Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Jeremiah Chapters

Jeremiah 11 Verses

1 ஆண்டவர் எரெமியாசுக்கு அருளிய வாக்கு:
2 இவ்வுடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேட்டு, யூதாவின் மக்களுக்கும், யெருசலேமின் குடிகளுக்கும் அறிவி:
3 நீ அவர்களுக்குச் சொல்: இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாதவன் சபிக்கப்படுக!
4 நாம் உங்கள் தந்தையரை இருப்புக் காளவாயாகிய எகிப்து நாட்டிலிருந்து விடுவித்துக் கொண்டு வந்த போது அவர்களைப் பார்த்து: 'நான் சொல்வதைக் கேளுங்கள்; நாம் உங்களுக்குக் கட்டளையிடுபவற்றை எல்லாம் செய்யுங்கள்; அப்போது நீங்கள் நம் மக்களாய் இருப்பீர்கள்; நாம் உங்கள் கடவுளாய் இருப்போம்.
5 பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை உங்களுக்குக் கொடுப்போம் என்று நாம் உங்கள் தந்தையர்க்கு இட்ட ஆணையை உறுதிப்படுத்துவோம்' என்கிறோம்; இன்று அது அப்படியே ஆயிற்று" என்று சொன்னார். அதற்கு நான், "ஆம் ஆண்டவரே!" என்று மறுமொழி சொன்னேன்.
6 ஆண்டவர் மீண்டும் எனக்குச் சொன்னார்: "நான் சொல்லும் வார்த்தைகளையெல்லாம் யூதாவின் நகரங்களிலும், யெருசலேமின் தெருக்களிலும் நீ உரத்த குரலில் அறிவி: இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேட்டு அவற்றின்படி ஒழுகுங்கள்.
7 நாம் உங்கள் தந்தையரை எகிப்து நாட்டினின்று விடுவித்த நாள் முதற் கொண்டு இந்நாள் வரையில் அவர்களுக்கு, வற்புறுத்தி எம் சொல்லுக்கு கீழ்ப்படியுங்கள் என்று எச்சரிக்கை செய்தோம்.
8 ஆயினும் அவர்கள் கீழ்ப்படியவுமில்லை, செவிசாய்க்கவுமில்லை; அதற்கு மாறாக அவரவர் தத்தம் பொல்லாத இதயத்தின் பிடிவாதப் போக்கிலேயே நடந்தார்கள். ஆகையால் நாம் அவர்களைச் செய்யும்படி கட்டளையிட்டும், அவர்கள் கடைபிடிக்காத இவ்வுடன்படிக்கையின் வார்த்தைகளையெல்லாம் அவர்களுக் கெதிராய்க் கொண்டு வந்தோம்."
9 மீண்டும் ஆண்டவர் எனக்குக் கூறினார்: "யூதாவின் மக்களும், யெருசலேமின் குடிகளும் நமக்கு எதிராகப் புரட்சி செய்கிறார்கள்.
10 வேண்டுமென்றே நம் வார்த்தைகளைக் கேளாமல் இருந்த அவர்களுடைய முன்னோர்கள் செய்து வந்த பழைய அக்கிரமங்களில் அவர்களும் விழுந்து விட்டார்கள்; அந்நிய தெய்வங்களுக்கு ஊழியம் செய்ய உடன்பட்டு விட்டார்கள். அவர்களுடைய தந்தையரோடு நாம் செய்த உடன்படிக்கையை இஸ்ராயேல் வீடும், யூதாவின் வீடும் முறித்து விட்டன.
11 ஆகையால் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, அவர்களால் தவிர்க்க முடியாத தீமைகளை அவர்கள் மீது பொழிவோம்; அவர்கள் நம்மை நோக்கிக் கூக்குரலிடுவார்கள்; ஆனால் நாம் செவிசாய்க்க மாட்டோம்.
12 அப்போது யூதாவின் நகரங்களும் யெருசலேமின் குடிமக்களும் ஓடி தாங்கள் தூபம் போட்டு வணங்கும் தெய்வங்களை நோக்கிக் கூக்குரலிடுவார்கள். ஆயினும் துன்ப காலத்தில் அவர்களைக் காப்பாற்ற அவைகளால் இயலாது.
13 யூதா நாடே, உன் பட்டணங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு உன் தெய்வங்களின் எண்ணிக்கையும் இருக்கிறது; யெருசலேமின் வீதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பாகாலுக்கு வழிபாடு செய்யும் பீடங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து விட்டமை உனக்கு வெட்கக் கேடு.
14 ஆகையால் நீ இந்த மக்களுக்காக மன்றாட வேண்டாம். இவர்களுக்காக அழுகையோ வேண்டுதலோ செய்ய வேண்டாம். ஏனெனில் இவர்களுடைய இக்கட்டு வேளையில் நம்மைப் பார்த்துக் கூக்குரலிட்டாலும், நாம் கேட்க மாட்டோம்.
15 "பொல்லாத அக்கிரமங்களைச் செய்கிற என் காதலிக்கு என் வீட்டிற்குள் வருவதற்கு உரிமை ஏது? நேர்ச்சைகளும், பரிசுத்த பலியின் இறைச்சியும் உனக்கு வரும் தீமையைத் தவிர்க்குமோ? இன்னும் நீ அக்களிப்பாயோ?
16 செழித்துச் சிறந்து கனிகளால் நிறைந்த அழகிய ஒலிவ மரம் என்பது ஆண்டவர் உனக்கிட்ட பெயர்; ஆனால் புயற் காற்றின் பேரிரைச்சலின் போது அதில் பெரும் நெருப்பு விழும், அதன் கிளைகளெல்லாம் தீய்ந்து போகும்.
17 உன்னை நட்டு வளர்த்த சேனைகளின் ஆண்டவர் உனக்கு எதிராகத் தீங்கு வருமென்று தீர்ப்பிட்டார்; ஏனெனில் இஸ்ராயேல் வீடும், யூதாவின் வீடும் பாகாலுக்குத் தூபம் காட்டி நமக்குக் கோபமூட்டித் தீமை செய்தார்கள்."
18 ஆண்டவரே, நீர் எனக்கு அறிவித்தீர்; நான் அறிந்து கொண்டேன்; அவர்களுடைய தீய செயல்களையும் எனக்குக் காட்டிவிட்டீர்;
19 அடிக்கக் கொண்டு போகப்படும் சாந்தமான செம்மறிக்கு நான் நிகரானேன். "மரத்தை அதன் கனிகளோடு அழிப்போம், வாழ்வோரின் நாட்டினின்று அவனை ஒழிப்போம்; அவன் பெயரே இல்லாமற் போகும்படி செய்வோம்" என்று எனக்கு எதிராகச் சதித் திட்டங்கள் தீட்டினார்கள்; நானோ அதை அறியாதிருந்தேன்.
20 சேனைகளின் ஆண்டவரே, நீரோ நீதியோடு நடுத்தீர்க்கிறவர், மனத்தின் மறை பொருள்களையும் இதயத்தின் சிந்தனைகளையும் சோதிக்கிறவர்; நீர் அவர்களைப் பழிவாங்குவதை நான் பார்க்கவேண்டும்; ஏனெனில் உம்மிடமே என் வழக்கைக் கூறினேன்.
21 ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: ''ஆண்டவர் திருப்பெயரால் இறைவாக்குரைக்காதே; மீறி உரைத்தால் எங்கள் கைகளினாலேயே சாவாய்' என்று சொல்லி உன் உயிரைப் பறிக்கத் தேடும் அநாத்தோத்து மனிதர்களைப் பற்றிய நமது தீர்மானம் இதுவே.
22 இதோ நாமே அவர்களைத் தண்டிப்போம்; இளைஞர்கள் வாளால் சாவார்கள்; அவர்களின் புதல்வரும் புதல்வியரும் பஞ்சத்தால் மடிவார்கள்.
23 அவர்களுள் யாரும் மீதியாய் விடப்பட மாட்டார்கள்: நாம் அநாத்தோத்து மனிதர்களைத் தண்டிக்கும் ஆண்டில் அவர்கள் மேல் தீங்கை வரச் செய்வோம்" என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
×

Alert

×