Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Joel Chapters

Joel 2 Verses

1 சீயோனில் எக்காளம் ஊதுங்கள், நமது பரிசுத்த மலைமேலிருந்து கூக்குரலிடுங்கள்; உலக மக்கள் அனைவரும் நடுங்குவார்களாக! ஏனெனில் ஆண்டவரின் நாள் வருகிறது, மிக அண்மையில் உள்ளது.
2 அதுவோ இருளும் காரிருளும் கவிந்த நாள், கார்முகிலும் மந்தாரமும் சூழ்ந்த நாள்; காலை வெயில் மலை மீது நொடிப் பொழுதில் பரவுவது போல் ஆற்றல் மிக்க பெருங் கூட்டம் வருகின்றது. பண்டு முதல் இதற்கொப்பாய்க் கண்டதுமில்லை, ஊழிக்காலம் வரை இனிக் காணப்போவதுமில்லை.
3 அக்கூட்டத்திற்கு முன்னால் தீயானது சுட்டெரிக்கிறது, அதற்குப் பின்னால் நெருப்புத் தழல் பொசுக்குகிறது; அதன் வருகைக்கு முன் நாடு ஏதேன் சோலை போல் இருக்கிறது; அது போன பின் பாலை நிலம் போல் ஆகிவிடும்; யாதுமே அதற்குத் தப்ப முடியாது.
4 பார்வைக்கு அவை குதிரைகள் போல் இருக்கும், போர்க் குதிரைகள் மேல் அவை விரைந்தோடும்.
5 தேர்ப்படையின் கிறீச்சொலி போல் இரைந்து கொண்டு மலைகளின் உச்சிகள் மேல் தாவிச் செல்லும்; சருகுகளைச் சுட்டெரிக்கும் தீத்தழல் போல் இரைச்சல் செய்து, போருக்கு அணிவகுத்த வலிமை மிக்க சேனை போல முன்னேறும்.
6 அவற்றின் முன் மக்களினங்கள் வேதனையால் துடிக்கும், அச்சத்தால் முகங்கள் எல்லாம் வெளிறிப் போகும்.
7 போர் வீரர்களைப்போல் அவை தாக்குகின்றன, படை வீரர்களைப் போலச் சுவர் மேல் ஏறுகின்றன; ஒவ்வொன்றும் தன் போக்கின்படி முன்னேறுகிறது, தங்கள் வழிகளை விட்டு அவை பிறழ்வதில்லை.
8 ஒன்றையொன்று வரிசையில் நெருக்குவதில்லை, ஒவ்வொன்றும் தன் வழியே செல்லுகின்றது; அம்புமாரி அவற்றின் மேல் பொழிந்தாலும், வரிசை கலையாமல் அவை முன்னேறுகின்றன.
9 நகருக்குள் பாய்கின்றன, மதில்கள் மேல் ஓடுகின்றன, வீடுகள் மேல் ஏறிப் பலகணி வழியாய்த் திருடனைப் போல நுழைகின்றன.
10 அக்கூட்டத்தின் முன்னிலையில் நிலம் நடுங்குகிறது, வானம் விடவிடத்துப் போகிறது; கதிரவனும் வெண்ணிலவும் இருளுகின்றன; விண்மீன்கள் ஒளியிழந்து நிற்கின்றன.
11 ஆண்டவர் தம் சேனைக்கு முன் குரலொலி எழுப்புகிறார், அவருடைய சேனை மிகமிகப் பெரிது; அவராணையை நிறைவேற்றுபவன் ஆற்றல் மிக்கவன், ஏனெனில் ஆண்டவரின் நாள் பெரியது, மிகுந்த அச்சத்தைத் தரக்கூடியது, அதனைத் தாங்கிக் கொள்ளக் கூடியவன் யார்?
12 ஆண்டவர் கூறுகிறார்: "இப்பொழுதாவது நோன்பிருந்து, அழுது புலம்பிக் கொண்டு உங்கள் முழு உள்ளத்தோடு நம்மிடம் திரும்பி வாருங்கள்;
13 உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ள வேண்டா, உங்கள் இதயங்களைக் கிழித்துக் கொள்ளுங்கள்." உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள், ஏனெனில் அவர் அருளும் இரக்கமுமுள்ளவர்: நீடிய பொறுமையுள்ளவர், நிலையான அன்புள்ளவர், செய்யக் கருதிய தீமையைக் குறித்து மனமாறுகிறவர்.
14 ஒரு வேளை அவர் திரும்பவும் மனத்தை மாற்றிக் கொண்டு, நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு உணவுப் பலியும் பானப் பலியும் ஒப்புக் கொடுப்பதற்காக, உங்களுக்கு ஆசி வழங்கமாட்டாரென யார் அறிவார்?
15 சீயோனில் எக்காளம் ஊதுங்கள், உண்ணா நோன்புக்கெனக் காலத்தைக் குறிப்பிடுங்கள் வழிபாட்டுக் கூட்டத்தைக் கூட்டுங்கள்.
16 மக்களைக் கூட்டுங்கள். பரிசுத்த சபையை ஒன்று சேருங்கள், முதியோரைத் திரட்டுகள், சிறுவர்களைக் கூப்பிடுங்கள். பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒன்று கூட்டுங்கள்; மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும், மணமகள் தன் மணமஞ்சத்தை விட்டுப் புறப்படட்டும்.
17 ஆண்டவருடைய ஊழியர்களாகிய அர்ச்சகர்கள் கோயில் முகமண்டபத்திற்கும் பீடத்திற்கும் நடுவில் நின்று கொண்டு, "ஆண்டவரே, உம் மக்கள் மேல் இரங்கியருளும்; உம்முடைய உரிமைச் சொத்தைப் புறவினத்தார் நடுவில் வசை மொழிக்கும் பழிச் சொல்லுக்கும் ஆளாக்காதீர்; 'அவர்களுடைய கடவுள் எங்கே இருக்கிறார்?' என்று மக்களினங்களின் நடுவில் ஏன் சொல்லப்படல் வேண்டும்?" என்று சொல்லி அழுவார்களாக!
18 ஆண்டவர் தம் நாட்டின் மேல் ஆர்வங்கொண்டார், தம்முடைய மக்கள் மீது இரக்கம் காட்டினார்.
19 ஆண்டவர் தம் மக்களுக்குச் சொன்ன மறுமொழி இதுவே: "இதோ, நாம் உங்களுக்குச் கோதுமையும் திராட்சை இரசமும் எண்ணெய்யும் கொடுக்கிறோம்; நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இனிமேல் புறவினத்தார் நடுவில் உங்களை நிந்தைக்கு ஆளாக்க மாட்டோம்.
20 வடநாட்டுப் படையை உங்களிடமிருந்து தொலைவிலோட்டுவோம், வறண்ட பாலைநிலத்திற்கு விரட்டி விடுவோம்; அதன் முன் பகுதியைக் கீழ்க்கடலுக்குள்ளும், பின் பகுதியை மேற்கடலுக்குள்ளும் ஆழ்த்துவோம். நாற்றமும் தீய வாடையும் அங்கே கிளம்பும், ஏனெனில் அப்படையானது பெரியன செய்தது.
21 இஸ்ராயேல் நாடே, அஞ்சாதே, மகிழ்ச்சி கொள், அக்களிப்பு அடை; ஏனெனில் ஆண்டவர் பெரியன செய்தார்.
22 வயல்வெளி மிருகங்களே, அஞ்சாதீர்கள்; ஏனெனில் காட்டிலுள்ள மேய்ச்சலிடங்கள் பசுமையாய் உள்ளன; மரம் தன் கனியைக் கொடுக்கிறது, அத்தி மரமும் திராட்சைக் கொடியும் நிறைந்த பலன் தருகின்றன.
23 சீயோனின் மக்களே, அகமகிழுங்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவரில் அக்களியுங்கள்; ஏனெனில் நீதியைக் காட்ட உங்களுக்கு முன்மழை தந்தார், முன்னாளில் தந்தது போலவே உங்களுக்காக முன்மழையும் பின்மழையும் மிகுதியாய்ப் பொழிந்தார்.
24 புணையடிக்கும் களங்களில் தானியம் நிறைந்திருக்கும், ஆலைகளில் திராட்சை இரசமும் எண்ணெயும் வழிந்தோடும்.
25 நாம் உங்கள் மேல் அனுப்பிய நம் பெரும்படையாகிய வெட்டுக்கிளிகள், பச்சைப்புழுக்கள், பயிர்ப் புழுக்கள், கம்பளிப்புழுக்கள் ஆகியவை அழித்து விட்ட ஆண்டின் பலன்களைத் திரும்ப உங்களுக்குத் தந்திடுவோம்.
26 அவற்றை வயிறார உண்டு நிறைவுபெறுவீர்கள். உங்களுக்காக விந்தைகள் புரிந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் திருப்பெயரை வாழ்த்துவீர்கள். இனி மேல் நம்முடைய மக்கள் ஒருபோதும் அவமானத்துக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள்.
27 இஸ்ராயேல் நடுவில் நாம் இருக்கிறோம் என்றும், ஆண்டவராகிய நாமே உங்கள் கடவுள், நம்மையன்றி வேறெவரும் இல்லையென்றும் அப்போது நீங்கள் அறிந்துகொள்வீர்கள்; நம் மக்கள் இனி ஒருபோதும் அவமானத்துக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள்.
28 அதற்கு பின்பு, எல்லார் மேலும் நம் ஆவியைப் பொழிந்திடுவோம், உங்கள் புதல்வர் புதல்வியர் இறைவாக்குரைப்பர்; உங்கள் முதியோர் கனவுகள் காண்பர், உங்கள் இளைஞர்கள் காட்சிகள் அருளப்பெறுவர்.
29 ஆம், அடிமைகளாய் இருக்கும் ஆண்கள், பெண்கள் மீதும் அந்நாட்களில் நம் ஆவியைப் பொழிந்திடுவோம்.
30 இன்னும் விண்ணிலும் மண்ணிலும், அற்புதங்களைக் காட்டுவோம்; எங்குமே இரத்தமும் நெருப்பும் புகையும் இருக்கும்.
31 அச்சந்தரும் பெருநாளாம் ஆண்டவரின் நாள் வருமுன், கதிரோன் இருளாகும், நிலவோ இரத்தமாய் மாறும்.
32 அப்பொழுது ஆண்டவரின் பெயரைச் சொல்லி மன்றாடும் எவனும் மீட்புப் பெறுவான்; ஏனெனில் ஆண்டவர் சொன்னவாறே, சீயோன் மலையிலும் யெருசலேமிலும் தப்பியவர் வாழ்வர், ஆண்டவர் அழைத்தவர்களும் தப்பிப்பிழைத்தவர்கள் நடுவில் இருப்பார்கள்.
×

Alert

×