Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Leviticus Chapters

Leviticus 11 Verses

1 மேலும் ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:
2 நீங்கள் இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது: பூமியிலிருக்கிற எல்லா மிருகங்களிலும் நீங்கள் உண்ணத்தகும் உயிரினங்களாவன:
3 மிருகங்களின் விரிகுளம்பு உள்ளவற்றையும், அசைபோடுகின்றவற்றையும் நீங்கள் உண்ணலாம்.
4 ஆனால், ஒட்டகம் முதலிய உயிர்களைப் போல், அசைபோட்டும் குளம்பைக் கொண்டிருந்தும், விரிகுளம்பு கொண்டிராதவற்றையெல்லாம் நீங்கள் உண்ணாமல், அசுத்தமுள்ளவைகளாகக் கருதுவீர்கள்.
5 (இவ்வாறு) அசைபோடுகிற குழி முயல் விரிகுளம்பு உள்ளதன்று: ஆதலால், அது அசுத்தமானது.
6 முயலும் அப்படியே. ஏனென்றால் அது அசை போட்டாலும், அதற்கு விரிகுளம்பு இல்லை.
7 பன்றியும் அசுத்தமானது. அது விரிகுளம்பு உடையதாயினும், அசைபோடாது.
8 அவைகள் உங்களுக்கு அசுத்தமானவைகளாதலால், அவற்றின் இறைச்சிகளை உண்ணவும், அவற்றின் பிணங்களைத் தொடவும் வேண்டாம்.
9 நீர்வாழ் உயிர்களுள் உண்ணத் தக்கவைகளாவன: கடல், ஆறு, குளம் ஆகியவற்றில் வாழும் சிறகுகளையும் செதில்களையும் உடைய உயிர்களையெல்லாம் உண்ணலாம்.
10 ஆனால் நீர் நிலைகளில் ஓடி வாழ்கிற உயிர்களில் சிறகுகளும் செதில்களும் இல்லாதனவெல்லாம் உங்களுக்கு வெறுப்புக்குரியனவாயிருக்கக் கடவன.
11 எவ்வளவு வெறுப்புக்குரியனவென்றால் அவற்றின் இறைச்சியையும் நீங்கள் உண்ணலாகாது; அவற்றின் பிணத்தையும் தொடக்கூடாது.
12 சிறகுகளும் செதில்களும் இல்லாத நீர்வாழ் உயிர்கள் எல்லாம் தீட்டுள்ளனவாம்.
13 பறவைகளில் நீங்கள் உண்ணாமல் விலக்க வேண்டியவைகளாவன: கழுகு, கருடன், கடலுராய்ஞ்சி, பருந்து,
14 எல்லாவித இராசாளி, தீக்கோழி, காக்கை,
15 நாரை வல்லூறு
16 இவ்வகையைச் சேர்ந்தவைகள்.
17 கோட்டான், மீன்கொத்தி, இபிஸ் நாரை,
18 அன்னம், கூழைநாரை, சிவந்த காலும் மூக்குள்ள குருகு, கொக்கு,
19 எல்லாவிதக் காதிரியான், புழுக் கொத்தி, வெளவால் முதலியன.
20 பறவைகளுக்குள் நான்கு காலால் நடமாடுவன எல்லாம் உங்களுக்கு வெறுப்புக்குரியனவாய் இருப்பனவாக.
21 ஆயினும், நான்கு காலால் நடமாடியும், தரையிலே தத்திப் பாயும்படி மிக நெடிய பின்னங்காலை உடையனவற்றை, உண்ணலாம்.
22 உதாரணமாக, பிருக்குஸ், அதாக்குஸ், ஒப்பியமாக்குஸ், வெட்டுக்கிளி முதலிய இனத்தைச் சார்ந்தவற்றையெல்லாம் நீங்கள் உண்ணலாம்.
23 பறவைகளில் நான்கு காலால் நடமாடுகிற மற்ற யாவும் உங்களுடைய வெறுப்புக்குரியனவாய் இருக்கும்.
24 அப்படிப்பட்டவைகளின் பிணத்தைத் தொட்டவுடன் தீட்டுப்பட்டு, மாலை வரை தீட்டுள்ளவனாய் இருப்பான்.
25 அவற்றின் பிணத்தை எவனாவது ஒருவன் தேவையின் பொருட்டுச் சுமந்திருந்தாலும் அவன் தன் ஆடைகளைத் தோய்த்துக் கழுவக்கடவான். அவன் மாலை வரை தீட்டுப்பட்டிருப்பான்.
26 நகம் உள்ளனவாய் இருந்தாலும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற உயிர்கள் யாவும் அசுத்தமாய் இருக்கும்.
27 நான்கு கால்களையுடைய உயிர்களுக்குள்ளும் உள்ளங்காலை ஊன்றி நடப்பன எல்லாம் அசுத்தமானவை. அவற்றின் பிணத்தைத் தொட்டவன் மாலை வரை தீட்டுப்பட்டவனாய் இருப்பான்.
28 அவைகளின் பிணத்தைச் சுமந்தவன் தன் ஆடைகளைத் தோய்க்கக் கடவான். அவன் மாலை வரை தீட்டுள்ளவனாய் இருப்பான். இவையெல்லாம் உங்களுக்குத் தீட்டாய் இருக்கக்கடவன.
29 மேலும், பூமியில் நடமாடும் உயிரினங்களுள் உங்களுக்கு அசுத்தமென்று எண்ண வேண்டியவையாவன: பெருச்சாளி, எலி முதலிய இவற்றின் இனத்தைச் சார்ந்தன,
30 உடும்பு, பச்சோந்தி, அரணை, ஓணான், அகழெலி ஆகிய இவையெல்லாம் அசுத்தமானவை.
31 இவற்றின் பிணத்தைத் தொட்டவன் மாலை வரை தீட்டுப்பட்டவனாய் இருப்பான்.
32 அவற்றின் பிணம் எதன் மேல் விழுந்ததோ அதுவும் தீட்டுப்பட்டதாகும். ஆதலால், மரப்பாத்திரம், ஆடை, தோல், கம்பளி, எந்த வேலையும் செய்வதற்கேற்ற ஆயுதங்கள் இவையெல்லாம் தண்ணீரில் கழுவப்பட வேண்டும். அவை மாலை வரை தீட்டாய் இருக்கும். (தண்ணீரில் போட்ட பிறகு ) அவை சுத்தமாகும்.
33 அவற்றுள் ஏதேனும் ஒன்று ஏதாவது ஒரு மண் பாத்திரத்தினுள் விழுந்திருந்தால், அந்த மண் பாத்திரம் தீட்டுப்பட்டதாதலால், அதை உடைத்து விட வேண்டும்.
34 உண்ணத்தக்க பொருளின் மேல் (மேற் சொன்ன பாத்திரத் ) தண்ணீர் பட்டால், அது அசுத்தமாகிறது. குடிக்கத் தக்க எவ்விதப் பாத்திரத்தின் எந்தப் பானமும் அசுத்தமாகும்.
35 அவற்றின் பிணங்களின் யாதொரு பாகமும் எதன் மேல் விழுந்ததோ அதுவும் அசுத்தமாகும். அடுப்பானாலும் தொட்டியானாலும் அசுத்தமானதால், அவை உடைக்கப்படுவனவாக.
36 ஆனால் நீரூற்றுக்களும், கிணறுகளும், ஏரி முதலியவைகளும் தீட்டுப்படா. அவற்றிலுள்ள பிணத்தைத் தொட்டவனோ தீட்டுப்பட்டவன் ஆவான்.
37 அது விதைக்கும் தானியத்தின் மேல் விழுந்தாலும் அது தீட்டுப்படாது.
38 ஆனால், தண்ணீர் வார்க்கப்பட்ட விதையின் மேல் பிணத்தின் யாதொரு பாகம் விழுந்தாலும், அது அப்போதே தீட்டாகி விடும்.
39 நீங்கள் உண்ணத்தக்க ஏதாவதொரு பிராணி செத்தால், அதன் பிணத்தைத் தொட்டவன் மாலை வரை தீட்டுப்பட்டவனாய் இருப்பான்.
40 அதன் இறைச்சியே உண்டவன், அல்லது அதைச் சுமந்தவன் தன் ஆடைகளைத் தோய்த்துக் கழுவக்கடவான். மாலை வரை அவன் தீட்டுப்பட்டிருப்பான்.
41 பூமியின் மேல் ஊர்கிற உயிர்களெல்லாம் உங்களுக்கு வெறுக்கத் தக்கனவாய் இருக்கக் கடவன.
42 அவற்றை உண்ணலாகாது. அவை நான்கு காலால் நடந்தாலும் சரி, வயிற்றால் நகர்ந்தாலும் சரி, கால்கள் உடையனவாயினும் சரி அல்லது தரையில் ஊர்ந்தாலும் சரி, அவ்வித உயிர்களை நீங்கள் உண்ணவேண்டாம். ஏனென்றால் அவை வெறுக்கத்தக்கனவாய் இருக்கின்றன.
43 உங்கள் ஆன்மாக்களை அசுத்தப்படுத்தாதீர்கள். நீங்கள் அசுத்தராய்ப் போகாதபடிக்கு அவைகளில் யாதொன்றையும் தொடாதீர்கள்.
44 ஏனென்றால், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமே. நாம் பரிசுத்தராகையால் நீங்களும் பரிசுத்தர்களாய் இருங்கள். தரையின் மேல் ஊர்கிற எவ்விதப் பிராணிகளாலும் உங்கள் ஆன்மாக்களைத் தீட்டுப்படுத்தாதீர்கள்.
45 ஏனென்றால், உங்களுக்கு நாம் கடவுளாய் இருக்கும்படி, உங்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்டு வந்த ஆண்டவர் நாமே. நாம் பரிசுத்தராகையால் நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்.
46 மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் நீரில் அசைந்துலாவும் எல்லா உயிரினங்களுக்குமடுத்த சட்டம் இதுவே.
47 சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், உண்ணத்தக்க பிராணிகளுக்கும் உண்ணத்தகாத பிராணிகளுக்கும் உள்ள வேறுபாட்டை இதனாலேயே நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்றார்.
×

Alert

×