Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 38 Verses

1 அப்பொழுது ஆண்டவர் சுழற்காற்றின் நடுவினின்று யோபுவுக்கு கூறிய மறுமொழி பின்ருமாவறு:
2 அறிவில்லாத சொற்களால் நம் ஆலோசனையை இருளாக்கும் இவன் யார்?
3 வீரனைப் போல் உன் இடையை வரிந்து கட்டிக் கொள், நாம் உன்னை வினவுவோம், நீ விடைகூறு.
4 மண்ணுலகுக்கு நாம் அடிப்படையிட்ட போது நீ எங்கே இருந்தாய்? நீ அறிவாளியாயின், எனக்கு விடை கூறு.
5 அதன் அளவுகளைத் திட்டம் செய்தவர் யார்? தெரியுமா உனக்கு? அதன்மேல் அளவு நூலை நீட்டிப் பிடித்தவர் யார்?
6 அதனுடைய அடிப்படைகள் எதன் மேல் இடப்பட்டன? அதன் மூலைக் கல்லை நாட்டியவர் யார்?
7 அப்போது விடிவெள்ளிகள் ஒன்று கூடிப் பாட்டுப் பாடின, கடவுளின் புதல்வர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தனர்.
8 கருப்பையினின்று கடல் உடைப்பெடுத்த போது, கதவுகளிட்டு அதனை அடைத்தவர் யார்?
9 கார் மேகங்களை அதற்கு மேலாடையாய்த் தந்து, சுற்றிக்கிடத்தும் துணியாய்க் காரிருளைக் கொடுத்து,
10 எல்லைகளை அதற்கு நாம் ஏற்படுத்தி, கதவுகளும் தாழ்ப்பாள்களும் அதற்குப் பொருத்தி,
11 இதுவரையில் வா, இதைக் கடந்து வராதே, உன் கொந்தளிப்பின் இறுமாப்பு இங்கே அடங்கி நிற்கட்டும்' என்று நாம் சொன்ன போது நீ எங்கே இருந்தாய்?
12 நீ பிறந்த நாளிலிருந்து இன்று வரை என்றைக்காவது விடியற்காலையைப் புலரும் படி நீ கட்டளை இட்டதுண்டோ? வைகறைப் பொழுதுக்கு அதன் இடத்தை என்றும் நீ காட்டினாயோ?
13 அது நிலவுலகை மூடியுள்ள இருட்போர்வையை பிடித்துதறி பொல்லாதவர்களை அதினின்று உதிர்த்தது உன் ஆணையாலோ?
14 முத்திரையால் களிமண் உருபெறுவது போல், வைகறைப் பொழுதால் மண்ணுலகம் உரு பெறுகிறது; பலவண்ண ஆடை போல் நிலம் காணப்படுகிறது.
15 அப்போது பொல்லாதவர்களிடமிருந்து அவர்கள் ஒளி எடுக்கப்படுகிறது, ஓங்கியிருக்கும் அவர்கள் கை முறிக்கப்படுகிறது.
16 கடலில் ஊற்றுகளில் நீ நுழைந்து பார்த்திருக்கிறாயோ? கடலின் ஆழத்தில் நீ நடமாடியிருக்கிறாயோ?
17 சாவின் வாயில்கள் உனக்கு வெளிப்படுத்தப்பட்டனவோ? அடர்ந்த காரிருளின் கதவுகள் உனக்குப் புலப்பட்டதுண்டோ?
18 மண்ணுலகின் பரப்பை நீ கண்டுபிடித்து விட்டாயோ? இதெல்லாம் நீ அறிந்திருந்தால், விவரித்துச் சொல், பார்ப்போம்.
19 ஒளியின் இருப்பிடத்தை அடையும் வழி எது? இருள் இருக்கும் இடம் எங்கே இருக்கிறது?
20 அவற்றின் உறைவிடங்களுக்கு அவற்றை நீ கூட்டிச் செல்வாயோ? அவற்றின் இருப்பிடங்களுக்கு நீ வழி கண்டு சொல்வாயோ?
21 உனக்குத் தெரிந்திருக்குமே! நீ அப்பொழுதே பிறந்து விட்டாயே! உன் நாட்களின் எண்ணிக்கையும் பெரிதாயிற்றே!
22 பனிக்கட்டியின் பண்டசாலைக்குள் போயிருக்கிறாயோ? கல் மழையின் களஞ்சியங்களையுங் கண்டிருக்கிறாயோ?
23 குழப்பக் காலத்திற்கெனவும், போர், சண்டை நாட்களுக்கெனவும் அவற்றை நாம் சேமித்து வைத்திருக்கிறோம்.
24 வெளிச்சம் பகிர்ந்தளிக்கப்படும் இடத்திற்கு வழி யாது? மண்ணுலகின் மேல் கீழைக்காற்று பரப்பப்படும் இடம் எங்குள்ளது?
25 மனிதர் குடியிருப்பில்லாத நாட்டிற்கு மழை கொணர்ந்து, மனிதர் நடமாட்டமில்லாப் பாலை நிலத்தில் பெய்வித்து,
26 பாழ்வெளியையும், பாலை நிலத்தையும் நீரால் நிரப்பி, நிலம் பசும்புல்லை முளைப்பிக்கும்படி செய்வதற்காக,
27 பெருமழைக்கு வாய்க்கால்கள் வெட்டினவர் யார்? இடிமுழக்கம் குமுற வழிகாட்டினவர் யார்?
28 மழைக்குத் தந்தை உண்டோ? பனித்துளிகளைப் பிறப்பித்தவர் யார்?
29 யார் வயிற்றிலிருந்து பனிக்கட்டி பிறந்தது? வானத்திலிருந்து இறங்கும் உறைபனித் திரையைப் பெற்றவர் யார்?
30 தண்ணீர் கல்லைப் போல இறுகிப் போகிறது, ஆழ்கடலின் நீர்ப்பரப்பு உறைந்து போகிறது.
31 கார்த்திகை விண்மீன்களின் கட்டுகளை நீ கட்டுவாயோ? மிருகசீரிடத்தின் கயிறுகளை நீ அவிழ்க்க இயலுமோ?
32 விடிவெள்ளியைப் பருவந்தோறும் வெளிக் கொணர்வாயோ? சப்தரிஷி கணத்திற்கு உன்னால் வழிகாட்ட முடியுமோ?
33 வான்வெளியின் ஒழுங்கு முறைமைகளை அறிவாயோ? அவற்றின் ஆட்சியை உலகின் உன்னால் நிறுவ முடியுமோ?
34 நீர்த்தாரைகள் பெய்து உன்னை மறைக்கும்படி, கார் மேகங்கள் வரை உன் ஆணை செல்லும்படி நீ செய்வாயோ?
35 'புறப்படுங்கள்' என்று மின்னல்களை அனுப்புவாயோ? 'இதோ வந்துவிட்டோம்' என்று அவை உன்னிடம் கூறுமோ?
36 மனித உள்ளத்தில் ஞானத்தை வைத்தவர் யார்? சேவலுக்கு அறிவைக் கொடுத்தவர் யார்?
37 அறிவுத் திறமையோடு மேகங்களைக் கணக்கெடுப்பவர் யார்? வானத்தின் நீர்ச் சித்தைகளைத் திறந்து விட்டு,
38 நிலத்தின் புழுதி கட்டியாகவும் மணணாங் கட்டிகள் ஒட்டி கொள்ளவும் செய்பவர் யார்?
39 சிங்கமும் இளஞ் சிங்கங்களும் குகைகளில் தங்கியிருக்கும் போது, அல்லது தங்கள் மறைவிடங்களில் பதுங்கியிருக்கும் போது,
40 வேட்டையாடி உம்மால் அவற்றுக்கு இரைதர முடியுமா? அவற்றின் பசியை உம்மால் ஆற்ற முடியுமா?
41 காக்கைக் குஞ்சுகள் இரை வேண்டிக் கடவுளிடம் கரையும் போது, தாய்க் காக்கை இரை தேடி அலையும் போது, காக்கைக்கு இரை தந்து காப்பவர் யார், தெரியுமா?
×

Alert

×