிசுத்த இடம் ( மேற்சொன்னபடி சுத்திகரிக்கப்படும் ). இறுதியில் குரு அவர்களுடைய வீடுகளின் அசுத்தங்களுக்கிடையே நிறுவப்பட்டுள்ள சாட்சியக் கூடாரத்தையும் அவ்விதமாகவே சுத்திகரிக்கக் கடவார்.
17 தலைமக் குரு தனக்காகவும், தன் வீட்டாருக்காகவும், இஸ்ராயேலின் சபையார் அனைவருக்காகவும் மன்றாடும்படி மூலத்தானத்துக்குள் புகுந்தது முதல் வெளியே வரும் வரை சாட்சியக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கலாகாது.
18 ஆனால், அவன் வெளிப்பட்டு ஆண்டவர் திருமுன்னுள்ள பலிபீடத்தண்டை வந்தபோது, அவன் தனக்காக மன்றாடிக் கொண்டு, இளங்காளையின் இரத்தத்திலும் ஆட்டுக்கிடாயின் இரத்தத்திலும் சிறிது எடுத்துப் பலிபீடத்தின் கொம்புகளின் மேல் சுற்றிலும் வார்த்து,
19 தன் விரலினால் அதை ஏழுமுறை தெளித்து, இஸ்ராயேல் மக்களின் அசுத்தங்கள் நீங்கும்படி சுத்திகரித்துப் புனிதப்படுத்தக் கடவார்.
20 இப்படி மூலத்தானத்தையும், சாட்சியக் கூடாரத்தையும், பீடத்தையும் தூய்மைப் படுத்திய பின், உயிருள்ள வெள்ளாட்டுக்கிடாயை ஒப்புக் கொடுப்பார்.
21 அப்பொழுது அதன் தலை மேல் தம் இரு கைகைளையும் விரித்து, இஸ்ராயேல் மக்களின் முறைகேடு, குற்றம், பாவம் ஆகிய அனைத்தையும் வெளிப்படுத்தி, அவற்றை ஆட்டுக்கிடாயின் தலைமேல் சுமத்தி, அதை அதற்கென்று நியமிக்கப்பட்ட ஓர் ஆள் வழியாய்ப் பாலை நிலத்திற்கு அனுப்பக் கடவார்.
22 இவ்வாறு வெள்ளாட்டுக்கிடாய் அவர்களுடைய கொடுமைகளையெல்லாம் தன்மேல் சுமந்து ஆள் நடமாட்டமில்லாத இடமான பாலை நிலத்திற்குப் போக விடப்பட்ட பின்,
23 ஆரோன் சாட்சியக் கூடாரத்தினுள் திரும்பி வந்து, முன்பு தான் மூலத்தானத்தினுள் புகுவதற்கென்று அணிந்திருந்த மெல்லிய சணல் நூல் ஆடைகளைக் களைந்து அங்கே போட்டு விட்டு,
24 பரிசுத்தமான ஓர் இடத்திலே தண்ணீரில் குளித்துத் தன் ஆடைகளை உடுத்திக்கொண்டு வெளியே வந்து, தன் தகனப்பலியையும், மக்களுடைய தகனப்பலியையும் செலுத்திய பின், தனக்காகவும் மக்களுக்காகவும் மன்றாடக் கடவான்.
25 அப்பொழுது அவன் பாவநிவாரணப்பலியின் கொழுப்பைப் பீடத்தின் மீது எரிப்பானாக.
26 சபிக்கப்பட்ட ஆட்டுக் கிடாயைக் கொண்டு பாய்விட்ட ஆளோ தன் ஆடைகளைத் தோய்த்துக் குளித்த பின் பாளையத்திற்குள் வருவான்.
27 பாவப்பரிகாரத்திற்கென்று பலியிடப்பட்டு மூலத்தானத்திற்குள் இரத்தம் கொண்டு வரப்பட்ட பாவநிவாரணப் பலியாகிய காளையையும் ஆட்டுக்கிடாயையும் பாளையத்துக்கு வெளியே கொண்டு போய், அவற்றின் தோலையும் இறைச்சியையும், சாணியையும் நெருப்பிலே சுட்டெரிக்கக்கடவார்கள்.
28 மேலும், அவற்றைச் சுட்டெரித்தவன் தன் ஆடைகளைத் தோய்த்துத் தானும் தண்ணீரில் குளித்தபின் பாளையத்துக்குள் புகுவான்.
29 இது உங்களுக்கு நித்திய சட்டமாய் இருக்கும். ( அதாவது ) ஏழாம் மாதம் பத்தாம் நாளிலே உங்கள் உடலை ஒறுத்து நோன் பிருக்கக் கடவீர்கள். நீங்களும், குடிமகனும், உங்களிடையே வாழ்ந்து வரும் அந்நியனும் ஒரு வேலையும் செய்யாமல் இருக்க வேண்டும்.
30 அதுவே உங்கள் பரிகார நாளும், உங்கள் பாவமெல்லாம் நீங்கத்தக்க நாளுமாம். அன்று ஆண்டவர் முன்னிலையில் பரிசுத்தமாவீர்கள். அது உங்கள் சுத்திகரிப்பின் நாள்.
31 அது உங்களுக்குச் சிறப்பான ஒற்வு நாள். அந்நாளிலே உங்கள் உடலை ஒறுத்து நோன் பிருக்கக் கடவீர்கள். இது நித்திய கட்டளை.
32 தன் தந்தைக்குப் பதிலாய்க் குருத்துவப்பணி புரியும்படி குருப்பட்டம் பெற்று தன் கைகளில் பூச்சுப் பெற்று புனிதப் படுத்தப் பட்டவனே இப்படிப்பட்ட பரிகாரம் செய்பவன். அவன் மெல்லிய சணல் நூல் அங்கியையும் பரிசுத்த ஆடைகளையும் அணிந்து கொள்வான்.
33 மூலத்தானமும், சாட்சியக்கூடாரமும், பலிபீடமும், எல்லாக் குருக்களும் மக்களும் அவனாலேயே சத்திகரிக்கப்படுவார்.
34 இப்படி ஆண்டில் ஒரு முறை நீங்கள் இஸ்ராயேல் மக்களுக்காகவும், அவர்களுடைய பாவக் கொடுமைகளனைத்திற்காகவும் மன்றாடக் கடவீர்கள். அது உங்களுக்கு சட்டமாக இருக்கும் என்று ( திருவுளம் பற்றினார் ). இவையெல்லாம் மோயீசன் கேட்டு, ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்.
×

Alert

×