Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Job Chapters

Job 15 Verses

1 அடுத்துத் தேமானியனான ஏலிப்பாஸ் பேசத்தொடங்கினான். அவன் கூறிய மறுமொழி வருமாறு:
2 ஞானமுள்ள ஒருவன் காற்றையொத்த அறிவைக்கொண்டு பதில் கூறுவானோ? கிழக்குக் காற்றைக் குடித்துத் தன் வயிற்றை நிரப்புவானோ?
3 பயனற்ற பேச்சைப் பேசியும், நன்மை பயக்காத சொற்களைச் சொல்லியும் வாதிடலாமோ?
4 நீரோ கடவுளைப் பற்றிய அச்சத்தைத் தவிர்க்கிறீர்; கடவுள் முன்னிலையில் செய்யும் தியானத்தைக் கெடுக்கிறீர்.
5 உமது அக்கிரமம் உம்முடைய வாய்க்குச் சொல்லிக் கொடுக்கிறது, இறைவனைப் பழிப்பவர்களைப் போல் பேச விழைகிறீர்.
6 நானல்ல, உமது வாயே உம்மைக் குற்றவாளியாக்குகிறது, உம்முடைய உதடுகளே உமக்கெதிராய்ச் சாட்சி சொல்லும்.
7 எல்லா மனிதருள்ளும் நீர்தான் முதலில் பிறந்தீரோ? குன்றுகளுக்கு முன்பே நீர் உருவாக்கப்பட்டீரோ?
8 கடவுளின் ஆலோசனைச் சபையில் பேசுவதைக் கேட்டிருக்கிறீரோ? ஞானம் என்பது உமது தனிச் சொத்துரிமையோ?
9 நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? எங்களுக்கு விளங்காத எந்தக் காரியம் உமக்கு விளங்குகிறது?
10 நரை விழுந்தவர்களும் முதியவர்களும் எங்கள் நடுவில் உள்ளனர், உம் தந்தையை விட அவர்கள் வயதில் முதிர்ந்தவர்கள்.
11 கடவுள் உமக்களிக்கும் ஆறுதலும், அன்பாய்ப் பேசும் இன் சொற்களும் உமக்கு அற்பமானவையோ?
12 உமது உள்ளத்தின் உணர்ச்சிக்கு நீர் அடிமைப்படுவானேன்? உம் கண்கள் ஏன் வெறித்துப்பார்க்கின்றன?
13 கடவுளுக்கு எதிராய் உம் உள்ளம் கொதிப்பதேன்? இல்லையேல் இப்படிப்பட்ட சொற்களை நீர் பேசுவானேன்?
14 அற்பமனிதன் பரிசுத்தனாக இருப்பதற்கு, பெண் வயிற்றில் பிறந்தவன் நீதிமானாகத் திகழ்வதற்கு அவன் யார்?
15 இதோ, பரிசுத்தர்கள் மேலும் கடவுள் நம்பிக்கை வைப்பதில்லை, வானங்கள் கூட அவர் கண்முன் தூயவையல்ல.
16 அப்படியிருக்க, அருவருப்பும் சீர்கேடும் நிறைந்து, அக்கிரமத்தை நீரைப் போல் குடிக்கும் மனிதன் எம்மாத்திரம்?
17 கவனமாய்க் கேளும், உமக்கொன்று சொல்லுகிறேன், நான் பார்த்தறிந்ததை உமக்கு அறிவிக்கிறேன்:
18 ஞானிகள் இதையே சொல்லியிருக்கிறார்கள், தங்கள் முன்னோரிடமிருந்து இதைக் கற்றறிந்து, நம்மிடம் மறைக்காமல் சொல்லிச் சென்றனர்.
19 நாடு அளிக்கப்பட்டது அவர்களுக்கு மட்டுமே, அந்நியன் எவனும் அவர்கள் நடுவில் நடமாடியதில்லை.
20 பொல்லாதவனின் வாழ்நாளெல்லாம் வேதனையே, கொடுங்கோலனின் ஆண்டுகள் மிகச் சிலவே.
21 அச்சந்தரும் ஒலிகள் அவன் காதுகளில் ஒலிக்கும், அமைதியாய் இருக்கும் போதே அழிப்பவன் அவன் மேல் பாய்வான்.
22 இருளிலிருந்து திரும்பி வரும் நம்பிக்கை அவனுக்கில்லை, வாளுக்கு இரையாக அவன் குறிக்கப் பட்டிருக்கிறான்.
23 உணவு எங்கே?' என்று கேட்டு அலைந்து திரிகிறான்; இருள் சூழ்ந்த நாள் அருகில் காத்திருப்பது அவனுக்குத் தெரியும்.
24 காரிருள் வேளை அவனைக் கலங்கடிக்கும், துயரமும் மன வேதனையும் அவனைக் கவ்விக் கொள்ளும், போருக்கெழும் அரசனைப் போல் அவனை அவை மேற்கொள்ளும்.
25 கடவுளுக்கெதிராய் அவன் தன் கையை ஓங்கினான், எல்லாம் வல்லவரை இறுமாந்து எதிர்த்தான்;
26 திண்ணிய கேடயத் தாங்கியவனாய், அவர் மேல் கடுமையாய்ப் பாய்ந்தான்.
27 அவனுடைய முகத்தில் கொழுப்பேறியிருக்கிறது, அவனது அடிவயிற்றிலும் கொழுப்புச் சரிந்திருக்கிறது;
28 பாழான நகரங்களில் அவன் குடியிருந்தான், மனிதர் யாரும் குடியிராத, பாழாகி மண் மேடிட வேண்டிய வீடுகளிலேயே அவன் குடியிருந்தான்.
29 ஆகையால், அவன் பணக்காரனாகான், அவன் செல்வம் நிலையாது; நிலத்தில் அவனுடைய வேர் ஊன்றி நில்லாது.
30 இருளிலிருந்து அவன் தப்பவே மாட்டான், அவனுடைய தளிர்களை நெருப்பு பொசுக்கிவிடும், அவனது மலரும் காற்றால் சிதறுண்டு போகும்.
31 வெறுமையை நம்பி அவன் ஏமாறாதிருக்கட்டும்; ஏனெனில் வெறுமையே அவனுக்குக் கிடைக்கும் கைம்மாறு.
32 தனது நேரம் வருமுன்பே அவன் மாண்டு போவான், அவனுடைய கிளைகள் உலர்ந்துபோம்.
33 திராட்சைக் கொடிபோல் பழுக்காத திராட்சைகளையும் ஒலிவ மரம் போல் தன் மலர்களையும் உதிர்த்து விடுவான்.
34 இறைப்பற்றில்லாதவர் கூட்டம் பயன் தராது, கையூட்டுப் பெறுபவரின் கூடாரங்கள் தீக்கிரையாகும்.
35 பொல்லாப்பைக் கருத்தாங்கித் தீமையைப் பெற்றெடுக்கிறார்கள், அவர்கள் உள்ளமோ வஞ்சனையை உருவாக்குகிறது."
×

Alert

×