Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Jeremiah Chapters

Jeremiah 4 Verses

1 ஆண்டவர் கூறுகிறார்: "இஸ்ராயேலே, நீ திரும்பி வர விரும்பினால் நம்மிடமே திரும்பி வர வேண்டும். நமது முன்னிலையிலிருந்து அருவருப்பானவற்றை எடுத்து விடு; அப்போது நீ தயங்கமாட்டாய்.
2 நீ 'உயிருள்ள ஆண்டவர் மேல் ஆணை' என்று உண்மையாயும், நீதியோடும் நேர்மையோடும் ஆணையிடு; அப்போது வேற்றினத்தார் அவரில் தங்களுக்கு ஆசி பெறுவார்; அவரிலேயே அவர்கள் பெருமை பாராட்டுவர்".
3 ஏனெனில் யூதாவின் மக்களுக்கும் யெருசலேமில் வாழ்கிறவர்களுக்கும் ஆண்டவர் கூறுகிறார்: "உங்கள் நிலத்தைப் புதுப்பியுங்கள்; முட்செடிகள் மீது விதைக்க வேண்டாம்;
4 யூதாவின் மக்களே, யெருசலேமின் குடிகளே, ஆண்டவருக்காக உங்களை விருத்தசேதனம் செய்யுங்கள்; உங்கள் இதயத்தின் நுனித்தோலை அகற்றி விடுங்கள்; இல்லையேல் உங்கள் தீய எண்ணங்களின் காரணமாய், நமது கடுங்கோபம் நெருப்புப் போலக் கிளம்பும்; அப்போது அதனை அவிக்க எவராலும் முடியாது."
5 "ஒன்று சேருங்கள்; கோட்டைகள் அமைந்த பட்டணங்களில் நுழைந்து கொள்வோம்' என்று யூதாவுக்கும், யெருசலேமுக்கும் அறிவியுங்கள்; உரக்கக் கூவியும், எக்காளத்தின் முழக்கத்தாலும் நாடெங்கும் அதைத் தெரியப்படுத்துங்கள்.
6 சீயோனில் கொடியேற்றுங்கள், தப்பியோடுங்கள், நிற்கவேண்டாம்; ஏனேனில் வடக்கிலிருந்து தீமையையும் பெரும் அழிவையும் கொண்டு வருகிறோம்.
7 சிங்கம் தன் குகையை விட்டுப் புறப்படுகிறது; மக்களைக் கொள்ளையடிக்கக் கொடியவன் கிளம்பி விட்டான்; உன் நாட்டைக் காடாக்க தன்னிடத்திலிருந்து வெளிப்பட்டுவிட்டான்; உன் நகரங்கள் வாழ்வாரற்றுப் பாழாகும்.
8 ஆதலால் கோணி ஆடை உடுத்திக்கொள்ளுங்கள், அழுது புலம்புங்கள், அலறிக் கதறுங்கள்; ஏனெனில், ஆண்டவரின் கோபாக்கினி நம்மை விட்டு இன்னும் விலகவில்லை.
9 அந்நாளில் அரசன் அறிவு மயங்கும், தலைவர்களின் மனம் மருளும், அர்ச்சகர்கள் திகைத்து நிற்பார்கள், இறைவாக்கினர்கள் மருண்டு போவார்கள், என்கிறார் ஆண்டவர்."
10 அப்பொழுது நான்: "ஆண்டவராகிய இறைவனே, மெய்யாகவே இந்த மக்களையும் யெருசலேமையும் நீர் முற்றிலும் ஏமாற்றிவிட்டீர்; 'நீங்கள் நலமாயிருப்பீர்கள்' என்று சொன்னீர்; இதோ அவர்களுடைய உயிரைக் குடிக்க வாள் வந்து விட்டதே!" என்றேன்.
11 அக்காலத்தில் இந்த மக்களும் யெருசலேமும் கேள்விப்படுவார்: "நம் மக்கள் என்னும் மகளை நோக்கிப் பாலைநிலத்தின் மொட்டை மேடுகளிலிருந்து அக்கினிக் காற்று வீசும்; அது தூற்றவும், தூய்மைப்படுத்தவும் பயன்பட வருங் காற்றன்று;
12 நமது கட்டளையால் வரும் அச்சுறுத்தும் காற்று. இப்பொழுது நாமே பேசுகிறோம்; அவர்கள் மேல் தீர்ப்புக் கூறுகிறோம்."
13 இதோ அவன் கார் மேகங்களைப்போல வருகிறான், அவனுடைய தேர்கள் புயல் மேகங்களைப் போலப் புறப்பட்டு வருகின்றன; அவனுடைய குதிரைகள் கழுகினும் விரைவாய்ப் பறந்து வருகின்றன; ஐயோ, நமக்குக் கேடு! நாமெல்லாம் அழிந்தோம்!
14 யெருசலெமே, நீ தப்பிக்கொள்ள வேண்டுமானால், உன் உள்ளத்தில் படிந்த பாவக் கறையைக் கழுவு; இன்னும் எத்துணைக் காலத்திற்கு, உன் தீய எண்ணங்கள் உன்னிடம் குடி கொண்டிருக்கும்?
15 ஏனெனில், தாண் நகரிலிருந்து ஒரு குரல் அறிவிக்கிறது; எப்பிராயீம் மலைமேலிருந்து தீமையை முன்னறிவிக்கிறது.
16 அவன் வருகிறான் என்று வேற்று நாட்டாருக்கு எச்சரியுங்கள்; யெருசலேமுக்குச் சொல்லுங்கள்: "தூர நாட்டிலிருந்து போர் வீரர்கள் புறப்பட்டு வருகிறார்கள், யூதாவின் நகரங்களுக்கு எதிராகக் கத்துகிறார்கள்,
17 அவர்கள் கழனிக் காவலாளரைப் போல யெருசலேமை வளைத்துக் கொண்டார்கள்; ஏனெனில் அதன் குடிகள் நம் கோபத்தை மூட்டிவிட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.
18 உன் செயல்களும் சிந்தனைகளுமே உன்மேல் இவற்றை வருவித்தன, இதுவே உன் அழிவு, இது மிகவும் கசப்பானது, உன் இதயத்தை ஊடுருவிப் பாய்ந்துவிட்டது."
19 என் குலை நடுங்குகிறது, என் நெஞ்சம் பதைக்கிறது, என் இதயம் என்னில் துடிக்கின்றது; என்னால் வாளாவிருக்க முடியவில்லையே! எக்காளம் ஊதுவது என் காதில் விழுகிறது, போர் இரைச்சலும் கேட்கிறது.
20 துன்பத்தின் மேல் துன்பம் வருகிறது; நாடெல்லாம் காடாகப் பாழானது; என் கூடாரங்களும் இருப்பிடங்களும் திடீரெனத் தகர்ந்து போயின.
21 எதுவரையில் மாற்றான் கொடியைப் பார்த்திருப்பேன்? எதுவரையில் எக்காளச் சத்தத்தைக் கேட்டிருப்பேன்?
22 நம் மக்கள் அறிவிலிகள், நம்மை அறிகிறதில்லை; அவர்கள் ஞானமும் புத்தியும் இல்லாத பிள்ளைகள்; தீமை செய்வதில் வல்லவர்கள், நன்மை செய்யவோ அறியாதவர்கள்."
23 நான் பூமியைப் பார்த்தேன், அது பாழாகி வெறுமையாகிவிட்டது; வானத்தை அண்ணாந்து பார்த்தேன், அங்கு ஒளியே இல்லை;
24 மலைகளைப் பார்த்தேன், இதோ பெரும் அதிர்ச்சி; குன்றுகள் யாவும் நடுங்குகின்றன;
25 உற்று நோக்கினேன், மனிதன் ஒருவனையும் காணோம்; பறவையினம் என்பதோ பறந்தோடிப் போயிற்று.
26 இன்னும் பார்த்தேன், செழிப்பான நாடு சுடுகாடாயிற்று; ஆண்டவரின் முன்னிலையில், அவரது கோபத் தீயால் அதன் பட்டணங்கள் யாவும் பாழாயின.
27 ஏனெனில், ஆண்டவர் கூறுகிறார்: "நாடு முழுவதும் பாழாகும்; ஆயினும் அதனை முற்றிலும் பாழாக்கி விடமாட்டோம்;
28 இதற்காகப் பூமி ஓலமிட்டழும், வானம் துயரப்படும்; நாம் சொல்லி விட்டோம்; நாம் தீர்மானித்து விட்டோம்; அதற்காக நாம் வருந்த மாட்டோம்; தீர்மானத்தை மாற்றவும் மாட்டோம்."
29 குதிரை வீரர் வரும் சத்தத்தைக் கேட்டும், வில்லெறியும் வீரர்கள் வருவதைக் கண்டும், பட்டணத்தார் அனைவரும் ஓட்டமெடுத்தார்கள்; முட்புதர்களுக்குள் ஓடி மறைந்தார்கள்; பாறைகள் மீது ஏறினார்கள்; பட்டணமெல்லாம் வெறுமையாயிற்று, அவற்றில் குடியிருப்போர் யாருமில்லை.
30 நீயோ, பாழடைந்தபின் என்ன செய்வாய்? நீ பட்டாடைகளை உடுத்திப் பொன்னாபரணங்களைப் பூட்டி, கண்களுக்கு மை தீட்டி அணி செய்வதால் பயனென்ன? நீ உன்னை அழகுபடுத்துவது வீண்; உன் ஆசைக் காதலர்கள் உன்னைப் புறக்கணித்தனர்; உன் உயிரைப் பறிக்கத் தேடுகின்றனர்.
31 பிரசவ வேதனைப்படும் பெண்ணின் கூக்குரலைப் போலும், முதற் பிள்ளை பெறும் பெண்ணின் வேதனைக் குரலைப் போலும், சீயோன் மகளின் ஓலத்தைக் கேட்டேன்; மூச்சு விடத் திணறிக் கொண்டு, கையிரண்டும் விரித்து, "எனக்கு ஐயோ கேடு! சூழ்ந்திருக்கும் கொலைஞர் முன்னால் நான் சோர்ந்து போகிறேனே" என்றலறுகிறாள்.
×

Alert

×