Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Jeremiah Chapters

Jeremiah 51 Verses

1 ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, நாம் பபிலோனுக்கும் அதன் குடிகளுக்கும் எதிராக அழிவு விளைவிக்கும் காற்றை எழுப்பி விடுவோம்;
2 பபிலோனுக்கு எதிராகத் தூற்றுவரை அனுப்புவோம், அவர்கள் அதனைத் தூற்றிப் போடுவார்கள். அதன் நாட்டை வெறுமையாக்கி விடுவார்கள்; ஏனெனில் அதன் துன்ப காலத்தில் எப்பக்கத்தினின்றும் வந்து அதன் மேல் பாய்ந்து விழுவார்கள்.
3 வில் வீரன் வில்லை நாணேற்ற வேண்டாம், தன் கவசத்தை அணிந்து தயாராக நிற்க வேண்டாம்; அதன் இளைஞர்களை விடாதீர்கள், அதன் படையை முற்றிலும் கொல்லுங்கள்.
4 கொலையுண்டவர்கள் கல்தேயர் நாடெல்லாம் விழுவார்கள், காயமடைந்தவர்கள் அதன் மாநிலங்களில் கிடப்பார்கள்.
5 இஸ்ராயேலும் யூதா நாடும் இஸ்ராயேலின் பரிசுத்தருக்கு எதிராய் அக்கிரமத்தினால் நிறைந்திருந்தும், அவர்கள் தங்களுடைய கடவுளாகிய சேனைகளின் ஆண்டவரால் கைவிடப்படவில்லை.
6 பபிலோனின் நடுவிலிருந்து ஒடிப்போங்கள், ஒவ்வொருவனும் தன்னுயிரைக் காத்துக் கொள்ளட்டும்! அதன் அக்கிரமத்துக்காக, நீங்கள் அழிந்து போகாதீர்கள்; ஏனெனில் இது ஆண்டவர் பழிவாங்கும் காலம், அவரே அதற்குக் கைம்மாறு தருவார்.
7 பபிலோன் ஆண்டவர் கையில் பொற் கிண்ணம் போலிருந்தது, அது உலகமனைத்துக்கும் போதையூட்டிற்று; மக்களினங்கள் அதன் இரசத்தைப் பருகின, ஆதலால் மக்களினங்கள் வெறி கொண்டன.
8 திடீரெனப் பபிலோன் விழுந்து நொறுங்கிப் போயிற்று, அதற்காக அழுது புலம்புங்கள்; அதன் காயத்திற்குத் தைலம் பூசுங்கள்,ஒரு வேளை அது நலமடையலாம்.
9 பபிலோனுக்கு நாங்கள் நலந்தர முயன்றோம், ஆனால் அது நலமடையவில்லை; அதனைக் கைவிட்டு விட்டு வாருங்கள், ஒவ்வொருவரும் நம் சொந்த நாட்டுக்குப் போவோம்; ஏனெனில் அதன் தீர்ப்பு வானமட்டும் எட்டிற்று, அதன் கண்டனம் மேகம் வரை உயர்ந்து போனது.
10 ஆண்டவர் நமது நீதியை வெளிப்படுத்தினார்; நம் கடவுளாகிய ஆண்டவரின் செயலை, வாருங்கள், சீயோனில் அறிக்கையிடுவோம்.
11 அம்புகளைத் தீட்டுங்கள்! அம்பறாத்தூணிகளை நிரப்புங்கள்! ஆண்டவர் மேதியர் அரசனின் ஊக்கத்தைத் தூண்டினார்; அவருடைய தீர்மானம் பபிலோனை அழிக்க வேண்டுமென்பது; ஏனெனில் இதுவே ஆண்டவருடைய பழி, தம் திருக்கோயிலை முன்னிட்டுத் தீர்த்துக் கொள்ளும் பழி.
12 பபிலோனின் மதில்கள் மேல் கொடியேற்றுங்கள், காவலை மிகுதியாக்குங்கள்; காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்துங்கள், பதுங்கிப் பாய்வோரைத் தயார் படுத்துங்கள்; ஏனெனில் பபிலோன் குடிகளுக்கு எதிராய் ஆண்டவர் சொன்னதெல்லாம் திட்டமிட்டு நிறைவேற்றுவார்.
13 நீர் நிலைகளின் அருகில் செழித்திருந்து, செல்வங்களில் சிறந்திருக்கும் பபிலோனே, உன் முடிவு நாள் வந்து விட்டது, உன் முழு நாச காலம் நெருங்கி விட்டது.
14 'உன்னை எரிப்பூச்சிகள் போல மனிதர் சூழும்படி செய்வோம், உன்பேரில் பெற்ற வெற்றிக்காகப் பாட்டிசைப்பர்' என்று சேனைகளின் ஆண்டவர் தம் திருப்பெயரால் ஆணையிட்டுள்ளார்.
15 அவரே தம் வல்லமையால் மண்ணுலகைப் படைத்தார், தம் ஞானத்தால் உலகை நிலைநாட்டினார்; தம் அறிவினால் வான் வெளியை விரித்தார்.
16 அவர் குரலொலி வானத்தில் வெள்ளப் பெருக்கின் இரைச்சல்போலக் கேட்கின்றது; அவரே பூமியின் எல்லைகளினின்று மேகங்களை எழுப்புகின்றார், மின்னல்களையும் மழையையும் பொழிகின்றார், தம் கிடங்குகளிலிருந்து காற்றைக் கொண்டு வருகிறார்.
17 மனிதர் யாவரும் மூடர்கள், அறிவில்லாதவர்கள்; தட்டான் ஒவ்வொருவனும் தன் சிலைகளால் மானமிழந்தான்; ஏனெனில் அவன் செய்த படிமங்கள் பொய்; அவற்றில் உயிர் இல்லை.
18 அவை பயனற்றவை; நகைப்புக்குரிய வேலைகள்; தண்டனைக் காலத்தில் அவை பாழாய்ப் போகும்;
19 யாக்கோபின் பங்காயிருப்பவர் அப்படிப்பட்டவர் அல்லர், ஏனெனில் அவரே யாவற்றையும் படைத்தவர்; இஸ்ராயேல் கோத்திரம் அவருடைய உரிமைச் சொத்து, சேனைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர்.
20 "நீ நமக்குச் சம்மட்டியாயும் போர்க் கருவியாயும் உதவினாய்; உன்னைக் கொண்டு மக்களினங்களை நொறுக்கினோம், உன்னைக் கொண்டு அரசுகளை அழித்தோம்;
21 உன்னைக் கொண்டு குதிரையையும் குதிரை வீரனையும் நொறுக்கினோம்; உன்னைக் கொண்டு தேர்ப் படையையும் தேர்ப்படை வீரனையும் நொறுக்கினோம்;
22 உன்னைக் கொண்டு ஆணையும் பெண்ணையும் நொறுக்கினோம். உன்னைக் கொண்டு முதியோரையும் இளைஞர்களையும் நொறுக்கினோம். உன்னைக் கொண்டு வாலிபனையும் கன்னிப் பெண்ணையும் நொறுக்கினோம்;
23 உன்னைக் கொண்டு இடையனையும் அவனுடைய மந்தையையும் நொறுக்கினோம்; உன்னைக் கொண்டு உழவனையும் அவனுடைய எருதுகளையும் நொறுக்கினோம்; உன்னைக் கொண்டு ஆளுநர்களையும் படைத் தலைவர்களையும் நொறுக்கினோம்.
24 பபிலோனையும், கல்தேயாவின் குடிகள் அனைவரையும் சீயோனில் அவர்கள் செய்த தீமைகளுக்கெல்லாம் உங்கள் கண் முன்பாகவே பழிவாங்குவோம், என்கிறார் ஆண்டவர்.
25 நாசம் விளைவிக்கும் மலையே, இதோ, நாம் உனக்கு விரோதமாய் வருகின்றோம்; நீ உலக முழுவதையும் அழிக்கின்றாயே, உனக்கெதிராய் நாம் நம் கைகளை நீட்டுவோம்; உன்னைப் பாறைகளினின்று உருட்டி விடுவோம், உன்னை எரிந்து விட்ட மலையாக்குவோம், என்கிறார் ஆண்டவர்.
26 உன்னிடத்திலிருந்து மூலைக்கல்லுக்கென என்றோ, அடிப்படைக் கல்லென என்றோ கல்லெடுக்க மாட்டார்கள்; நீயோ என்றென்றைக்கும் பாழடைந்தே கிடப்பாய், என்கிறார் ஆண்டவர்.
27 "பூமியின் மேல் கொடியேற்றுங்கள், மக்களினங்கள் நடுவில் எக்காளம் ஊதுங்கள்; அதற்கெதிராய்ப் போர் புரிய மக்களினங்களைத் தயாரியுங்கள், அராரத்து, மென்னி, அஸ்கேனேஸ் என்னும் அரசுகளை அதற்கெதிராய்க் கூப்பிடுங்கள்; அதற்கெதிராய் ஒரு படைத் தலைவனை ஏற்படுத்துங்கள், மயிர் விரித்தோடும் எரிப்பூச்சிகள் போலக் குதிரைகளைக் கொணருங்கள்.
28 அதற்கெதிராய்ப் போர் புரிய மக்களினங்களைத் தயாரியுங்கள், மேதியரின் அரசர்களையும் ஆளுநர்களையும் அதிகாரிகளையும், அவர்கள் ஆட்சிக்குட்பட்ட நாடுகளையும் கூப்பிடுங்கள்;
29 கல்தேயர் நாடு நடுநடுங்கி வேதனையால் துடிதுடிக்கும். ஏனெனில் பபிலோனுக்குக் கெதிராய் ஆண்டவர் திட்டங்கள் தீட்டியிருக்கிறார்; பபிலோனைக் குடியற்ற காடாக்குவதே அவரது நோக்கம்.
30 பபிலோனின் போர்வீரர்கள் போரிடுவதைக் கைவிட்டனர், கோட்டைகளுக்குள்ளேயே தங்கிவிட்டார்கள்; அவர்களுடைய ஆண்மை நசிந்து விட்டது, அவர்கள் அனைவரும் பேடிகள் ஆனார்கள்; அவர்களுடைய உறைவிடங்கள் தீக்கிரையாயின, அதன் கோட்டைத் தாழ்ப்பாள்களெல்லாம் உடைக்கப்பட்டன.
31 அஞ்சற்காரன் பின் அஞ்சற்காரனும், தூதுவன் பின் தூதுவனுமாகப் பபிலோன் மன்னனிடம் ஓடி, 'பட்டணம் ஒரு முனை முதல் மறு முனை வரை பிடிபட்டது;
32 ஆற்றுத் துறைகள் பிடிக்கப்பட்டன, கோட்டைக் கொத்தளங்கள் தீக்கிரையாயின, போர் வீரர்கள் திகில் பிடித்து நிற்கின்றனர்' என்று அரசனுக்கு அறிவிப்பார்கள்.
33 ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: புணையடிக்கும் காலத்தின் களம் போலப் பபிலோன் என்னும் மகள் மிதிபடுவாள்; இன்னும் கொஞ்ச காலம், அதன் அறுவடைக் காலம் வரப்போகிறது.
34 "பபிலோனிய அரசனான நபுக்கோதனசார் என்னை விழுங்கிவிட்டான், என்னை நசுக்கி விட்டான்; என்னை வெறுமையான பாத்திரம் போல் ஆக்கி விட்டான், வேதாளம் போல் என்னை விழுங்கி விட்டான்; என் இனிய உணவுகளால் தன் வயிற்றை நிரப்பிக்கொண்டு என்னைக் கொப்புளித்து வெளியே துப்பி விட்டான்.
35 எனக்கும் என் பிள்ளைகளுக்கும் எதிராய்ப் பபிலோன் செய்த அக்கிரமம் பபிலோன் மேலேயே இருக்கட்டும்" என்கிறது சீயோன். "என் இரத்தப்பழி கல்தேய குடிகள் மேல் இருக்கட்டும்" என்கிறது யெருசலேம்.
36 ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, நாமே உனக்காக வழக்காடுவோம், உனக்காகப் பழிவாங்குவோம்; அதன் கடல்களை வற்றச் செய்வோம், நீரூற்றுகளை நிறுத்தி விடுவோம்.
37 பபிலோன் பாழாகி மண்மேடாகும், குள்ளநரிகளின் குடியிருப்பாகும்; அங்கே குடியிருப்பார் யாருமிரார், அது திகைப்புக்கும் நகைப்புக்கும் இலக்காகும்.
38 அவர்கள் சிங்கங்களைப் போல் ஒருமிக்கக் கர்ச்சிப்பார்கள்; சிங்கக் குட்டிகள் போலப் பிடரியை உலுக்குவார்கள்.
39 அவர்கள் வெம்மையுற்றவர்களாய் இருக்கும் போது, அவர்களுக்கு நாம் பானம் தருவோம்; அவர்கள் மயங்கி விழும் வரை போதை ஏறும்படி அவர்களைக் குடிக்கச் செய்வோம்; அவர்களோ நீங்காத உறக்கத்தில் விழிக்காமல் உறங்கிடுவர், என்கிறார் ஆண்டவர்.
40 ஆட்டுக் குட்டிகளைப் போலவும் ஆட்டுக் கடாக்களைப் போலவும், வெள்ளாட்டுக் கடாக்களைப் போலவும் அவர்களைக் கொலைக்களத்திற்குக் கொண்டு போவோம்.
41 "பபிலோன் பிடிபட்டது எவ்வாறு? உலகில் மிக்கச் சிறந்த பட்டணம் அகப்பட்டதெவ்வாறு? மக்களினங்களுக்குள் பபிலோன் திகைப்புக்கு இலக்கானதெவ்வாறு?
42 பபிலோன் மீது கடல் கொந்தளித்தது, முழங்கி வரும் அலைகளால் அது மூடப்பட்டது;
43 அதன் பட்டணங்கள் திகைப்புக்கு இலக்காயின, நாடு குடிகளற்றுக் காடாயிற்று; அதில் குடியிருப்பார் யாருமில்லை, அதன் வழியாய்க் கடந்து செல்வார் யாருமில்லை.
44 "பபிலோனில் பேலைத் தண்டிப்போம், அவன் விழுங்கினதை வாயினின்று கக்கச் செய்வோம்; மக்களினங்கள் இனி அவனிடம் ஒருபோதும் போக மாட்டார்கள், பபிலோனின் மதில்கள் விழுந்து விட்டன.
45 எம் மக்களே, அதன் நடுவினின்று வெளியேறுங்கள், ஆண்டவரின் ஆத்திரத்திலிருந்து அவனவன் தன்னுயிரைக் காத்துக் கொள்ளட்டும்.
46 உங்கள் உள்ளம் தளராதிருக்கட்டும், நாட்டில் உலவும் வதந்தியைக் கேட்டு அஞ்சாதீர்கள்; ஓராண்டில் ஒரு வதந்தி உலவும், அடுத்த ஆண்டில் இன்னொரு வதந்தி உலவும்: நாட்டில் அக்கிரமம் மலிந்திருக்கும், ஓர் ஆளுநனுக்கு எதிராய் இன்னொரு ஆளுநன் வருவான்.
47 ஆதலால் இதோ, நாட்கள் வருகின்றன, பபிலோனின் படிமங்களைத் தண்டிக்கப் போகிறோம்; அந்த நாடு முழுவதும் அவமானமடையும், அதன் குடிகள் அனைவரும் கொலையுண்டு வீழ்வர்.
48 வானமும் பூமியும் அவற்றிலடங்கிய யாவும், பபிலோனின் வீழ்ச்சியைக் குறித்து மகிழ்ந்து பாடும்; ஏனெனில் வட நாட்டிலிருந்து அதற்கெதிராய்ப் பாழாக்குவோர் வருவர், என்கிறார் ஆண்டவர்.
49 பூமியெங்கணும் கொல்லப்பட்டவர்கள் பபிலோன் பொருட்டு விழுந்தது போல், இஸ்ராயேலில் கொல்லப்பட்டவர்கள் பொருட்டு பபிலோன் விழ வேண்டும்.
50 வாளுக்குத் தப்பியவர்களே, வாருங்கள், நில்லாதீர்கள்; தொலைவிலேயே ஆண்டவரை நினைவு கூருங்கள், உங்கள் இதயத்தில் யெருசலேம் இடம் பெறட்டும்.
51 எங்களுக்கு வெட்கமாயிருக்கிறது; ஏனெனில் நாங்கள் நிந்தையைக் கேட்டோம்; நாணம் எங்கள் முகத்தை மூடிற்று; ஏனெனில் ஆண்டவருடைய கோயிலின் பரிசுத்த இடங்களுக்கு, அந்நியர்கள் வந்து விட்டார்கள்' என்கிறீர்கள்.
52 ஆதலால், அதோ, நாட்கள் வருகின்றன, அந்நாட்டின் படிமங்கள் மேல் தீர்ப்புச் செலுத்துவோம்; அந்நாடெங்கணும் காயம் பட்டோர் கதறுவார்கள், என்கிறார் ஆண்டவர்.
53 வானம் வரையில் பபிலோன் தன்னை உயர்த்திக் கொண்டாலும், தன் வலியரணைப் பலப்படுத்தி உயர்த்தினாலும், பாழாக்குவோரை அதன் மேல் நாம் அனுப்புவோம், என்கிறார் ஆண்டவர்.
54 பபிலோனிலிருந்து கூக்குரல் கேட்கிறது, கல்தேயர் நாட்டில் பேரழிவின் கூக்குரல் உண்டாகிறது.
55 ஏனெனில் ஆண்டவர் பபிலோனை அழிக்கிறார், அதன் பெரும் ஆரவாரத்தை அடக்குகிறார், அவர்களின் அலைகள் பெரும் வெள்ளம் போல் இரையும், அவர்களுடைய கூக்குரல் பேரொலியாய்க் கேட்கும்.
56 ஏனெனில் பாழாக்குவோன் பபிலோன் மீது வந்து விட்டான், அதன் வீரர்கள் பிடிபட்டனர், விற்கள் முறிபட்டன; ஏனெனில் ஆண்டவர் கைம்மாறு கொடுக்கும் கடவுள், அவர் சரிக்குச் சரியாய்ப் பலனளிப்பார்.
57 அதன் தலைவர்களையும் ஞானிகளையும் ஆளுநர்களையும், படைத்தலைவர்களையும் போர் வீரர்களையும் போதையேறச் செய்வோம்; அவர்களோ நீங்காத உறக்கத்தில் விழிக்காமல் உறங்கிடுவர், என்கிறார் சேனைகளின் ஆண்டவர் என்னும் பெயருடைய அரசர்.
58 "சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: பபிலோனின் மிகப் பரந்த கோட்டைச் சுவர் அடிப்படையிலிருந்தே தரைமட்டமாக்கப்படும்: அதன் உயர்ந்த கதவுகள் நெருப்புக்கு இரையாகும், மக்களின் முயற்சிகள் வீணாகும், மக்களினங்களின் உழைப்புகள் தீக்கிரையாகிப் பாழாகும்."
59 யூதாவின் அரசனான செதோசியாஸ் ஆளுகையின் நான்காம் ஆண்டில், மகாசியாவின் மகனான நேரியாசின் மகன் சராயியாஸ் செதோசியாசோடு பபிலோனுக்குப் போகும் போது, எரெமியாஸ் இறைவாக்கினர் சராயியாசுக்கு ஒரு கட்டளை கொடுத்தார்; இந்த சராயியாஸ் என்பவன் அரசனுடைய பயணத்தில் அவனுக்குத் தங்குவதற்கு இடவசதி செய்பவன்.
60 எரெமியாஸ் பபிலோனுக்கு நேர இருந்த தீமைகள் அனைத்தையும், பபிலோனுக்கு எதிரான இறைவாக்குகளையும் ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தார்.
61 எரெமியாஸ் சராயியாசை நோக்கி, "நீ பபிலோனுக்குப் போய்ச் சேர்ந்த பிறகு, இவ்வார்த்தைகளையெல்லாம் வாசி;
62 பின் ஆண்டவரை நோக்கி, 'ஆண்டவரே, இந்த இடத்திற்கு விரோதமாய் நீர் பேசினீர்; இதனைப் பாழாக்கப் போவதாகவும், மனிதனோ மிருகமோ வாழ முடியாத அளவுக்கு இதனை என்றென்றைக்கும் பாலை வெளியாய் ஆக்கப் போவதாகவும் நீர் சொல்லியிருக்கிறீர்' என்று சொல்.
63 இந்த நூலைப் படித்து முடித்த பின்னர், இதில் ஒரு கல்லைக் கட்டி இதனை எப்பிராத்தின் நடுவில் எறிந்து விட்டு:
64 'நான் வரச் செய்யப் போவதாகச் சொன்ன தீமையினின்று எழுந்து மீளாதபடி பபிலோனும் இவ்வாறே மூழ்கிப் போவதாக' என்று சொல்" என்றார். எரெமியாசின் வார்த்தை இத்துடன் முற்றிற்று.
×

Alert

×