Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Jeremiah Chapters

Jeremiah 36 Verses

1 யூதாவின் அரசனாகிய யோசியாசின் மகன் யோவாக்கீமுடைய நான்காம் ஆண்டில், ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது:
2 நீ ஓலைச்சுருள் ஒன்றையெடுத்து நாம் உன்னோடு உரையாடத் தொடங்கிய நாளான யோசியாசின் நாள் முதல் இந்நாள் வரையில் இஸ்ராயேலுக்கும் யூதாவுக்கும், மற்ற மக்களினத்தார் அனைவருக்கும் விரோதமாக நாம் உனக்கு அறிவித்த எல்லா வார்த்தைகளையும் அதில் எழுது:
3 ஒருவேளை நாம் அவர்களுக்குச் செய்ய நினைத்திருக்கும் தீமைகள் அனைத்தையும் யூதாவின் வீட்டார் கேள்விப்படும் போது, அவர்களில் ஒவ்வொருவனும் தன் தீய நெறியை விட்டுவிடக்கூடும்; அப்போது நாம் அவர்களுடைய அக்கிரமத்தையும் பாவத்தையும் மன்னிப்போம்" என்றார்.
4 அப்பொழுது எரெமியாஸ் நேரியாஸ் மகன் பாரூக் என்பவரை அழைப்பித்தார்; பாரூக் வந்து எரெமியாஸ் சொல்லச் சொல்ல ஆண்டவர் அவருக்கு அறிவித்த வார்த்தைகளையெல்லாம் ஓர் ஓலைச்சுருளில் எழுதினார்.
5 எரெமியாஸ் பாரூக்கை நோக்கி, "நான் அடைப்பட்டிருக்கிறேன்; ஆண்டவரின் கோயிலுக்கு நான் போக முடியாது;
6 ஆதலால் நீ அங்கே போய் நோன்பு நாளன்று, ஆண்டவரின் கோயிலில் இருக்கும் மக்களும், தங்கள் பட்டணங்களிலிருந்து வருகிற யூதாவின் வீட்டார் அனைவரும் கேட்கும்படி, நீ என் வாய்மொழியாய்க் கேட்டெழுதிய ஓலைச்சுருளிலிருந்து ஆண்டவருடைய வார்த்தைகளைப் படித்துக் காட்டு.
7 ஒருவேளை அவர்கள் ஆண்டவரின் திருமுன் விழுந்து மன்றாடி அவரவர் தத்தம் தீய நெறியை விட்டுத் திரும்பக்கூடும்; ஏனெனில் ஆண்டவர் இம்மக்களுக்கு விரோதமாகப் பெருங் கோபத்தோடும் ஆத்திரத்தேடும் பேசியிருக்கிறார்" என்றார்.
8 எரெமியாஸ் இறைவாக்கினர் கற்பித்தவாறே நேரியாஸ் மகனான பாரூக் எல்லாவற்றையும் நிறைவேற்றி ஆண்டவரின் கோயிலில் தம் ஓலைச் சுருளிலிருந்து ஆண்டவருடைய வார்த்தைகளை வாசித்தார்.
9 யூதாவின் அரசனாகிய யோசியாசின் மகன் யோவாக்கீமுடைய ஐந்தாம் ஆண்டின் ஒன்பதாம் மாதத்தில் யெருசலேம் குடிகள் யாவரும், யூதாவின் நகரங்களிலிருந்து யெருசலேமுக்கு வந்திருந்த மக்கள் அனைவரும் ஆண்டவரின் முன்னிலையில் நோன்பு ஒன்று அறிவித்தார்கள்.
10 அப்போது பாரூக் ஆண்டவரின் கோயிலுக்குச் சென்று, செயலாளனாகிய சாப்பானின் மகன் காமாரியாஸ் இருந்த மேல் முற்றத்துக் கருவூல அறையில், ஆண்டவருடைய கோயிலின் 'புதிய வாயில்' என்னுமிடத்தில் மக்களனைவரும் கேட்கும்படி எரெமியாசின் வார்த்தைகளை ஓலைச்சுருளிலிருந்து வாசித்தார்.
11 சாப்பான் மகனான காமாரியாசின் மகன் மிக்கயோஸ் ஓலைச்சுருளிலிருந்து வாசிக்கப்பட்ட ஆண்டவருடைய வார்த்தைகளையெல்லாம் கேட்டு,
12 அரசனது அரண்மனைக்குப் போய், அங்கே செயலாளனின் அறைக்குச் சென்றான்; ஆங்கே, இதோ தலைவர்கள் அனைவரும் உட்கார்ந்திருந்தார்கள்; செயலாளனாகிய எலிசாமாவும், செமேயியாஸ் மகன் தலாயியாசும், ஆக்கோர் மகன் எல்நாத்தானும், சாப்பான் மகன் காமாரியாசும், அனானியாஸ் மகன் செதேசியாசும், தலைவர்கள் அனைவரும் அங்கிருந்தார்கள்;
13 மக்களெல்லாரும் கேட்கும்படி பாரூக் ஓலைச்சுருளிலிருந்து வாசித்த வார்த்தைகளையெல்லாம் மிக்கேயாஸ் என்பவன் அவர்களுக்கு அறிவித்தான்.
14 ஆதலால், தலைவர்கள் எல்லாரும், கூசி என்பவனின் மகன் செலேமியாசின் மகனான நத்தானியாஸ் மகன் யூதி என்பவனைப் பாரூக்கிடம் அனுப்பி, "நீ மக்கள் கேட்கும்படி வாசித்துக் காட்டிய ஓலைச் சுருளைக் கையில் எடுத்துக்கொண்டு வா" என்று சொல்லச் சொன்னார்கள்; நேரியாஸ் மகனாகிய பாரூக் ஓலைச் சுருளைக் கையில் எடுத்துக் கொண்டு அவர்களிடம் வந்தார்;
15 அப்போது அவர்கள், "இங்கே உட்கார்ந்து, நாங்கள் கேட்கும்படி இவற்றை வாசி" என்றார்கள்; பாரூக் அவர்களுக்கு வாசித்துக் காட்டினார்.
16 இவர்கள் அவ்வார்த்தைகளையெல்லாம் கேட்டு, ஒருவன் ஒருவனை மருண்டு நோக்கினார்கள்; பின் பாரூக்கைப் பார்த்து, "இவ்வார்த்தைகளை எல்லாம் நாங்கள் போய் அரசனுக்கு அறிவிக்க வேண்டும்" என்றார்கள்.
17 பின்னும் அவர்கள் பாரூக்கிடம், "இவ்வார்த்தைகளை எல்லாம் நீ எவ்வாறு எழுதினாய்? அவன் சொல்லச் சொல்ல நீ எழுதினாயா?" என்று கேட்டார்கள்.
18 பாரூக் அவர்களை நோக்கி, "அவர் எனக்கு இவ்வார்த்தைகளை எல்லாம் வாய்மொழியாய்ச் சொல்லிக் கொண்டே வந்தார்; அவர் சொல்லச் சொல்ல நான் மையால் இவ்வோலைச்சுருளில் எழுதிக்கொண்டேன்" என்றார்.
19 அப்போது தலைவர்கள் பாரூக்கைப் பார்த்து, "நீயும் எரெமியாசும் போய் ஒளிந்து கொள்ளுங்கள்; நீங்கள் இருக்குமிடம் யாருக்கும் தெரியலாகாது" என்றார்கள்.
20 செயலாளனாகிய எலிசாமாவின் அறையிலேயே ஓலைச் சுருளை வைத்து விட்டு அவர்கள் முற்றத்துக்குள் சென்று அரசனைக் கண்டு நடந்தவற்றை எல்லாம் தெரிவித்தார்கள்.
21 அரசன் அந்த ஓலைச் சுருளைக் கொண்டு வருமாறு யூதியை அனுப்பினான்; அவன் செயலாளனாகிய எலிசாமாவின் அறைக்குப் போய், அந்த ஓலைச் சுருளை வாங்கிக் கொண்டு வந்து, அரசனும் அரசனைச் சூழ்ந்திருந்த தலைவர்களும் கேட்க அதனை வாசித்தான்.
22 அது ஆண்டின் ஒன்பதாம் மாதம்; அரசன் தனது குளிர்கால மாளிகையில் இருந்தான்; அவன் முன்பாக எரி கரி நிறைந்த சட்டியொன்று வைக்கப்பட்டிருந்தது.
23 யூதி ஓலைச்சுருளில் மூன்று அல்லது நான்கு பத்திகளை வாசிக்க வாசிக்க, அரசன் தன் சூரிக் கத்தியால் அதை அறுத்து அறுத்துக் கணப்பு நெருப்பில் போட்டுக் கொண்டே வந்தான்; ஓலைச்சுருள் முழுவதும் எரிந்து சாம்பலாகும் வரை இவ்வாறு செய்தான்.
24 ஆனால் அரசனோ, அவ்வார்த்தைகளை எல்லாம் கேட்ட அவனுடைய ஊழியர்களோ அஞ்சவுமில்லை; தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொள்ளவுமில்லை.
25 ஆயினும் எல்நாத்தானும் தலாயியாசும் காமாரியாசும் ஓலைச் சுருளை நெருப்பில் போடாதபடி அரசனைத் தடுத்துப் பார்த்தார்கள்; ஆனால் அரசன் கேட்கவில்லை.
26 அரசனோ இறைவாக்கினரான எரெமியாசையும் அவருடைய செயலாளராகிய பாரூக்கையும் பிடித்து வரும்படி அமலேக்கு மகன் யேரேமியேலுக்கும், எஜிரியேல் மகன் சராயியாசுக்கும், அப்தேயேல் மகன் செலேமியாசுக்கும் கட்டளையிட்டான்; ஆனால் ஆண்டவர் அவர்களை மறைத்து விட்டார்.
27 எரெமியாஸ் வாய்மொழியாய்ச் சொல்லிப் பாரூக் எழுதிய வார்த்தைகள் அடங்கிய ஓலைச் சுருளை அரசன் நெருப்பில் போட்ட பின்னர், ஆண்டவருடைய வாக்கு எரெமியாஸ் இறைவாக்கினருக்கு அருளப்பட்டது:
28 நீ இன்னொரு ஓலைச் சுருளை எடுத்து, யூதாவின் அரசனாகிய யோவாக்கீம் கொளுத்தி விட்ட முன்னைய ஓலைச் சுருளில் அடங்கியிருந்த வார்த்தைகளை எல்லாம் அதில் எழுது.
29 பிறகு நீ யூதாவின் அரசனாகிய யோவாக்கீமை நோக்கி: 'ஆண்டவர் கூறுகிறார்: "பபிலோனிய மன்னன் விரைவில் வந்து இந்நாட்டை அழித்து, அதிலுள்ள மனிதனையும் மிருகத்தையும் வெட்டி வீழ்த்துவான் என்று ஏன் அதில் எழுதினாய்?" என்று எரெமியாசுக்குச் சொல்லியன்றோ நீ அந்த ஓலைச் சுருளைக் கொளுத்தி விட்டாய்;
30 ஆதலால் யூதாவின் அரசனாகிய யோவாக்கீமைக் குறித்து ஆண்டவர் கூறுகிறார்: இனித் தாவீதின் அரியணையில் வீற்றிருக்க யோவாக்கீமுக்குச் சந்ததி இராது; அன்றியும் அவனுடைய உடல் வெளியில் எறியப்பட்டு பகலின் வெப்பத்திற்கும் இருளின் குளிருக்கும் விடப்பட்டுக் கிடக்கும்;
31 நாம் அவனையும் அவன் சந்ததியையும் அவனுடைய ஊழியரையும் அவர்களுடைய அக்கிரமங்களுக்காகத் தண்டிப்போம்; அவர்களின் மேலும், யெருசலேமின் குடிகள் மேலும், யூதாவின் மனிதர் மேலும் அவர்களுக்கு நாம் சொல்லியும் அவர்கள் பொருட்படுத்தாத தீமைகளை எல்லாம் வரச் செய்வோம்' என்கிறார் ஆண்டவர்."
32 எரெமியாஸ் இன்னொரு ஓலைக்சுருளை எடுத்து அதனை நேரியாசின் மகனும் தம் செயலாளருமாகிய பாரூக்கிடம் கொடுத்தார்; அவர் அதில் யூதாவின் அரசனாகிய யோவாக்கீம் எரித்து விட்ட ஓலைச்சுருளில் எரெமியாஸ் சொல்லச் சொல்லத் தாம் முன்பு எழுதியிருந்த வார்த்தைகளை எல்லாம் எழுதினார்; இன்னும் அவற்றைப் போன்ற வேறு வார்த்தைகளையும் சேர்த்து எழுதினார்:
×

Alert

×