Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Jeremiah Chapters

Jeremiah 32 Verses

1 யூதாவின் அரசனான செதேசியாசினுடைய ஆளுகையின் பத்தாம் ஆண்டில், நபுக்கோதனசார் ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் ஆண்டவர் எரெமியாசுக்கு அருளிய வாக்கு.
2 அப்போது பபிலோனிய அரசனது படை யெருசலேமை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தது; எரெமியாஸ் இறைவாக்கினரோ யூதாவின் அரசனது மாளிகையிலிருந்த சிறைக்கூடத்தின் முற்றத்தில் அடைக்கப் பட்டிருந்தார்;
3 செதேசியாஸ் மன்னன் தான் எரெமியாசைச் சிறையில் அடைத்தவன்; அவன் அவரிடம் இவ்வாறு சொன்னான்: "நீ இறைவாக்குரைத்து, 'ஆண்டவர் கூறுகிறார்: இதோ, இப்பட்டணத்தைப் பபிலோனிய மன்னனுக்குக் கையளிப்போம்; அவன் அதைப் பிடித்துக் கொள்வான்;
4 யூதாவின் மன்னனாகிய செதேசியாஸ் கல்தேயருடைய கைகளிலிருந்து தப்பமாட்டான்; அவன் பபிலோனிய அரசனுக்குக் கையளிக்கப்படுவான்; இருவரும் ஒருவரையொருவர் பார்த்து நேருக்கு நேராய்ப் பேசிக் கொள்வார்கள்;
5 அவன் செதேசியாசைப் பபிலோனுக்கு அழைத்துக்கொண்டு போவான்; நாம் அவனைச் சந்திக்கும் வரையில் அவன் அங்கேயே இருப்பான்; நீங்கள் கல்தேயருக்கு எதிராய்ப் போராடினாலும் பயனொன்றுமில்லை, என்கிறார் ஆண்டவர்' என்று எங்களுக்குச் சொல்லுவானேன்?"
6 அதற்கு எரெமியாஸ் சொன்ன மறுமொழி இதுவே: "ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:
7 இதோ உன் உறவினனாகிய செல்லும் என்பவனின் மகன் அனாமேயேல் உன்னிடம் வந்து, 'அநாத்தோத்திலிருக்கும் என் நிலத்தை நீ வாங்கிக் கொள்; அதனை வாங்கிக் கொள்ள உனக்கே உரிமையுண்டு' என்று சொல்வான்.
8 ஆண்டவர் சொன்னது போலவே என் பெரியப்பனின் மகன் அனாமேயேல் சிறைக்கூடத்திற்கு வந்து தாழ்வாரத்தில் என்னைச் சந்தித்து, 'பென்யமீன் நாட்டில் அநாத்தோத்திலிருக்கும் என் நிலத்தை நீ வாங்கிக் கொள்; ஏனெனில் சொத்துரிமையும் மீட்கும் உரிமையும் உன்னுடையவை; நீயே அதை வாங்கிக் கொள்' என்றான். அது ஆண்டவருடைய வாக்கு என அப்போது நான் அறிந்தேன்.
9 அவ்வாறே அநாத்தோத்திலிருக்கும் என் பெரியப்பனின் மகன் அனாமேயேலிடமிருந்து அந்நிலத்தை வாங்கிக் கொண்டு, அதற்கு விலையாகப் பதினேழு வெள்ளிச் செக்கல்களை நிறுத்துக் கொடுத்தேன்.
10 ஒப்பந்தம் எழுதி என் கையொப்பமிட்டுச் சாட்சிகள் முன்னால் பணத்தைத் தராசில் வைத்தேன்.
11 கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் அடங்கிய ஒப்பந்த விலைப் பத்திரத்தில் முத்திரையும் கையொப்பமும் இட்டு, அதனையும், அதன் வெளிப்படை நகல் ஒன்றையும் பெற்றுக் கொண்டேன்.
12 ஒப்பந்த விலைப்பத்திரத்தை மகாசியாஸ் மகனான நேரியின் மகன் பாரூக்கிடம் கொடுத்தேன்; என் பெரியப்பனின் மகன் அனாமேயேலும், ஒப்பந்த விலைப்பத்திரத்தில் கையொப்பமிட்ட சாட்சிகளும், சிறைக் கூட வாயிலில் உடகர்ர்ந்திருந்த யூதரனைவரும் நான் கொடுத்ததைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
13 அவர்கள் முன்னிலையில் பாரூக்கை நோக்கி, 'இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்:
14 கையொப்பமிட்ட இந்த ஒப்பந்த விலைப்பத்திரத்தையும், இந்த வெளிப்படைப் பத்திரத்தையும்- இரண்டையும் பெற்றுக் கொள்; அவற்றை எடுத்து நெடுநாளிருக்கும்படி ஒரு மட்பானையில் வை.
15 ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இந்த நாட்டில் வீடுகளும் கழனிகளும் திராட்சைத் தோட்டங்களும் மறுபடியும் விலைக்கு வாங்கப் படும்' என்று சொன்னேன்.
16 ஒப்பந்த விலைப்பத்திரத்தை நேரி மகன் பாரூக்கிடம் கொடுத்த பின்னர், நான் ஆண்டவரை நோக்கி வேண்டிக் கொண்டேன்:
17 ஆண்டவராகிய இறைவனே, உம்முடைய மிகுந்த வல்லமையாலும், நீட்டிய கரத்தாலும் வானத்தையும் பூமியையும் படைத்தவர் நீரே;
18 உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை; நீரே ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கம் காட்டுகிறவர்; தந்தையரின் அக்கிரமத்திற்காகப் பிள்ளைகளிடம் பழிவாங்குகிறவர்; பெருமையும் வல்லமையும் கொண்ட கடவுளே, சேனைகளின் ஆண்டவர் என்பதே உமது திருப்பெயர்.
19 நீர் ஆலோசனையில் பெரியவர், செயலாற்றுவதில் வல்லவர், ஒவ்வொருவனுடைய நெறிகளுக்கும், செயல்களின் வினைவுக்கும் ஏற்றவாறு கைம்மாறு அளிக்க, ஆதாமின் மக்களுடைய போக்குகளை எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்.
20 எகிப்து நாட்டிலும், இன்று வரையில் இஸ்ராயேலிலும் மற்ற மக்கள் நடுவிலும் புதுமைகளையும் அற்புதங்களையும் செய்தீர்; இன்று போலவே அன்றும் உமது திருப்பெயருக்குப் புகழைத் தேடிக் கொண்டீர்.
21 புதுமைகள், அற்புதங்கள் முதலியவற்றால் நீட்டிய கரத்தாலும், வல்லமை மிக்க கையாலும், அச்சத்தாலும் உம் மக்களை எகிப்து நாட்டிலிருந்து விடுவித்தீர்.
22 பாலும் தேனும் பொழியும் நாட்டை அவர்களுடைய முன்னோர்க்கு ஆணையிட்டுச் சொன்னவாறே அவர்களுக்குக் கொடுத்தீர்.
23 அவர்கள் புறப்பட்டு வந்து அதனை உடைமையாக்கிக் கொண்டார்கள்; ஆனால் அவர்கள் உமது வாக்குக்கு அமைந்து, உமது சட்டத்திற்கேற்றவாறு நடந்தார்கள் அல்லர்; செய்யும்படி அவர்களுக்கு நீர் சொன்னவற்றில் எதையுமே அவர்கள் செய்யவில்லை; ஆதலால் தான் இத்தீமைகளெல்லாம் அவர்களுக்கு நேர்ந்தன.
24 இதோ பட்டணத்தைப் பிடிக்க அதனருகில் கொத்தளங்கள் எழுப்பப்படுகின்றன; வாள், பஞ்சம், கொள்ளை நோய் இவற்றால் இப்பட்டணம் தனக்கு எதிராய்ப் போராடும் கல்தேயர்களுக்குக் கையளிக்கப்படும்; நீர் சொன்னவை யாவும் வந்துற்றன. நீரும் அதைப்பார்க்கிறீர்.
25 ஆண்டவராகிய இறைவனே, பட்டணம் கல்தேயர் கையில் பிடிப்பட்டிருக்கிறது; நீரோ என்னை நோக்கி, "நிலத்தை விலை கொடுத்து வாங்கி, அதற்குச் சாட்சிகளையும் ஏற்படுத்து" என்கிறீரே!
26 அந்நேரத்தில் ஆண்டவரின் வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது:
27 இதோ, நாமே ஆண்டவர், உயிருள்ளவை யாவற்றுக்கும் நாமே கடவுள்; அப்படியிருக்க, நம்மால் ஆகாதது ஏதேனும் உண்டோ?
28 ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: இதோ இந்நகரத்தைக் கல்தேயருக்கும் பபிலோனிய மன்னன் நபுக்கோதனசாருக்கும் கையளிப்போம்; அவர்கள் அதனைப் பிடிப்பார்கள்.
29 கல்தேயர் இந்நகரத்தைத் தாக்க வருவார்கள். அதனையும் அதன் வீடுகளையும் நெருப்புக்கு இரையாக்குவார்கள்; ஏனெனில் வீடுகளின் மேல் தளங்களில் பாகாலுக்குத் தூபம் காட்டியும், அந்நிய தெய்வங்களுக்கு அர்ச்சனைகளை அர்ப்பணம் செய்தும் நமக்குக் கோபமூட்டினார்கள்.
30 இஸ்ராயேலின் மக்களும், யூதாவின் மக்களும் தங்கள் இளமை முதல் நம் முன்னிலையில் எந்நாளும் தீமையைத் தவிர வேறெதும் செய்யவில்லை. இஸ்ராயேலின் மக்கள் இன்று வரையில் தங்கள் கைவேலைப்பாடுகளான சிலைகளால் நமது கோபத்தை மூட்டியதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை, என்கிறார் ஆண்டவர்.
31 ஆதலால் இந்நகரம் கட்டப்பட்ட நாள் முதல் நமது முன்னிலையிலிருந்து எடுபடும் நாள் வரையில் அது நமது சினத்திற்கும் ஆத்திரத்திற்கும் இலக்காகி விட்டது.
32 ஏனெனில் நமக்குக் கோபத்தை மூட்டும்படி, இஸ்ராயேலின் மக்களும் யூதாவின் மக்களும் இவர்களுடைய அரசர்களும் தலைவர்களும் அர்ச்சகர்களும் தீர்க்கதரிசிகளும் யூதாவின் மனிதரும் யெருசலேமின் குடிகளும் தீமை செய்தார்கள்.
33 நாம் அக்கறையோடு அவர்களுக்குத் திரும்பத் திரும்பக் கற்பித்திருந்தும், அவர்கள் நமக்கு முதுகைத் திருப்பினார்களேயன்றி முகத்தைக் காட்டவில்லை; நமது தண்டனையையும் படிப்பினையையும் ஏற்றுக் கொள்ள உடன்படவுமில்லை.
34 நமது பெயரைத் தாங்கிய கோயிலை அசுத்தப்படுத்துமாறு அதில் அருவருப்பானவற்றை வைத்தார்கள்.
35 மெலோக்குக்குத் தங்கள் புதல்வர், புதல்வியரைப் பலியிடுவதற்காக என்னோன் மகனின் பள்ளத்தாக்கில் பாகாலுக்குப் பீடங்களைக் கட்டினார்கள் அப்படிச் செய்யும்படி நாம் அவர்களுக்குக் கற்பிக்கவில்லை; அவர்கள் இத்தகைய அருவருப்பைச் செய்து யூதாவையும் அப்பாவத்தில் வீழ்த்துவார்கள் என்று நாம் கனவிலும் கருதவில்லை.
36 ஆதலால் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர், 'வாள், பஞ்சம், கொள்ளைநோய் இவற்றின் மூலம் பபிலோனிய மன்னனுக்குக் கையளிக்கப்படும்' என்று நீங்கள் குறிப்பிடும் இந்த நகரத்தைப் பற்றிக் கூறுகிறார்:
37 இதோ, நமது சினத்திலும் ஆத்திரத்திலும் கடுங்கோபத்திலும் நாம் அவர்களைத் துரத்தின எல்லா நாடுகளின்றும் அவர்களை ஒருமிக்கக் கூட்டிச் சேர்ப்போம்; அவர்களை இந்த இடத்திற்குக் கூட்டிக் கொண்டு வந்து அச்சமின்றி வாழச் செய்வோம்;
38 அவர்கள் நமக்கு மக்களாயிருப்பார்கள்; நாம் அவர்களுக்குக் கடவுளாய் இருப்போம்.
39 அவர்களுக்கு ஒரே உள்ளத்தையும் ஒரே நெறியையும் அருளுவோம்; அப்போது அவர்கள் தங்கள் நன்மைக்காகவும், தங்களுக்குப் பின் தங்கள் பிள்ளைகளின் நன்மைக்காகவும் என்றென்றும் நமக்கு அஞ்சி நடப்பார்கள்.
40 அவர்களோடு நாம் முடிவில்லா உடன்படிக்கை செய்வோம்; அவர்களுக்கு நன்மை செய்யத் தவற மாட்டோம்; அவர்கள் நம்மை விட்டு விலாகாதபடி நம்மைப் பற்றிய பயத்தை அவர்கள் உள்ளத்தில் பதியச் செய்வோம்.
41 நாம் அவர்களுக்கு நன்மை செய்து மனங்களிப்போம்; உண்மையாகவே, முழு மனத்தோடும் முழு இதயத்தோடும் அவர்களை இந்நாட்டில் நிலைநாட்டுவோம்;
42 ஆண்டவர் இன்னும் கூறுகிறார்: இத்தகைய பெருந்தீமைகளையெல்லாம் அந்த மக்களுக்குக் கொண்டு வந்தது போலவே, நாம் அவர்களுக்கு அறிவிக்கும் நன்மைகளையெல்லாம் அவர்கள் மேல் பொழிவோம்.
43 கல்தேயர்களுக்குக் கையளிக்கப்பட்டு, மனிதரும் மிருகமுங் கூட அற்றுப்போய்க் காடாகி விட்டதென்று நீங்கள் சொல்லும் இந்த நாட்டில் இன்னும் கழனிகளை வைத்திருப்பார்கள்.
44 பென்யமீன் நாட்டிலும், யெருசலேமைச் சுற்றிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைநாட்டிலிருக்கும் நகரங்களிலும், சமவெளிப் பட்டணங்களிலும் தென்னாட்டு நகரங்களிலும் நிலங்கள் விலைக்கு வாங்கப்படும்; ஒப்பந்த விலைப்பத்திரங்கள் எழுதப்படும்; முத்திரை இடப்படும்; சாட்சிகள் கையொப்பமிடுவர்; ஏனெனில், நாம் அவர்களை முந்திய நன்னிலைக்கு மீட்டு வருவோம், என்கிறார் ஆண்டவர்."
×

Alert

×