Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Jeremiah Chapters

Jeremiah 44 Verses

1 எகிப்து நாட்டைச் சேர்ந்த மக்தலா, தப்னீஸ், மேம்பீஸ் ஆகிய இடங்களிலும், பாத்துரேஸ் என்னும் இடத்திலும் வாழ்ந்த யூதர் அனைவருக்கும் எரெமியாஸ் வழியாய் அருளப்பட்ட வாக்கு இதுவே:
2 இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: யெருசலேமின் மேலும், யூதாவின் மேலும் நாம் பொழிந்த எல்லாத் தீமைகளையும் பார்த்தீர்கள்; இதோ அவை காடாகிக் கிடக்கின்றன; அவற்றில் குடியிருப்பவன் எவனுமில்லை;
3 ஏனெனில் அவர்களோ நீங்களோ உங்கள் தந்தையர்களோ அறிந்திராத அந்நிய தெய்வங்களுக்கு அவர்கள் பலியிட்டுத் தூபம் காட்டி, அதனால் நமக்குக் கோபமூட்டி அக்கிரமம் கட்டிக் கொண்டார்கள்.
4 நாமோ திரும்பத் திரும்ப நம்முடைய ஊழியர்களான இறைவாக்கினர்கள் அனைவரையும் அனுப்பி, 'நாம் வெறுக்கும் இத்தகைய அருவருப்பான செயல்களைச் செய்யாதீர்கள்' என்று சொன்னோம்.
5 ஆயினும் அவர்கள் நமக்குச் செவிமடுக்கவுமில்லை; தங்கள் தீச் செயலை விட்டுத் திரும்பவுமில்லை; அந்நிய தெய்வங்களுக்குப் பலியிடுவதை நிறுத்தவுமில்லை.
6 ஆதலால் நம்முடைய கோபமும் ஆத்திரமும் யூதாவின் பட்டணங்கள் மேலும், யெருசலேமின் தெருக்கள் மேலும் மூண்டெழுந்து, இன்றிருப்பது போல் அவற்றைக் காடாகவும் பாலை நிலமாகவும் ஆக்கின.
7 இப்பொழுதோ இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: உங்களுக்கு யூதாவில் ஆண், பெண், பிள்ளை, குழந்தை அனைவரும் அற்றுப் போய் உங்களுள் ஒருவன் கூட எஞ்சியிராதபடி, ஏன் உங்களுக்கே விரோதமாய் நீங்கள் இத்தகைய பெருந்தீமையைச் செய்கிறீர்கள்?
8 பிழைக்க வந்திருக்கும் இந்த எகிப்து நாட்டிலும் அழிவுற்று உலகத்தின் மக்களினத்தவர் அனைவரின் சாபனைக்கும் நிந்தனைக்கும் ஆளாகும்படி, ஏன் உங்கள் கைகளின் செயல்களால் நமக்குக் கோபமூட்டி, அந்நிய தெய்வங்களுக்குப் பலியிடுகிறீர்கள்?
9 உங்கள் தந்தையின் தீச் செயல்களையும், யூதா நாட்டு அரசிகளின் பழி பாவங்களையும், அவர்களுடைய மனைவிமார் செய்த தீச் செயல்களையும், நீங்கள் செய்த அக்கிரமங்களையும், யூதா நாட்டிலும் யெருசலேமின் வீதியிலும் உங்கள் மனைவிமார் செய்த தீச்செயல்களையும் மறந்து விட்டீர்களா?
10 அன்று முதல் இன்று வரை அவர்கள் மனம் வருந்தவில்லை; ஆண்டவருக்கு அஞ்சி நடக்கவில்லை; திருச்சட்டத்திற்கும், உங்களுக்கும் உங்கள் தந்தையர்க்கும் நாம் கொடுத்த கற்பனைகளுக்கும் ஏற்றவாறு அவர்கள் நடக்கவுமில்லை.
11 ஆதலால் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, உங்களுக்கும் இனித் தீமை செய்யவும், யூதாவை முற்றிலும் அழிக்கவும் போகிறோம்.
12 எகிப்தில் குடியேறி வாழலாமென வந்த யூதாவில் எஞ்சியிருப்போரை நாம் தண்டிப்போம்; அவர்கள் எல்லாரும் எகிப்து நாட்டிலேயே மடிவார்கள்; வாளாலும் பஞ்சத்தாலும் சாவார்கள்; சிறியவன் முதல் பெரியவன் வரை எல்லாரும் வாளாலும் பஞ்சத்தாலும் மாய்வார்கள். பகைமைக்கும் திகைப்புக்கும் சாபனைக்கும், இழிவுக்கும் உள்ளாவார்கள்;
13 யெருசலேமைப் பஞ்சம், வாள், கொள்ளை நோய் இவற்றால் தண்டித்தது போலவே எகிப்து நாட்டில் வாழ்பவர்களையும் தண்டிப்போம்.
14 எகிப்து நாட்டில் அந்நியராய் வந்து பிழைப்பதற்காகத் தங்கியிருக்கிற எஞ்சியிருக்கும் யூதர்களுள் எவனும் தான் திரும்பிப் போய்க் குடியிருக்க விரும்பும் யூதா நாட்டுக்குத் தப்பிப் பிழைத்துத் திரும்ப மாட்டான்; இங்கிருந்து தப்பியோடும் ஒரு சிலர் தவிர, வேறெவரும் திரும்ப மாட்டார்கள்."
15 அப்போது, தங்கள் மனைவியர் அந்நிய தெய்வங்களுக்குப் பலியிட்டதாக அறிந்திருந்த எல்லா ஆண்களும், அங்கே பெருங்கூட்டமாய் நின்று கொண்டிருந்த பெண்கள் அனைவரும், எகிப்து நாட்டிலும், பாத்துரேசிலும் குடியிருந்த மக்கள் யாவரும் எரெமியாசுக்கு மறுமொழியாக,
16 நீ ஆண்டவர் பெயரால் எங்களுக்குச் சொல்லும் வார்த்தைகளை நாங்கள் கேட்க மாட்டோம்.
17 ஆனால் நாங்களும் எங்கள் தந்தையரும் எங்கள் அரசர்களும் எங்கள் தலைவர்களும் யூதாவின் பட்டணங்களிலும், யெருசலேமின் தெருக்களிலும் முன்பு நாங்கள் அனைவரும் செய்தது போல விண்ணரசிக்கு மிருகப் பலிகளும் பானப் பலிகளும் கொடுப்போம்; நாங்கள் செய்து கொண்ட நேர்ச்சைகளை நிறைவேற்றுவோம்; ஏனெனில் நாங்கள் அவ்வாறு செய்து வந்த காலத்தில் நல்லுணவு நிரம்பக் கிடத்தது; தீமையொன்றும் நேராமல் நலமாய் வாழ்ந்திருந்தோம்.
18 நாங்கள் விண்ணரசிக்குத் தூபம் காட்டாமலும், பானப் பலிகளை வார்க்காமலும் விட்ட போது, எங்களுக்கு எல்லாம் குறைத்து விட்டது; வாளாலும் பஞ்சத்தாலும் மடிந்து போனோம்" என்றார்கள்.
19 அப்பொழுது பெண்கள், "மேலும், நாங்கள் விண்ணரசிக்குத் தூபங்காட்டி அவளுக்குப் பானப் பலிகளைக் கொடுத்த போது, எங்கள் கணவன்மாரின் உத்தரவு இல்லாமலா அவளுடைய சாயலைத் தாங்கிய பணியாரங்களைச் சுட்டுப் படைத்துப் பானப்பலிகளை வார்த்தோம்?" என்றார்கள்.
20 அப்பொழுது எரெமியாஸ், இவ்வாறு மறுமொழி சொன்ன எல்லா மக்களையும், ஆண்கள், பெண்கள், மக்கட் கூட்டம் அனைவரையும் நோக்கி,
21 யூதாவின் பட்டணங்களிலும் யெருசலேமின் தெருக்களிலும் நீங்களும் உங்கள் தந்தையரும் உங்கள் அரசர்களும் உங்கள் தலைவர்களும் நாட்டின் எல்லா மக்களும் செலுத்திய பலிகளை ஆண்டவர் நினைவு கூர்ந்து தம் மனத்தில் வைத்துக் கொள்ளவில்லையா?
22 நீங்கள் செய்த பொல்லாத செயல்களையும், நீங்கள் கட்டிக் கொண்ட அருவருப்பான செயல்களையும் ஆண்டவரால் பொறுக்க முடியவில்லை; ஆதலால் உங்கள் நாட்டைப் பாழாக்கி, இப்பொழுது கிடப்பது போல, குடியற்ற பாலைவெளியாகச் செய்து, அதனைத் திகைப்புக்கும் சாபனைக்கும், உள்ளாக்கினார்.
23 நீங்கள் சிலைகளுக்குத் தூபங்காட்டி, ஆண்டவருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்து, ஆண்டவரின் குரலுக்குச் செவி சாய்க்காமலும், அவருடைய திருச்சட்டத்திற்கும் கட்டளைகளுக்கும் சாட்சியங்களுக்கும் ஏற்ப நடவாமலும் போனாதால் தான், நாம் இன்று பார்க்கும் இந்தத் தீமைகள் எல்லாம் உங்களுக்கு வந்து நேர்ந்தன" என்று சொன்னார்.
24 மீண்டும் எரெமியாஸ் எல்லா மக்களையும் பெண்கள் அனைவரையும் நோக்கிச் சொன்னார்: "எகிப்து நாட்டில் வாழும் யூத மக்களே, நீங்களனைவரும் ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்:
25 இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நீங்களும் உங்கள் மனைனவியரும், 'நாங்கள் செய்து கொண்ட நேர்ச்சைகளை நிறைவேற்றியே தீருவோம்: விண்ணரசிக்குத் தூபம் காட்டி, அவர்களுக்குப் பானப்பலிகளை வார்ப்போம்' என்று உங்கள் வாயாலேயே சொன்னீர்கள்; சொன்னபடி உங்கள் கைகளால் நிறைவேற்றியும் விட்டீர்கள். சரி, அவ்வாறே உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள், உங்கள் பொருத்தனைகளைச் செலுத்துங்கள்!
26 ஆதலால் எகிப்து நாட்டில் வாழும் யூத மக்களே, நீங்களனைவரும் ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்; ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நமது பெருமை வாய்ந்த பெயரால் ஆணை! இனி எகிப்து நாடெங்கணும், 'ஆண்டவராகிய இறைவனின் உயிர் மேல் ஆணை' என்று எந்த யூதனின் வாயினின்றும் நமது திருப்பெயர் ஒலிக்காது.
27 இதோ நாம் அவர்கள் மேல் கண்ணாயிருக்கிறோம்; நன்மை செய்யவன்று, தீமை செய்யவே எச்சரிக்கையாய் இருக்கிறோம். யூதாவிலிருந்து எகிப்து நாட்டில் வந்து வாழும் மனிதர் அனைவரும் வாளாலும் பஞ்சத்தாலும் மடிவார்கள்;
28 எகிப்து நாட்டிலிருந்து வாளுக்குத் தப்பி ஒரு சிலரே யூதா நாட்டுக்குத் திரும்புவார்கள்; அப்போது எகிப்து நாட்டுக்குப் பிழைக்க வந்தவர்களான எஞ்சியிருக்கும் யூதர்கள், நிலைத்து நிற்பது தங்கள் வாக்கா, நமது வாக்கா என்பதை அறிந்து கொள்வார்கள்;
29 இந்த இடத்திலேயே நாம் உங்களைத் தண்டிப்போம் என்பதற்கும், நமது வாக்கு உங்களுக்கு விரோதமாய் உன்மையாகும், நிறைவேறும் என்பதற்கும், இதோ இதுவே அறிகுறி, என்கிறார் ஆண்டவர்.
30 ஆண்டவர் கூறுகிறார்: இதோ, யூதாவின் அரசனாகிய செதேசியாசை அவனுடைய பகைவனும், அவன் உயிரைப் பறிக்கத் தேடினவனுமாகிய பபிலோனிய அரசன் நபுக்கோதனசாருக்கு நாம் கையளித்தது போலவே, எகிப்து நாட்டு மன்னனாகிய எப்பிரே என்கிற பார்வோனை அவனுடைய பகைவர்களுக்கும், அவன் உயிரைப் பறிக்கத் தேடுகிறவர்களுக்கும் கையளிப்போம், என்கிறார் ஆண்டவர்" என்று அறிவித்தார்.
×

Alert

×