Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Jeremiah Chapters

Jeremiah 7 Verses

1 ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது:
2 நீ ஆண்டவருடைய வீட்டின் வாயிலில் நின்று கொண்டு அறிவிக்க வேண்டியது இதுவே: இவ்வாயில் வழியாய் ஆண்டவரை வழிபட உள்ளே போகும் யூதாவின் மக்களே, ஆண்டவருடைய வாக்கியத்தைக் கேளுங்கள்:
3 இஸ்ராயேலின் கடவுளும் சேனைகளின் ஆண்டவருமானவர் கூறுகிறார்: உங்கள் வழிகளையும் செயல்களையும் செவ்வைப்படுத்திக் கொள்ளுங்கள்; அப்போது இவ்விடத்தில் உங்களோடு குடியிருப்போம்.
4 இது ஆண்டவருடைய கோயில்! ஆண்டவருடைய கோயில்!! ஆண்டவருடைய கோயில்!!!' என்று சொல்லும் வஞ்சக வார்த்தைகளை நீங்கள் நம்ப வேண்டாம்.
5 உங்களுடைய வழிகளையும் செயல்களையும் நீங்கள் உண்மையாகவே திருத்திக் கொண்டால், ஒருவனுக்கும் மற்றொருவனுக்கும் உண்டாகும் வழக்கில் உண்மையாகவே நீதி வழங்கினால்,
6 அந்நியரையும் அநாதைகளையும் கைம்பெண்களையும் நீங்கள் ஒடுக்காதிருந்தால், மாசற்ற இரத்தத்தை இவ்விடத்தில் சிந்தாதிருந்தால், உங்களுக்கே தீமையாக வேற்றுத் தெய்வங்களைப் பின்தொடராதிருந்தால்,
7 உங்கள் தந்தையர்க்கு முற்காலத்தில் நாம் கொடுத்த இந்த நாட்டில் உங்களோடு என்றென்றும் குடியிருப்போம்.
8 ஆனால், இதோ உங்களுக்குப் பயன் தராத பொய் வார்த்தைகளை நம்புகின்றீர்கள்.
9 களவு, கொலை, விபசாரம், பொய்யாணை, பாகாலுக்கு வழிபாடு, நீங்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களைத் தொழுதல் இவற்றையெல்லாம் செய்து விட்டு,
10 நீங்கள் இங்கு வந்து நம் பெயரால் வழங்கப்படும் இவ் வீட்டில் நம் முன்னிலையில் நின்றுகொண்டு,' நாங்கள் விடுதலை பெற்றோம்' என்று சொல்லுகிறீர்கள்; சொல்லிக் கொண்டு தொடர்ந்து அதே அருவருப்பான செயல்களைச் செய்கிறீர்கள்.
11 என் பெயரால் குறிக்கப்படும் இந்த வீடு உங்கள் கண்களுக்குக் கள்ளர் குகையாய்த் தோன்றுகிறதோ? இதோ நாமே நேரில் பார்த்தோம், என்கிறார் ஆண்டவர்.
12 நாம் முன்னாளில் சீலோவில் குடியிருந்த இடத்துக்குப் போய், நம் மக்களாகிய இஸ்ராயேல் செய்த தீமைக்காக நாம் அதற்குச் செய்தவற்றைக் கவனியுங்கள்.
13 ஆண்டவர் கூறுகிறார்: 'நீங்கள் இச் செயல்களையெல்லாம் செய்ததாலும், முதலிலிருந்தே நாம் உங்களுக்கு வற்புறுத்திச் சொல்லியும் நீங்கள் நமக்குச் செவி சாய்க்காததாலும், நாம் உங்களை அழைத்தும் நீங்கள் பதில் தராததாலும்,
14 நம் திருப்பெயரால் குறிக்கப்படுவதும் நீங்கள் நம்பிக் கொண்டிருக்கிறதுமான இந்தக் கோயிலுக்கும், உங்கள் தந்தையர்க்கும் உங்களுக்கும் நாம் கொடுத்த இந்த நாட்டிற்கும் சீலோவுக்குச் செய்தது போலவே நாம் செய்யப் போகிறோம்.
15 உன் இனத்தார் அனைவரையும், எப்பிராயீம் மக்கள் எல்லாரையும் முற்றிலும் தள்ளி விட்டது போல், உங்களையும் நாம் நம் முன்னிலையிலிருந்து தள்ளிப் போடுவோம்.
16 "(எரெமியாசே), நீ இந்த மக்களுக்காக மன்றாட வேண்டாம். இவர்களுக்காக அழுகையோ வேண்டுதலோ செய்ய வேண்டாம்; பரிந்து பேசவும் வேண்டாம்; ஏனெனில் உன் மன்றாட்டை நாம் கேட்க மாட்டோம்.
17 யூதாவின் பட்டணங்களிலும், யெருசலேமின் தெருக்களிலும் இவர்கள் செய்வதை நீ பார்க்கவில்லையா?
18 பிள்ளைகள் விறகுக் கட்டைகளைச் சேர்க்கின்றார்கள்; பெண்கள் மாவில் எண்ணெய் விட்டுப் பிசைந்து அப்பம் சுட்டு விண்ணரசிக்கும் வேற்றுத் தெய்வங்களுக்கும் படைக்கிறார்கள்; பானப்பலிகளையும் இடுகிறார்கள்.
19 நமக்கோ சினத்தை மூட்டுகிறார்கள். எனக்கு மட்டுமா கோபத்தை மூட்டுகிறார்கள்? தங்களுக்கே அல்லவா வெட்கத்தை வருவித்துக் கொள்கிறார்கள், என்கிறார் ஆண்டவர்.
20 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நம் சினமும் ஆத்திரமும் இந்த இடத்தின் மேலும், மக்கள் மேலும் மிருகங்கள் மேலும் நாட்டின் மரங்கள் மேலும் பூமியின் பலன்கள் மேலும் காட்டப்படும். அவற்றை அழித்தே தீரும்; அவிக்க முடியாது."
21 இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "உங்கள் தகனப்பலிகளை மற்றப் பலிகளோடு சேர்த்து அவற்றின் இறைச்சியை நீங்களே புசியுங்கள்.
22 உங்கள் முன்னோரை எகிப்து நாட்டிலிருந்து விடுவித்த போது நமக்குத் தகனப் பலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்த வேண்டுமென்று அவர்களுக்கு நாம் சொல்லவுமில்லை, கற்பிக்கவுமில்லை.
23 ஆனால் நாம் அவர்களுக்குக் கொடுத்த கட்டளை இதுவே: 'நம் வாக்குக்குச் செவிசாயுங்கள்; அப்போது நாம் உங்களுக்குக் கடவுளாய் இருப்போம்; நீங்கள் நமக்கு மக்களாய் இருப்பீர்கள்; நீங்கள் நலமாய் இருக்கும்படி உங்களுக்கு நாம் கட்டளையிடும் நெறியில் ஒழுகுங்கள்.'
24 ஆனால் அவர்கள் கீழ்ப்படியவுமில்லை, செவிசாய்க்கவுமில்லை; அதற்கு மாறாகத் தங்கள் சொந்தச் சிந்தனைகளின்படியும் தீய உள்ளத்தின் பிடிவாதப் போக்கிலும் நடந்தார்கள்; முன்னேறிச் செல்லாமல் பின்னிட்டுப் போனார்கள்.
25 உங்கள் தந்தையர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்று வரை நம் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை நாளுக்கு நாள் அவர்களிடம் இடைவிடாமல் அனுப்பிக் கொண்டிருந்தோம்.
26 ஆயினும் நமக்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை; நாம் சொன்னதையும் கேட்கவில்லை; அதற்கு மாறாக வளையாத கழுத்தினராய், தங்கள் தந்தையர்களிலும் கெட்டவர்களாய் நடந்தார்கள்.
27 நீ போய் இந்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்வாய்: ஆயினும் அவர்கள் உன் சொற்களைக் கேட்க மாட்டார்கள்; நீ அவர்களைக் கூப்பிடுவாய்; அவர்கள் உனக்குப் பதில் கொடுக்க மாட்டார்கள்.
28 நீ அவர்களைப் பார்த்து, ' தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் சொல்லைக் கேட்காமலும், அவரால் திருத்தப்பட விரும்பாமலும் இருந்து வரும் மக்களினம் இதுவே; உண்மை அழிந்து போயிற்று; அது அவர்கள் வாயிலிருந்து அற்றுப்போயிற்று என்று சொல்.
29 "உன் தலைமயிரை மழித்து எறிந்து விடு: மொட்டைக் குன்றுகளில் நின்று புலம்பியழு; ஏனெனில் தம் சினத்துக்காளான தலைமுறையை ஆண்டவர் புறக்கணித்துத் தள்ளிவிட்டார்.'
30 யூதாவின் மக்கள் நம் கண்முன் தீங்கு புரிந்தார்கள், என்கிறார் ஆண்டவர். நம் பெயரால் குறிக்கப்படும் இந்த வீட்டைத் தீட்டுப்படுத்த அவர்கள் அருவருப்பானவற்றை இதிலே நிலைநாட்டினார்கள்.
31 என்னோன் மகனின் பள்ளத்தாக்கில் இருக்கும் தொப்பேத்து குன்றுகளில் தங்கள் புதல்வர், புதல்வியரை நெருப்பினால் சுட்டெரிக்கும்படி பீடங்களைக் கட்டினார்கள். இவற்றை நாம் கற்பிக்கவுமில்லை, நினைக்கவுமில்லை.
32 ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: இதோ நாட்கள் வருகின்றன. அப்போது இந்தப் பள்ளத்தாக்கு தொப்பேத்து என்றோ, என்னோன் மகனின் பள்ளத்தாக்கு என்றோ சொல்லப்படாது; படுகொலையின் பள்ளத்தாக்கு என்றே சொல்லப்படும். ஏனெனில் பிணங்களைப் புதைக்க இடமில்லாது தொப்பேத்திலேயே புதைப்பார்கள்.
33 இம்மக்களின் உடல்கள் வானத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும். அவற்றை விரட்ட யாருமிருக்கமாட்டார்.
34 அந்நாளிலே யூதாவின் பட்டணங்களிலும் யெருசலேமின் தெருக்களிலும் மகிழ்ச்சியின் முழக்கத்தையும், அக்களிப்பின் ஆரவாரத்தையும், மணவாளனின் குரலையும், மணவாட்டியின் குரலையும் ஓயப் பண்ணுவோம்; ஏனெனில் நாடெல்லாம் காடாகும்.
×

Alert

×