Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Jeremiah Chapters

Jeremiah 15 Verses

1 அப்பொழுது ஆண்டவர் எனக்குச் சொன்னார்: "மோயீசனும் சாமுவேலும் நம் முன்னிலையில் வந்து நின்று மன்றாடினாலும் நம் உள்ளம் இந்த மக்கள் பக்கம் திரும்பாது; நமது முன்னிலையிலிருந்து அவர்களை விரட்டு; தூரமாய் அவர்கள் தொலைந்து போகட்டும்!
2 'நாங்கள் எங்கே போவோம்? 'என்று அவர்கள் கேட்பார்களாகில், நீ அவர்களுக்குச் சொல்ல வேண்டியது இதுவே: ஆண்டவர் கூறுகிறார்: எவன் சாவுக்குரியவனோ அவன் சாவுக்கும், எவன் வாளுக்குரியவனோ அவன் வாளுக்கும், எவன் பஞ்சத்துக்குரியவனோ அவன் பஞ்சத்துக்கும், எவன் அடிமைத்தனத்திற்கு உரியவனோ அவன் அடிமைத்தனத்திற்கும் போகட்டும்!"
3 நால்வகை நாசக்காரரை அவர்களுக்கு எதிராய் நாம் ஏற்படுத்துவோம்: அவர்களை வதைக்க வாளையும், கிழிக்க நாய்களையும், அடித்துக் கடித்து விழுங்க வானத்துப் பறவைகளையும், பூமியின் மிருகங்களையும் அனுப்புவோம்.
4 யூதாவின் அரசனாகிய எசேக்கியாசின் மகனான மனாசே என்பவன் யெருசலேமில் செய்த எல்லா அக்கிரமங்களுக்காகவும் அவர்களை உலகிலுள்ள அரசுகளுக்கெல்லாம் கொடூரக் காட்சியின் அடையாளமாக்குவோம்.
5 "யெருசலேமே, உன்மேல் இரக்கம் காட்டுகிறவன் யார்? உனக்காக வருத்தப்படுகிறவன் யார்? உன்னிடம் திரும்பி உன் நலத்தை விசாரிக்கிறவன் யார்?
6 நீ நம்மைக் கைவிட்டாய்; பின்னடைந்து போனாய்; ஆதலால் நம் கரத்தை உனக்கெதிராய் நீட்டி உன்னை வதைத்தோம். உனக்கு இரக்கம் காட்டி நாம் சலித்துப் போனோம், என்கிறார் ஆண்டவர்.
7 பூமியின் நாற்புறங்களிலும் அவர்களை நாம் தூற்றுக் கூடையால் தூற்றியிறைத்தோம். அவர்களை வதைத்தோம்; நம் மக்களைச் சிதறடித்தோம். ஆயினும் அவர்கள் தீ நெறிகளினின்று திரும்பி வரவில்லை.
8 கடற்கரை மணலை விட அவர்களுள் கைம்பெண்களை மிகப் பலராக்கினோம்; வாலிபர்களின் தாய்மார்களுக்கு எதிராகப் பட்டப் பகலில் கொலைகாரனைக் கூட்டி வந்தோம்; கவலையும் திகிலும் அவர்களைத் திடீரெனத் தாக்கச் செய்தோம்.
9 ஏழு பேரைப் பெற்றவள் சோர்வுற்றாள்; அவள் மயங்கி விழுந்தாள்; வெளிச்சம் இருக்கும் போதே அவள் வாழ்வின் மாலை நேரம் வந்து விட்டது, வெட்கமும் நாணமுமே அவளுக்குரியன. அவளுடைய மீதிப் பிள்ளைகளைப் பகைவர் முன்னிலையில் வாளுக்கு இரையாக்குவோம், என்கிறார் ஆண்டவர்."
10 "என் தாயே, எனக்கு ஐயோ கேடு! நாடெங்கும் வழக்குக்கும் விவாதத்துக்கும் காரணமாய் இருக்கும்படி என்னை நீ பெற்றாயே! நான் வட்டிக்குப் பணம் கொடுக்கவுமில்லை; அல்லது வட்டிக்குக் கடன் வாங்கியதுமில்லை; இருப்பினும் என்னை எல்லாரும் சபிக்கிறார்கள்."
11 அதற்கு ஆண்டவர் கூறினார்: "நீ இறுதிக் காலத்தில் நலமடைவாய்; உன் துன்ப நாட்களிலும் இடையூறு காலத்திலும் உன் பகைவர்க்கு எதிராய் நாம் உனக்கு உதவி செய்வோம் என்று ஆணையிடுகிறோம்.
12 வட நாட்டிலிருந்து வந்த இரும்பையும் வெண்கலத்தையும் உடைக்க வல்லர் யார்?
13 உங்கள் எல்லைப் புறங்களின் எல்லா இடங்களிலும், உங்கள் பாவங்கள் அனைத்திற்கும் தண்டனையாக உங்கள் செல்வங்கள், கருவூலங்கள் முதலியவற்றை இலவசக் கொள்ளைப் பொருளாய்க் கொடுப்போம்.
14 நீங்கள் அறியாத நாட்டில் உங்கள் பகைவர்க்கு உங்களை ஊழியம் செய்ய வைப்போம்: ஏனெனில் நமது கோபத் தீ மூண்டுவிட்டது; அது என்றென்றைக்கும் எரிந்துகொண்டிருக்கும்."
15 ஆண்டவரே, நீர் என்னை அறிவீர்; என்னை நினைவு கூர்ந்து, என்னைக் காத்தருளும்; என்னைத் துன்புறுத்துகிறவர்களை எனக்காகப் பழிவாங்கும்; என்னை ஆதரிக்கக் காலந்தாழ்த்தாதேயும்; நான் உமக்காகத் துன்புறுகிறேன் என்பதை நினைத்தருளும்.
16 உம் வார்த்தைகளைக் கண்டடைந்தேன்; அவற்றை உண்டேன்; உம் வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியாயின; என் உள்ளத்திற்கு இன்பந் தந்தன. சேனைகளின் கடவுளாகிய ஆண்டவரே, உமது திருப் பெயரன்றோ எனக்கு வழங்குகிறது?
17 களிப்பவர் கூட்டத்தில் நான் அமர்ந்து மகிழ்ந்ததில்லை, நான் தனியனாய் அமர்ந்திருந்தேன்; ஏனெனில் உம் கரம் என் மேல் இருந்தது, நீர் என்னைச் சினத்தால் நிரப்பியிருந்தீர்.
18 ஏன் என் துன்பம் நீடித்திருக்கின்றது? என் காயம் ஆறாத கொடிய புண்ணாயிருப்பதேன்? நீர் எனக்கு வஞ்சகக் கானல் நீராயும், பயனற்று வற்றிப் போகும் நீரோடையாயும் இருப்பீரோ?"
19 ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: "நீ திரும்பி வந்தால், நாம் உன்னைப் பழைய நிலையில் வைப்போம், நீ நம் முன்னிலையில் நிற்பாய்; உயர்வானதை உரைத்துப் பயனற்றதை விலக்கினால் நீ நமது வாயாக இருப்பாய்; அவர்கள் உன்னிடம் திரும்பி வருவார்கள்; நீ அவர்களிடம் திரும்ப மாட்டாய்.
20 இந்த மக்களின் முன்னிலையில் நாம் உன்னை அசைக்க முடியாத வெண்கலச் சுவர் போலாக்குவோம்; அவர்கள் உனக்கெதிராய்ப் போரிடுவார்கள்; ஆனால் உன்னை மேற்கொள்ள அவர்களால் இயலாது; ஏனெனில் உன்னை மீட்கவும் விடுவிக்கவும் நாம் உன்னோடிருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்.
21 கொடியவர்களின் கையினின்று நாம் உன்னை விடுவிப்போம்; முரடர்கள் பிடியினின்று உன்னை மீட்போம்."
×

Alert

×