Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Jeremiah Chapters

Jeremiah 29 Verses

1 நபுக்கோதனசார் யெருசலேமினின்று பபிலோனுக்குக் கொண்டு போனவர்களுள் மீதியான மூப்பர்கள், அர்ச்சகர்கள், தீர்க்கதரிசிகள், இன்னும் மக்கள் எல்லாருக்கும் எரெமியாஸ் இறைவாக்கினர் எழுதியனுப்பிய திருமுகத்தின் வாக்கியங்கள்.
2 எக்கோனியாஸ் அரசனும் அரசியும், அவனுடைய அண்ணகரும், யூதா, யெருசலேமின் தலைவர்களும், தச்சர்களும் கொல்லர்களும் யெருசலேமை விட்டுப் போன பின்னர்,
3 யூதாவின் அரசனான செதேசியாஸ் பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசாரிடம் பபிலோனுக்கு அனுப்பிய சப்பானின் மகன் எலாசா வழியாகவும், எல்சியாசின் மகன் காமாரியாஸ் வழியாகவும் எரெமியாஸ் அந்தத் திருமுகத்தை அனுப்பினார்.
4 அதில் எழுதியிருந்தது: "யெருசலேமிலிருந்து பபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்ட அனைவருக்கும் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் சொல்லுகிறார்:
5 வீடுகளைக் கட்டிக் கொண்டு வாழுங்கள்; தோட்டம் துரவுகளை வைத்து அவற்றின் விளைவைச் சாப்பிடுங்கள்.
6 பெண் தேடி மணமுடித்துக் கொண்டு, புதல்வர் புதல்வியரைப் பெற்று வாழுங்கள்; உங்கள் புதல்வியருக்கு மாப்பிள்ளைகளைத் தேடுங்கள்; உங்கள் புதல்வர்களுக்குப் பெண் பார்த்து மண முடியுங்கள்; அவர்களும் புதல்வர் புதல்வியரைப் பெற்றெடுக்கட்டும்; அங்கேயே பெருகிப் பலுகுங்கள்; எண்ணிக்கையில் குறைந்து விடாதீர்கள்.
7 நாடு கடத்தப்பட்டு நீங்கள் குடியிருக்கும்படி நாம் செய்த அந்தப் பட்டணத்திற்குச் சமாதானத்தைத் தேடுங்கள்; அந் நகருக்காக ஆண்டவரை மன்றாடுங்கள்; ஏனெனில் அதன் சமாதானத்தில் தான் உங்கள் சமாதானமும் அடங்கியிருக்கிறது.
8 ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் நிமித்திகரும் உங்களை மயக்காதிருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்; அவர்கள் காணும் கனவுகளையும் பொருட்படுத்தாதீர்கள்; ஏனெனில், அவர்கள் நமது பெயரால் உங்களுக்குப் பொய்யைச் சொல்லுகிறார்கள்;
9 நாம் அவர்களை அனுப்பவில்லை, என்கிறார் ஆண்டவர். இதோ, ஆண்டவர் கூறுகிறார்:
10 பபிலோனில் எழுபது ஆண்டுகள் கடந்த பின்னர், நாம் உங்களை வந்து சந்திப்போம்; உங்களை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்போம் என்று உங்களுக்கு நாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவோம்.
11 ஏனெனில் நாம் உங்களைப் பற்றிக் கொண்டிருக்கும் எண்ணங்கள் நமக்குத் தெரியும்; அவை உங்களுக்கு வளமான பிற்காலத்தையும் நம்பிக்கைகையும் தரும்படி நாம் கொண்ட சமாதானத்தின் எண்ணங்களே தவிர, துன்பத்தின் எண்ணங்கள் அல்ல.
12 நீங்கள் நம்மை மன்றாடித் திரும்ப வருவீர்கள்; நீங்கள் நம்மை வேண்டுவீர்கள்; நாம் உங்கள் மன்றாட்டைக் கேட்டருளுவோம்.
13 நீங்கள் நம்மைத் தேடுவீர்கள்; முழு இதயத்தோடு தேடி நம்மைக் கண்டடைவீர்கள்;
14 ஆம், மெய்யாகவே நம்மைக் கண்டடைவீர்கள், என்கிறார் ஆண்டவர்; உங்களை அடிமைத்தனத்தினின்று மீட்டுக்கொண்டு வருவோம்; நாம் உங்களை விரட்டின எல்லா இடத்தினின்றும், எல்லா மக்களிடமிருந்தும் உங்களை ஒருமிக்கச் சேர்ப்போம், என்கிறார் ஆண்டவர். எந்த இடத்திலிருந்து நாம் உங்களை அனுப்பினோமோ, அந்த இடத்திற்கே திரும்பி வரச் செய்வோம்.
15 ஆண்டவர் பபிலோனில் எங்களுக்கு இறைவாக்கினர்களைத் தோற்றுவித்துள்ளார்' என்கிறீர்கள்.
16 ஆதலால், தாவீதின் அரியணையில் வீற்றிருக்கும் அரசனைப் பற்றியும், இப்பட்டணத்தில், வசிக்கும் எல்லா மக்களைக் குறித்தும், உங்களோடு கூடச் சிறையிருப்புக்குக் கொண்டு போகப்படாத உங்கள் சகோதரரைப் பற்றியும் ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்.
17 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் அவர்களுக்குப் பஞ்சம், வாள், கொள்ளை நோய்களையும் அனுப்புவோம்; தின்ன முடியாத அளவுக்குக் கெட்டுப் போன காட்டத்திப் பழங்களுக்கு அவர்களைச் சமமாக்குவோம்.
18 அன்றியும் நாம் அவர்களைப் பஞ்சம், வாள், கொள்ளைநோய் இவற்றால் துன்புறுத்துவோம்; உலகத்தின் எல்லா நாடுகளுக்கும் திகிலாய் இருக்கச் செய்வோம்; நாம் அவர்களைச் சிதறடித்த எல்லா இனத்தார் நடுவிலும் அவர்களைச் சாபனைக்கும் திகைப்புக்கும் நகைப்புக்கும் அவமானத்திற்கும் உள்ளாக்குவோம்.
19 ஏனெனில், நாம் தொடக்க முதல் நம்முடைய ஊழியர்களாகிய இறைவாக்கினர்கள் வழியாய்த் திரும்பத் திரும்பத் தெரிவித்த வாக்கியங்களை அவர்கள் கேட்கவில்லை; நீங்களும் கேட்கவில்லை, என்கிறார் ஆண்டவர்.'
20 ஆதலால் யெருசலேமிலிருந்து பபிலோனுக்கு நாம் நாடு கடத்திய நீங்கள் அனைவரும் ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்:
21 நமது பெயரால் உங்களுக்குப் பொய்யைப் பிதற்றும் கோலியாஸ் மகன் ஆக்காபைக் குறித்தும், மாவாசியாஸ் மகன் செதேசியாசைப் பற்றியும் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நாம் அவர்களைப் பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசாருக்குக் கையளிப்போம்; அவன் அவர்களை உங்கள் கண் முன்பாகக் கொலை செய்வான்,
22 யூதாவிலிருந்து பபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட அனைவரும் இனி மேல் அவர்களை உதாரணமாக வைத்து, யாதொருவனைச் சபிக்கும் போது, "பபிலோனிய அரசன் நெருப்பினால் சுட்டெரித்த செதேசியாசைப் போலவும், ஆக்காபைப் போலவும் ஆண்டவர் உன்னை நடத்துவாராக!" என்பார்கள்.
23 ஏனெனில், அவர்கள் இஸ்ராயேலுக்கு மதிகேடானதைச் செய்தார்கள்; தங்கள் அயலாருடைய மனைவியரோடு விபசாரம் செய்தார்கள்; நாம் கட்டளையிடாதிருக்கும்போதே, நமது திருப்பெயரால் பொய்த் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்; அதெல்லாம் நமக்கு நன்றாய்த் தெரியும்; நாமே அதற்குச் சாட்சி, என்கிறார் ஆண்டவர்."
24 எரெமியாசின் திருமுகத்திற்கு மறுப்பு: மறுபடியும் ஆண்டவர் என்னை நோக்கி: நீ நெக்கோலமித்தனான செமேயியாசைப் பார்த்துச் சொல்:
25 இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நீ யெருசலேமில் இருக்கும் எல்லா மக்களுக்கும், மாவாசியாசின் மகனும் அர்ச்சகர்களுமாகிய செப்போனியாசுக்கும், மற்ற அர்ச்சகர்களுக்கும் உன் பெயரால் திருமுகங்களை எழுதியனுப்பினாய்;
26 அவற்றில்: வெறி பிடித்துத் தீர்க்கதரிசனம் உரைக்கும் எம்மனிதனையும் நீர் விசாரித்துத் தொழுவிலும் சிறையிலும் போடுமாறு, ஆண்டவருடைய கோயிலில் நீர் தலைவராயிருக்கும்படி, ஆண்டவர் உம்மை யோயாதாவுக்குப் பதிலாய் அர்ச்சகராக ஏற்படுத்தினாரே!
27 அப்படியிருக்க, உங்களுக்குத் தீர்க்க தரிசனம் சொல்லும் அநாத்தோத்து ஊரானாகிய எரெமியாசை நீர் ஏன் கண்டிக்கவில்லை?
28 ஏனெனில் பபிலோனிலுள்ள எங்களுக்கு அவன், "உங்கள் அடிமை வாழ்வு நெடுங்காலம் நீடிக்கும்; வீடுகளைக் கட்டிக் கொண்டு வாழுங்கள்; தோட்டம் துரவுகளை அமைத்து அவற்றின் பலனைச் சாப்பிடுங்கள்" என்று எழுதியிருக்கிறான்' என்று சொல்லியிருக்கிறாய்?"
29 அர்ச்சகராகிய சொப்போனியாஸ் அடிக்கடி தந்தை இறைவக்கினரான எரெமியாசுக்குப் படித்துக் காட்டினார்;
30 அப்பொழுது ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது:
31 நாடுகடத்தப்பட்டவர்கள் எல்லாருக்கும் நீ இவ்வாறு எழுதியனுப்பு: 'நெக்கேலாம் ஊரானாகிய செமேயியாசைக் குறித்து ஆண்டவர் கூறுகின்றார்: நாம் அனுப்பாமலே செமேயியாஸ் உங்களுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தான்; உங்களுக்குப் பொய் சொல்லி அதை நம்ப வைத்தான்;
32 ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நெக்கேலாம் ஊரானாகிய செமேயியாசையும் அவன் சந்ததியாரையும் நாம் தண்டிப்போம்; நம் மக்களுக்கு நாம் செய்யும் நன்மைகளைச் காண அவன் சந்ததியில் ஒருவனும் இரான்; ஏனெனில் அவன் ஆண்டவருக்கு எதிராய்ப் பேசினான், என்கிறார் ஆண்டவர்."
×

Alert

×